தங்க ஜரிகையால் இழைத்த மிக மெல்லிய கரை வைத்த அரக்கு நிறக் காஞ்சிப்பட்டும், அதற்கேற்ற தங்க ஆபரணங்களும் அணிந்து இன்று காலையில் தன் கழுத்தில் யுவராஜால் கட்டப்பட்டு மின்னும் பொன் தாலியும், அதற்குப் போட்டியாக நெற்றி வகிட்டில் மிளிரும் குங்குமமும் என்று அலங்கார பூஷிதையாக, ஆளை வீழ்த்தும் அழகோடு அறைக்குள் நுழைந்த மலர்விழி… நிமிடங்கள் பல கடந்தும் தலைகவிழ்ந்தவாறு ஒரே இடத்தில் அசையாமல் நின்றிருக்க… அவளுடைய கணவன் அவளை விட ஒரு படி மேலே போய் மலர்விழி அறைக்குள் வந்ததையே அறியாதவன் போல் தன் மடிக் கணினியில் இருந்து பார்வையை திருப்பாது அழுத்தமாக அமர்ந்திருந்தான் யுவராஜ்.
அரை மணி நேரமாய் இரு கால்களிலும் மாற்றி மாற்றி நின்று ஓய்ந்து போன மலர்விழிக்கு தன் மாமன் அருகில் சென்று அவனிடம் பேசுவதற்கும் உள்ளூற பயம் தடுத்தாலும். தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக ஒதுக்கி வைத்திருப்பவன் ‘நானாகச் சென்று அவனிடம் பேச்சு வார்த்தை நடத்தாவிட்டால் இன்று இரவு முழுவதும் இப்படியே நின்றால் கூட பிடிவாதக்காரன் அவன் தன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்’. என்று எண்ணியவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல நடந்து அவனருகில் சென்று. அவன் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டி தன் தொண்டையைச் செரும அப்பொழுதும் அவளை கண்டு கொள்ளாது இறுகிப்போய் அமர்ந்திருந்தது அந்த அரிமா…
“ஆமா இன்னிக்கு விட்டா இந்த கைக்கொழந்த எந்துருச்சி ஓடப் போற மாதிறி அத போட்டு இந்த நோண்டு நோண்ட்றாகலே அதுக்கு வாய் இருந்தாக்க இந்நேரம் கதறி அழுதுருக்காது.?”
என்று அவனுடைய மடிக்கணினியைப் பார்த்தவாறு தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவள்… அவனுடைய வேலைப் பழுவை குறைக்க உதவும் அந்த உயர்ரக மடிக்கணிணியை, அவன் எங்கு சென்றாலும் தன் கைய்யோடு எடுத்துச்செல்வதால்…
அதற்கு கைக்குழந்தை என்று பட்டப் பெயரிட்டிருந்தாள் மலர்விழி, தன் மாமனுக்குத் தெரியாமல் தான்.
அவள் இவ்வளவு சப்தமாக தொண்டையைச் செருமியும் கூட தன் மடிக்கணினியில் இருந்து பார்வையை விலக்காதிருந்தவன், கைகள் மட்டும் அந்த மடிக்கணினியை இயக்காதிருந்தால்… கிரேக்கச் சிற்பம் தான் அமர்ந்திருக்கிறது என்று எண்ணும் அளவிற்கு அசையாதிருந்த தன்னவனைக் கண்ட மலர்விழிக்கு உள்ளம் சோர்ந்தாலும் அந்த பிடிவாதக்காரனை சமாதானப்படுத்தவும் வேறு வழியறியாது இன்னும் கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி இப்பொழுது அவனை “யுவித்தான்” என்று அழைத்திருந்தாள் அவன் மனையாள், தன் தேன் குரலால்.
மலர்விழியின் அழைப்பாலோ, அல்லது அவன் வேலை முடிந்து விட்டதாலோ அந்த கிரேக்கச் சிற்பம் உயிர்பெற்று மடிக்கணினியை மூடிவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்து…
இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்துக்கொண்டே, உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் அவளை நோக்கியவன்… தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி விழியாலே ‘என்னவென்று’ கேட்டிருந்தான் யுவராஜ்.
