புதன் கிழமை காலை, சங்கர், நாகராஜ் தயாராகியிருக்க, தனமும், பவானியும் தற்போதுதான் வேலைகளை முடித்து அவசரமாக தயாராகிக்கொண்டிருந்தனர்.
எட்டரை மணி முதல் பத்தரைவரை நல்லநேரம் என்பதால் காலையிலேயே பெண்பார்க்க கிளம்ப திட்டமிட்டிருந்தனர். தற்போது எட்டுமணியாகியிருக்க, பவ்யாவிற்கு அழைத்தான். “அண்ணா, என்ன இந்த நேரம் கால் பண்ணியிருக்கிங்க?” என்றாள் ஆச்சர்யமாக.
“சாரி சொல்லத்தான்.” என்றான் கொஞ்சலாக.
“எதுக்கு சாரி?” என பவ்யா கேட்க, “பவிம்மா, இன்னைக்கு பொண்ணு பார்க்க போறோம்.” என்றதும், “என்கிட்ட சொல்லவேயில்ல, நானில்லாம போறிங்கள்ல? போங்க, போங்க.” என கோபித்தாள்.
யாரை பார்க்கப்போகிறோம் என விளக்கி, “சண்டை வந்தாலும் வரும். எல்லாம் பேசி முடிஞ்சபின்ன உன்னை கூட்டிட்டுபோறேன். சரியா?” என பொறுமையாக கேட்க, பார்த்திபனை நினைத்து, “சரிண்ணா.” என குரலிறங்கியவள், “ரெடியாகனும், வச்சிடவா?” என்று இணைப்பை துண்டித்திருந்தாள்.
உள்ளுக்குள் தடுமாறிய பவானி, “நீ காரணமில்லாம சொல்லமாட்டனு நினைச்சிருப்பா அருளு.” என்றார்.
அன்று பார்த்திபன் மகளிடம் பேசியதை பவானி இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து தனம் கல்யாணியோடு இயல்பாக பேசுகிறார். இந்த நேரம் இதை சொன்னால் அருள் பெரிய பிரச்சனை செய்வான். அது நமது மகளுக்கும் நல்லதல்ல என நினைத்தார்.
இரண்டு நாள் பொறுத்து விடுதியிலிருந்து பவ்யா வருவதற்குள் சொல்லிவிடலாம், இல்லையேல் பவ்யாவே சொல்லிவிடுவாள் என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சிவாவை பெண்கேட்பதாக அருள் சொல்லிவிட கணவனிடத்திலும் கூட ஏதும் சொல்லாமல் அமைதியாகியிருந்தார்.
அனைவரும் அருணாச்சலம் வீட்டிற்கு வர, அருணாச்சலமும் அண்ணாமலையும் மனைவிகளோடு வரவேற்றனர். மற்றவர்களை விட பார்த்திபன் முகம் சற்று அதிகமாய் ஜொலித்தது.
“வாங்கத்தை, வாங்கமாமா.” என வரவேற்றான் பவானி நாகராஜ் தம்பதியை.
“ம்…” என அருள் சந்தேகமாய் பார்க்க, “என்னங்க இது? வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்கவேணாமா?” என நியாயம் கேட்டு, “உள்ள வாங்க.” என வரவேற்றான் அருட்செல்வனை.
இந்த பட்டுசேரியை கட்டு, நகை போடு என காலையிலிருந்து மகளை படுத்தியெடுத்துவிட்டார் கல்யாணி. என்னவோ கல்யாணம் நடக்குற மாதிரிதான் என அலுத்துக்கொண்டாலும், அன்னை எடுத்துக்கொடுத்த பட்டை உடுத்தி, நகைகளை போட்டுக்கொண்டாள்.
கல்யாணி அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து, “டீ வைக்கிறேன் அண்ணி.” என தனத்திடம் சொல்லி கிச்சன் செல்ல, அருட்செல்வன் அன்று அவள் நின்றிருந்த அறை வாசலைப் பார்த்தான்.
