தாலி கட்டி முடித்து மங்களச் சின்னத்தில் குங்குமம் வைத்த கதிரோ, ஜானுவின் நெற்றியிலும் திலகமிடும் சமயம் அவள் செவியில்… “ஐ லவ் யூ டி பொண்டாட்டி” என்று கிசுகிசுத்தவன் அவளின் நெற்றியில் தன் இதழ்களையும் ஒற்றி எடுக்க….
அதைப் பார்த்த யுவாவோ, “டேய் மாப்ள இது மணமேடைடா, பெட்ரூம் இல்ல” என்று கிண்டல் செய்ய…
கதிரோ, “அது எனக்குத் தெரியுது மச்சான், நீயும் கொஞ்சம் அத ஞாபகம் வச்சுக்க” என்று மலரின் இடையை அணைத்து நின்றிருந்த நண்பனை வார… அவனும் அசடு வழிந்து சிரித்துக் கொண்டான்.
தாலி கட்டும் சடங்குகள் முடிந்து ஜானுவின் கரம் பற்றி அக்கினியை வலம் வந்த கதிரவன் அவள் பாதங்களில் மெட்டியும் இட்டு முடித்தப் பின்னர், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய மணமக்கள்…
“நீங்களும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று தனாவோடு சேர்த்து யுவாவின் கால்களிலும் விழப் போக…
தனாவோ தன் காலில் விழுந்தவர்களை…
“எப்பவும் சந்தோசமா இருங்கடா” என்று வாழ்த்த…
யுவாவோ, “என்னய வயசானவனா ஆக்காதீங்கடா” என்று சொல்லி அவர்களைத் தடுத்தவனும் “நல்லா இருப்பீங்கடா” என்று தங்கையின் தலையை வாஞ்சையாகத் தடவியவன் நண்பனையும் ஆரத்தழுவி விடுவித்தான்.
திருமண வைபவ நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே முடிந்து, பெண் மாப்பிள்ளையோடு மாலை வீடு வந்த யுவாவின் குடும்பத்தினரோ விருந்தினர்கள் அனைவரையும் கவனித்து அனுப்பி வைத்தவர்கள், மணமக்களையும் தயார்படுத்தி தனியறைக்கு அனுப்பி வைக்க… வெட்கமும், நாணமும், மகிழ்ச்சியும் போட்டி போட தங்கள் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் கதிரவனின் ஜானவி.
பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடும் சிறியவர்களின் கேலி கிண்டல்களோடும் குனிந்த தலை நிமிராமல் அறைக்குள் வந்து நின்ற மனைவியை தலை முதல் கால் வரை மோகப் பார்வை பார்த்தவன்…
ஜானவியின் மருத்துவப் படிப்புத் தொடங்கிய நாளில் இருந்து கடந்த ஐந்து வருடங்களாக அவளின் கவனத்தை திசை திருப்பக் கூடாதென்று மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்தவனின் தடைகள் எல்லாம் இன்று தகர்க்கப்பட்டதில்…
“ஜானுமா” என்று அவளைத் தாவி அணைத்துக் கொண்டு அவள் முகமெங்கும் முத்த மழை பொழியத் துவங்கியவன், பெண்ணவளின் செவ்வதரங்களையும் வன்மையாகவே பிணைத்துக் கொண்ட.
கதிரவனின் அடக்கி வைத்த காதல் நரம்பெல்லாம் பெண்ணவளின் அருகாமையில் கட்டவிழ்ந்து கொண்டது போலும்….
இதழ் முத்தத்தில் தொடங்கிய ஆணவனின் கட்டுக்கடங்கா மோகம் அவளை மொத்தமாக கொள்ளையிட்டு முடித்தப் பின்னரே சற்றே மட்டுப்பட…
அவனோ மூச்சு வாங்கத் தன் மார்பில் தஞ்சம் புகுந்தவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவாறே…
“சாரி ஜானுமா… உன்ன பேசக்கூட விடாம ரொம்ப அவசரப்பட்டு போர்ஸா நடந்திட்டேன், பட்டுப் புடவைல தேவத மாறி உன்ன பாத்ததும் நிஜமாவே என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடிலடி, சாரிடி” என்று குற்ற உணர்ச்சி மேலிடக் கூறினான்.
