அருணாச்சலம் மகளறை அருகே வந்து, “சிவா… சிவாம்மா.” என கதவை தட்ட, “சித்தப்பா, அவளை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடுங்க.” என்றான் பார்த்திபன்.
கல்யாணி, “அவ அழுதிருப்பா போல, நீ ஃப்ரீயா விட சொல்லி சிரிக்கிற.” என முறைக்க, “எதோ நல்ல விசயம் நடந்திருக்கு, இல்லனா சிவா அழும்போது பார்த்தி சிரிக்கமாட்டான்.” என நிம்மதியான அருணாச்சலம், “என்ன நடந்தது பார்த்தி.?” என்றார்.
“அது வந்து சித்தப்பா, சந்தோசமான விசயம்தான்.” என அறைக்குள் இருக்கும் சிவாவிற்கு கேட்கும்படி சொல்ல, நடந்ததை சொல்லும் முன் பட்டென கதவைத் திறந்தவள் “அவங்களா நினைச்சிட்டு சொல்லியிருக்காங்க. எனக்கு அப்படி ஏதும் இல்ல.” என்றாள் ரோசமாக.
“யார் என்ன சொன்னாங்க சிவாம்மா?” என்றபடி அண்ணாமலை வர, பெரியப்பாவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிவப்ரியா உள்ளே போய்விட, பார்த்திபன் நடந்ததை விளக்கினான் இன்முகத்தோடு.
அருணாச்சலம், “நிஜமாவா சொல்ற? அருளா அப்படி சொன்னான்?” என வியந்தார் மகிழ்வோடு.
கல்யாணி, “சிவா அன்னைக்கு சொன்னப்போ கூட ஒருசிலர்தான் கேட்டாங்க. ஆனா குடும்பத்தோட வந்துட்டு போன பின்ன அருளுக்கு கேட்க வந்தாங்களானு நிறைய பேர் கேட்பாங்க. இப்படி பேர் விளங்கினா இவ எதிர்காலத்துக்கு நல்லதில்லையேனு வேதனையாயிருந்தது. அருள் இந்த முடிவெடுத்ததால எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைச்சிடும். நான் கும்பிடுற சாமி என்னை கை விடல.” என சந்தோசித்தார்.
கிட்டதட்ட அரைமணி நேரமாக இவர்கள் சந்தோசமாக உரையாடிக்கொண்டிருக்க, கணவனையும் மகனையும் தேடி மோகனா வந்தார்.
“எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கிங்க, சிவாயேது கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா? எங்க அவளை காணோம்?” என்றார்.
“ஆமா மோகனா, சிவாக்கு கல்யாணம் ஆகப்போகுது.” என்று அண்ணாமலை விசயத்தை விளக்க, எப்படி இது சாத்தியம் என மோகனா முகம் இருண்டது, மனம் பதறியது.
“என்னக்கா, மாமா இவ்வளோ பெரிய விசயத்தை சொல்லியிருக்கார். நீங்க எதுவும் சொல்லாம இருக்கிங்க?” என கோபித்தார் கல்யாணி.
பேரதிர்விலிருந்து மீண்டு, “இதுல உள்குத்து எதாவது இருக்கப்போகுது கல்யாணி, இத்தனை வருசத்து பகையை மறந்து அவன் இப்படி சொன்னது எனக்கென்னவோ சரியா படல, அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ கூட சிவாகிட்ட எப்படி கோபமா பேசினான்? இப்போ திடீர்ன்னு எப்படி இப்படி முடிவெடுத்தான்? அவங்கம்மாக்கு நம்ம மாமனார் சொத்து கொடுக்காததை மனசுல வச்சி நம்ம சிவாவை பழிவாங்கிடுவானோனு பயமா இருக்கு.” என்றார் மோகனா.
“என்னக்கா இப்படி சொல்ற?” என கல்யாணி கவலைகொள்ள, “அப்படிலாம் எதுவும் நடக்காது. அருள் அப்படிபட்டவன் இல்ல, கண்டதையும் பேசி கல்யாணியை குழப்பிவிடாத.” என மனைவியை அதட்டினார் அண்ணாமலை.