இங்கு மச்சினன், அவரின் மனைவி என யாரிடமும் சங்கர் அதிகம் பேசியிராததால், வரவேற்பிற்கு தலையசைத்துவிட்டு பார்த்திபனோடு பேசிக்கொண்டிருந்தவர், பின்னே “சிவாம்மா.” என அழைக்கவும், வெளியே வந்தாள் சிவப்ரியா.
பட்ரோஸ் நிற சிறிய பார்டரில் வெந்தைய நிற பட்டுடுத்தியிருந்தாள். பார்டர் நிறத்தில் கற்பதித்த சிறிய ஜிமிக்கி, நெஞ்சைத்தொடும் சங்கிலி, கற்பதித்த வளவி என ஆர்பாட்டமில்லாத அளவான நகைகளிலேயே ஜொலித்தாள் சிவப்ரியா.
தனம், “இப்படி வந்து உக்காரு சிவா.” என தனதருகே இருந்த இடத்தை காண்பிக்க, அதற்கு சற்று இடைவெளியில் அருட்செல்வன் அமர்ந்திருப்பதால், அவர்களுக்கு எதிரே உள்ள சோபாவில் சங்கரும், நாகராஜும் அமர்ந்திருந்த இடத்தில் போய் நின்றாள்.
இருவர் அமரும் சோபா என்பதால், “உக்காரும்மா.” என நாகராஜ் எழ, “இல்லயில்ல, நீங்க உக்காருங்க மாமா, நான் இங்க உக்கார்ந்துக்கிறேன்.” என அருகிலிருந்த முக்காலியை எடுத்துபோட்டு அமர்ந்துகொண்டாள் சங்கர் அருகே.
சிவப்ரியாவை இன்றுதான் ஊன்றிப்பார்க்கிறாள் பார்வதி. முக்காலியில் அமர்ந்திருந்த்தால் பின்னல் தரையை தொட, அதனை வாகாய் எடுத்து மடிமீது வைத்து நுனி முடியை சுருட்டிக் கொண்டிருந்தவளை பார்வதியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
எதிர்பார்த்ததுதான் என நினைத்தவள், “சம்மதிக்காதிங்கப்பா.” என்றாள்.
எது நடந்தாலும் குரலுயர்த்தக்கூடாதென இரண்டு நாட்களாக மகளுக்கு பாடமெடுத்திருந்தனர் அண்ணாமலையும், அருணாச்சலமும். ஆனாலும் அருட்செல்வன் சொன்ன அடுத்த நொடி சிவப்ரியா பதில்கொடுக்க, “நாங்க பேசிக்கிறோம் சிவா, அமைதியா இருக்கனும்.” என அதட்டினார் அண்ணாமலை.
சபையில் ஏதேனும் வாயை விட்டால் இத்தனை நாள் தனம் சொத்தை அனுபவிச்சதுக்கும் சேர்த்து இருபது ஏக்கராவை எழுதி கொடுத்திடுவேன் என மோகனாவை அண்ணாமலை மிரட்டியிருந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இவள் அருட்செல்வனை பாராமல் சங்கரிடம், “ஏற்கனவே முப்பது வருசமா குற்றவுணர்ச்சியில இருக்க எங்கப்பாம்மாக்கு மேலும் வேதனையை உண்டாக்கிட்டு என்னால வாழ முடியாது மாமா.” என்றாள் குரல் தாழ்த்தி பணிவாக.
“நான் அத்தைக்கா கொடுக்கறேன்றேன்? எனக்குதானே வாங்கி வரேன். அதெப்படி மானங்கெட்டதாகும்.?” என்றாள் சன்னக்குரலில்.
“வாங்கிட்டு எங்க வருவ? யாருக்கு கொடுப்ப?”
“வாங்கிட்டு வாழ வருவேன். என் பி.” பிள்ளைகளுக்கு என சொல்ல வந்தவள் வார்த்தையினை முழுங்கி, “வாழப்போற வீடு என் வீடும்தானே மாமா.?” என சங்கரையே துணைக்கழைத்தாள்.
