அத்துணை நேரம் தாபமும் கோபமும் கலந்த குரலில் தன்னிடம் உரையாடிக் கொண்டிருந்த கணவன் திடீரென்று எந்த உணர்வுமில்லா வெற்றுக் குரலில் “சேலஞ் பண்றியாடி.?” எனக் கேட்டதும் ஒரு நிமிடம் புரியாது விழித்த மலரோ சட்டென்று சுதாரித்து…
“இல்லத்தான் நா சேலஞ்லா பண்ணல” என்று திணறியவளைப் பார்த்து..
“அப்பனா நா சொன்னத செய்டி”என்று மீண்டும் விழிகளில் ஒரு எதிர்பார்போடு கூறியவனுக்கு..
“மாட்டேன்” என்ற அழுத்தமான தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவள்… “வேணாம் யுவித்தான் நீங்க செய்யச் சொல்ற விஷயத்த நா மட்டும் இல்ல எந்தப் பொண்ணும் செய்ய மாட்டாத்தான், கல்யாணம் ஆன ஒரு பொண்ணு அவளே எப்டித்தான் தன்னோட தாலியக் கழட்டுவா, அது பாவம் எதுக்காகவும் அந்த பாவத்த நா செய்ய மாட்டேன்த்தான்” என்று கண் கலங்கி அழுத மலர்விழிக்கு உண்மையிலேயே யுவா செய்யச் சொல்லும் காரியம் மிகப் பெரிய பாவமாகத்தான் தோன்றியது.
ஒரு பெண்ணின் கழுத்தில் அவள் கணவன் கையால் தாலி ஏறியப்பின், அது இறங்குவதாக இருந்தால் அது, அதை கட்டியவனின் இறப்புக்குச் சமம் என்று எண்ணும், அந்தத் தாலிக்கு தன் உயிரை விடவும் மேலான மதிப்பைக் கொடுக்கும் சமூகத்தில் பிறந்து வளர்ந்த மலர்விழிக்கு…
கணவனே ஆனாலும், அது அவன் கட்டிய தாலியே ஆனாலும், அதை அவனே கழட்டி வைக்கச் சொன்னாலும், அதுவும் கொஞ்ச நேரத்திற்குத் தான் என்றாலும் யுவா கூறும் அந்த நிபந்தனை, அவளுக்கு மிகப் பெரிய பாவமாகவும், தாலியை கழட்டி விட்டு அவனோடு இணைவது என்பது ஒரு அருவருக்கத்தக்க செயலாகவும் தோன்றியதால் அவள் மீண்டும் மீண்டும் அவன் நிபந்தனைக்கு மறுப்புக் கூற…
சிறுவயதில் இருந்தே மலர்விழியின் மேல் அளவில்லா நேசம் வைத்து, விபரம் தெரிந்த நாளிலிருந்து அவளைத் தன் மனைவியாகவே எண்ணி வாழ்பவன் அன்று தாலி இல்லை என்பதற்காக தனக்கு மறுக்கப்பட்ட அவள் மீதான உரிமையை, இன்று தாலி கட்டிய கடமைக்காக அவள் தனக்குத் தர விளைவதை, யுவா தன் காதலுக்கு ஏற்பட்ட அவமானமாகவே எண்ணினான் போலும்.
அன்றய நாளில் அவள் கூறிய வார்த்தையாலும் அவளின் செய்கையாலும் காதலைச் சுமந்த உள்ளத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காயம் சுமந்து வாழ்பவன், அந்தக் காயத்திற்கு மருந்தாகவும், தன் இத்தனை வருட காதலுக்கு அங்கீகாரமாகவும் எந்த ஒரு கணவனும் தன் மனைவிக்கு விதிக்காத விபரீத நிபந்தனையை மலர்விழிக்கு விதித்தவன்…
மலரைப் போலவே தானும் இம்மண்ணில் பிறந்து, தமிழ் கலாச்சாரத்தின் படி வளர்க்கப்பட்டவன் தான் என்பதை, சிறிதும் எண்ணிப்பார்க்காமல் கோபத்திற்க்கும் ஈகோவிற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தான் பிடித்த பிடியிலே உறுதியாக நின்றான் மலர்விழியின் மாமன் யுவராஜ்…
தன்னவள் தன் நிபந்தனையை மறுக்க மறுக்க அதை நடத்திக் காட்டும் வெறி அதிகமாகிக் கொண்டே செல்ல, அவள் கூறிய எந்த வார்த்தையையும் செவியில் ஏற்றாமல், மலர்விழியைப் பார்த்து….