“கல்யாணம் செய்துக்க விருப்பப்படுறவன் நேரா வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கவேண்டியதுதானே? அதென்ன வழிமறைச்சு கூட்டிட்டு போய் சொல்றது? நல்லவன் செய்யிற வேலையா இது.?” என்றார் மோகனா.
“ம்மா, அருள் எப்படி கேட்டார்ன்னு எனக்கு தெரியாதா? நான் பக்கத்துலதான் இருந்தேன்.” என அன்னையை அதட்டி, கல்யாணியிடம் “அவர் பழிவாங்க கேட்கல சித்தி. நம்ம சிவாக்கும் இதுல விருப்பம்போல, என்ன ஆச்சர்யம்னா? நான்கூட சிவாவை கண்டுபிடிக்கல, ஆனா அவர் எப்படி கண்டுபிடிச்சார்ன்றதுதான்.” என்றான் பார்த்திபன்.
“என்ன? சிவாக்கு அருள் மேல விருப்பமா.?” என மொத்த குடும்பமும் அதிர, “ஆமாம் சித்தப்பா, அருள் வீட்டுக்கு வருவேன்னு சொல்லும்போது சிவா மறுக்கவேயில்ல. அப்போ விருப்பம்னுதானே அர்த்தம்.” என்றான் இன்முகத்தோடு.
அருள் கேட்டிருந்தாலும் மகள் இதற்கு சம்மதிப்பாளா என்ற கேள்வி இருக்க, தற்போது பார்த்திபன் சொன்ன விசயம் கல்யாணியை மகிழ்வித்தது. ஆனாலும் மகள் வாயிலாக கேட்டறிந்திடும் ஆர்வம் வர, “அப்படியா சொல்ற? வா போய் கேட்கலாம்.” என அறை கதவை தட்டினார் கல்யாணி.
“சித்தி இப்போ வேணாம், சிவா டென்ஷனா இருக்கா, அப்புறம் கேட்கலாம்.” என பார்த்திபன் மறுக்க, இவர்கள் பேசுவதெல்லாம் உள்ளிருந்த சிவப்ரியா கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
தற்போதும் இந்த கல்யாணம் நடக்காது என்பதுதான் சிவாவின் எண்ணம் ஆதலால், தன்னை கண்டுகொண்டானே என்ற அவமானம் பெரிதாய் தாக்க, கண்ணீர் நின்றபாடில்லை சிவப்ரியாவிற்கு.
“ம்மா எனக்கு தலை வலிக்குது. கொஞ்ச நேரம் தூங்கறேன்.” என்றாள் உள்ளிருந்தபடியே.
இங்கே பார்த்திபன் சிரிக்க, “அப்போ நீ சொல்றது உண்மைதான் பார்த்தி. சிவாக்கு அருளை பிடிச்சிருக்கு.” என்றார் சந்தோசமாக.
கதவை திறந்தவள், “அவர் கேட்டதும் சொத்தை அத்தைக்கு சேர்க்குறதுக்கு வழி பிறந்துடுச்சுனு நினைச்சுதான் நான் ஒன்னும் சொல்ல, மத்தபடி நீ நினைக்கிற மாதிரிலாம் ஒன்னுமில்லம்மா.” என்று, பார்த்திபனை முறைத்தாள்.
“சரி… உன் அத்தைக்கு சொத்து கொடுக்குறது உனக்கு சந்தோசம்தானே? அதுக்கு எதுக்கு இப்படி அழுதிருக்க?” மகளை அன்போடு கடிந்து, தலைகோதி, “வா, டீ குடி, தைலம் தேய்ச்சி விடறேன். தலைவலி சரியாகிடும்.” என்றார் அக்கறையாக.
அன்னை முகத்திலிருந்த பூரிப்பை பார்த்தவள், “ம்மா இந்த கல்யாணம் நடக்காது.” எனும்போதே, “ச்சூ.. அபத்தமா பேசாத சிவா.” என அதட்டினார்.
“ப்ச் ம்மா, அவர் கண்டிஷன் சொல்வாராம். நான் அதுக்கு சம்மதிச்சு கல்யாணத்துக்கும் சம்மதிக்கனுமாம். அவர் என்ன கண்டிஷன் சொல்வாருனு நமக்கு தெரியாதா?” என்றாள்.