“ஒரே போடா போட்டாச்சு, வசமா மாட்டிக்கிட்ட மச்சான்.” என கிசுகிசுத்து சிரித்த குணாளன், “ஆனா பழகாமலே எப்படி இப்படி கரெக்ட்டான பொண்ணா செலக்ட் செய்த.?” என்று பாராட்டவும் செய்தான்.
இவன் எழுந்து வெளியே போக எத்தனிக்க, “உக்காரு அருளு, வெளில போனா எல்லாரும் பார்ப்பாங்க.” என்றார் சங்கர்.
“உக்கார்ந்து என்னப்பா பண்றது.?” என கடுகடுக்க, “முதல்ல உக்காரு மச்சான். என்ன பண்ணலாம்னு நான் சொல்றேன்.” என குணாளன் கைப்பிடித்து அமர வைத்தான்.
அண்ணாமலை, “பதினாறு வயசு வரைக்கும் செல்வ செழிப்போடத்தான் வளர்த்தாங்க. எந்த நேரத்துல தனம் எங்கம்மாக்கு கனமாகி போனுச்சோ? மரத்துலயிருந்து விறகை வெட்டி வீசுறமாதிரி சுலபா வீசிடுச்சு. வெட்டின கிளைக்கு ஆதரவா இல்லாம நாங்களும் தப்பு செய்திட்டோம். வேரோட ஆழம் தெரியாம எங்கம்மா வெட்டிவிட்டதுக்கு இத்தனை வருசம் பிரிஞ்சிருந்து நாங்க தண்டனை அனுபவிச்சிட்டோமே. கொஞ்சம் மனமிறங்கலாமில்ல சங்கர்.” என்றார் வேதனையாக.
அருணாச்சலம் சங்கரிடம், “என்ன காரணம் சொன்னாலும் நடந்த விசயங்களை மறக்க முடியாதுதான். ஆனா மனமிருந்தா வரப்போற நாட்களை சந்தோசமா கழிக்கலாம்.
அருள் மூலமா தனம் குடும்பம் திரும்ப கிடைக்கயிருக்குன்ற சந்தோசத்துல இருக்கோம். தனத்தோட காயத்துக்கும், நீங்க பட்ட அவமானத்துக்கும் என் பொண்ணு மருந்தா இருப்பா.” என்றார் பிணைப்போடு.
பெண்ணைப் பெற்றவன் இதற்கு மேல் இறங்கி வரமுடியாது என்பது பெண்ணை ஈன்று திருமணம் முடித்து வைத்திருக்கும் சங்கருக்கு புரிய, அவரின் மனமிறங்கியது. “டீ எப்போம்மா தருவிங்க?” என்றார் கல்யாணியிடம்.
டீ வைத்து ஃப்ளாஸ்கில் ஊற்றி தயாராய்தான் வைத்திருந்தார் கல்யாணி. “இதோண்ணா.” என வேகமாய் கிச்சன் சென்று ஊற்றி எடுத்து வந்து, சங்கர் தனம், நாகராஜ் பவானிக்கு கொடுத்து முடிந்ததும், “டீயை சிவாகிட்ட கொடு கல்யாணி. அவ கொடுக்கட்டும்.” என்றார் தனம்.
அருணாச்சலம், அண்ணாமலை இப்படி இறங்கி வருவார்கள் என்றும் நினைக்கவில்லை, தந்தை உடனே சம்மதிப்பார் என்றும் நினைக்கவில்லை, சொத்தோடுதான் வருவேன் என்பவள் மீது கோபம் வருகிறதுதான். ஆனால் இனி பின்வாங்கினால் அன்னை தாளமாட்டார், என்ற யோசனையில் இருந்தவன் முன்னே டீயை நீட்டினாள் சிவப்ரியா.
“எடுத்துக்கோடா.” என்று சங்கர் சொல்ல, கைகளை பிசைந்தபடி இவனிருக்க, இரண்டு நிமிடம் கழித்து அருட்செல்வனின் முகம் பார்த்தாள் சிவப்ரியா.
