“சரிப்பா இதுபத்தி பவ்யாகிட்ட ஏதும் சொல்லவேணாம். பவ்யா படிப்பு முடியவும், சித்தி சித்தப்பாக்கு, பவ்யாக்கு எல்லாருக்கும் பிடிச்சிருந்தா பார்ப்போம்.” என்றவன், “இங்க சாப்பிட வரன்னைக்கு பவ்யாகிட்ட பேசிடப்போறான். அம்மாகிட்ட சொல்லி, அவனை வாயடங்கி இருக்க சொல்லுங்க.” என்றான்.
மகன் சம்மதித்தில் பெருமகிழ்ச்சி சங்கருக்கு. விசயத்தை நாகராஜனிடம் சொல்ல, “நீ பார்த்து பண்றதுதாண்ணா.” என்றுவிட்டார் நாகராஜனும்.
இரண்டு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அருணாச்சலம் அண்ணாமலை குடும்பத்தோடு, நெருங்கிய சொந்தங்கள் என ஐம்பது பேர் வரை விருந்திற்கு வந்திருந்தனர் சங்கர் வீட்டிற்கு.
நிறைமாதம் என்பதால் ஜீவிதாவால் வரமுடியாமல் போனது. நிச்சயத்துக்கும் வர முடியல, சங்கர் அப்பா வீட்டுக்கு விருந்துக்கும் வரமுடியல என மனைவி குறைபட்டதை ராகவன் அருட்செல்வனிடம் விளக்கிக்கொண்டிருந்தான்.
அத்தை குடும்ப உறவுகளோடு உறவாட வேண்டும் என்ற நீண்ட வருட ஆசையை தீர்க்கும் விதமாக பார்த்திபன் குணாளனிடம் இயல்பாக பேசிக்கொண்டிருக்க, இத்தனை இயல்பாய் பேசும் பார்த்திபனிடம் சட்டென பழகவும் முடியாமல், விலகவும் முடியாமல் குணாளன்தான் தடுமாறினான்.
“ஏங்க முறைக்காரவங்களே, தண்ணி கொடுங்க.” என குணாளன் முன்பே வம்பிழுத்தான் பார்வதியை.
“அண்ணினு கூப்பிடு பார்த்திபா. இப்படி பேசாதே.” என உடனே கண்டித்தார் அருணாச்சலம்.
“அப்படிங்களாங்க?” என்றான் பார்வதியடமே.
ஆமாம் என்பதாய் பார்வதி தலையசைக்க, “நீங்க சொன்னா எனக்கு ஒகே. அண்ணி கொஞ்சம் தண்ணி கிடைக்குங்களா?” என்றான் பவ்யமாக.
“இப்போ என் அம்மா கொடுத்துச்சுதானே?” என அருட்செல்வன் முறைக்க, “தாகம் அடங்கலங்க, அதான் அண்ணிகிட்ட கேட்டேன். நீங்க ஏங்க இதுல தலையிடுறிங்க? என் முறைப்பொண்ணுகிட்ட பேச எனக்கே இப்போதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு.” என்றான்.
“டேய் என் அக்கா உனக்கு முறைப்பொண்ணா? அவங்க வயசென்ன தெரியுமா? உன்னை விட பத்து வயசு பெருசு.” என அருட்செல்வன் முறைக்க, “எத்தனை வயசு பெரியவங்களா இருந்தாலும் முறைப்பொண்ணு முறைப்பொண்ணுதானுங்க.” என்றவன், “ஏய் ஷிவாங்கி, நீ ஏன் என் பின்னாடியே சுத்திட்டிருக்க.? போ போ.” என்றான்.
“நான் யார்கிட்ட போய் பேசுறது? உன்கூடவே இருக்கேன் பார்த்திண்ணா.” என இவள் சொல்ல, “ஏங்க என் பெரிய தங்கையைத்தான முறைச்சிட்டே இருக்கிங்க, சின்னவகிட்டயாவது கொஞ்சம் பேசுங்களேன். பாவம், புது இடம்னு பயப்படுறா.” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
“இங்க பயமாயிருக்குனா உள்ள வா. சுட்டி டிவி போட்டுவிடறேன்.” என அருட்செல்வன் நக்கலோடு ஷிவாங்கியிடம் சொல்ல, “அவளுக்கு டாம் அன்ட் ஜெர்ரி பிடிக்கும்ன்ற வரைக்கும் தெரியுமா உங்களுக்கு? அதெப்படிங்க முகத்தை பார்த்தே மனசை கண்டுபிடிச்சிடுவிங்களா? அன்னைக்கு உங்க ஹாஸ்பிட்டல்லயும் அப்படித்தான் சிவா மனசை…” எனும்போதே “டேய் வாயை மூடு.” என அதட்டினான் அவசரமாக.