“அன்னிக்கு போலவே திரும்ப திரும்ப என்ன நீ அவமானப்படுத்துற மலர், அஞ்சு பவுன் தாலிக்கு கொடுக்குற மரியாதைய அத உன் கழுத்துல கட்டுன என் வார்த்தைக்கு குடுக்க மாட்ட.? அப்டித்தான” என்று கேட்டவனோ அவன் கட்டியதால் மட்டுமே அந்த தாலிக்கு அவ்வளவு மதிப்பு என்பதை சிறிதும் உணரவில்லையோ..??
“உனக்கு… நம்ம ரொம்ப அழகாயிருக்கோம்னு திமிரு ஏறிருச்சுடி” எனக்கூறி மலரை மேலிருந்து கீழாக பார்த்த யுவா அவள் மேல் படிந்த விழிகளை, அகற்ற முடியாது தான் தவித்தவனோ…
“நீ அன்னிக்கு அவ்ளோ அவமானப் படுத்தியும் கூட, என் கையால தாலி வாங்கிட்டம்னு மெதப்புல என் பேச்ச மதிக்க மாற்றல்லடி நீ, இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்க… எந்த வாயால என்ன நடந்தாலும் உங்க நிபந்தனைக்கு ஒத்துக்க மாட்டேன்னு நீ சொன்னியோ… அதே வாயால நா சொன்னதுக்கு ஒத்துக்க வச்சு என்ன ஏத்துக்கத்தான்னு கெஞ்ச வைக்கல… நா வேலுச்சாமி பேரன், சிதம்பரம் மவன், யுவராஜ் இல்லடி” என்று மலரை நோக்கி சூளுறைத்த யுவாவின் வார்த்தைகளில் மலரின் துட்டுக்குத் தனமும் சற்றே தலை தூக்க, அவன் கோபத்தின் அளவை உணராப் பேதையும் எதையும் யோசியாமல்…
“அது மட்டும் உங்களால முடியாது யுவித்தான்” என்று சட்டென்று வார்த்தைகளைச் சிதற விட்டதில் அந்த அரிமாவின் ஆணவம் இன்னும் இன்னும் தூண்டபட்டதுபோலும் ….
எதையும் யோசியாமல் பேசிவிடும் மலரின் வார்த்தைகள் யுவாவின் கோபத்தை மேலும் மேலும் அதிகரித்தாலும் தன் கைக்காப்பை ஏற்றி இறக்கி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை நக்கலாகப் பார்த்து “அதையும் பாக்கலாண்டி” என்று மட்டும் கூறி அதற்கு மேல் அங்கு நிற்காமல் பால்கனிக்குள் நுழைந்து கொண்ட பிடிவாதத்தின் புத்திரனுக்கு…
போட்டி என்று வந்து விட்டால் போலி சாப்பிடுவது போலத்தான், எத்தகைய போட்டியாக இருந்தாலும் அலட்டிக்கொல்லாமல் வெற்றிவாகை சூடும் வல்லமை படைத்தவன் தான் யுவராஜ்… ஆனால் அவன் இப்பொழுது தேர்ந்தெடுத்திருக்கும் போட்டிக்களமோ அவனுடைய வாழ்க்கையாக இருக்க… அங்கு ஆட்டநாயகன் அவனா.? இல்லை அவனைப் படைத்த கடவுளா.??? என்பது தான் விடையில்லா வினாவாய்…
சிறு வயதிலிருந்தே அனைத்தையுமே ஒரு போட்டி மனப்பான்மையோடே அணுகி, அனைத்திலும் வெற்றிக் கனியையே ருசித்து வந்தவன் இந்த நிமிடம் தன் மனம் கொய்த மனையாள் மலர்விழியையும் தன்னை எதிர்க்கும் போட்டியாளனாக நினைத்து….
