“அவன் எதுக்கு வந்துருப்பான்? பொண்ணு மாப்பிள்ளை இரண்டு பேருமே அவங்க சொந்தமில்லையே.” என யோசித்தவன், முக்கிய தேவையின்றி வெளிவராத அவனின் அத்தையை காண வந்திருப்பானோ என, “அம்மாவை பார்க்க வந்திருப்பானா?” என்றான் யோசனையாக.
“அப்படித்தான் போல அருளு, அம்மாவை ரொம்ப நேரம் பார்த்திட்டிருந்தான், அதனாலதான் அப்பா சாப்பிட போலாம்னு உன்னையும் மாமாவையும் கூட்டிட்டு வர சொன்னார்.”
அம்மாவிற்கு பெரியவர்களுள்தான் மனவருத்தம், அண்ணன் தம்பி வாரிசுகளோடு இல்லை, ஆனாலும் உறவை புதுப்பித்துக்கொள்ள பிடிக்காததாலே அண்ணன் தம்பி வாரிசுகளையும் தவிர்ப்பார் என அன்னையை அறிந்தவன் ஆதலால், “அப்பா ஏதும் முறைச்சாரா?” என்றான்.
“ப்ச்… பாப்பாவை காரணம் வைக்காத, இண்டூர்ல பலமுறை என்னை பார்த்துருக்கான், ஆனா பேசினதில்ல, சப்போஸ் என்னைப் பார்த்தாலும் வழக்கம்போல இன்னைக்கும் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு போய்டுவான், நீ போ. நான் பாப்பா அழுதா வரேன்.”
தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தவள் கண்களில் அருட்செல்வன் பட, தன் தந்தை திருமண புகைப்படத்தில் இருப்பது போன்ற பிம்பத்தை பிரம்மித்து பார்த்தாள் சிவப்ரியா.
“ம்… சிவாதாண்டி கொடுத்து வச்சவ, நம்ம செட்டுலயே பிஜி படிக்கப்போறவ இவ மட்டும்தான். இவளுக்குத்தான் இன்னும் மாப்பிள்ளை அமையல” என்றாள் பெருமையாக.
“என்னடி இவ? நாம பாட்டுக்கு பேசிட்டிருக்கோம்… ஆனா இவ கவனம் வேற எங்கையோ இருக்கும்போலயே.” என சிவப்ரியா பார்வை நோக்கிய இடத்தை பார்த்தவள்… “ஹேய்… இவ இங்கையே மாப்பிள்ளையை பிடிச்சிடுவா போலடி, இவளும் பிஜி படிக்கப்போறதில்ல.” என கிளுக்கி சிரித்தாள் அவளின் தோழி.
தோழிகளின் பேச்சை கவனம் கொள்ளாமல், தன் மொபைலை எடுத்தவள் அருட்செல்வன் இருந்த திசை நோக்கி சற்று முன்னேறி அவனைப் படம் பிடித்தாள்.
அந்த நேரம் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தவனின் முகம் ஒருபக்கம் மட்டும் தெரியவே, இன்னும் சற்று முன்னேறி அவனின் நேராக சென்று மீண்டும் எடுக்க, இம்முறை அருட்செல்வன் முகம் தெளிவாய் பதிந்தது.
கட்டுப்பட்டி கிராமத்தை பொருத்தவரை இத்திருமண மண்டபம் போதுமானதுதான். ஆனால் அது அத்தனை பெரிய மண்டபம் இல்லை என்பதால் நிறைய பேர் வெளியில் நின்றிருந்தார்கள்.
தூரத்து சொந்தங்கள் விசாரிப்புகள் ஒருபுறம் இருக்க, அம்மாவை தேட ஆரம்பித்த குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்த அருட்செல்வன் சிவப்ரியாவை கவனிக்கவில்லை.