தன்னவளிடம் வன்மை காட்டி விட்டோமோ என்று கலங்கிய கணவனை “இல்லடா கதிரவா” என்று வாஞ்சையாகப் பார்த்த ஜானுவோ…
“நீதேண்டா என்ன மன்னிக்கனும், டாக்டர் ஆகணும்ங்கற என்னோட ஆசைக்காக உன்ன நா ரொம்ப வருஷம் காக்க வச்சு கஷ்டப்படுத்திட்டேன், சாரிடா” என்று வருந்தியவளும் அவன் வெற்று மார்பில் இதழ் ஒற்றி எடுத்தாள்…
மனைவியின் பேச்சைக் கேட்ட கதிரோ, “ம்ம்கூம்… நீயே எனக்கானவ ஜானுமா, உன்னோட ஆசை கனவு லட்சியம் எல்லாமே என்னோடதும் தான், இல்லாதவங்களுக்கு இலவச மருத்துவம் குடுக்கணும்ங்கற உன்னோட உயர்ந்த லட்சியத்துக்கு முன்ன என்னோட காத்திருப்பெல்லாம் ஒண்ணுமே இல்லடா, வாழ்க்க முழுசும் உன்னோட எல்லாக் கனவும் நிறைவேற நா ஒரு தோழனா உன் கூடவே இருப்பேண்டா” என்று கண்களில் காதலோடும் குரலில் உறுதியோடும் கூறியவனின் மார்பில்…
ஜானுவோ, “கதிரவா” என்று மேலும் புதைய…
ஆணவனும் தன் நெஞ்சில் உருகிக் கிடந்த பெண்ணவளை, மீண்டும் மீண்டும் ஓவியமாக்கித் தீட்ட, அவர்களின் அழகிய தாம்பத்தியத்தோடு அவர்களின் இனிமையான வாழ்வும் வீணையோடு இணைந்த தந்தியைப் போல் மிக மிக இன்னிசையாக அரங்கேறத் தொடங்கியது.
நீண்ட வருடங்கள் கழித்து திருமண பந்தத்தில் இணைந்தவர்களை யுவாவின் குடும்பத்தினர் அடுத்த இரண்டு தினங்களில் தேனிலவிற்க்கும் அனுப்பி வைக்க, அஸ்வின் குடும்பமும் காலையில் தான் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்க… அஸ்வினோ செல்லும் பொழுது லீசா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி யுவாவிடம் ஒரு கடித உறையும் கொடுத்து விட்டுச் சென்றிருந்தான்.
தங்கையின் திருமணம் நினைத்ததைவிட சிறப்பாக நடந்தேறி முடிந்ததில் உள்ளம் பூரித்திருந்த யுவா… அந்த இரவு நேர ஏகாந்த வேளையில், தங்கள் அறையின் பால்கனியில் நின்று வானத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த நிலவு மகளை ரசித்துக் கொண்டிருக்க… அந்த நிலவு மகளை தோற்கடிக்கும் வண்ணம் ஜதங்கை இசைக்க நடந்து வந்தாள் அவன் மாமன் மகள் மலர்விழி.