தன் மேல் கோபமாக இருக்கும் அவனிடம் பேசத் தொடங்கினால் அவன் பதிலுக்குத் தன்னிடம் கோபமாகவாவது பேசுவான். அவனை எப்படியாவது சமாதானம் செய்து அவன் கோபத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் என்றெண்ணியவள்.. தன்னுடைய பிரத்யேக அழைப்பாக “அத்தான்” என்று அழைத்தவளிடம் அவன் பதிலுக்கு வாயே திறக்காது, சுட்டெரிக்கும் பார்வையாலே ‘என்னவென்று’ கேட்கவும் என்ன பேசுவது என்று புரியாமல் துறுதுறு விழிகளை அழகாக சுழல விட்டவள்…. விழிகளில் தன் கையிலிருந்த பால் டம்ளர் பட அதை வேகமாக யுவராஜின் முன்னால் நீட்டி…
“அப்பத்தா இந்த பால நம்ம ரெண்டு பேரையும் குடிக்க சொல்லிச்சித்தான்” எனக் கூறினாள்.
அவள் கையில் இருந்த பால் டம்ளரையும் அவளையும் மாறிமாறிப் பார்த்த யுவா அந்தப் பாலை வாங்காமல் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றியவாறே “ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையில் வினா எழுப்ப…
“அப்பா..!வாயில இருந்து முத்து உதுந்துருச்சு கண்டிப்பா இவக செல இல்ல மலரு…உன் அத்தான்தே” என்று தன்னிடமே கூறிக் கொண்டவள்…
‘இதுக்கு என்ன பதிலச் சொல்றது’ என்று மீண்டும் சுழன்ற அவளின் துறு துறு விழிக்கு, இந்த முறை மலர்மஞ்சம் காணக் கிடைக்க அதைப் பார்த்த மலர்விழி சிறிது கூச்சமும், பயமும் கலந்த குரலில்…
“இன்னிக்கு நமக்கு முதலிரவு யுவித்தான் அதனால” என்று அவளுக்கே கேட்காத வண்ணம் மெல்லிய குரலில் கூற….
கழற்றிய சட்டையை ஹேங்கரில் மாட்டியவாறே “ம் ம் ம்..என்ன?” என்று மீண்டும் தன் உதடுகளால் ஒற்றை வார்த்தையையே உதிர்த்திருந்தான் யுவராஜ்.
“எப்பவும் அய்யனார் சாமி மாதிரி வெறச்சுக்கிட்டு நம்மளத் திட்டுறவக இன்னக்கி இவ்ளோ பொறுமையா ஏன், என்னன்னு கேள்வி கேக்குறாகளே… ஒருவேள கல்யாணம் முடிஞ்சதால நம்ம மேல கோவம் போயிருச்சா.? இல்ல இதுக்குப் பின்னாடி தரமான சம்பவம் ஏதும் இருக்கா?” என்று வழக்கம்போல் தனக்குள்ளே பேசிக்கொண்டவளுக்கு அவன் நிற்கும் தோரணையே தொண்டையை அடைக்கச் செய்தாலும்… எச்சில் கூட்டி விழுங்கி அதை சமன் செய்தவள் இன்னும் கொஞ்சம் உரத்தக் குரலில் “இன்னிக்கு நம்ம முதலிரவு யுவித்தான்” என மீண்டும் கூறினாள் மலர்விழி.
“அத்தான்னு கூப்டாதன்னு சொல்லிருக்கேன்ல” என்று சீறிய யுவராஜ் “இன்னக்கி.. நமக்க்கு… முதலிரவ்வா..?” என்று தன் கை காப்பை ஏற்றியவாறு கேட்டவன்…
“ஆமா அம்மணி எந்த தைரியத்துல ஒரு பொறுக்கியோட ரூமுக்கு முதலிரவு கொண்டாட வந்துருக்கீங்க…? ஓ அன்னிக்கு நீ யாரோ நான் யாரோனு சொன்ன என் கையாலயே தாலி வாங்கிகிட்ட தைரியமோ.?” என்று அவனே கேள்வியும் கேட்டு ஒவ்வொரு வார்த்தையாக பதிலையும் உரைக்க…
அந்த வார்த்தைகளின் அழுத்தத்திலும், அவனின் உடல் விரைப்பிலும்…. வெளிப்பட்ட அவனுடைய கோபத்தின் அளவு மலர்விழியின் உள்ளே குளிர் பரப்பினாலும்… அவளுடைய வழக்கமான வழக்கமாய் “இருக்கு… தரமான சம்பவம் இருக்கு” என்று அந்த நேரத்திலும் தனக்குள் கமெண்ட் அடித்துக் கொண்டவள்…”இல்லத்தான்” என்று இழுக்க…
“அப்டி சொல்லாத” என்று மேலும் அவன் வெடித்தான்.