மீசை மட்டும் தந்தைபோல் அல்லாமல் விருமாண்டி கமல்போல் வைத்திருக்கிறான். மற்றபடி நிறம், உயரம், முகவடிவம், தலைமுடி அமைப்பு என அனைத்தும் அருணாச்சலம் போலவே இருக்க, உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பாங்களாமே? அது நிஜம்தானா என அதிசயித்து பார்த்திருந்த சிவப்ரியாவால் அருட்செல்வனிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை.
“மாமா.” என பார்வதியின் ஒன்றரை வயது குழந்தை அன்னை போன திசை நோக்கி கை காண்பிக்க, “போலாம்டா பொண்ணும்மா.” என்றவன் இதற்கு மேல் சமாளிப்பது கடினமென மண்டபத்தினுள் நுழைய முற்பட, அப்பொழுதுதான் தன்னையே பார்த்திருந்த சிவப்ரியாவை பார்த்தான் அதிர்வாகவும் பின்னே முறைப்பாகவும்.
ம்… சிவப்ரிவாவிற்குத்தான் அருட்செல்வனை அடையாளம் காணமுடியவில்லை, ஆனால் அருட்செல்வனிற்கு இவள் தன் மாமன் மகள் எனத்தெரியும்.
தனலஷ்மியின் மகன் அருட்செல்வன் கால்நடை மருத்துவன். சென்னையில் படிப்பை முடித்து, அங்கேயே இரண்டு வருடம் பணியாற்றி, தற்போது ஒரு வருடமாக இண்டூர் அரசு கால்நடை மருத்துவமணையில் பணிபுரிகிறான்.
சுற்றியுள்ள கிராமங்களுக்கு இண்டூர் டவுன் என்றாலும் பெரு நகரங்களில் உள்ள நெரிசலில் பாதிக்கும் குறைவாக இருக்கும் ஊர்.
அதிகப்படியாக நாய்களை அழைத்து வருவார்கள். மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்ப்பதால் மருத்துவமணையில் இருப்பதை விட அருட்செல்வன் அதிகம் வெளியில்தான் இருப்பான்.
அருணாச்சலம் அண்ணாமலையின் பூர்வீகம் இண்டூர். நாமக்கல் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் சிவப்ரியா வீட்டிற்கு வரும்போதெல்லாம் பார்த்திபன்தான் அழைத்துப்போக வருவான்.
அருட்செல்வன் இண்டூர் மருத்துவமணையில் பணியில் சேர்ந்த ஓராண்டில் நான்கைந்து முறை பார்த்திபனோடு சிவப்ரியாவை பார்த்திருக்கிறான்.
அப்பொழுது சுடிதாரில் சிறு பெண்ணாக தெரிந்தவள் இன்று அடர்நீல பட்டுப்பாவாடை ஜாக்கட்டிற்கு சந்தன நிற தாவனியில், சிகையை நிறைத்திருக்கும் மல்லிகையோடு வானத்து கன்னிகையாய் ஜொலித்தவளை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவன், பின்னே அவளின் அசையாப் பார்வை அறிந்து முறைத்தான்.
எங்கே தன்னை தவறாக நினைத்துவிட்டானோ என, “இல்ல இல்ல… தப்பா நினைக்காதிங்க சார், நீங்க என் அப்பா போலவே இருக்கிங்க… அதான் பார்த்தேன்.” என்றாள் தவிப்பாக.
ஓ… இவளுக்கு தன்னை தெரியவில்லை எனப்புரிந்தவன், ஏதும் சொல்லாமல் குழந்தையோடு உள்ளே செல்ல முனைய, வேகமாய் அவன் முன்னே வந்தவள், “உங்க பாப்பாவா சார்? சோ க்யூட்.” என்க,
அருட்செல்வன் தீயாய் முறைக்க, “இல்ல… உங்களை எங்கப்பா முன்ன கொண்டு போய் நிறுத்தினா எப்படியிருக்கும்னு தோணுச்சு, அதான்.” என அசடு வழிந்தவள், “எங்கண்ணா பார்த்தா கூட ஆச்சர்யப்படுவாங்க, நான் சொல்றதுல நம்பிக்கையில்லனா என்னோட வரிங்களா? எங்கண்ணாகிட்ட கூட்டிட்டு போறேன்.” என்றாள் படபடப்பாக.