தன்னிடம் தோற்ற பாவனையோடு அவனின் முகமிருக்க, தாளமுடியாமல் பக்கத்தில் உள்ள டேபிளில் ட்ரேயை வைத்தவள் அறைக்குள் சென்றுவிட்டாள் கலங்கிய கண்களோடு.
“ஏய், சிவா.” என பார்த்திபன் பின்னோடு செல்ல, இறுக கண் மூடித்திறந்தான் அருட்செல்வன்.
உள்ளே சென்றவன், “நீ செய்தது சரியா? எல்லாரையும் அவமதிச்சிட்டு இப்படி உள்ள வரலாமா?” என்றான் கோபத்தோடு.
“சொத்து வாங்கிக்கலனா அப்பாம்மா வேதனையடைவாங்க. அத்தை வீட்டுக்கு வெறும் கையோட போக என்னால முடியாது. சொத்து வாங்கிட்டு போனா அவங்க என்கிட்ட தோத்ததா நினைப்பாங்க போல. இதுல தோல்வினு ஒன்னுமில்லனு இன்னும் எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல பார்த்திண்ணா.” என கண்ணீர் விட, “ப்ச் மெல்ல பேசு, அழாத.” என்றான் அதட்டலாக.
“என் கல்யாணத்துல அவர் சொல்றமாதிரி முடிவெடுத்தா நம்ம அப்பாம்மாக்கு காலம் வரை வேதனை… நான் சொல்றமாதிரி செய்தா அவருக்கு வேதனை… நான் யாருக்கும் வேதனை தர விரும்பல. இந்த கல்யாணம் எனக்கு” எனும்போதே அவளின் வாயை பொத்தினான் பார்த்திபன்.
“ப்ச் கண்ணைத் துடை.” என தன்னிடமிருந்த கைக்குட்டை எடுத்து தானே துடைத்துவிட்டு “வா.” என கைப்பிடித்தான்.
திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தபோதும், தன் விருப்பத்தை உணர்ந்த தருணமே தன்னை பார்க்க வருவதாய் அருள் சொன்னதற்காகவே தன்னை அலங்கரித்துக்கொண்டாள். ஆனால் தற்போது தன்னிடம் டீயை கூட வாங்காதவன் முன் இனி நிற்கும் த்ராணி இல்லாமல் போக, பிடிவாதமாய் அமர்ந்துகொண்டாள் அறையிலேயே.
அருட்செல்வன் எழவே, எங்கே கோபமாய் கிளம்பிடுவானோ என, “சின்னவ நிச்சயத்துக்கப்புறம் இரண்டு இடத்துல கேட்டாங்க, ரூமைவிட்டு வெளிலயே வரல என் பொண்ணு. உங்க முன்னதான் நல்லபடியா உடுத்திட்டு வந்து நின்னா. ஏதும் சொல்லாம போய்ட்டிங்கனா என் மகளை சமாதானப்படுத்த என்னால முடியாது.” என தழுதழுத்தார் கல்யாணி.
“பார்த்திபா.” என அருள் குரல் கொடுக்க, வெளியே வந்தான் பார்த்திபன். அருள் பார்த்திபனை பார்க்க, “இந்த கல்யாணம் நடக்காதுனு நினைச்சிட்டு வெளில வரமாட்டேங்கிறா.” என்றான் வருத்தத்தோடு.
சிவப்ரியாவின் பிடிவாதம் கோபத்தை கொடுத்தபோதும், இத்தனை நிகழ்விற்கு பிறகு ஏதும் சொல்லாமல் போனால் அனைவருக்கும் வருத்தம்தான். முக்கியமாக இவள் அழுதே கரைவாள். எப்படியாகினும் இவள்தான் தனக்கென்றாகிவிட்டது. எல்லாம் முடித்தே கிளம்பிடலாம் என முடிவெடுத்தவன், “உள்ளே ஓடி ஒளிஞ்சிக்கிட்டாலும் கல்யாணம் நடக்காது. கூட்டிட்டு வா.” என சத்தமாகவே சொன்னான் முறைப்போடு.
