அருள், “பார்த்திபன் என்னம்மா சொன்னான்? நீ ஏன் அவ்வளோ ஷாக் ஆன?” என்றான் அன்னையிடம்.
மகன் இப்படி கேட்கவில்லையென்றால்தான் ஆச்சர்யம், என நினைத்தவர், “அவன் எதாவது உளறுவான். எனக்கு உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும். மனசுல என்ன இருக்கோ அதை மறைக்காம சொல்லனும்.” என்றார் முறைப்பாக.
“நீ முறைக்கிற அளவுக்கு என்ன பண்ணினேன்?” என யோசனையாக கேட்டு, “இதுக்கு முன்ன உன்கிட்ட என்ன மறைச்சிருக்கேன்?” என்றான் தானும் முறைப்பாக.
“சிவாவை கட்டிக்க நினைக்கும் வரை ஏதும் மறைச்சதில்லதான். ஆனா உன் கல்யாண விசயத்துல எதையோ மறைக்கிறனு தோணுது. நீ சிவாவை பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிறியா? இல்ல அத்தனைபேர் முன்ன அப்படி சொல்லிட்டாளேனு கட்டிக்க நினைச்சியா?” என்றார்.
“பிடிச்சிதான் கட்டிக்க நினைச்சேன். அதுல என்ன சந்தேகம் உனக்கு?”
“நிச்சயம் செய்த்துக்கப்புறம் பார்க்க வந்திருக்கோம். அந்த புள்ளைகிட்ட ஆசையா பேசலனா பரவால்ல, எதுக்குடா கடுகடுனே இருக்க? இதான் பிடிச்சு கல்யாணம் செய்துக்கிற லட்சணமா?” என்றார்.
இலகுவானவன், “போன்ல அழுதாம்மா. அதான் கடுப்பாகிடுச்சு. திட்டவந்தவன் எப்படி சிரிப்பேன்.?” என்றான்.
“என் அண்ணன் வீட்டு சொத்து வாங்கிக்க கூடாதுனு நீ சொன்னதுக்கு சம்மதம் சொல்லிட்டாதானே? அதுக்கப்புறமாவது சகஜமா எதாவது பேசியிருக்கலாம்.” என குறைபட்டார்.
“நான் சொல்லி ஒன்னும் அவ கேட்கல, பார்த்தி சொல்லவும் சம்மதிச்சிருக்கா.” என அன்னையை முறைத்தான்.
“போடா, அததுக்கு காரணம் கண்டுபிடிச்சிக்கிட்டு.” என கோபிக்க, “பேசிக்கலாம் பேசிக்கலாம். கல்யாணம் முடிஞ்சா பேசித்தானே ஆகனும்?” என்றான் ஆறுதலாக.
தனம் முகம் வாடியே இருக்க, “இப்போ என்ன? வண்டியை திருப்பட்டா.”
“எதுக்கு?”
“அவளோட சகஜமா பேசிப்பழக.” என்றான் சிரிப்போடு.
முறைத்த தனம், “நேர்ல பேசுலனா பரவால்ல, அவ நம்பர் தரேன், நாளைக்கு கால் பண்ணி பேசு.” என்றார்.
“கட்டிக்கப்போறவ நம்பரை வச்சிக்கமாட்டனா? அதெல்லாம் எப்போவோ ராகவன்கிட்ட கேட்டு வாங்கிட்டேன்.”
மெச்சுதலாய் பார்த்தவர், “திட்டிட்டு வந்தல்ல? ஒழுங்கா சமாதானம் செய். அடுத்தமுறை நான் அவளை பார்க்கும்போது சிரிச்ச முகத்தோட இருக்கனும்.”
“அவ சிரிக்காததுக்கு நான்தான் காரணம் மாதிரி என்னை எதுக்கு சமாதானம் செய்ய சொல்ற? சொல்லப்போனா அவதான் என்னை ஆட்டிவச்சிட்டிருக்கா. அவ இழுத்த இழுப்புக்கு போய்ட்டிருக்கேன்.”
தனம் முறைக்க, “இவளை கட்டிக்க முடிவெடுக்கலனா அந்த வீட்டு படியை இந்த ஜென்மத்துல மிதிச்சிருப்பேனா? அப்போ நான் சொல்றது சரிதான.?” என்றான் கோபமில்லாமல்.