தன் பொற்க்கரங்களில் கணவனுக்கான பால் தம்ளரை ஏந்திக் கொண்டு நிலத்திற்குக் கூட வலிக்காத வண்ணம் அன்ன நடையிட்டு வந்தவளோ…
“இந்தாங்கத்தான் பால்” என்று மென்மையாக கூறியவளின் குரலிலேயே அவள் உள்ளத்தில் ஏதோ உறுத்திக் கொண்டு இருப்பதை கண்டு கொண்ட யுவா…
அவள் கொடுத்த பாலை வாங்கி அருகில் வைத்தவன்… அவளின் பால் போன்ற வதனத்தை கையில் ஏந்தி…
“விழிமா டேய்… என்னடா.?” என்று நெகிழ்ந்த குரலில் கேட்க…
அவளோ அப்பொழுதும் அவன் விழிகளைச் சந்திக்காமல் இமை தாழ்த்திக் கொண்டவளோ…
“ஒன்னும் இல்ல யுவித்தான்” என்று கூறியவளின் குரலே மனைவியின் ஆதியோடு அந்தமும் அறிந்தவனுக்கு அவள் உள்ளக் குழப்பத்தை படம் பிடித்துக் காட்டியது போலும்.
அவனோ மனையாளின் மனக்குழப்பத்தை தீர்க்க எண்ணியவனாய், “டேய் மொசக்குட்டி…” என்று அவள் இடையை வளைத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்…
“உன் மனசுல எந்த சஞ்சலம் வந்தாலும் என்கிட்ட வெளிப்படையா கேக்கணும்னு மாமாதே சொல்லிருக்கன்ல” என்று லேசாகக் கடிந்தவன்…
அஸ்வின் கிளம்பும் பொழுது கொடுத்து விட்டுச் சென்ற கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்து, “இதுதான… மொசக்குட்டி முகம் வாடிப் போறதுக்குக் காரணம்” என்றவன் “பிரிச்சுப் படிடா” என்றும் கூறினான்.
அவளுக்கும் அந்த கடிதத்தில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளும் படபடப்பு இருந்தாலும் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடிதத்தையும் அதை தன் கையில் கொடுத்த கணவனையும் மாறி மாறிப் பார்த்தவளோ…
“இல்லத்தான்… இது உங்களுக்கு வந்த லட்டர் இத நா படிக்கக் கூடாதுத்தான்” என்றவளை…
“விழிமா” என்று மேலும் இறுக்கிக் கொண்டவன்…
“நீ வேற நா வேறயாடா மொசக்குட்டி.?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவன்…
“இதுவர உனக்குத் தெரியாம என்கிட்ட எந்த ரகசியமும் இல்லடா இனிமேலும் அப்டித்தான், உன் மாமா உன்கிட்ட மட்டும் எப்பவுமே திறந்த புத்தகம்தான்டா” என்று ஒரு மாதிரிக் குரலில் கூறி கண்ணடித்தவனுக்கு பெண்ணவளின் அருகாமையில் அவளை அள்ளி ஆராதிக்க ஊனும் உயிரும் பரபரத்தாலும் அவனோ மனைவியின் குழப்பத்தை முதலில் தீர்க்க எண்ணி தன்னைத் தானே வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டவனோ…
“டேய் பிரிச்சுப் படிடா” என்று மீண்டும் உந்தியவனின் வார்த்தையில் அவளும் அந்த கடிதத்தை பிரித்து வாசித்தாள் மலர்விழி.
