அருணாச்சலம், “ஆமாம்ண்ணா, இந்த சிவா புரியாம இப்படி பண்ணிட்டிருக்கேனு ஆரம்பத்துல கோபம் இருந்தது. ஆனா அது எடுத்த முயற்சிதான் குடும்பத்தை இணைச்சிருக்கு.” என்றார் சந்தோசமாக.
ஷிவாங்கிக்கு விசயத்தை சொல்ல, “ப்ச் சிடுமூஞ்சி மாமா ரெமோவா மாறுனதை பார்க்க நானில்லாம போய்ட்டேன், போட்டோ எடுத்திருந்தா அனுப்பி விடு சிவா.” என்றாள் ஷிவாங்கி.
ஷிவாங்கி கேட்ட பின்னேதான் அப்படி நடந்திருந்தா நல்லாயிருந்திருக்கும் என நினைத்தவள், “அவங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கனே நான் நினைச்சுப் பார்க்கல, இதுல போட்டோ வேறயா?” என்றாள் ஏமாற்றமாக.
“அப்படிலாம் ஏதும் இல்ல, அத்தையோட பங்கை கொடுக்க இதை விட்டா வேற வழியில்லனுதான் சம்மதிச்சேன்.” என்றாள் ரோசமாக.
“நம்பிட்டேன் நம்பிட்டேன்.” என ஷிவாங்கி சிரிக்க, “நம்பித்தான் ஆகனும்.” என்று இணைப்பை துண்டித்திருந்தாள் சிவப்ரியா.
இப்படியாக அன்றைய பொழுது கழிய, அன்றிரவு மெத்தையில் சாய்தவளுக்கு அருள் நினைவுதான்.
தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கத்தான் அன்று மருத்துவமணைக்கு அழைத்திருக்கிறான். தன் மனதில் அவனிருக்கிறான் என அறிந்ததும் தன்னை மணக்க முடிவெடுத்தது, இன்று இத்தனை பேசியும் தன்னை விடாது நிச்சயித்துக்கொண்டது என நினைக்க மகிழ்வாய் உணர்ந்தாள்.
அதே நேரம் தன்னை அவங்களுக்கு பிடித்திருக்குமா என நினைக்க முகம் வாடியது. அனைவர் முன்பும் சொல்லிவிட்டேன் என்பதாலும், அத்தை மன நிம்மதிக்காவும் மணக்க நினைச்சிருப்பாங்களோ? யாரையோ பிடிச்சிருக்குனு சொன்னாங்களே என ஒரு மனம் வெம்பியது. இப்படியாக குழப்பமும் மகிழ்ச்சியுமாக கழிந்தது அவளின் அன்றைய இரவு.
அடுத்த நாள், “அருணா, கல்யாணம் எப்போ வைக்க நினைப்பாங்கனு தெரியல, அதுக்குள்ள நாம சொத்தை சிவா பேருக்கு எழுதி வச்சிடலாம். கல்யாண வேலை ஆரம்பிச்சிட்டா இதுக்கு அலைஞ்சிட்டிருக்க முடியாது.” என்றார் அண்ணாமலை.
அருணாச்சலமும் நேற்றிரவு இதை நினைத்தார்தான். ஆனால் மோகனாவை நினைத்து எப்படி கேட்பதென யோசித்திருந்தார். தற்போது அண்ணனே கேட்கவும், “சரிண்ணா, தனம் பங்குக்கு பத்து ஏக்கர், சிவாக்கு பத்து ஏக்கர் காடு. அப்புறம் அப்பா தனத்துக்கு அஞ்சு ஏக்கர் வாங்கி உயில் எழுதி வச்சிருக்கார்ல? அதையும் கொடுத்துடலாம்.” என்றார் அருணாச்சலம்.
சந்தோசித்தவர், “தனத்துக்கான பத்து ஏக்கரை நான் சிவாபேருக்கு எழுதி தந்துடறேன் அருணா.” என்றார் அண்ணாமலை.
பின்னே எந்தபுறம் இருப்பதை எழுதலாம் என கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் அண்ணனும் தம்பியும்.