“ஆனாலும் சிவாவை பிடிக்கவும்தானே கட்டிக்க சம்மதிச்ச? இனி அவ சந்தோசம் உன் பொறுப்பு.” என்றார் கட்டளையாக.
“உத்தரவு.” என்றான் பாவனையாக.
இருவரும் வீட்டிற்கு வர, “சிவாவை அவ்வளோ பிடிச்சிருக்கா அருளு?” என சிரித்தார் சங்கர்.
இவன் புரியாமல் பார்க்க, “இல்ல, அழறானு தெரிஞ்சதும் நேரம் காலம் கூட பார்க்காம சமாதானம் செய்ய கிளம்பிட்டியே… அதனால கேட்டேன்.” என்றார் மெச்சுதலாக.
“ஏங்க, இவன் இங்க வந்துதான் சிரிக்கிறான். அங்க” என தனம் நடந்ததை சொல்ல, “முதல்ல அவ முகத்துல சிரிப்பிருந்ததா?” என அன்னையை முறைத்து, “அதோட ஒட்டு மொத்த குடும்பமும் சுத்தி நிற்கும்போது என்னத்த சிரிக்கிறது? முக்கியமா இந்த பார்த்தி இருக்கானே, ஷப்பா… பிசின் மாதிரி அவளோடயே ஒட்டிட்டிருக்கான்.” என குறைபட்டான் பொய்யாக.
பார்த்திபன் என்றதும் தனம் முகம் தவிப்பிற்குள்ளாக, சிவப்ரியாவின் நினைவில் அன்னையை கவனிக்காமல், “சரிப்பா நான் போய் படுக்கிறேன்.” என அறைக்கு சென்றான்.
பின்னே பார்த்தி சொன்னதை தனம் சங்கரிடம் சொல்ல, அதிர்வான சங்கர், “இப்போதைக்கு இதை அருள்கிட்ட சொல்லாத தனம், முதல்ல அவன் கல்யாணம் நல்லபடியா முடியட்டும். நான் நாளைக்கே பார்த்திகிட்ட பேசிடறேன்.” என்றார் சங்கர்.
கணவனிடம் சொன்ன நிம்மதியோடு, “சரிங்க.” என உறங்கச்சென்றார்.
இரண்டு நாள் கழித்து, இன்று வெள்ளிக்கிழமையாதலால் மதியம் போல் பவ்யாவை அழைத்து வர கிளம்பியிருந்தான் அருட்செல்வன்.
முதல்முறை ராகவன்ஜீவிதா திருமணத்தில் பார்த்தது, பின்னே அவளின் பங்காளி வீட்டில் வைத்து பேசியது, அவளின் வீட்டிற்கு சண்டையிட சென்றபோது சொத்து கொடுப்பது பற்றி பேச தனக்கே உரிமையில்லை என தன்னிடமே வாதிட்டது, மருத்துவமணையில் அவளின் மனதை அறிந்த தருணம், பின்னே பெண்பார்க்கும் வைபவத்தோடு நிச்சயத்தையும் முடித்ததென அனைத்தும் நினைத்தபடி இரண்டு நாட்களாக அவளின் நினைவோடுதான் இருந்தான்.
அம்மாவின் சொத்தை அவர்கள் அனுபவிப்பதில் உண்டான அவளின் குற்றவுணர்வு சிவப்ரியாவின் நேர்மையை விளக்கியது. யார் தடுத்தாலும் சொத்தை கொடுத்தே தீருவேன் என்ற பிடிவாதம், அன்னை மீதான அவளின் அன்பையும் பாசத்தையும் விளக்கியது.
தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றதும் வெளிப்படுத்திய அவளின் உணர்வுளும், வார்த்தைகளும், அண்ணாமலை, அருணாச்சலம் குடும்பத்தின் மீதான அருட்செல்வனின் நீண்ட வருட கோபத்தை தளர்த்தியதோடில்லாமல், தாய்மாமன் குடும்பத்தின் மீதான மிருகப்பார்வையை மிருதுவாக்கியிருந்தது.
அன்னையும் தந்தையும் இத்தனை வருடம் புறக்கணித்தபோதும், தன் குடும்பத்தின் மீதான அவளின் உரிமையும், தன் மீதான காதலும் அருட்செல்வனின் நெஞ்சை தைத்தது. அவள்பால் ஈர்க்கப்பட்ட தருணத்தை மட்டும் இரண்டு நாள்களில் கணக்கில்லாமல் நினைத்திருந்தான் காதலாக.