தன் அதட்டலில் மிரண்டு, மலங்க மலங்க விழித்த படி நின்றிருந்த மலர்விழியை தலை முதல் கால் வரை துளைத்தெடுக்கும் பார்வையோடு நெருங்கி நின்றவனின் மூச்சுக் காற்றால் அவள் தலைக் கேசம் பறக்க…
அவளின் விரிந்த விழிகளைப் பார்த்தவாறே “முதலிரவுன்னா என்னனு உனக்குத் தெரியுமா.?” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவனை புரியாமல் பார்த்தவளிடம்…
“உன்ன எங்க வேணா, எப்டி வேணா தொட்டுக்கறதுக்குப் பேருதான் முதலிரவு, அதுக்கு நா உன் கழுத்துல கட்டிருக்க லைசன்ஸ் தான இந்தத் தாலி” என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சப்தமாகச் சிரித்தவன்…
“அன்னிக்கு போல உன்னால என்ன தடுக்கவும் முடியாது, எனக்கு எதுவும் கொடுக்கவும் முடியாது” என்று ஒரு வன்மப் பார்வையோடு தன் இடது கன்னத்தை லேசாகத் தடவிக் கொண்டவன், என்ன நினைத்தானோ சட்டென்று மலர்விழியைத் தன் கரங்களுக்குள் கொண்டு வந்தவன்… அவள் முகம் தொடங்கி அவளின் தளிர் மேனியெங்கும் தன் முரட்டு கரங்களை ஊற விட்டவனின் தொடுகையில் அந்த கன்னி மலரோ துடிதுடித்துப் போக, அவள் கருவண்டு விழிகளோ கலங்கித் தான் போனது…
திருமண இரவில் ஒரு பொண்ணுக்கு கிட்டும் தொடுகை ஒரு காதலனின் தொடுகையாக, அல்லது கணவனின் தொடுகையாக ஏன் ஒரு காமுகனின் தொகையாகக் கூட இருக்கலாம் ஆனால் யுவாவின் தொடுகை ஒரு கயவனின் தொடுகையாக அல்லவா இருக்க… அவனின் ஒவ்வொரு தீண்டலிலும் இருந்த வன்மத்தில் அரண்டு போன மலரோ அவன் தன் மேல்ச்சட்டையில் கை வைக்கவும் மிரண்டு “வேணாம் மாமா” என்று அவன் கையை பற்றிக் கொண்டவளை எரிச்சலாகப் பார்த்தவனின் விழிகளில் மருந்துக்கும் இரக்கமில்லை…
மாறாக அன்று தன்னை அவமதித்த மலரை ஒரு வழியாக்க வேண்டும் என்கிற வெறியோடு பளபளத்த விழிகளால் அவளையே சில நொடிகள் வெறித்திருந்தவன் அவளின் கலங்கிய விழிகளில் என்ன கண்டானோ… அதற்குமேல் அவனால் அவன் நினைத்ததை செய்ய முடியாது போக…
இப்பொழுது மென்மையாகவே ஒரு மயிலிறகின் வருடல் போல் அவள் நெற்றியில் முத்தமிட்டு… அங்கிருந்த நெற்றிச்சுட்டியை அகற்றினான் யுவா.
அப்படியே மெல்ல தன் கைகளையும் இதழ்களையும் இறக்கி… கூச்சத்தில் நெளிந்தவளை மறு கையால் அணைத்துப் பிடித்தவாறே அவளுடைய கன்னம், காது கழுத்து, கைகள் என்று ஒவ்வொரு இடமாக முத்தாடி அங்கிருந்த அனைத்து ஆபரணங்களையும் விலக்கினான்…
இப்பொழுது அவள் கழுத்தில் காலையில் அவன் கட்டிய பொன் தாலி மட்டுமே கிடந்து அவனைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தது.