இவர்கள் பேசுவதை கேட்டிருந்த மோகனாவிற்கு, வீட்டு பொம்பளைங்ககிட்ட ஒரு வார்த்தை கேக்குறாங்களா? கொழுந்தன் அவர் பொண்ணுக்கு செய்யிறதால தாராளம் காட்டுவார். நமக்கும் ஒரு பொண்ணிருக்குனு இவருக்கு நினைப்பு இருக்கா? என கணவன் மேல் கோபம் வந்தது.
இரு குடும்பத்திற்கும் முதலில் பேச்சு வார்த்தை உண்டாகும் என்றே நினைக்கவில்லை, இதில் பெண்ணெடுத்து, சொத்து வாங்கவும் சம்மதிப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை மோகனா.
மோகனாவின் இறுக்க முகம் கண்ட அருணாச்சலம், அவர் மனதை அறிந்துகொள்ள, “என்ன அண்ணி சோர்ந்து இருக்கிங்க? உடம்புக்கு முடியலயா?” என்றார்.
அருண்ணாச்சலம் அண்ணாமலையை பார்க்க, “சொத்து எழுதி வைக்கப்போறோம்ல? அதனால வந்த தவிப்பா இருக்கும். இதுக்கெல்லாம் நாம ஒன்னும் பண்ண முடியாது அருணா. நீ ஆக வேண்டியதை பாரு.” என்றார்.
“அதெப்படினா? அண்ணிக்கு விருப்பமில்லனு தனத்துக்கு தெரிய வந்தா பிரச்சனை பெருசாகிடுமே.” என்றார் தவிப்பாக.
“நான்தான் இரண்டு நாள் லீவ் போட சொன்னேன்ங்க, அவளும் உடனே சம்மதிச்சிட்டா.” என்றார்.
இங்கே பார்த்திபன் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருக்க, “ம்மா லன்ச் போட்டுட்டியா?” என கத்தினான் சர்ட்டை போட்டபடி.
“போட்டு வச்சிட்டேன்டா.” என்றவர், “இதுக்கு மட்டும் என்கிட்ட கேளு. மத்தது எதுலயும் நாங்க தலையிடக்கூடாது.” என நொடித்தார்.
“என்னம்மா பிரச்சனை?” என்றான்.
சொத்து பற்றி அண்ணன் தம்பி பேசியதை விளக்க, “இதுல நீ கோபப்பட என்ன இருக்கு? அத்தைக்கானதைதானே கொடுக்க முடிவெடுத்திருக்காங்க?” என்றான்.
“பார்கவிக்கு பதினைஞ்சு ஏக்கர் கொடுக்கறோம்னு சொல்லிட்டேன், இப்போ அதுல குறைச்சா அவ மாமியார் மாமனார் என்ன நினைப்பாங்க?”
“உன்னை யாரு அப்பாவை கேட்காம சொல்ல சொன்னது?” என கடுகடுத்து, “இப்போ என்ன? சொன்னா சொன்னபடி கொடுத்தாகனுமா என்ன? நம்ம வீட்டுல நடந்த சொத்து பிரச்சனை பார்கவி வீட்டுல எல்லாருக்கும் தெரியும்தானே?
இப்போ அத்தை குடும்பத்தோட பகை போய் ஒன்னாகிட்டோம். அத்தைக்கான சொத்து போக மீதியை இரண்டா பிரிச்சி பார்கவிக்கு கொடுக்கிறோம்னு சொன்னா பிரச்சனை முடிஞ்சது. இதுக்கு எதுக்கு நீ டென்ஷன் ஆகற?” என்றான் இலகுவாக.
மோகனா முறைக்க, பார்கவி தூங்கி முழித்து வெளியே வந்தாள். “பாரு, எனக்கு டைம் ஆகுது, இன்னைக்கு ஊருக்கு போய்டாத, பேச வேண்டியிருக்கு. ஈவ்னிங் வரேன்.” என்றான்.
சொத்து பற்றியா இருக்குமோ என, “எனக்கு மதியம் ஊருக்கு போகனும்டா, என்ன பேசனுமோ பேசு. நேரமாகுதுனா சாயங்காலம் போன் பண்ணு.” என்றாள் பார்கவி.