பார்த்திபன் உள்ளே போக, “ண்ணா.” என தடுமாறினாள் சிவப்ரியா.
“நீ இத்தனை பேசினதுக்கப்புறமும் கூப்பிடுறார் இல்ல? போகலனா தப்பாகிடும். வா.” என அழைத்து வந்தான் பார்த்திபன்.
எழுந்து அன்னையிடம் சென்றவன், “மோதிரத்தை கழட்டி கொடும்மா.” என கை நீட்டினான்.
“சொந்தங்களை நான் சமாளிச்சிடுவேன், ஆனா இந்த அழுமூஞ்சியை திரும்ப திரும்ப பார்த்தா கல்யாணம் வேணாம்னு தோண ஆரம்பிச்சிடும். என் புத்தி மாறுறதுக்குள்ள மோதிரம் போட்டுடறேன் கொடு.” என கடுகடுத்தான் அனைவருக்கும் கேட்கும்படியே.
சங்கர் சிரிக்க, மோகனாவைத் தவிர மற்ற அனைவர் முகத்திலும் புன்னகை மலர, “அதுக்கெதுக்குடா என் மோதிரத்தை கேட்குற?” என செல்லமாய் முறைத்து, “சிவா கைக்கு இது லூசா இருக்கும். உன் கழுத்துல இருக்க செயினை கழட்டி போட்டுவிடு.” என்றார் சந்தோசமாக.
தனது கழுத்திலிருந்து சங்கிலியை கழற்றி அருட்செல்வன் சிவப்ரியாவை பார்க்க, “வா சிவா.” என பார்த்திபன் அழைத்து வர, பயம், தடுமாற்றம், திருமணம் நடந்தேறும் என்ற மகிழ்வு என அனைத்தும் சேர்ந்த முகபாவனையோடு தலைகுனிந்து நின்றிருந்தவளை ஊன்றிப்பார்த்தபடி சங்கிலியை அணிவித்தான்.
“உன்னோடதெல்லாம் எனக்கு வேணாம்.” என அருட்செல்வன் பார்த்திபனை முறைக்க, “நீங்க போட்டுவிட்ட மாதிரிலாம் சிவா போட முடியாது. சிவா போட்டுருக்கிறது லேடிஸ் போடற செயின். அதை போட்டுக்கிட்டா சிரிப்பாங்க.” என்றான் கிண்டலாக.
அதற்குள் கல்யாணி எடுத்து வந்திருக்க, “நான் இதை ஒருமுறை கூட யூஸ் பண்ணல. உங்களுக்குனு இருந்திருக்கு.” என்று சிவப்ரியாவிடம் கொடுத்து, “போட்டுவிடு.” என்றான்.
அதற்கும் அருட்செல்வன் முறைக்க, “அட, என் நிச்சயத்துல இதைவிட பெருசா வசூல் பண்ணிடறேன். இப்போ போட்டுக்கோங்க.” என்றான் கண்ணிமைத்து.
அருட்செல்வன் கையை நீட்ட, கைச்செயினை போட்டு முடிப்பதற்குள் வியர்த்திருந்தது சிவப்ரியாவிற்கு.
“தனம் உறுதி பண்ணிட்டு சாப்பிடாம போகக்கூடாது.” என அன்பு கட்டளையிட்டு மனைவியை சமைக்க பணித்தார் அருணாச்சலம்.
சமையல் தயாரிகிக்கொண்டிருக்க, “ம்… ஒரு ஆள் மிஸ்ஸிங். அவளும் இருந்திருந்தா செமையா இருந்திருக்கும்.” என பார்த்திபன் பவானியை பார்த்தவாறு சொல்ல, அருட்செல்வன் அர்த்தமாய் பார்க்க, “எங்க ஷிவாங்கியை சொன்னேன்ங்க. இன்டர்னல் போய்ட்டிருக்குனு வரல.” என்றான் பாவமாக.