அவள் மார்பில் ஆடும் பொன் தாலியையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்திருந்த யுவா… அவள் நெஞ்சத்தின் மத்தியிலும் ஒரு முத்தமிட்டு, அந்தப் பொன் தாலியையும் அகற்ற விழைய…
அவனுடைய பார்வைக்கும், பேச்சுக்கும் அவன் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் அவன் அருகாமை தந்த படபடப்பில் இறுக்க விழி மூடி நின்றிருந்த மலர்விழி… தன் மார்பின் மத்தியிலும் அவனுடைய ஸ்பரிசத்தை உணர்ந்து மெல்ல விழி மலர்த்திப் பார்த்தவள்… அவன் செய்ய விழைந்த காரியத்தை கண்டு அதிர்ந்தவளாக…
அவன் அகற்ற எண்ணிய பொன்தாலியை தன் இரு கரங்களால் இறுக்கப் பற்றிக்கொண்டு “அத்தான்…” என்று அலறியவாறு அவனை விட்டு இரண்டடிகள் பின்னடைந்து நின்றாள்.
தன் செயலால் அலறியவாறு பின்னடைந்தவளைப் பார்த்து…
“நம்ம ரெண்டு பேருக்கும் முதலிரவுனு சொல்லிட்டு இப்டி பின்னாடி போனா எப்டி மொசக்குட்டி?” என்று நக்கலாகக் கேட்டுக் கொண்டே மலரை நோக்கி எட்டு வைத்த யுவாவின்… ஒவ்வொரு அழுத்தமான காலடிகளுக்கும் பின்னே நகர்ந்த மலர்விழி, ஒரு கட்டத்தில் செல்ல வழியில்லாமல் சுவரில் மோதி நின்றாள்.
அவள் நின்றும் கூட தான் நிற்காமல் அவளை மேலும், மேலும் நெருங்கி…
தன் அருகாமையில் ஏறி இறங்கிய அவளின் பூப்பந்தோடு, தன் திண் நெஞ்சை மோத விட்டவன், அவளைக் கூர் பார்வை பார்த்தவாறே…
“அன்னக்கி மாமன் மக, கட்டிக்கப்போறவங்கற உரிமைல கொஞ்சம் அத்துமீறி தொட்டதுக்கு அந்த குதி குதிச்சு என்ன அவமானப்படுத்துனவ இப்போ… எங்க வேணா தொட்டுக்கன்னு பேசாம நிக்கறதுக்கு இந்தத் தாலி தான காரணம்.?” என்று அவள் கழுத்தில் கிடந்த பொன் தாலியை தூக்கிப் பார்த்து வினவிய யுவா தொடர்ந்து…
“நீ வேணா அந்தத் தாலிக்காக என்ன புருஷனா ஏத்துக்கலாம்… ஆனா நா அப்ப இருந்த அதே பொறுக்கிதே..” என்று சீறலாக மொழிந்த தன் மாமனைச் சமாதானப் படுத்தும் பொருட்டாய்….
“அன்னிக்கு நா உங்கள அப்டி சொன்னது தப்புத்தேத்தான், அதுக்கு பதிலா என்ன நாலு அடி கூட அடிச்சிருங்க யுவித்தான்.?” என்ற மலர்விழியின் குரல் லேசான விசும்பலோடு ஒலிக்க…
“ம்ம்ச்ச்” என்று சலித்துக் கொண்டவன் “உன்ன நா அடிக்கிறதுக்கு நீ எனக்கு பர்மிசன் தர்றிய்யா.? ஒரு பொம்பளப்பிள்ளைய கை நீட்டி அடிக்கிற அளவுக்கு நா ஒன்னும் போக்கத்த பய கிடையாது, அதுமட்டுமில்ல சாதாரணமா உன்ன அடிச்சாலாம் என் ஆத்தரம் தீராதுடி” என்று பேசிக் கொண்டே சென்றவனை இடைமறித்து….
“அப்ப என்ன மன்னிக்கக் கூட மாட்டிங்களாத்தான், நா உங்க விழியில்லையா.?” என்று அழுகையோடே வினவியவளிடம்….