“நேத்தெல்லாம் நீ ஏன் அத்தை குடும்பத்துல ஒருத்தர்கிட்டயும் பேசல? உன் கல்யாணத்துல சிவா எவ்வளோ கலகலப்பா இருந்தா? அத்தை மாமா என்ன நினைச்சிருப்பாங்க?” என்றான் பைக்கை துடைத்தபடி.
“பிறந்ததுலயிருந்தே பேசினதில்ல, எனக்கு திடீர்னெல்லாம் பேச வராது.” என்றாள் கத்தரிப்பாக.
“உன் மாமனார் குடும்பத்தோட பிறந்ததுலயிருந்து சிவாவும் நாங்களும் பேசிட்டா இருந்தோம்? ஆனா உன் நிச்சயத்துல எல்லாரோடவும் பேசினோம்ல? தனம் அத்தை நம்ம அப்பாவோட கூட பிறந்த ரத்தம். அதுமட்டுமில்லாம நம்ம சிவாவை கேட்டு வந்திருக்காங்க. இதைவிட என்ன காரணம் வேணும் பேசுறதுக்கு? இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு சொல்லக்கூட உனக்கு மனசில்லாம போய்டுச்சில்ல.?” என்றான் வெறுப்பாக.
தம்பிக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறியவள், “அத்தை எத்தனை முறை இந்த ஊருக்கே வந்துட்டு நம்மகிட்ட பேசாம போயிருக்காங்க?” என்றாள் பிணக்கோடு.
“ஓ… நீ இப்படி யோசிக்கிறியா? சரி விடு. இனி உன் விருப்பம். ஆனா யார் யார் எப்படி நடந்துக்கிறிங்களோ அதுக்கான எதிர்வினைதான் வரும். அம்மா பேச்சு கேட்டு இந்தளவுக்கு வன்மமா யோசிக்க ஆரம்பிச்சிருக்க, அப்படியே டெவலப் ஆகி நம்ம ஆயா மாதிரி ஆகிடாத, அப்புறம் கடைசியில நம்ம ஆயாக்கு வந்த நிலைமைதான் உனக்கும் வரும்.” என்று எச்சரித்து கிளம்பியிருந்தான் பள்ளிக்கு.
கோவிந்தனிற்கு திருமணமான பின்னே தம்பி மனைவியிடம் தாய் வீட்டு அதிகாரத்தை காண்பிக்க, கோவிந்தன் மனைவிக்கு சரோஜாவை பிடிக்காமல் போனது.
‘என்னை ஒன்னுமில்லாதவனு சொல்ல உங்களுக்கு என்ன தகுதியிருக்கு, உங்ககிட்ட இருக்கிறதெல்லாம் புருசன் வீட்டு சொத்துதானே? என்னவோ அப்பமூட்டுலயிருந்து கொண்டுட்டு போனமாதிரி பெருமை பீத்துறிங்க.
உங்க அப்பமூட்டுலயிருந்து நீங்க கொண்டு போனதை விட நான் அதிகமாத்தான் கொண்டு வந்துருக்கேன். என்னை அதிகாரம் செய்யிற வேலை வச்சிக்காதிங்க.’ என வார்த்தைக்கு மேல் வார்த்தை வளர்ந்து சண்டை பெருசாகி, ‘பெத்த மகளுக்கே சொத்து கொடுக்காத பாவிதான நீங்க? உங்ககிட்ட பேசினாலே பாவம். இனி உங்கப்பாம்மாகிட்ட பேசுறதோட இருந்துக்கோங்க. என்னை எதுலயாவது இழுத்திங்க அசிங்கப்படுத்திடுவேன்.’ என்றாள் கோவிந்தன் மனைவி.
அவமானம் அடைந்த சரோஜா தம்பியிடம் அவனின் மனைவி பேசியதை ஆதங்கத்தோடு சொல்ல, தனம் தனக்கு கிடைக்காத வன்மத்தில், ‘நடந்ததைதானே சொன்னா? என் பொண்டாட்டியை அதிகாரம் பண்ண நீ யாரு?’ என்றான் கோவிந்தன்.