இதென்ன புதுகதை என்பதாய் பார்த்திபனை பார்த்தார் கல்யாணி. அருணாச்சலமும், “என்ன பார்த்திபா? சிவா சொல்றது உண்மையா?” என்க, “ஆமாம் சித்தப்பா.” என ஒத்துக்கொண்டவன், “ஆனா சிவா கண்டிஷனுக்கு ஒத்துக்கலனாலும் இனி அருள் சிவாவை விடமாட்டார்.” என்றான் நம்பிக்கையோடு.
“என்ன கண்டிஷனா இருக்கும்? சிவாக்கு ஏதும் கொடுக்கக்கூடாதுனு சொல்லிடுவாங்களோ?” என கல்யாணி பதற, மோகனாவிற்கோ அமைதியை கையிலெடுக்க அத்தனை சிரமமாக இருந்தது.
“அவங்க சொன்னா நாம எதுக்கும்மா கேட்கனும்?” என தேற்றி, “அத்தைக்கு போன் செய்து நடந்ததை சொல்லி, இங்க வரதுக்கு முன்ன கண்டிஷன் என்னனு சொல்லிட்டு வர சொல்லுங்கப்பா. நமக்கு ஒத்து வந்தா வரட்டும். இல்ல வரவே வேணாம்.” என்றாள் உறுதியாக.
அண்ணாமலை, “வரவங்களை எப்படிடா வேணாம் சொல்றது?” எனப்பதறி, “இத்தனை வருசத்துக்கப்புறம் இப்படி ஒரு திருப்பம் வரும்னு நாங்க நினைச்சே பார்த்ததில்ல, பிறந்தவீட்டுக்கு மகளாவும் கூடப்பிறந்தவளாவும்தான் தனம் வந்து போறதில்ல, இனி சம்மந்தின்ற முறையிலயாவது வரும்ல? ஒட்டு உறவா இருப்போம்ல? எனக்கும் அருணாக்கும் அதுபோதும்டா.” என்றார் நெகிழ்வாக.
“அவர் எனக்கு ஏதும் செய்ய வேணாம்பார். அதுக்கு சம்மதிப்பிங்களா? பெரியப்பா.?” என்றாள்.
“இப்போதைக்கு கல்யாணம் முடியட்டும்டா, இப்போவே இந்தளவுக்கு மனசிறங்குனவங்க நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா இன்னும் இளகிடுவாங்க. உனக்கு கொடுக்க முடியலனா என்ன? உன் குழந்தைக்கு கொடுத்துட்டு போறோம்.” என்று தேற்றினார் மகளை.
பெரியப்பா சொல்வதுபோல் பிற்காலத்தில் அருள் சம்மதிப்பான் என்றெல்லாம் சிவப்ரியாவிற்கு நம்பிக்கையில்லை. எனவே, “அதெல்லாம் முடியாது. இப்போ ஒரு பேச்சு, அப்புறம் ஒரு பேச்சுனு வேணவே வேணாம். எதுவானாலும் இப்போவே தெளிவா பேசிடனும்.” என்றாள்.
கூடவே இருக்கேன்? எனக்கு தெரியாதது எப்படி அவருக்கு தெரிஞ்சது? சிவாவை புரிஞ்சது? என அருட்செல்வனை மெச்சுதலாய் நினைத்திருந்தான் பார்த்திபன்.
“என்ன பார்த்தி ஏதும் சொல்லமாட்டேங்கிற? சிவா சண்டைக்கு நிற்பா போல.” என மகனிடம் உதவியை நாடினார் அண்ணாமலை.
தந்தைக்கு பதிலளிப்பதை விடுத்து, “அருள் கண்டிஷன் வைக்கலனா அவரை கல்யாணம் செய்துக்க உனக்கு ஓகே வா சிவா?” என்றான் சிரிப்போடு.
தடுமாறியவள், பின்னே சுதாரித்து, “அத்தைக்கு சொத்து கொடுக்குறதுக்காக எனக்கு ஓகேதான்.” என முறைத்தாள்.
அதற்கும் சிரித்தவன், “அப்பா, நாம என்ன சொன்னாலும் அருளும் கேட்க போறதில்ல, சிவாவும் கேட்கபோறதில்ல, அவங்க வரட்டும். இரண்டு பேருமே பேசிக்கட்டும்.” என்றான்.