“ஓ… யார்கிட்டயும் சொல்லயா? சூப்பர்ங்க நீங்க.” என கிசுகிசுப்பாக உண்மையாக பாராட்டினான் அருட்செல்வனை.
“உன் பாராட்டெல்லாம் தேவையில்ல.” என்று ஷிவாங்கியை பார்த்தவன், “வா ம்மா.” என பவ்யாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினான்.
பார்த்திபனின் கலாட்டாக்களில் உண்மையில் இன்னும் சற்று நேரம் நின்றிருந்தால் சிரித்திடுவோம் என்றே அவ்விடம் விட்டு நகர்ந்தான் அருட்செல்வன்.
தான் முறைத்தாலும் அதனை பெரிதாய் எடுக்காமல் தன் குடும்பத்தாரோடு கலகலவென பேசும் பார்த்திபனின் பாசமும் புரியத்தான் செய்தது. இத்திருமணம் பேசும் முன்னரே வெளி இடங்களில் தன்னை பார்த்தால் இரண்டு நிமிடமாவது நின்று பார்க்காமல் கிளம்பமாட்டான் என அறிந்தவன் ஆதலால், இன்று அருட்செல்வன் மனதில் நல்லவிதமாகவே பதிந்தான் பார்த்திபன்.
நம் சொத்து நம்மை விட்டு போகவில்லை என்ற சந்தோசத்தோடு மோகனாவும் பிரச்சனை செய்யாமல் தன்னோடு வந்த சொந்தங்களோடு இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்.
உன் அத்தைகிட்ட இப்படி சொன்னியாம், ஏதும் முடிவாகாம யார்கிட்டயும் பேசிவைக்காத. பவ்யா என் மகள்தான். ஆனாலும் பெத்தவங்க சம்மதமும், பவ்யா சம்மதமும் முக்கியமில்லையா? இப்போதான் காலேஜ் போய்ட்டிருக்கு. அது படிச்சு முடிச்சபின்னதான் கல்யாணம்னு அருள் சொல்லியிருக்கான்.
உன் அத்தைகிட்ட சொன்னமாதிரி வேற யார்கிட்டயும் பேசக்கூடாது என்று நேற்றே பார்த்திபனிற்கு அழைத்து கண்டிப்போடு சொல்லியிருந்தார் சங்கர்.
பவ்யாவை வேற யாருக்கும் பேசும்வரை இந்த விசயம் என்னோடவே இருக்கும் என வாக்கு கொடுத்திருந்தான் பார்த்திபனும். அதனாலேயே இன்று பவ்யா இருக்கும் திசைப்பக்கமே திரும்பவில்லை பார்த்திபன்.
அன்றுபோல் வம்பளப்பானா என பயந்திருந்த பவ்யாவிற்கு பார்த்திபன் தன்னை கவனிக்காமலிருந்தது சற்று இயல்பை கொடுத்திருக்க, ஷிவாங்கியோடு நன்றாக பேசிக்கொண்டிருந்தாள்.
ஒருமணி நேரத்திற்கு பின்னே அனைவரும் விருந்துண்ண ஆரம்பித்தனர்.
தனம், பவானியோடு பார்வதி பவ்யாவும்தான் பரிமாறினார்கள். அருட்செல்வன் பார்த்திபனையே பார்த்திருக்க, அவன் ஷிவாங்கியோடு பேசியபடியும், “கல்யாணமான முறைப்பொண்ணே, இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க.” என்று பார்வதியை வம்பிழுத்தபடியும் உண்டுகொண்டிருந்தான்.
மனதில் ஆசையிருந்தாலும் தங்கையை பாராமல் இருந்தவனை, மனதினுள் மெச்சினாலும், அவ்வளோ நல்லவனாடா நீ? என நினைத்தபடி பார்த்திபனிடம் வந்தவன், “அடங்கமாட்டியாடா நீ? அண்ணினுதானே கூப்பிட சொன்னாங்க? இனி முறைப்பொண்ணுனு சொல்லிப்பாரு.” என முறைத்தான்.
அனைவரும் உணவுண்ட பின்னே, நாளை தனது வீட்டிற்கு விருந்திற்கு வர அருணாச்சலம் கோரிக்கை வைக்கவே, சங்கர் ஒப்புகொண்டார்.