சரோஜா வீட்டில் இரண்டு மருமகள்களும் (கல்யாணி, மோகனா) தனது அண்ணனின் பேத்திகள் என்பதாலும், தனது ஒரு மகனிற்கும் பெரிதாய் வசதியான சம்மந்தம் கிட்டாததாலும் சரோஜாவின் தந்தைக்கும் சரோஜா விரோதியானார். உன்னை அங்க கட்டி கொடுத்து நான் என்ன கண்டேன்? இனி என் மருமகதான் எனக்கு முக்கியம்.’ என்று சரோஜா தந்தை சொல்லிட, பிறந்த வீட்டு உறவு இல்லாமல் போனது.
கந்தசாமி இறப்பிற்கு பின்னே, அண்ணாமலையும் அருணாச்சலமும், நாங்க சொத்து எழுதி வைக்கிறோம்னு சொன்னா தனம் வேணாம்னு சொல்லுது, நீ சொல்லும்மா. தனத்திற்கானதை கொடுத்திடலாம் என்றனர். அதற்கும் சரோஜா மறுக்கவே, மகன்களும் சரோஜாவை வெறுக்க ஆரம்பித்தனர்.
மகன்கள் மேலுள்ள கோபத்தை மருமகள்களிடம் காண்பிக்க, சொந்தம் என்பதாலும், தன் கணவனை ஈன்றவள் என்பதாலும் கல்யாணி சற்று பொறுத்து போனாலும், உன்னை சீராட்டி பாத்துக்கனும்னு எனக்கு அவசியமும் இல்ல, அந்தளவுக்கு நீ நல்லவளும் இல்ல. குடுக்கிறதை திண்ணுட்டு அமைதியா இருந்தா வயித்துபாடாவது இல்லாம இருக்கும்’ என மிரட்டி, மாமியாரை ஒடுக்கியிருந்தார் மோகனா.
அம்மா சாப்பிட்டுச்சா? என மனைவிகளிடம் விசாரித்து தன் கடமையிலிருந்து தவறவில்லைதான் மகன்கள். ஆனால் கடைமைக்கும் பாசத்திற்கும் எத்தனை வித்தியாசம்?
கோடி துணி போட பிறந்த வீடு வேணும்னு பெத்த மகளை உதாசினப்படுத்தினேன். இப்போ அநாதையா கிடக்கிறேன் என சரோஜாவின் கடைசி காலங்களில் மிகுந்த வேதனையடைந்தார்.
சரோஜாவின் அனைத்து குணங்களும் அறிந்தவள் பார்கவி ஆதலால், ஆயாவோடு ஒப்பிட்டு சிவாவிற்காக தன்னை இத்தனை பேசிவிட்டானே? இன்னும் சொத்து பற்றி பேசினால் என்ன பேசுவானோ என ஸ்தம்பித்து நின்றிருந்தாள் பார்கவி.
“ஏன்டி பேயடிச்சமாதிரி நின்னுட்டிருக்க?” என மோகனா அதட்ட, பார்த்திபன் சொன்னதை சொன்னாள் பார்கவி.
“அப்படியா சொன்னான்?” என கணவனிடம், “இப்படி சொல்லியிருக்கான் பரவால்லையா?” என்றார் கோபமாக.
“என் அம்மா புத்தியும், நிலைமையும் பார்கவிக்கு வரக்கூடாதுன்ற நல்லெண்ணத்துல சொல்லியிருக்கான். இதுல என்ன தப்பிருக்கு?” என்றார்.
“அந்தளவுக்கு என்ன பண்ணிட்டா?” என மோகனா கேட்க, “நேத்து தனம்கிட்ட ஏன் பேசல?” என்றார்.
“பிறந்ததுலயிருந்து பேசாதவளுக்கு சட்டுனு வருமா?”
“தனம் மேல எந்த தப்பும் இல்லனு நம்ம மகளுக்கு தெரியாதா?” என கடிந்து, “வந்தது என் தங்கச்சி. அதோட உன் தங்கச்சியை பொண்ணுகேட்டு சம்மந்தம் பேச வந்திருக்காங்க. ஒத்த வார்த்தை நல்லாயிருக்கியாத்தைனு கேட்டுட்டா குறைஞ்சி போய்டுமா.?” என்றார் மகளை பார்த்தவாறு.