“சண்டையில முடிஞ்சிடுச்சினா.?” என அருணாச்சலம் வருந்த, “கண்டிப்பா சண்டை வரும். ஆனா சிவா கல்யாணம் அருளோடதான். கவலையை விடுங்க.” என்றான் இலகுவாக.
தந்தை சொன்னதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் பார்வதி. வந்தவள் கண்கள் அருளை தேட, அவன் இல்லையென்றதும், “அருள் எங்கப்பா?” என்றாள் சங்கரிடம்.
இரண்டு வயது பேத்தியை கொஞ்சியபடி, “குளிச்சிட்டிருக்கான்ம்மா, வந்திடுவான்.” என்க, நேரம் தற்போது மதியம் பனிரெண்டு ஆதலால், “நான் வரேன்னா எனக்காக காத்திட்டிருப்பான். இன்னைக்கு இப்போதான் குளிக்கபோனானா?” என்றாள் பார்வதி.
“கீழத்தெருவில மாட்டுக்கு பிரசவம் பார்க்க போய்ட்டு வந்து இரண்டாவது முறை குளிச்சிட்டிருக்கான்.” என்றார்.
“ஓ…” என்றவள், “எப்படிப்பா இப்படியொரு முடிவெடுத்தான்?” என காலையில் போனில் கேட்டதையை மீண்டும் கேட்டாள் ஆச்சர்யமாக.
இத்தனை பிரச்சனைக்கப்புறம் அந்த பொண்ணு கல்யாணம் நடக்காம போய்டுச்சுனா உன் அம்மா நிம்மதிபோய்டும், அதோட ஊர்லயிருக்கவங்க வாய்க்கு வந்தமாதிரி பேசுவாங்கனு நினைச்சானாம்.
காலேஜ் போய்ட்டு வந்த பொண்ணை அவன் வேலை செய்யிற ஆஸ்பத்திரிக்கு வரசொல்லி சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொல்லியிருக்கான். சிவா சொன்ன பதில்ல இப்போதைக்கு கல்யாணம் செய்துக்குவானு தோணலயாம். ஆனா அருள் பொண்ணு கேட்டு வரனு சொல்லும்போது மறுக்கலையாம். அதனால இந்த முடிவெடுத்துட்டான் என அருள் சொன்னதை இதோடு இருமுறை விளக்கிவிட்டார் சங்கர்.
ஆனால் இக்காரணங்களால் மட்டுமே தம்பி திருமணத்திற்கு சம்மதிப்பான் என்ற நம்பிக்கையில்லாமல் போக, “அப்படி என்ன பதில் சொன்னாளாம்?” என்றாள். இதையேதான் சங்கரும் கேட்டார். “சில விசயங்களை சொல்ல எனக்கு பிடிக்கலப்பா. ஆனா என் கல்யாணம் அவளோடதான்.” என்றிருந்தான்.
தனக்கே தெரியாத பதிலை கேட்டால் என்னவென்று சொல்வார் சங்கர்? அருள் குளித்து வந்திட, “தோ… வந்துட்டான், உன் தம்பிகிட்டயே கேளு.” என்றார்.
அருளிடம் கேட்க, தந்தையை சமாளித்ததை போல அக்காவை சமாளிக்க முடியாது. அதிலும் குணாளனும் அருகில் இருக்க, மாமாவை நம்ப வைப்பது மிகக்கடினம் என, “என்னைக்கு அப்படி பேசினாளோ அன்னைலயிருந்து அவ நினைப்பு இருந்துட்டேதான் இருந்ததுக்கா.
அதனாலயா? இல்ல நம்ம அம்மாக்காக இவ்வளோ பார்க்குறான்றதாலயானு தெரியல, நல்லவதான் போல, கல்யாணம் செய்துக்கிட்டா என்னனு தோணுச்சு. ஆனாலும் அவ விருப்பம் இல்லாம செய்ய முடியாதுனு அவகிட்ட கேட்க நினைச்சேன்.
காலேஜ்லயிருந்து வழக்கமா இண்டூர் வரை வந்திடுவா, அங்க வந்து பார்த்தி பிக்கப்பண்ணிக்குவான். நேத்தும் வந்தா. பார்த்தியும் இருக்கவும் இரண்டுபேரையும் ஹாஸ்பிட்டலுக்கு வரவச்சி பேசினேன்.