லீசாவினால் யுவாவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் “திருவிழாவில் தன்னை அடித்ததற்கு யுவா மிகவும் வருத்தப்பட்டதாக அஸ்வின் கூறியதிலிருந்து யுவாவின் மேல் அவளுக்கு இருந்த கோபம் எல்லாம் மறைந்து அவள் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும்… யுவா மலரின் காதலை கண்டு அவள் மிகுந்த ஆச்சர்யப்படுவதாகவும்” எழுதியிருந்தவள்…
அத்தோடு “யுவாவுடைய தொழிலில் பாட்னராக சேர்ந்து அவனுடைய ராஜ் தயாரிப்புகளை அமெரிக்கா முழுதும் மார்க்கெட்டிங் செய்ய விரும்புவதாகவும்” கூறி அதனால் யுவாவுக்கும் அவளுக்கும் கிடைக்கவிருக்கும் லாபத்தையும் பட்டியலிட்டிருந்தவளோ…
இறுதியாக, “இந்த வாய்ப்ப மட்டும் வேணாம்னு சொல்லாத ராஜ், இது நம்ம ரெண்டு பேத்துக்குமே ரொம்ப ரொம்ப லாபாகரமானது, இதுக்காக நா உன்ன ப்ரதர்னு கூப்புட கூடத் தயாரா இருக்கேன்” என்று கூறியிருந்தவள்…
“நா லாஸ்டா பாத்த ஒரு இந்தியன் மூவில நடிச்சிருந்த ஆக்ட்ரஸ் கூட அந்த ஹீரோவ பிரதர்னுதா கூப்ட்ருப்பா அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பிரதர்ர்ர்” என்று இழுத்து ஆங்கிலத்தில் அந்தக் கடிதம் முடிந்திருக்க…
அதைப் படித்து முடித்த மலர்விழியின் முகமோ இப்பொழுது பூரண சந்திரன் போல் ஒளிர்ந்திருந்தது…
அவளோ, “நம்ம லீசாவோட பாட்னரானா நம்மோட தொழிலுக்கு நிறைய முன்னேற்றம் வருமா மாமா.?” என்று கணவனிடம் ஆர்வமாக வினவ
அவனும், “ஆமாடா லீசாவோட கம்பெனிக்கு உலகம் பூராம் மார்க்கெட்டிங் இருக்கு, அவங்களோட பார்ட்னர்ஷிப் வச்சிக்கிட்டா இப்போதைக்கு இந்திய அளவுல விக்கிற நம்மளோட பொருள்கள் உலகம் முழுசும் விற்பனையாகும்… இதுல நமக்கு ரொம்பவே பெனிபிட் இருக்குடா…” என்று மனைவிக்கு புரியும்படியாக இன்னும் பல விஷயங்களை எடுத்துக் கூறியவன்…
இறுதியாக, “இருந்தாலும் இது நமக்கு வேணாண்டா” என்று முடிக்க…
அவளோ, “ஏன்த்தான்.?” என்றாள் பதட்டமாக…
யுவாவோ அவள் கேள்விக்கு பதிலாக, “இல்லடா… இந்த பாட்டனர்ஷிப்ப வச்சுக்கிட்டோம்னா தொழில் விஷயமா லீசாகூட நம்ம அடிக்கடி பேச வேண்டி வரும், ஏன் அவள நேர்ல சந்திக்கக் கூட வாய்ப்பிருக்கு, அந்த மாறி நேரத்தில உன் மனசுல சின்ன சங்கடம் வந்தாக் கூட என்னால தாங்க முடியாது விழிமா… என்னோட பலமே நீதாண்டா, உன் முகம் வாடுனா என்னால பாக்க முடியாதுடி” என்று கூறி அவள் இமைகளில் முத்தமிட்டவனின் குரலில் வழிந்த நேசத்தில்…
மலரோ, “யுவித்தான்..” என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், “என்னோட முகம் கூட வாடக் கூடாதுன்னு நினைக்கிற என்னோட யுவித்தான் என் பக்கத்துல இருக்கப்போ எந்த மாறி சூழ்நிலைலயும் எனக்கு எந்த சங்கடமும் வராதுத்தான்” என்று அவளும் விழிகள் பனிக்கக் கூறியவள்….
“உங்களோட முன்னேற்றத்துக்கு என்னால எந்தத் தடையும் வரக்கூடாதுத்தான்… இதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நம்ம இந்த டீல ஏத்துக்கலாம்த்தான்” என்று அவன் கரம் பற்றிக் கொஞ்சினாள்.