“ஏய் நகருடி.” என பல்லை நெறித்தவன், “இரிட்டேட்டிங்” என முணுமுணுத்தபடி உள்ளே செல்ல, அத்தனை கோபம் வந்தது சிவப்ரியாவிற்கு.
பார்த்தால் படித்தவன் போல் இருக்கிறான், கொஞ்சமும் நாகரிகம் தெரியல, எத்தனை ஈஸியா என்னவோ உறவுக்காரியை சொல்றமாதிரி நகருடினுட்டு போறான் என மனதில் வறுத்தெடுத்தவள், “அப்பா மாதிரி இருந்தா நமக்குள்ள வச்சிக்கனும், கண்டவன்கிட்டயும் போய் பேசினது நம்ம தப்புதான்.” என புலம்பினாள் ஆற்றாமையோடு.
சிவப்ரியா அருகே வந்த தோழிகள், “ஏன்டி? உனக்கு குழந்தையிருக்கவன்தான் கிடைச்சானா? நல்லா குடுத்தான் போல?” என சிரித்தனர் கிண்டலோடு.
சிவப்ரியா முகம் அவமானத்தால் சிவந்திட, “ஹேய் சிவா, எதுக்கு இவ்வளோ டென்ஷன்? நாங்க சும்மாத்தான் சொன்னோம்? முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட பேசுற ஆள் நீ இல்லைனு எங்களுக்கு தெரியாதா?
அந்த குழந்த செம அழகா இருந்தது… பாப்பா அழகுல மயங்கி பின்னாடி போய்ட்ட, அவன் பெரிய இவன் மாதிரி அவனை ஃபாலோ பண்றதா நினைச்சி திட்டிட்டு போயிருக்கான், இதையே நினைச்சிட்டிருக்காத, உன் அண்ணன் பார்த்தா டென்ஷன் ஆகிடுவார்.” என தேற்றினர் தோழிகள்.
“அண்ணாகிட்ட ஏதும் சொல்லிடாதிங்கடி.” என்றாள் பதட்டமாக.
“நீ இப்படி முகத்தை வச்சிட்டிருந்தா உன் அண்ணாவே கண்டுபிடிச்சிடுவார், ஃப்ரீயா விடு, சாப்பிட போலாம் வா.”
“எனக்கு பசிக்கல”
“ப்ச் என்ன சிவா இது? உன்னை விட்டுட்டு எங்களால சாப்பிட முடியுமா? நீ சாப்பிடாம போனது தெரிஞ்சா ஜீவிதா கோவிப்பா, நேரமாகுது வா.” என வற்புறுத்த, அந்த நேரம் பார்த்திபனும் அழைத்தான்.
“பார்த்திண்ணா.”
“எங்க இருக்க? சாப்பிட்டியா? டைம் ஆகுது.”
“இதோ வரேண்ணா.” என தோழிகளோடு உள்ளே போனாள்.
அருட்செல்வன் வரவில்லை என நினைத்து தங்கையை சற்று சுதந்திரமாக விட்ட பார்த்திபன், தன் பார்வையிலிருந்து அத்தை குடும்பம் விலகிய பின்னே மொபைலில் கவனம் செலுத்தியிருந்தான்.
கவனம் மொபைலில் இருக்க, அருட்செல்வன் உள்ளே வந்தது தெரியாமல் போனது. இன்னும் கிஃப்ட் கொடுக்க வேறு அரை மணி நேரம் பண்ணுவாள் என அழைத்திருந்தான் சிவப்ரியாவை.