பார்கவி தலைகவிழ, “தானா வரவேண்டியது தடியடி பட்டு வரதுல பிரியோஜனம் இல்லனுதான் நேத்தே எதுவும் சொல்லல. பார்த்திக்கு மனசு கேட்கலபோல, அதான் கொட்டிட்டு போயிருக்கான். ஆனா என்ன? தம்பி பேச்சை கேட்டு திருந்திடவா போற? உங்கம்மா சொல்றதைதான செய்வ?” என்றார் வெறுப்போடு.
“அப்பா.” என கண்கலங்கினாள் பார்கவி.
“எங்கப்பாம்மா பேச்சை மீறாம, தனத்துக்கு நாங்க துரோகம் செய்தமாதிரிலாம் பார்த்தியும் சிவாவும் இருக்கமாட்டாங்க. சிவாவை கூட விடு, அது கல்யாணமாகி போய்டும். ஆனா பார்த்தியை அப்படி விட்டுடுவியா? நீயே இழுத்து பிடிச்சாலும், உன் புத்தி சரியில்லனு ஆகிடுச்சினா மொத்தமா விலகிடுவான்.
நாங்க இருக்கிற வரை பிரச்சனையில்ல, பெத்த கடமைக்கு செய்திடுவோம். நாங்க இல்லாத காலத்துக்கு உனக்கு யார் வந்து நிற்பாங்க? உன் வீட்டு விசேசத்துக்கும், உன் பிள்ளைகளுக்கு தாய்மாமனாவும் பார்த்தி வந்து நிக்கனுமா வேணாமானு நீயே முடிவு பண்ணிக்க.” என்று காட்டிற்கு கிளம்பினார் அண்ணாமலை.
பள்ளி முடித்து மாலை ஏழு மணிபோல் பார்த்திபன் வர, பார்கவி இருக்கவும், “ஊருக்கு போகலயாக்கா நீ?” என்றான் ஆச்சர்யத்தோடு.
“காலைல அப்படி திட்டிட்டு போற, எப்படிடா ஊருக்கு போறது?” என்றாள் கோபமாக.
“சரி ஒரு டீ போடு.” என்று உள்ளே சென்றவன், முகம் கழுவி உடை மாற்றி வாசலில் உள்ள கயிற்றுக்கட்டிலில் சாய்ந்தான் ஆயாசமாக.
சற்று நேரத்தில் டீயோடு வந்தவள், “இந்தா.” என நீட்டினாள்.
எழுந்து வாங்கியவன், “நேத்து அத்தைகிட்ட நீ பேசாதது தப்பு. ஆனா அம்மா பேச்சுகேட்டுதான் அப்படியிருந்திருப்ப, இனி அப்படி இருக்காத. ஃப்ரீயா விடு.” என்றான் இலகுவாக.
பார்கவி அமைதியாக இருக்க, “அப்பாவும், சித்தப்பாவும் இன்னும் வரலயா?” என்றான்.
அவர்கள் வருவதற்குள் மகனிடம் பேசிடலாம் என வெளியே வந்த மோகனா, “உள்ள வா பார்த்திபா, உன்கிட்ட பேசனும்.” என்றார்.
“டையர்டா இருக்கும்மா, இங்கையே வந்து சொல்லு.” என்றான்.
பார்த்திபன் குரல் கேட்டு வெளியே வந்தாள் சிவப்ரியா. “ஹே வா சிவா. இப்படி வந்து உக்காரு.” என்றான்.
சிவப்ரியா பார்த்திபன் அருகே அமர, மகன்கிட்ட சித்த நேரம் தனியா பேச முடியுதா என மோகனா மனதினுள் கடுகடுக்க, அந்த நேரம் அருணாச்சலமும் அண்ணாமலையும் வந்தனர். “என்னவாம் உன் அம்மாக்கு?” என்றார் அண்ணாமலை.
“வேற என்ன? எல்லாம் சொத்து பிரச்சனைதான்.” என்றான் பார்த்திபன்.
“சொத்து பிரச்சனையா?” என சிவப்ரியா அதிர்வாக, “உன் அம்மா எதையாவது இழுத்துவிடாம இருந்தாதான் ஆச்சர்யம். என்னவோ கத்திட்டு போகட்டும். நீ கண்டுக்காத.” என்றார் அண்ணாமலை.