“நீயா நானா பாக்கலாம்” என்று சூளுறைத்துச் சென்றவன் அவ்விடம் விட்டு அகன்றதுமே… ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு அவன் பேசிச் சென்ற வார்த்தைகளை அசை போட்ட மலருக்கு அவன் பிடிவாத குணமும், தான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாது அவன் தன்னிடம் சவால் விட்டுச் சென்றதும் அவளுள்ளும் சிறிதளவு கலக்கத்தைக் கொடுத்தாலும்… அதையும் தாண்டி அவள் வழக்கமே வழக்கமாய்….
“யோவ் மாம்சு எய்யா இப்டி பண்ற, ஒன்ற வருசத்துக்கு முன்ன ஒரு வார்த்த சொன்னேன்னு இன்னும் அதயே நெனச்சுகிட்டு இப்டி பேசிட்டு போறியே மாமா… இது உனக்கே நல்லாருக்கா.? நீயா நானான்னு போட்டிபோட, நம்ம வாழ்க்க என்ன விஜய் டிவி நிகழ்ச்சியா மாமா.?” என்று உள்ளுக்குள்ளேயே பலவாறு மாமனை அர்ச்சித்தவாறு தரையில் பாய் விரித்து படுத்துக் கொண்டவளுக்கு… நேற்று இருந்தளவு பயம், தயக்கம், கலக்கம், எதுவுமே இன்று இல்லை என்று தான் கூற வேண்டும்…
தன் மேல் உள்ள கோபத்தால் ஒன்றரை வருடத்திற்கு முன் “நம்ம கல்யாணம் நடக்காது” எனக் கூறியிருந்தவன், இத்தனை நாட்களாக அதில் உறுதியாகவும் இருந்து, தன்னிடம் பாராமுகமாகவே நடந்து வந்தவன் கையால்… நேற்று தாலி வாங்கிக் கொண்ட கணமே மலருடைய கலக்கம் எல்லாம் கொஞ்சம் பறந்திருக்க… இன்று சற்று முன்னர் அவன் தன்னிடம் உருகி நின்றதோ மலருக்கு ஒரு வித மகிழ்ச்சியையே கொடுத்திருக்க… அந்த மகிழ்ச்சியில் அவன் தன்னிடம் விட்ட சவாலைக் கூட பெண்ணவள் பெரிதாக எண்ணத் தோன்றாமல்…
“அப்பா என்னா கோவம், எவ்ளோ பிடிவாதம் என் மாம்சுக்கு, கோவப்படுறப்போ அப்டியே அய்யனார் செலயாட்டந்தே வெரப்பு, கோவத்துல அந்த காப்ப போட்டு படுத்துற பாடு இருக்கே, அதுக்கு வாய் இருந்தாலும் அழுதுரும், ஆனாலும் அழகண்டா நீ” என்று பால்கனியில் நின்று கைகாப்பை ஏற்றி இறக்கி தன் உணர்ச்சிகளை அடக்கப் போராடிக் கொண்டிருக்கும் யுவாவின் வரிவடிவத்தை பார்த்துக் கொண்டே தனக்குள்ளே பேசிக் கொண்டவளோ, அவன் வார்த்தைகளில் உள்ள வீரியத்தை உணராமல், தன் வார்த்தைகள் அவன் கோபத்தை மேலும் சீண்டி விட்டதும் புரிபடாமல் அவள் போக்கில் அவனை ரசித்துக் கொண்டிருந்தவள், “ஐ லவ் யூ யுவித்தான்” என்று அவன் கட்டிய தாலியை இறுக பற்றிக் கொண்டு மெல்ல விழி மூடத் தொடங்கினாள் அவனின் மனையாள் மலர்விழி.