“என்னடா முகம் வாட்டமா இருக்கு?” என புருவம் சுருக்க, சில நொடி தடுமாறியவள், “கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வந்துட்டு என்ஜாய் பண்ண விடமாட்டுறிங்க” என்றாள் கோபம்போல்.
“நாம வந்து ஒருமணி நேரம் ஆகுது, இன்னும் என்ன என்ஜாய் பண்ணனும்?” என செல்லமாய் முறைத்தவன், “சீக்கிரம் போய் கிஃப்ட் கொடுத்துட்டு வா, அப்பா இரண்டு முறை கால் பண்ணிட்டார்.”
“அங்க நிறைய பேர் நிக்குறாங்கண்ணா, நாங்க முதல்ல சாப்பிட்டுடறோம்.” என சிவப்ரியா தோழி சொல்ல, “ஆமாம்ண்ணா பசிக்குது.” என்றாள் இன்னொரு தோழி.
மணமக்களுக்கு பரிசளிக்க இருபது பேர் வரை நின்றிருக்க, உடனிருப்பவர்கள் வேறு பசிப்பதாய் சொல்லவும், தங்கையை தனியே அழைத்துச்சென்றவன், “மேல அத்தை ஃபேமலி சாப்பிட்டிருக்காங்க, என்னை பார்க்க பிடிக்காமத்தான் சாப்பிட போய்ட்டாங்க, அவங்களை நோட்டம் விடாம, ஃப்ரண்ட்ஸோட பேசிக்கிட்டு சீக்கிரம் சாப்பிட்டு வரனும்.” என்றான்.
சரியென தலையசைத்து உள்ளே போக, அத்தை குடும்பம் வெளியே வரவும், ‘ஹப்பா வந்துட்டாங்க’ என நிம்மதியோடு நினைத்தவன் பிறகுதான் அத்தையின் கொழுந்தன் மகளைப் பார்த்தான்.
யாரிந்த பொண்ணு? அத்தையும் மாமாவும் இவ்வளோ பாசமா பார்த்துக்கிறாங்க என நினைக்க, “பெரியப்பா குட்டிம்மா சரியா சாப்பிடவேயில்ல.” என சங்கரிடம் சொல்ல, ‘ஓ.. தம்பி மகளா?’ என நினைத்தவன், ஆக நாங்க மட்டும்தான் ஆகாதவங்க என தனலஷ்மியையே பார்த்திருந்தான் ஆற்றாமையோடு.
இங்கே அருட்செல்வனின் அருவருத்த முகத்தை நினைத்தவாறு சாப்பிட வந்தவளுக்கோ அவன் எதிரில் அமர்ந்து உண்டுகொண்டிருப்பதே கவனத்தில் இல்லாமல் போக, “ஏய் உக்காரு சிவா.” என்ற தோழியின் சொல்லுக்கு கட்டுபட்டு அமர்ந்தாள்.
உணவு பரிமாறப்பட, “அப்பா மாதிரி இருக்கிங்கனுதானே சொன்னேன்? என்ன தப்பா சொல்லிட்டேன்? ஒரு நிமிஷத்துல எவ்வளோ கேவலமா பார்த்துட்டான் என அருட்செல்வன் முகம்சுழித்து பல்லை நெறித்ததை நினைக்க கண்ணீர் வெளிவந்தது.
தான் திட்டியதை நினைத்துதான் வருந்துகிறாள் என எதிரே அமர்ந்திருந்த அருட்செல்வனுக்கு புரிய, வேகமாய் உண்ண ஆரம்பித்தான்.
இருக்கும் சூழல் அறிந்து யாரும் அறியாமல் கண்ணீர் துடைத்தவள் உணவுண்ண ஆரம்பிக்க, தொண்டையில் இறங்க மறுத்தது உணவு. தண்ணீர் எடுத்து பருகியவள் கண்ணில் அருட்செல்வன் பட, அதிர்ந்து விழித்த நேரம் உண்டு முடித்தவன் முன்னிருப்பவளை கண்டுகொள்ளாமல் வெளியேறினான்.