“இன்னும் அஞ்சி நாள்ல எங்கண்ணா கல்யாணம், நான் காலேஜ் போகனுமா? முடியாது முடியாது. கல்யாணத்தை சிறப்பா முடிச்சிட்டுத்தான் போவேன்” என்றாள் மகிழ்வோடு.
“ஆமாம், அண்ணன் கல்யாணத்தை விட காலேஜ் முக்கியமா என்ன?” என சிவப்ரியா உற்சாகமாக பேச, அருட்செல்வன் குளித்து வெளியே வந்தான்.
“அண்ணா வந்துட்டாங்க, கொடுக்குறேன்” என கொடுத்து வெளியேறினாள் பவ்யா.
சிவப்ரியா அழைப்பாள் என எதிர்பார்க்கவில்லை. மொபைலை பார்த்தபடி இவனிருக்க, “லைன்ல இருக்கிங்களா?” என்றாள்.
குரல் கமறலாக இருக்கவே, பேசாமல் இணைப்பை துண்டித்தால் அழுவாள் என, “உங்கண்ணன் பெருமையை பேசத்தான் கால் பண்ணுனியா?” என்றான்.
“இல்ல” என மறுத்து, “கோபமா போனிங்க, நான் போட்ட மெஸேஜும் பார்க்கல” என்றாள் வருத்தமாக.
“என்கிட்ட பேசுற நேரத்துல, அழறது தெரியாம இருக்கிறமாதிரி மேக்கப் எதாவது இருக்கா பாரு. கல்யாணத்துல மானம் போய்ட போகுது.” என்று இணைப்பை துண்டித்தான்.
’எனக்கு உங்களை பார்க்கனும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இம்சை இம்சை… என கோபமாய் தலைகோதிக்கொண்டவன், ‘இன்னும் அஞ்சு நாள் கழிச்சு பார்க்கத்தானே போறோம்? இப்போ உன் அப்பாம்மாவோட ஸ்பெண்ட் பண்ணு’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
“எனக்கு உங்களை இப்போ பார்க்கனும்” என்று மீண்டும் அனுப்பினாள்.
அதை பார்த்தவன், நம்மளை இம்சை பண்ணன்னே ஜென்மம் எடுத்திருக்கா, எவ்வளோ கோபத்துலயிருந்தாலும் அவ நினைச்சதை செய்ய வச்சிடுறா என இம்சையாக நினைத்தபடி மொபைலை சைலண்ட்டில் போட்டு அறையிலேயே வைத்து வெளியே வந்தான்.
தனலஷ்மி “என்னடா? சிவா போன் செய்துச்சாம், நீ உர்ருனு வர? திரும்பவும் சண்டையா?” என்றார் கவலையாக.
“அவளுக்கு எப்படி என் நம்பர் போச்சு?”
“நாம அங்க சாப்பிட போனோம்ல? அப்போ கேட்டானு நான்தான் கொடுத்தேன். அதுக்கு என்ன இப்போ?” என முறைத்தார் தனலஷ்மி.
“மெம்பரே சொந்தமாகப்போற நேரத்துல நம்பர் கொடுத்தது ஒரு தப்பா? பார்க்கலாம் பார்க்கலாம், இரண்டு நாளைக்கப்புறம் இந்த முறைப்பு எத்தனை நாளைக்கு நீடிக்குதுனு” என சிரித்தான் குணாளன்.
“அன்னைக்கு சாப்பிட்டதும் கோபமா வெளில வந்துட்டனு ரொம்ப வருத்தப்பட்டா, இருபது நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாயிருக்காது, இரண்டு பேரும் சமாதானம் ஆகிவிங்கனு நான்தான் உன் நம்பர் கொடுத்தேன். என்ன சொன்னா அருளு? திட்டிட்டியா?” என தவித்தார் தனம்.
“என்ன சிவா டல்லா இருக்க?” என முறைத்தான் பார்த்திபன்.
“போன் செய்தா பேசமாட்டேங்கிறாங்க.” என்றாள் பாவமாக.