யுவாவின் மனைவியானதே மலர்விழிக்கு பெருத்த நிம்மதியை கொடுத்திருந்ததில் ‘அதற்கு மேல் தனக்கு எதுவும் தேவையில்லை’ என்கிற ரீதியில் அங்கு தன் மாமன் படும் பாட்டை உணராத மலரோ, அவள் போக்கில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றவளிடம் ‘அசைவில்லை’ என்பதை அறிந்தப் பின்னரே பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்த யுவா…
மெல்ல அவளை நெருங்கி வந்து நிர்மலமாக உறங்கும் மலரின் மலர் முகத்தைப் பார்த்தவனுக்கோ சற்று முன்னர் அவளோடு புரிந்த வாக்குவாதங்கள் அனைத்தும் ஒதுங்கி அவள் மேல் கொண்ட பொல்லாக் காதல் வந்து அவனுள்ளத்தை நிறைத்து நின்றதில் அவன் கரங்களோ மெல்ல நீண்டு அவள் முகத்தில் படர்ந்திருந்த கார் கூந்தலை மெல்ல ஒதுக்கி விடவும் “ம்ம்ம்” என்ற சிணுங்களோடு அவள் மூக்கைச் சுளித்த அழகிலோ இக்கணமே அவளை அள்ளி அப்படியே ஆண்டு விடத் துடித்தவனின் உள்ளமோ…
‘நேத்து அப்டி ஒரு நிபந்தனைய நீ போடாமையே இருந்திருக்கலாம்’ என்று மீண்டும் மீண்டும் அவனையே குற்றம் சாட்ட… தன் நினைவை தானே வெறுத்தவனுக்கு சற்று முன்னர் மலர் கூறிய “உங்களால முடியாது மாமா” என்ற வார்த்தைகள் அவன் செவியில் ரீங்காரமிட…..
அவள் முகத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்த தன் கரத்தையும், முத்தமிடும் ஆவலோடு அவள் நெற்றி நோக்கிப் பயணித்த தன் ஈர இதழ்களையும் சட்டென்று அவளை விட்டு விலக்கிக் கொண்டவன்…”விழிமா டேய் மொசக்குட்டி… ஏண்டா இப்டி என்ன படுத்தற, மாமாவ பாத்தா பாவமா இல்லியா.? சீக்கிரம் என் நிபந்தனக்கி ஒத்துக்கடா” என்று உறங்கும் மலரிடம் உருகி வழிந்தவன்… உறக்கத்தில் புரண்டு படுத்த பெண்ணவளின் கோலத்தைக் காண முடியாது விரைந்தோடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான் யுவராஜ்…
“விழி என் வழிக்கு வர்ற வரைக்கும் முடிஞ்சளவு அவள நெருங்காம இருக்கறத்தே நமக்கு நல்லது” என்று முனங்கிக் கொண்டே, சவரில் கொட்டும் குளிர் நீரில் நின்று அடங்காதாடும் தாப உணர்ச்சியை கொஞ்சமே கொஞ்சம் மட்டுப் படுத்தியவன் மீண்டும் மலரைத் திரும்பிக் கூடப் பாராமல் வந்து படுக்கையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தப் பின்னரே அவனைச் சூழ்ந்திருந்த காமதேவன் மெல்ல விலகி நித்திரா தேவி வந்து அவனை அணைத்துக் கொண்டதில் அவனும் ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவ அடுத்து வந்த அந்த தம்பதியரின் நாட்கள் ஒருவித ஒட்டாத் தன்மையோடே மிக வேகமாக நகர்ந்தது…
என்னதான் யுவா மலரிடம் “உன்ன என் நிபந்தனைக்கி ஒத்துக்க வக்கிறேன்” என்று சவால் விட்டிருப்பவன் நினைத்திருந்தால் அன்றே தானே தன் கையால் தான் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி தனக்கு வேண்டியதையும் மலரிடமிருந்து பெற்றிருக்க முடியும்.
ஆனால் பழத்தை தடியால் அடிப்பதை விட தானாகப் பழுத்தால் தான் ருசி என்றறிந்தவனோ மலர் தானாக முன் வந்து “உன்ன விட எனக்கு வேற எதுவும் பெருசில்ல யுவித்தான்” எனக்கூறி அவளாகவே அவன் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று பேராசை கொண்டவன், சிறு வயதிலிருந்தே தன் மாமன் மகளை உயிருக்கும் மேலாக நேசித்து வரும் யுவா அவளின் விளையாட்டு புத்தியையும் நன்கறிந்ததால் அவளை விட்டுப் பிடிக்க எண்ணி பொறுமையாகவே இருந்தான்.