மனைவியின் பேச்சில், வாழ்வியலை நிதர்சனத்தை புரிந்து கொண்டவளின் கணவனுக்கான இந்த இணக்கமான பதிலில் அகம் மகிழ்ந்த யுவாவும் அவள் செவியோடு இதழ் பொருத்தியவன்…
“அப்ப நா லீசாவோட பேசுனா மொசக்குட்டி ஐஸ்க்ரீம் கிடைக்காத அஞ்சு வயசுப் பாப்பா போல முகத்த தூக்க மாட்டீங்களா.?” என்று வேண்டுமென்றே அவளைச் சீண்ட…
அவளோ, “ம்ம்கூம்” என்று அஞ்சு வயது பாப்பா போலவே அழுத்தமாகத் தலையாட்டியவள், “அவதான் இனிமே உங்கள பிரதர்னு வேற கூப்புட போறதா சொல்லிட்டாளே” என்றும் சொல்லி…
“ஆனா லாஸ்ட்ல ஏதோ மூவி அது இதுன்னு சொல்லிருந்தா அதுதே எனக்கு புரியலத்தான்” என்றாள்.
மனைவியின் கூற்றில் யுவாவும், ‘நல்லவேல… விழி ராஜா ராணி படம் பாத்ததில்ல போல’ என்று ஆசுவாசமாக எண்ணிக் கொண்டவனோ…
‘இருந்தாலும் இந்த லீசாக்கு ரொம்பக் கொழுப்பு, இனிமேல் இதுபோல விளையாடக் கூடாதுன்னு அவகிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லி வைக்கணும்’ என்றும் மனதுக்குள் எண்ணியவாறே மனைவியைப் பார்த்த யுவாவுக்கு உதட்டை கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்த மலரின் பாவனையில், அவள் பற்களுக்குடையில் சிக்கித் தவித்திருந்த தேன் அதரங்கள் சிந்திய போதையில் மற்றவை எல்லாம் அவன் சிந்தையில் இருந்து சிதறிப் போக…
அவனோ “மொசக்குட்டீ…” என்று என்புகளே நொறுங்கும் அளவு தாபமாக அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் சிறிது நேரம் அங்கேயே இளைப்பாறிவிட்டு…
“விழிமா போலாமா.?” என்று அவள் காதோரம் குழைய…
அவளோ, “ரூமுக்கா யுவித்தான்.?” என்று கேட்க…
அவனோ, “இல்லடி வீட்டுக்கு தோட்ட வீட்டுக்கு” என்று சொன்னான்…
மலர்விழியோ, “தோட்ட வீட்டுக்கா.? இந்த நேரத்துலயா.?” என்று வினவியவளிடம்
அவனோ, “ஆமடி இப்பவே போணும்… ஸ்பெஷல் யோகா வேற செஞ்சு ரொம்ப நாளாச்சுடி” எனக் கூறி கரங்களால் அவள் மேனியில் கவி எழுதியவனின் விழியில் வழிந்த வேட்கையில் மலரையும் மோகவலை ஆட்கொள்ள…
அவளோ இருந்தும்… இருக்கும் இடம் கருதி மெல்ல கணவனை விட்டு விலகியவள், அறைக்கதவைத் திறந்து உறங்கும் மகள்களைப் பார்த்தவாறே….
“மணி பத்தரையாகுது யுவித்தான் புள்ளைகளும் தூங்கிட்டாங்க, இந்த நேரத்தில் எப்படி தோட்ட வீட்டுக்கு போறது” என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே…
“ம்மா நாங்க இன்னும் தூங்கல” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார்கள் யுவாவின் இரட்டைகள்.
அறையின் அரை இருட்டில் திடீரென்று கேட்ட மகள்களின் குரலில் யுவாவும் மலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவர்களை நெருங்கிய யுவா இரு மகள்களையும் இரு கரங்களில் வாரி எடுத்துக் கொண்டவன்…
“ராஹிமா சாஹிமா… இன்னும் தூங்கலையா நீங்க.?” என்று வினவ…
அவர்களோ, “தூக்கம் வரலைப்பா” என்று தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டனர்.
