“எப்படிப்பா அப்படி விடுறது? பார்கவிக்காவுக்கு பதினைஞ்சு ஏக்கர் கொடுத்தாகனும்னு அம்மா நினைக்குறாங்க. அத்தையோடதை எப்படி பார்கவிக்கு கொடுக்க முடியும்? இது அத்தைக்கு தெரிய வந்தா என்னாகும்?” என்றான் கவலையாக.
“ஒன்னும் ஆகாது பார்த்திபா. உன் அம்மா என்ன கத்தினாலும், அழுதாலும் தனத்துக்கானது தனத்துக்குத்தான் கொடுக்கப்போறேன். என் பொண்டாட்டி என் பேச்சை கேட்கலனாலும் மகள் கேட்பானு நினைக்கிறேன்.
அப்படியும் கேட்கலனா தனத்துக்கானது போக மீதி இருக்க உன்னோட பங்குல பாதியை பார்கவிக்கு கொடுத்துடுவேன். ஆனா அதுக்கப்புறம் அப்பா பாசத்தை எதிர்பார்க்கக்கூடாது. ஆம்பிளைப் பையன் நீ… அஞ்சு ஏக்ரா சொத்தை வச்சு உன்னால வாழ முடியாதா என்ன?
என் புத்தி எப்படி சொல்லுதோ அப்படித்தான் நடந்துப்பேன். உன்கிட்டயிருந்து அபகரிச்ச சொத்தை வச்சிக்கிட்டு உன் அக்கா சந்தோசமா வாழட்டும்.” என்றார் அமர்த்தலாக.
“அப்பா, என் பங்குல கொடுக்குறது பிரச்சனையில்ல, நமக்கு சொத்து கொடுத்ததாலதான் பார்த்திக்கு கம்மியாகிடுச்சுன்றது அத்தைக்கு தெரிய வந்தா ரொம்ப வருந்துவாங்கப்பா. அதோட ஊருக்குள்ள எவ்வளோ அசிங்கம்.?” என்றான்.
“நம்ம அசிங்கத்தையெல்லாம் யோசிக்கிற மனநிலைல உன் அம்மா இல்ல, அவளுக்கு தனத்துக்கு சொத்து கொடுக்கக்கூடாது. அவ்வளோதான். ஆனா என்கிட்ட அது வேலைக்கு ஆகாது.” என்றார் மனைவியை பார்த்தவாறு.
என்ன? மகன் பங்குலயிருந்து கொடுக்கப்போறாங்களா? அப்போ மகனுக்கு வெறும் அஞ்சு ஏக்கராதானே மிஞ்சும்? என பதறிய மோகனா, கணவன் இப்படி யோசிப்பார் என எதிர்பார்க்கவேயில்லை.
“நான் எல்லாரையும் சம்மாத்தான் பார்க்குறேன். அதனாலதான் இருக்கிற முப்பது ஏக்கராவை தனம், பார்கவி, பார்த்தி மூனுபேருக்கும் சமமா கொடுக்க முடிவெடுத்தேன். ஆனா நீ மகளுக்கு அதிகமா வேணும்ன்ற? அப்போ என்ன பண்ண? மகன் சொத்துலயிருந்துதான் கொடுத்தாகனும்.
முப்பது வருசமா தனம் பங்கு காட்டுலயிருந்து லட்ச கணக்குல சம்பாதிச்சிருக்கோம். உன் மகளுக்கு ஒருகிலோ நகை போட்டோமே? அதுல தனம் காசும் இருக்கு. அதெல்லாம் கணக்கு போட்டா தனத்துக்கு தாராளமா பதினைஞ்சு ஏக்கர் கூட எழுதிகொடுக்கலாம். ஆனா தனம் அப்படி வாங்கிக்காது.” என்றார் தங்கையின் நினைவில் பெருமையோடு.
தன் மேலிருக்கும் பாசத்தில் தான் கேட்டால் தந்தை சொத்தை கொடுத்திருவார் என்றுதான் நினைத்தாள் பார்கவி. ஆனால் சொத்தால் தந்தை உறவையும், தம்பி உறவையும் இழந்திடுவோமா என்ற பயம் வர, “உங்க உறவையும், பாசத்தையும் இழக்குற சொத்து எனக்கு வேணாம்ப்பா. எனக்கானதை எனக்கு கொடுங்க போதும்.” என எதிர்காலத்தை நினைத்து மனம் மாறினாள்.