யுவா மலரின் திருமணம் முடிந்து பத்து தினங்களுக்கும் மேல் கடந்த நிலையில்…
குடும்பத்தினர் மத்தியில் மலரிடம் ஒரு சாதாரணக் கணவனாகவே நடந்து கொள்பவன், அன்றைய நாளுக்குப் பின்னர் அவர்களின் தனிமைப் பொழுதுகளில் அவளிடம் எந்த சீண்டலும் செய்யாமல் விலகியே இருப்பவனின் பொறுமையை, சோதிக்கும் வேலையை அவனின் செல்ல அப்பத்தாவான நாச்சியம்மை இனிதே துவங்கி வைத்தார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை காலை அனைவருக்கும் விடுமுறை நாளாக இருந்ததில், யுவா கூட தாமதாகவே விழித்து கீழே வந்தவனுக்கு தன் தமக்கையின் அறிவுரையில் கடந்த பத்து நாட்கள் போலவே இன்றும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த மலரையும், அவளை ஒரு வித கள்ளப் பார்வை பார்த்தபடியே உணவைக் கொரித்திருந்த யுவாவையும், அவர்கள் திருமணம் முடிந்ததிலிருந்தே கண்காணித்து வரும் நாச்சியோ ‘இன்னும் இதுக ரெண்டும் ஒண்ணு கூடல போலயே, இவிகல இப்டியே விட்டா சரிப்படாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரனை நெருங்கி….
“எய்யா, ராசா உங்க கல்யாணம் நல்ல படியா முடிஞ்சா நம்ம கொலதெய்வ (குலதெய்வம்) சாமிக்கு நக செஞ்சு உங்க ரெண்டு பேர் கையால சாத்துறதா வேண்டுதல் வெச்சேன்ப்பு, நகயும் செஞ்சு வந்து ஒரு வாரம் ஆய்ப்போச்சு, (ஆகிப்போச்சு) கோவிலுக்கு போணும் ராசா” என்று மலரையும் தன்னையும் மாறி மாறி பார்த்தப்படி தேனாகப் பேசும் தன் அப்பத்தாவின் பேச்சை மறுக்கத் தோன்றாத யுவாவும்
“சரி அப்பத்தா இன்னிக்கு எல்லாரும் ஓய்வாதான இருக்காக இன்னிக்கே போலாம்” எனக் கூறிய அடுத்த அரை மணி நேரத்தில் மொத்த குடும்பத்தையும் தனாவுடைய காரில் ஏற்றி அடைத்தார் நாச்சி.
பேரன் இன்னிக்கே கோவிலுக்கு போகலாம் எனக் கூறிய மறு நிமிடமே குடும்பத்தினர் அனைவரையும் மகிழுந்தில் ஏற்றிய நாச்சியோ அந்த காரின் பின்புறம் கோவிலுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டுருந்த கதிரை அழைத்து அவன் காதைக் கடிக்க, அவர் கூற்றில் அதிர்ச்சியான கதிரோ…
“ஏன் அப்பத்தா.?” என்று வினவினான்.
அவரோ, “மொதோ நா சொன்னத செய்ல” என்று விரட்டி அடிக்க, அவனோ நாச்சியை குழப்பமாகப் பார்த்தபடி நகர்ந்தவனும் அவர் சொன்னதை செய்து அப்பத்தாவிடம் “ஓகே” என்பதுபோல் கட்டை விரல் உயர்த்திக் காட்டி விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் தன் புல்லட்டை வந்து கிளப்பப் போனவனை…
மீண்டும், “ஏலேய் மக்குப் பயலே இங்க வால” என்றழைத்தவறோ… “நீ புல்லட்டுல சொகுசா வாரதுக்கா நா சீப்பு டயற பஞ்சாராக்க சொன்னீ” என்று திட்ட
அதற்கு அவனோ, “அப்ப நீங்க புல்லட்டுல வரப் போறீகளா” என்று நக்கலடித்தான்.