அதைப் பார்த்த மலர்விழியும் மகள்களின் தலையை வாஞ்சையாக வருடி, “ஏண்டா குட்டிமா தூக்கம் வரல.?” என்று வினவ…
அன்னையின் கேள்வியில் அவர்களின் மனத்திரையிலோ ‘காலையில் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்த அஸ்வினின் மகன் மேல் தவறுதலாக ஐஸ்க்ரீமை சிந்தியதற்காக ராஹியை “டெவில்” என்று திட்டிய ஆதித்யவர்மாவின் முறைத்த விழிகளும் அண்ணனுக்காக சாரி கேட்ட ஆத்விக்வர்மாவின் சிரித்த முகமும் ஒரு நிமிடம் வந்து போக…
“அது வந்துமா” என்று தொடங்கிய சாஹியை விழியாலே தடுத்த இரட்டையில் மூத்தவளோ யுவாவின் சாயலோடு அவனின் அழுத்தமான குணத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பிறந்திருப்பவள்… “ம்மா… பார்ம் ஹவுஸ்க்கு போலாம்மா” என்று பேச்சை மாற்றினாள்.
யுவாவும், “ஆமடி விழி சீக்கிரம் கெளம்புடி” என்று மகள்களைப் போலவே சிணுங்க, அவர்களும் தந்தையுடன் கோரஸ் பாட…
அடுத்த அரை மணி நேரத்தில் விழித்திருந்த நாச்சியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பியவர்களை சுமந்து கொண்டு யுவாவின் ராங்குலர், தோட்ட வீட்டை நோக்கி வேமெடுத்தது.
யுவா மலர் இருவர் மடியிலும் அவர்களின் இரட்டைப் புதல்விகள் அமர்ந்திருக்க. அவனின் இடது கரமோ மனைவியின் வெற்றிடையை புடவையினூடு வளைத்திருக்க, மறுகரமோ ஜீப்பின் ஸ்டியரிங்கில் பதிந்திருக்க அவன் உதடுகளோ தன் அணைப்பில் மயக்கத்தோடு அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து…
“மலரே மௌனமா, மௌனமே வேதமா” என்று உல்லாசமாகப் பாடி அவளை இன்னும் இன்னும் மயக்கமாக்க…. அவளோ, “யுவித்தான்” என்று செல்லமாக சிணுங்கி அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், தன் மயக்கத்தை அவனுக்குக் கடத்தினாள் யுவராஜின் மலர்விழியாள்.
தோட்ட வீட்டின் குழுமையும், மார்கழி மாதத்தின் காலை நேரக் குளிர் காற்றும் படுக்கையில் துயின்றிருந்த மலர்விழியின் வெற்றுத் தோள்களை வருடி பாவையவளின் உறக்கம் கலைக்க, அவளோ தன் நெஞ்சில் பாரத்தை உணர்ந்த வண்ணம் மெல்ல விழி மலர்த்தி அங்கே பள்ளி கொண்டிருந்த கணவனைப் பார்த்து தன்னுள்ளே சிரித்துக் கொண்டவளோ அவனின் அடர் சிகையை சிறிது நேரம் கோதிக் கொடுத்தவாறே….
“யுவி… யுவி… விடுஞ்சு ரொம்ப நேரமாச்சுபோல எந்திரிடா, புள்ளைக வேற முழுச்சிறப் போறாங்க” என்று காற்றுக் கூட கேட்காத வண்ணம் கூறியவளின் குரல் அவளின் கள்வனுக்கு தாலாட்டுப் போல இருந்தது போலும்.