மோகனாவின் முகம் இறுகியே இருக்க, “எங்களுக்கு தெரியாம, தனம்கிட்ட எதாவது பேசி அது மனசை கஷ்டப்படுத்தின… அன்னைக்குத்தான் நான் உன்கிட்ட பேசுற கடைசி நாளா இருக்கும்.! பேசாதது மட்டுமில்ல, நீ சமைக்கிறதையும் தொடமாட்டேன். அடுத்த நாள்ல இருந்து எனக்கு நானே சமைச்சி சாப்பிட்டுப்பேன். முடியலனா அருணா வீட்டுல சாப்பிடுவேன்.” என்றார் தீர்க்கமாக.
தனது வீட்டிற்குள்ளேயே இரண்டு எதிரிகளா? அதுவும் இத்தனை வருடங்கள் கழிந்து சேர்ந்திருக்கும் அத்தைக்கு எதிராகவா? என நினைக்க சிவப்ரியாவிற்கு கண்ணீர்தான் வந்தது.
அருணாச்சலம் வந்தார் இவ்விடம். அண்ணாமலை தம்பியைப் பார்க்க, “சிவாவை கூப்பிட வந்தேண்ணா, காட்டு வேலை தெரிஞ்ச அளவுக்கு சிவாக்கு வீட்டு வேலை தெரியாதில்ல? இனி கத்துக்கனுமாம். இன்னைக்கு நைட் சமையல் சிவாதான் செய்யனும்னு கல்யாணி பிடிவாதம் பண்றா.” என்று சிவாவை அழைத்துச் சென்றார்.
சிவாவை அழைத்துப்போக இத்தனை காரணம் சொல்லத் தேவையில்லையே, வழக்கமாய் வீட்டிலிருந்துதானே குரல் கொடுப்பான் என யோசித்தவர், “பார்த்தி, அருணா முகம் சரியில்ல, வா போய் என்னனு பார்ப்போம்.” என அழைத்தார் தம்பி வீட்டிற்கு.
“எல்லாம் என் அம்மா பத்தின யோசனையாத்தான் இருக்கும். சித்தப்பா கேட்டா இப்படி முடிவெடுத்திருக்கோம்னு சொல்லிக்கலாம் விடுங்கப்பா. இப்போதானே காட்டுலயிருந்து வந்திங்க? கொஞ்ச நேரம் போய் படுங்க.” என்றான்.
வீட்டிற்கு வரும்படி சிவப்ரியா எண்ணிலிருந்து பார்த்திபனிற்கு குறுஞ்செய்தி வந்தது. “அப்பாவை டென்ஷன் பண்ணாம அவரை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.” என்று அன்னை அக்காவிற்கு அறிவுருத்தி சிவா வீட்டிற்கு கிளம்பினான்.
சிவப்ரியா முகம் வாடியிருக்க, அருணாச்சலத்திற்கு தெரியாமல் என்ன என்பதாய் புருவம் உயர்த்தினான். சிவப்ரியா கண்கலங்க, “ப்ச் என்ன?” என்றான் சத்தமாகவே.
“இங்க எனக்கு என்ன கொடுப்பாங்களோ அதை மட்டும்தான் வாங்கிட்டு வரனுமாம். பெரியப்பா பங்குலயிருந்து எதையும் வாங்க கூடாதாம்.”
“யார் சொன்னாங்க?”
“அத்தைகிட்ட அவங்க சொன்னாங்களாம். அத்தை அப்பாக்கு போன் செய்து பேசியிருக்காங்க.”
“ஏன் அப்படி சொன்னாங்க? எங்கம்மா ஏது நமக்கு தெரியாம வார்த்தையை விட்டுடுச்சா?” என்றான் யோசனையாக.
கல்யாணி, “இல்ல பார்த்திபா. அக்கா ஏதும் சொல்லல.”
பார்த்திபன் அருணாச்சலத்தை பார்க்க, “என்ன காரணம்னு சொல்லல பார்த்திபா, ஆனா அருள் பிடிவாதமா சொல்லியிருக்கப்ல. இதுல மாற்றம் வந்திடக்கூடாதுனு தனம் அத்தனை முறை சொன்னுச்சு.”
கல்யாணி, “உன் பெரியப்பாகிட்ட பேசிட்டு சொன்னோம்னா, கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்த்திடலாமாம். இல்லைனா இதுக்கு சம்மதிக்கிறவரை கல்யாணத்தை தள்ளி வச்சிடலாமாம். எத்தனை வருசம் ஆனாலும் இதுதான் முடிவு சொல்லிட்டாங்களாம்.” என்றார்.
“சரி நான் கால் பன்றேன்.” என்றான்.
“இப்போ அவங்க பக்கத்துல இருக்கப்போறாங்க பார்த்திண்ணா.” என பதறினாள் சிவப்ரியா.