இந்த முறையாவது சிவாவோடு சண்டையிடாமல் இருக்க மகனுக்கு அறிவுருத்தி, சொந்தங்களோடு அருணாச்சலம் வீட்டிற்கு வந்திருந்தனர் சங்கர் தனலஷ்மி குடும்பம்.
மனம் நிறைந்த சந்தோசத்தோடு அழகரசியாய் ஜொலித்தாள் சிவப்ரியா. அருட்செல்வன் முகம் முன்புபோல் அல்லாமல் பவ்யாவிடம் பேசியபடி இயல்பாக இருக்க, அதில் அனைவரும் மகிழ்ந்தனர்.
விருந்துண்பதற்கு முன்னே மூன்று மாதம் கழித்து திருமணமா? இல்லை இருபது நாளில் வரும் முகூர்த்ததில் வைத்துக்கொள்ளலாமா என கலந்தாலோசிக்க, “மூனு மாசம் கழிச்சு அரைபரிட்சை வந்திடும், என்னால லீவ் போட முடியாது. இருபது நாள்லயே வச்சிடலாமேப்பா.” என தந்தையிடம் முணுமுணுத்தான் பார்த்திபன்.
இங்கு அனைத்திற்கும் பார்த்திபன்தான் அலைய வேண்டும் என்பதால் அண்ணாமலை, “அடுத்த முகூர்த்தத்துலயே வச்சிடலாம் அருணா. டவுனுக்கு போக வர பார்த்திபன் வேணும். மூனு மாசம் கழிச்சு பள்ளிகூடத்துல அரைப்பரிச்சை வருதாம்.” என்றார் தம்பியிடம்.
பரிட்சை நேரங்களில் பார்த்திபன் ஒருநாள் கூட விடுப்பெடுக்கமாட்டான் என்பதால், அருட்செல்வன் சிவப்ரியாவின் சம்மதம் கேட்டு, வரும் இருபதாம் நாள் திருமணம் என முடிவெடுக்கப்பட்டது.
விருந்து ஆரம்பிக்க, சிவப்ரியாவை அருட்செல்வனிற்கு பரிமாற பணித்து, சொந்தங்களை கவனிக்க சென்றார் கல்யாணி. உள்ளே அறையில் அருட்செல்வன், பவ்யா, ஷிவாங்கி இருவரும் சாப்பிட அமர, “நான் அப்புறம் சாப்பிடறேன், இவங்களுக்கு போடு.” என்றான் அருட்செல்வன்.
சிவப்ரியா பரிமாற, “அண்ணி நீங்க போட்டோஸ் பார்த்திங்களா? எங்க குணா மாமா எடுத்தது.” என அருட்செல்வன் சங்கிலி அணிவித்த படத்தை காண்பித்தாள்.
“ம்.” என அழகாய் புன்னகைத்தாள் சிவப்ரியா.
“ஸோ க்யூட்.” என சிரித்தவள், “என் அண்ணனுக்கு உங்களை ஏன் பிடிச்சிருக்குனு இப்போதான் புரியுது.” என்றாள் இன்முகத்தோடு.
“நீயும்தான் ரொம்ப அழகா இருக்க.” என சிவப்ரியா பாராட்ட, “ம்ஹும்.” என கிண்டலடித்தபடி உண்டு முடித்த பவ்யா கை கழுவ வெளியேற, அவ்விடம் இருக்க சங்கடப்பட்டு ஷிவாங்கியும் வெளியேறினாள்.
“உங்களுக்கு இலை போடவா? டைம் ஆகிடுச்சே.” என்றாள் சன்னக்குரலில்.
“ம்…” என அமர்ந்து, “நீயும் சாப்பிடு.” என்க, இருவருக்கும் பரிமாறி உண்ண ஆரம்பித்தாள்.
பார்க்கும் நேரமெல்லாம் சண்டையிலேயே முடிந்திருக்க, தற்போது இயல்பாய் என்ன பேசுவதென யோசித்தவனுக்கு ஏதும் பேசத் தோன்றாமல் போகவே சிவப்ரியாவை ரசித்தவாறு அமைதியாய் உண்டுமுடித்தான்.
தனியறையில்தான் உண்டனர், ஆனால் கதவு திறந்திருப்பதோடல்லாமல், சமையலறை மற்றும் ஹாலில் இருந்து பார்த்தால் இவ்வறை முழுதாய் தெரியும்.
உண்டு முடித்தவள் இருவரின் இலையையும் எடுக்க, “இலையை அப்புறம் எடுத்துக்கலாம். உக்காரு.” என்றான்.
கை கழுவி அமர, “ம்… என்ன திட்டத்தோட நான் சொன்னதும் சம்மதிச்ச?” என்றான் கோபம்போல்.