அவனோ, “நேத்து முழுசும் தண்ணில ஆட்டம் போட்ட அலுப்புல புள்ளைக இப்போதைக்கு எந்திரிக்க மாட்டாங்கடி… இன்னும் கொஞ்ச நேரம்டி” என்று முணுமுணுப்பாகக் கூறியவன் தான் முகம் புதைத்திருந்த இடத்திலேயே தன் இதழ்களையும் ஒற்றி எடுத்து, இன்னும் இன்னும் புதைந்து, பெண்ணவள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள…
கணவன் செயலில் கூசிச் சிலிர்த்த மலர்விழியும், அவன் அடர்சிகையில் அழுத்தம் கொடுத்த வண்ணம் அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள்…
இன்னும் ஒரு மணி நேரம் கடந்தும் கூட கணவனிடம் எந்த மாற்றமும் இல்லாது போக மலரோ, “டேய் யுவி எந்திரிடா இன்னிக்காச்சும் வீட்டுக்குப் போலாம், அத்தயும் அப்பத்தாவும் நேத்தே புள்ளகள பாக்குனும் போல இருக்குன்னு சொன்னாங்க… நம்ம இங்க வந்து நாலு நாள் ஆச்சு யுவி, எந்திரி யுவி” என்று மீண்டும் தன் தேன் குரலால் இசை எழுப்ப…
அவனோ மனைவியின் கூற்றில் இப்பொழுது விழி விரித்து அவளைப் பார்த்தவன், “நம்ம இங்க வந்து நாலு நாள் ஆச்சா மொசக்குட்டி.? எனக்கு நாலு மணி நேரம்தே ஆன மாறி இருக்கு” என்று சோகம் போலச் சொல்லியவன்…
“நீ பக்கத்துல இருக்கப்போ, அதும் டேய் யுவி யுவின்னு கொஞ்சிக் கொஞ்சிக் கூப்புட்றப்போ எனக்கு நேரம் போறதே தெரில விழிமா… நீ என்னய என்னமோ செஞ்சிட்டடி” என்று கிறக்கம் வழியக் கூறி அவள் முகம் பார்த்தவன்…
மலர்விழியோடு இல்வாழ்க்கையைத் தொடங்கியிருந்த ஐந்து வருடங்களில் அவள் தன்னை “டேய் யுவி” என்று அழைக்கும் அளவு அவளின் ஊனோடும் உயிரோடும் இரண்டறக் கலந்து மனைவியின் அந்த கொஞ்சல் அழைப்பை நாள் முழுதும் கேட்பதற்காகவே அவளை அடிக்கடி தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்து விடுபவனோ அவளோடானா இது போன்ற காதல் விளையாட்டில் அவன் கூறியது போலவே தனை மறந்து தான் இருந்தான் யுவா.
கணவன் பேச்சிலும், பார்வையிலும் “யுவித்தான்” என்று சிணுங்கிய மலர்விழி, “இப்டி பேசிப் பேசியே என்னய மயக்குறது நீங்க, இதுல நா என்னமோ செஞ்சிட்டேன்னு சொல்றீக” என்று நாணம் மேலிட முகம் மூடிக் கொண்டவளை…
தன் உயிர் உருக்கும் பார்வையாலும், “விழிமா டேய்… மாமாவப் பாருடி, யுவி சொல்லுடி” என்ற காதல் கொட்டும் வார்த்தையாலும், அவளை மேலும் மேலும் செந்தூரமாய்ச் சிவக்க வைத்தவனின் அத்துமீறலில்…
மலர்விழியோ, “யுவி வேணாண்டா” என்று இதழ் திறந்த சமயம்….
“மொசக்குட்டீ…” என்று தன்னிதழ் கொண்டு பெண்ணிதழ்கள் அடைத்து முன்னேறி எத்துணை முறை வாசித்தாலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அந்த பெண்மை எனும் புத்தகத்தை விரல் கொண்டும் இதழ் கொண்டும் இன்னும் இன்னும் கரைத்துக் குடித்தவன்… அவளோடு இணைந்து காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்தான் மலர்விழியின் யுவராஜன்.
கொட்டக் கொட்ட ஆணவனின் நேசமோ நீண்டு கொண்டே போக, திருப்பிக் கொடுக்கக் கொடுக்க பெண்ணவளின் காதலும் கூடிக் கொண்டே செல்ல “மொசக்குட்டி, யுவித்தான்” என்ற கொஞ்சல் மொழிகளோடும், விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்வு, நம்பிக்கை என்ற தாரக மந்திரத்தோடும் அந்த கிராமத்துக் கிளிகளின் இனிய பயணமோ அவர்களின் ஒளிமயமான வாழ்க்கையை நோக்கித் தங்கு தடையின்றித் தொடர்ந்திருக்க…