“இருக்கட்டும் சிவா, அப்போதானே என்ன காரணம்னு தெரிஞ்சிக்க முடியும்.” என்று அத்தைக்கு அழைத்தான்.
தனம் அழைப்பை ஏற்க, “அத்தை நான் பார்த்தி பேசுறேன்.” என்றான்.
“ம் சொல்லு பார்த்தி.”
பேசுவது பார்த்திபன் என தெரிந்ததும் மொபைலை அருட்செல்வன் வாங்கியிருக்க, “சித்தப்பா சொன்னார், அதான் என்ன காரணம்னு தெரிஞ்சிக்க கால் பண்ணினேன்.” என்றான் பணிவான குரலில்.
“காரணம் உனக்கு தெரியனுமா? இல்ல உன் தங்கைக்கா?”
“நீங்களா?” என வியந்தவன், பின்னே இலகுவாக “எனக்குத்தான்.” என்றான்.
“ஏன் உன் குடும்ப ஆட்களை பத்தி உனக்கு தெரியாதா? நான் சொல்லித்தான் தெரியனுமா?”
“சரி வா நான் வரேன்.” என சங்கர் சொல்ல, “பாசமா பேசியே உங்களை கவுத்திடுவா.” என்று தந்தையை மறுத்தவன், “தனியா போனா நல்லாயிருக்காதுனுதான் உன்னை கூப்பிடறேன். வாம்மா.” என பிடிவாதமாய் கிளம்பினான்.
ஒன்பது மணிபோல் சிவப்ரியா வீட்டின் முன் கார் வந்து நிற்க, சிவப்ரியாதான் வெளியே வந்து பார்த்தாள். தற்போதுதான் பார்த்திபன் அவனின் வீட்டிற்கு உண்ண சென்றான்.
அதிகாலை காட்டிற்கு செல்லும் வழக்கமுள்ள அருணாச்சலம் உறங்கியிருக்க, அப்பொழுதுதான் உறங்க சென்ற கல்யாணி, “யாரு சிவா? எதுக்கு கதவை திறந்த?” என்றபடி வந்தார்.
“ம்மா, அத்தை.” என்க, இருவரும் நெருங்கியிருந்தனர்.
“ப்ச், லைட்டை போடு.” என வாசல் விளக்கை போட்டு பார்க்க, “வாங்கண்ணி, வா தம்பி.” என்றார் பதட்டத்தோடு.
அருட்செல்வன் சிவப்ரியாவை பார்க்க, பெரிதாய் அழுதது போலில்லை. ஆனாலும், “எல்லாத்துலயும் நீ நினைச்சதுதான் நடக்கனுமா?” என முறைத்தான்.
“இல்ல, அப்படியில்ல.” என்றாள் தாமதமின்றி.
“அப்புறம் எதுக்கு போன்ல அழுதுட்டே பேசுன?”
“வீட்டுக்குள்ள வாங்க மாப்பிள்ளை.” என்றார் கல்யாணி.
“வா அருளு.” என தனம் உள்ளே போக, இவனும் உள்ளே சென்றவன், “கேட்டேன்ல? பதில் சொல்லு.” என்றான்.
சிவப்ரியா தடுமாற, “உக்காருங்க தம்பி, சாப்பிட கொண்டு வரேன்.” என தண்ணீரை நீட்டினார் கல்யாணி.
தண்ணீரை வாங்கி அருகே வைத்தவன், “இவகிட்ட சில விசயங்களை தெளிவுபடுத்திட்டு போக வந்தேன். சாப்பிட்டுத்தான் வந்தோம்.” என்றவன், சிவப்ரியாவை பார்த்தான்.
“அப்போ நான் சொன்னா புரியாது. பார்த்தி சொன்னா புரியும்.” என பல்லை கடித்தவன், “கல்யாணத்துக்கப்புறமும் ஒவ்வொன்னுக்கும் பார்த்தியை கூப்பிடுவியா?” என்றான் கோபத்தோடு.
சற்று முன் பார்த்திபன் சொன்ன விசயத்தில் அதிர்ந்து, பின்னே சந்தோசித்தவள் தற்போது அதை நினைத்தபடி தலைகுனிந்திருந்திருக்க, சற்று நேரம் அவளை பார்த்திருந்தவன், “மௌனம் சாதிக்கிறியா? இல்ல மௌனமா சாதிச்சிடலாம்னு இருக்கியா?” என்றான் அழுத்தமாக.
“இல்ல, உங்க விருப்பப்படி பெரியப்பாகிட்ட இருக்க பங்கை கேட்கமாட்டேன்.” என்றாள் உண்மையாக.