அவன் தலையில் ஒரு குட்டு வைத்த நாச்சியோ, “ஏலே கதிரு உனக்கு குசும்பு சாஸ்தியாகிருச்சுல்ல” என்றவர் அவன் கையிலிருந்த புல்லட் சாவியைப் பிடுங்கிக் கொண்டு “பேசாமப் போயி கார்ல ஏறி ஒக்காருல்ல” எனக் கூறிவிட்டு வீட்டு வாயிலையே பார்த்தவாறு நிற்க…
சிறிது நேரத்திலேயே தம்பதி சகிதமாய் வெளியே வந்த யுவாவோ தன் ஜீப் டயர் பஞ்சராகி இருப்பதைப் பார்த்தவன் “டேய் கதிரு…” என்று தான் கத்தினான்…
காருக்குள் அமர்ந்திருந்த கதிரோ “இவனுக்கும் இவன் அப்பத்தாவுக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிறதே எனக்கு பொழப்பா போச்சு” என்று வேகமாக தலையை குனிந்து கொள்ள, யுவாவை நோக்கி வந்த நாச்சியோ…
“என்ன ராசா.?” என்றவரிடம்…
“இல்ல அப்பத்தா ஜீப்பு” என்று இழுத்த யுவாவிடம் அப்பொழுதுதான் ஜீப்பை பாத்தவர் போல் “இது என்ன இப்டி பஞ்சாராகிக் கெடக்கு, இப்ப என்னப்பு செய்றது” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவர், சட்டென்று தன்னிடம் இருந்த புல்லட் சாவியை யுவாவிடம் கொடுத்து… “கல்யாணமாகி மொதோ தடவ வெளிய போறப்ப ரெண்டு பேரும் சோடியாதே போகோணும் நீங்க ரெண்டு பேரும் அந்த மோட்டார் வண்டில வாங்கப்பு, நாங்க எல்லாரும் ப்ளஸ்ஸர்ல வாறோம்” என்ற அப்பத்தா பேரனின் பதிலைக் கூட எதிர்பாராமல் விரைந்து சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
அப்பத்தாவின் செய்கையைப் பார்த்தப் பின்னர் தான் விஷயம் புரிந்த கதிரோ அந்த மகிழுந்தை உயிர்பித்துக் கிளப்பிய வண்ணம்…
‘எப்பா… அப்பத்தா பெரிய ஆளு’ என்று நினைத்தவன் பின்சீட்டில் அமர்ந்த அப்பத்தாவைத் திரும்பி ஒரு மெச்சும் பார்வை பார்த்தவனை, அவன் திரும்புவதற்காகவே காத்திருந்தார் போல் யாருமறியாமல் வேகமாக அவனைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள் யுவாவின் தங்கை ஜானவி.
திடீரென்று ஜீப் டயர் பஞ்சராகி இருப்பதும் தான் கூப்பிட்டும் வராத கதிருக்கு பதிலாக தன் அப்பத்தா வந்து கோவிலுக்கு புல்லட்டில் வரச் சொன்னதுமே ‘எல்லாம் இந்த அப்பத்தாவோட வேலைதான்’ என்றுணர்ந்த யுவா… தன் அப்பத்தா எதற்காக இப்படியெல்லாம் செய்கிறது என்பதையும் அறிந்தவன்….
“இந்த அப்பத்தாவ” என்று பல்லைக் கடித்தவாறு திரும்பி புல்லட்டைப் பார்க்க…
அதற்குள் இருசக்கர வாகனத்தில் செல்வதென்றால் துள்ளிக் கொண்டு கிளம்பும் மலரோ, யுவா கூறும் முன்னே ஓடிச் சென்று ஒய்யாரமாக அங்கு நின்ற புல்லட்டின் பின்புறம் ஏறி உட்கார்ந்து கொண்டவள் “சீக்ரம் வண்டிய எடுங்கத்தான்” என்று ஆர்ப்பரித்தவளின் செய்கையிலே தன்னிலை இழந்தவன், தன் விருப்பு வெறுப்பை எல்லாம் ஒதுக்கி வைத்து மறு பேச்சுப் பேசாமல் அந்த புல்லட்டில் ஏறி அமர்ந்தவன், மெல்ல கோவிலை நோக்கி வண்டியைச் செலுத்த… அந்த குண்டும் குழியுமான கோவில் பாதையில் ஓடத் தொடங்கிய புல்லட் வண்டியோ யுவா பயந்தபடி, அப்பத்தாவின் நோக்கப்படி, அதன் வேலையை சிறப்பாக செய்யத் தொடங்கியது.