முதல்ல அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க அவளை சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொன்னேன். அவளுக்கு அப்படி ஐடியாவே இல்லனு தெரிஞ்சது. நானே பண்ணிக்கிறேன்னு சொன்னதும் மறுக்கல. அதான் வீட்டுக்கு வரேனு சொல்லிட்டு வந்தேன்க்கா.” என்றான்.
அவளின் வீட்டிற்கு சென்று தனது கண்டிஷனை சொன்னால் சம்மதிப்பாளா என தெரியாமல், சிவப்ரியா தன்னை விரும்புவதை யாரிடமும் சொல்ல பிடிக்கவில்லை அருட்செல்வனிற்கு. அதனால் இப்படி சொன்னான்.
“ம்… என்னவோ சொல்ற… ஆனா எனக்கு உன் விளக்கத்துல முழு திருப்தி இல்ல. உனக்கு பிடிச்சா சரி. உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும். அதுக்கு ஏதும் வராதமாதிரி பார்த்துக்க.” என்றாள் பார்வதி.
அருட்செல்வன் குணாளனை பார்க்க, “சுத்தி வளைக்கிறனு அப்பட்டமா தெரியுது. ஆனா சொல்ல முடியாத விசயத்தை சொல்லவேணாம். காரணம் இல்லாம இப்படியொரு முடிவை எடுத்திருக்கமாட்ட. உனக்கும் அத்தை மாமாக்கும் சம்மதம்னா உன் அக்காக்கும் எனக்கும் மாற்று கருத்து இருக்குமா என்ன?” என்றான் அருளை அறிந்தவனாக.
“ஆயாக்கு தெரியுமா?” என்றாள் பார்வதி.
“இல்லக்கா, இனிதான் சொல்லனும்.” என்றான்.
“அம்மாவை போல அந்த புள்ளையையும் ஆயா வறுத்தெடுக்கும் அருளு, எல்லாம் யோசிச்சு செய்.” என்றாள் அக்கறையாக.
“நான் பார்த்துக்கிறேன்க்கா.”
“அம்மா என்ன சொன்னுச்சு?”
“அம்மாக்கு சந்தோசம்தான். ஆனா அப்பாக்கு போல உனக்கும் மாமனார் வீடு ஆகிடக்கூடாது. நல்லா யோசிச்சு முடிவெடு. சிவாவைதான் பண்ணிக்கனும்னா அவளை மட்டும் இல்ல, அருணா கல்யாணியையும் ஏத்துக்கனும். அவங்க உன்னை காயப்படுத்தாத பட்சத்துல நீயும் மருமகனா நடந்துக்கனும்னு சொன்னுச்சு.”
“அம்மா யோசிக்கிறது சரிதானே? பகையான வீட்டுல பொண்ணெடுக்குறதுனா எல்லாம் யோசிச்சுதான் செய்யனும். அவங்க சரியா நடந்து நீ பழசை பிடிச்சிட்டிருந்தா அம்மா மனசு சங்கடப்படும். நல்லா யோசிச்சுக்கோ.” என்றாள் பார்வதி.
அமைதியாக கேட்டிருந்தவன், “அப்பா அங்க சில விசயங்களை பேசி தெளிவுபடுத்த வேண்டியிருக்கு. அதுக்கு எனக்கு பர்மிஷன் நீங்க கொடுக்கனும்.” என்றான்.
தான் கேட்கப்போவது தவறென அருட்செல்வனிற்கும் தெரியும்தான். ஆனால் கேட்காவிட்டால் சொத்துக்காக அவளை மணப்பது போலாகிடும் என்பதால், “வேற வழியில்லப்பா.” என முடித்துக்கொண்டான்.
சொத்து வேண்டாம் என்பானோ? என மகனை யூகித்தாலும், எதற்காகவோ சிவப்ரியாவை திருமணம் செய்ய மகன் திடமாய் முடிவெடுத்துவிட்டான். என்ன நடந்தாலும் இனி மாறமாட்டான். பிரச்சனை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணினார் சங்கர். அதன் பின்னே நல்லநாள் பார்த்து அருணாச்சலத்திற்கு அழைத்து வரும் புதன்கிழமை வீட்டிற்கு வருவதாய் சொன்னார் சங்கர்.