“என்ன புரிஞ்சது?” என கேட்க, பேச்சரவம் கேட்டு அருணாச்சலம் அறையிலிருந்து வெளிவர, வாசலில் விளக்கெரிவதை கண்ட பார்த்திபன், அருட்செல்வன் கார் நிற்பதை பார்த்து, தன் தந்தையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.
“வா கண்ணு.” என்றார் அருணாச்சலம். பின்னே அண்ணாமலையும் வரவேற்றார். நைட்ல கூட ஒட்டிட்டேயிருப்பானா என முறைத்தான் பார்த்திபனை.
“ஏங்க, கார் நிற்கவும் ஆசையா பார்க்க வந்தா முறைக்கிறிங்களே?” என பொய்யாய் குறைபட்டான் பார்த்திபன்.
“நைட் ஒன்பது மணிக்கு மேல உன்ன பார்க்கத்தான் வருவனா?” என முறைக்க, அச்சோ என சங்கடமானபோதும், “நீங்க துணைக்கு அத்தையை கூட்டிட்டு வந்த மாதிரி, சிவாக்கு நானுனு நினைச்சிக்கோங்களே.” என்றான் கெஞ்சலாகவும், பாவமாகவும்.
பார்த்திபனை விடுத்து, “சொல்லு என்ன புரிஞ்சது?” என்றான்.
மோகனா, அண்ணாமலைக்கான வாக்குவாதத்தை ஒன்றுவிடாமல் சொன்னவள், “ஆனாலும் அத்தைக்கான சொத்தை எப்படி பார்கவிக்காவுக்கு கொடுப்பிங்கனு வாதாடதான் தோணுச்சு.” என்றவள், பார்த்திபன் பவ்யாவைப் பற்றி சொன்னதை மட்டும் மறைத்து, “அன்னைக்கே பெரியம்மாவை கணிச்சிருப்பிங்க. நீங்க சொல்றதுலயும் காரணம் இருக்கும்னு சமாதானம் ஆகிட்டேன்.” என்றாள்.
தவறாய் நினைப்போம் என யோசிக்காமல் மோகனாவைப் பற்றிய உண்மையை சொன்னதில் அருட்செல்வன் கோபம் குறைந்திருக்க, “சொத்து பத்தி யோச்சிச்சிருந்தேன்னா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டேன்.” என்றவன், தன்மீதான அவளின் விருப்பத்தை மறைத்து,
“இனி என்ன ஆனாலும் உன்னை விடக்கூடாதுனுதான் சம்மதம் சொன்னேன். அதுக்காக என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னோ, அழுதே சாதிச்சிடலாம்னோ நினைக்கக்கூடாது.” என்றான் கட்டளையாக.
இவள் சரியென தலையாட்ட, “கிளம்பலாம்மா.” என எழுந்தான்.
“எதாவது சாப்பிட்டு போங்கத்தை.” என சிவப்ரியா சொல்ல, “சாப்பிட்டுதான் அருணாக்கு கால் பண்ணினேன். கல்யாண பொண்ணுக்கு லட்சணமா சிரிச்ச முகத்தோட இரு. வயிறோட சேர்த்து மனசும் நிறைஞ்சி போகும்.” என்றார் இன்முகத்தோடு.
அண்ணாமலை முகம் மட்டும் வாடியிருக்க, “பழைய விசயங்களை மறந்துட்டுதான் சிவாவை கேட்டு வந்தேன். நீ வருத்தப்படாதண்ணா. பார்த்தி, பார்கவி அனுபவிச்சா என்ன? நான் அனுபவிச்சா என்ன?” என தேற்றி வெளியே செல்ல எத்தனிக்க,
தனம் பின்னோடு சென்றவன், “உங்களை மாதிரிதான்த்த நானும் நினைச்சேன். நீங்க வாங்கிக்கலனா என்ன? குமாரி பவ்யாவை பார்த்திபன் பவ்யாவா ஆக்கிடுங்க. கணக்கு டேலியாகிடும்.” என கிசுகிசுத்தான் தனலஷ்மியிடம்.
“டேய்.” என தனம் அதிர, “எதுக்கு இவ்வளோ ஷாக் ஆகுறிங்க. அத்தை பொண்ணுமேல மாமன் மகனுக்கு இல்லாத உரிமையா? நான் எப்போவோ ஃபிக்ஸ் ஆகிட்டேன். பவ்யா டிகிரி முடிக்கட்டுமேனு காத்திருக்கேன்.” என கண்ணிமைத்து சிரித்த முகத்தோடு அனுப்பி வைத்தான் அத்தையை.