சிவப்ரியாவின் நினைவோடு பவ்யாவின் கல்லூரியை வந்தடைய, வெளியே வந்த பவ்யா, “திங்ககிழமை ப்ராக்டிகல் இருக்கு, வரலைனு சொன்னேன்ல?” என்றாள் வாடிய முகத்தோடு.
பார்த்திபனை நினைத்து இவள் வர மறுக்க, அன்று பெண்பார்க்க போகும்போது அழைத்துப்போகாததால் கோபத்திலிருக்கிறாள் என நினைத்த அருட்செல்வன், “பவி குட்டிக்கு இன்னும் கோபம் போகலயா? இன்னும் எத்தனை முறை சாரி கேட்கனும்.?” என்றான் வேண்டுதலாக.
அமைதியாய் இருந்த பவ்யாவின் முகம் கண்டு, “யாராச்சம் எதாவது சொன்னாங்களா? பார்வதிக்கா ஊர் பையனேது திரும்ப வந்தானா? உன் முகம் சரியில்லையே?” என விசாரித்தான் அக்கறையாக.
அன்று அவனை அடித்ததுபோல வாத்தியாரை அடிச்சா, அம்மா சொன்னமாதிரி பெரிய பிரச்சனையாகிடுமே என, “அதெல்லாம் ஒன்னுமில்ல.” என அவசரமாக சொன்னவள், “பேக் எடுத்துட்டு வரேன்.” என உள்ளே சென்று பையை எடுத்து வந்து பைக்கில் அமர்ந்தாள்.
நடந்த விசயங்களை சுருக்கமாக சொல்லி, “எப்படியும் யாரையாவது கல்யாணம் செய்தாகனும், நம்மளால ஒரு பொண்ணு வாழ்க்கை வீணாகிடவேணாமேனு சம்மதிச்சிட்டேன் பவிம்மா.” என்றான்.
“ஓஹோ…” என சிரித்து, “ஆயா எப்படி சம்மதிச்சுச்சு?” என்றாள் ஆச்சர்யமாக.
“ம் கொஞ்ச நஞ்ச அலம்பலா செய்துச்சு? காச்சு மூச்சுனு ஒரே கத்து, எனக்கு கூட பயப்படல, ரூம்க்குள்ள விட்டு பூட்டிடுவேனு சொல்லி கூட அசரல, பொண்ணு பார்க்க போறோம்னு தெரியும், ஆனா அவளை பார்க்க போறோம்னு ஆயாகிட்ட சொல்லல. பார்க்க போன அன்னைக்கே நிச்சயம் செய்யும் சூழ்நிலையாகிடுச்சுனு சொன்னதுதான்…
மோகனாவை நினைத்து அருட்செல்வன் முகம் இறுக, “கோபப்படாத அருளு, பார்த்தி மாதிரி பையன் கிடைக்க கொடுத்துவைக்கனும். அக்கா தங்கையோட வளர்ந்த பையன். எம்.ஃபில் படிச்சிருக்கான். முக்கியமா பள்ளிக்கூடத்துல அவனுக்குனு ஒருபேரிருக்கு. நம்ம ராகவன் பொண்டாட்டி கூட பார்த்தியைப்பத்தி ரொம்ப பெருமையா சொல்லும். இப்படி பையனைதானே நாமளும் எதிர்பார்ப்போம்.”
“என் மாமியாரை கம்ப்பேர் பண்ணும்போது இவங்க பரவால்லதான். சொத்துல பொண்ணுக்கும் சமமா பங்கு கொடுக்க நினைச்சது பரவால்லதானே?
அதே மாதிரி உன் ஆயா உன் அம்மாவை பேசாத பேச்சா? வீட்டுக்கொரு ஆளு இதுமாதிரி இருக்கத்தான் செய்வாங்க. உன் அம்மா சொல்லும்முன்ன இப்படி யோசிக்கல, ஆனா பார்த்திபன் மனசுல வந்த பின்ன நம்ம பவ்யாவுக்கு அவனை விட நல்ல பையனை பார்க்க முடியும்னு தோணல.”
மோகனாவை நினைத்து அப்பொழுதும் அருட்செல்வன் யோசனையிலேயே இருக்க, “உன் மாமனார் வீட்டுலயும் ஆம்பிளை பசங்க இல்ல, மோகனா சரியில்லனாலும், அண்ணாமலை, அருணாச்சலம், கல்யாணினு இத்தனை பேர் இருக்காங்க.” என்றார்.