“எதை கேக்குறிங்க?” என நிமிர்ந்தாள் அதிர்வாக.
“உன் பெரியப்பா வீட்டுலயிருந்து சொத்து வேணாம்னு சொன்னதை அதிசயமா கேட்டுகிட்டியே… அதை சொன்னேன்.”
“நான்லாம் ஏதும் திட்டம் போடல, பார்த்திண்ணாதான்.” என்றாள் புன்னகையோடு.
“பார்த்தியா? அவன் என்ன திட்டத்துல இருக்கான்?”
“திட்டமெல்லாம் ஒன்னுமில்ல, நான் பெரியப்பாகிட்ட சொத்து கேட்கத்தான் நினைச்சேன். பார்த்திண்ணாதான் உங்க விருப்பத்துக்கு இருக்கட்டும்னு சொன்னாங்க.” என உளறினாள்.
இதை அன்றே இவள் சொல்லி அறிந்தவன்தான், ஆனால் இதை சொல்ல எதற்கு இப்படி தடுமாறுகிறாள்? இது இவளின் இயல்பில்லையே என, “அப்போ நான் சொன்னதுக்காகலாம் நீ கேட்கல, பார்த்தி சொன்னதுனாலதானா?” என்றான் சிறு கோபத்தோடு.
“நீங்க சொல்லவும்தானே பார்த்திண்ணா இப்படி சொன்னாங்க.?” என்றாள் சமாதானமாக.
“என்னை பார்த்து சொல்லு, நான் சொன்னதுக்காகத்தான் பார்த்தி சொன்னானா? இல்ல வேற ஏதும் ப்ளான் வச்சிருக்கிங்களா?” என்றான்.
சிவப்ரியா தடுமாற, ஏதோ இருக்கிறதென உறுதியானவன், “நீ சொன்ன காரணம் இல்லாம கல்யாணத்துக்கப்புறம் வேற எதாவது தெரிய வரட்டும்… அப்புறம் இருக்கு.” என்றான் மிரட்டலாக.
“பெரியப்பாகிட்ட இருக்க அத்தைக்கான பங்கை நீங்க வேணாம்னு சொன்னதும் எனக்கு கஷ்டமாத்தான் இருந்தது, பார்த்திண்ணாதான் பவ்யாவை நான் கல்யாணம் செய்துகிட்டா எல்லாம் டேலியாகிடும்னு சொன்னாங்க. அதான் சமாதானமாகிட்டேன்.” என்றாள் மகிழ்வோடு.
“ஓஹோ…” என அமர்த்தலாக சொல்ல, இவள் அருட்செல்வனைப் பார்க்க கோபத்தோடு முறைத்திருந்தான். சிவப்ரியாவின் இதயம் தடதடக்க, “உன் தாத்தா அவங்கவங்களுக்குனு சொத்து கொடுத்துட்டார். அண்ணன் தம்பிக்குள்ள பாசம் இருந்தாலும் இரண்டும் வேற வேற குடும்பம்ன்றதாலதான தனித்தனியா கிரயம் செய்து வச்சார்?
நான் இந்த வீட்டுல பொண்ணெடுக்கிறேன், அதனால உன் அப்பா கொடுக்குறதுல தலையிட வேணாமேனு சம்மதிச்சேன். அதையும் கூட உனக்காகத்தான் சம்மதிச்சேன்.! இந்த வீட்டுல என் அம்மா முன்ன பட்ட அவமானத்தையெல்லாம் மறந்து சம்மதிச்சேன்.!
உன் கல்யாணத்துக்கு உன் பெரியப்பா சொத்து எழுதி கொடுத்தா பொண்ணெடுக்குற சாக்குல மொத்தமா வாங்கிட்டாங்கனு உன் பெரியம்மா நினைக்காதா? அப்படி நினைச்சா அது எங்களுக்கு எவ்வளோ அசிங்கம்னு யோசிக்கவேயில்லயில்ல?” என கோபமாய் முணுமுணுத்து,
“ஆக… உன் அண்ணன் ப்ளான் போட்டுத்தான் பவ்யாவை விரும்பியிருக்கான். உனக்கும் அது சரினு பட்டிருக்கு.! சொத்திருந்தா பொண்ணை கொடுத்துடுவோம்னு எங்களைப் பத்தி இரண்டு பேரும் இவ்வளோ உயர்வா நினைச்சிருக்கிங்க. சிறப்பு.”
“அச்சோ அது அப்படியில்ல.” என இவள் சொல்வதை கேட்க அருட்செல்வன் அவ்வறையில் இல்லாமல் வெளியேறியிருந்தான்.