“ம்ம்ம்… சரி உனக்காக ஒரு வாய்ப்புத் தர்றேன்.!” என்றவன்…
“ஆக்சுவலா உன் கழுத்துல தாலி கட்ன அப்றம் கூட வாழ்க்க முழுசும் உன்ன தள்ளி வச்சு, ஏன்டா இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டோம்னு, உன்னக் கதற விடனுன்னு தாண்டி நெனச்சேன். ஆனா இப்ப இந்த நிமிஷம் உன்ன இவ்ளோ நெருக்கமா பாத்தப்றம் என் மனச மாத்திகிட்டேன்… சும்மா சொல்லக் கூடாதுடி, நீ பேரழகிடி” என்று தலை முதல் கால் வரை அவளை ஒரு வித போதைப் பார்வை பார்த்தவாறு கூறியவனை…
‘அதுக்கும் இப்ப நீங்க தாலிய கழட்ட வந்ததுக்கும் என்ன சம்பந்தம்’ என்பது போல் மலர்விழி பார்க்க… அவள் பார்வையை உணர்ந்து கொண்டவன் “இரு சொல்றேன்” எனத் தொடர்ந்தான்.
“உன் அழகுக்காகவும், சின்ன வயசுல இருந்து உன்ன இங்க சுமந்ததுக்காகவும்” என்று தன் இதயமிருக்குமிடத்தை தொட்டுக் காட்டியவன்…”நா உன்ன மனைவியா ஏத்துக்கிட்டாலும்… அன்னக்கி எனக்குள்ள நீ வெதச்ச பொறுக்கிப் பட்டம் இன்னக்கி ஒரு நாளக்கி மட்டுமாச்சும் அவகிட்ட பொறுக்கியா நடந்துக்கனு என்னப் போட்டுக் கொடையுதுடி” என்று அரிமாவாய் உறுமியவன்…
“அதனால நீ இப்ப என்ன பண்றன்னா அன்னக்கி எந்தத் தாலி இல்லாம உன்ன நெருங்குனேன்னு எனக்கு பொறுக்கி பட்டம் குடுத்துத் தொரத்தி விட்டியோ அந்தத் தாலி இல்லாம… அதிக நாள் வேணாம், நம்ம வாழ்க்கையத் தொடங்குற இந்த ஒரு நாள் மட்டும் உன்ன நீ எனக்குக் கொடுக்கணும்.! நீ கொஞ்சம் முன்ன கேட்ட மாறி நீ என்னோட விழிங்கறது உண்மையா இருந்தா, இங்க இன்னக்கி நம்ம முதலிரவு உன் கழுத்துல தாலி இல்லாமதே நடக்கணும்… எந்த கடமைக்காகவும் இல்லாம எனக்காக மட்டும், என்னோட விழியா மட்டும், நீ எங்கூட கலக்கணும்…. நம்ம வாழ்க்க சந்தோசமா தொடங்கணும்னு ஆசப்பட்டின்னா சீக்ரம் அந்தத் தாலியக் கழட்டி வச்சுட்டு வந்து சேரு” என்று தன் மனையாளின் தலையில் கூடைத் தணலை அள்ளிக் கொட்டிய யுவராஜ் அங்கிருந்த மலர் மஞ்சத்திற்குச் சென்று தோரணையாக அமர்ந்து கொள்ள… கணவனின் “தாலியில்லா தாம்பத்தியம்” என்ற வார்த்தைகள் தாங்காத மலர்விழியோ அதிர்ச்சியில் சிலையென சமைந்திருந்தாள்…
காதல் கொண்ட இரு உள்ளங்களின் மென்மையான இணைவால் மலரவேண்டிய, காதலின் அடுத்த கட்டமான கொடுத்துப் பெரும் தாம்பத்தியம், இப்படி ஒரு நிபந்தனையோடு தொடங்கினால் அது அந்த காதலுக்கே இழுக்கல்லவா…? அப்படித் தொடங்கும் வாழ்க்கையும் தான் அந்த நிபந்தனையை இட்டவனுக்குமே இனிமையைத் தந்துவிடுமா என்பதை அவன் உணர்வானா….?
இம்மண்ணில் பிறந்த எந்த ஒரு பெண்ணும் செய்யத் துணியா காரியத்தை அவளவன் அவளுக்கு நிர்பந்திக்க… அந்த மலரையொத்த மலர்விழியாள்…
கணவனே கண்கண்ட தெய்வம் என்று, அவன் நிபந்தனை ஏற்று அவனோடு இணைவாளா.? அல்லது கணவனாக இருந்தாலும் கண்ணியமே முக்கியம், என்று அவன் சொல்லை எதிர்த்து தங்கள் தாம்பத்தியத்தின் புனிதம் காப்பாளா..???