சிரித்தவன், “கல்யாணத்துக்கப்புறம் அவரை உன் பின்ன சுத்த வைச்சிக்கலாம் விடு” என்றான்.
“போ பார்த்திண்ணா” என்றாள் வருத்தமாக.
அருட்செல்வன் கோபித்ததை அன்றே சொல்லியிருந்தாள் பார்த்திபனிடம். என் கல்யாண விசயத்தை நான் பார்த்துக்கிறேன், ஃப்ரீயா விடு என்றிருந்தான்.
“ப்ச் சிவா, அவர் என்னை புரிஞ்சிக்கிறதுக்கு நாம என்ன சின்ன வயசுலயிருந்து பழகிட்டா இருந்தோம்? அவர் தங்கைக்கு யோசிக்கமாட்டாரா பின்ன? எல்லாம் மெதுவா புரிய வச்சிக்கலாம். இப்போ உன் கல்யாணத்தை என்ஜாய் பண்ணு, அப்பா சித்தப்பாலாம் ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க. நீ இப்படி இருந்து அவங்க மூடை ஸ்பாயில் செய்யாத.”
“ம்.” என்றாள்.
“கொஞ்சமாவது எங்களை விட்டு பேறோம்னு வருத்தம் இருக்கா? எப்படா அத்தை வீட்டுக்கு போவோம்னு இருக்க?” என குறைபட்டான் கிண்டலாக.
விடுதியில் தங்கி படித்த பழக்கத்தாலா? இல்லை அருட்செல்வன் மீதானா காதலாலா தெரியவில்லை. உண்மையில் சிவப்ரியாவிற்கு பிறந்த வீட்டை பிரிகிறோம் என்ற வருத்தமெல்லாம் இல்லை.
அந்த நேரம் அருணாச்சலம் வர, “கேட்டிங்களா சித்தப்பா? எதுக்கு வருத்தப்படனுமாம்? நம்ம வளர்ப்பு இப்படி வீண்போகும்னு நினைக்கவேயில்ல” என வராத கண்ணீரை துடைத்துக்கொண்டான் பாவமாக.
“நம்ம அத்தை வீட்டுக்கு போக எதுக்கு வருத்தப்படனும்?” என சிரித்தார் மகிழ்வோடு.
அத்தைக்கு நடந்த அநியாயங்களை மறந்து எவ்வளவோ தனக்காக விட்டுகொடுத்துட்டாங்க. இனி அவங்க விருப்பம் எதுக்கும் நாம தடை சொல்லக்கூடாது என்பதில் உறுதியாகி, மகிழ்வோடு திருமணத்திற்கு தயாரானாள் சிவப்ரியா.
சிவப்ரியாவிற்கு அருட்செல்வன்மேல் அளவில்லாத காதல். தன் தந்தை சாயலில் இருப்பதாலா? அத்தை மகன் என்ற உறவாலா? தன் வீட்டிற்கே வந்து தன் அத்தைக்காக தன்னையே மிரட்டியதாலா? தனக்கு அவர் மீதான காதலை அறிந்ததும் நம் குடும்பத்தின் மீதுள்ள பல வருட கோபங்களையும் விடுத்து, உடனே தன்னை மணக்க முடிவெடுத்ததாலா? இன்னும் என்னனென காரணங்களால் அருட்செல்வன் மீது இத்தனை காதல் வந்ததென அவளே அறியாள்.
திருமணம் முடிவான பின்னே இன்னும் இருபது நாட்கள் எப்பொழுதுதான் முடியுமோ என காத்திருந்தாள் அருட்செல்வனை மணக்க.
தற்போது திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, “பார்த்திபா, எல்லா சீர் வரிசையும் சரியா இருக்கானு லிஸ்ட்டை எடுத்து ஒருமுறை சரிபார்த்துடுய்யா.” என்றார் அருணாச்சலம்.
“அதுசரி” என மலைப்பாய் சொன்னவன், “அத்தனையும் இன்னொருமுறை சரிபார்க்குறதுக்குள்ள விடிஞ்சிடும் சித்தப்பா. ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே கவனமா பார்த்துட்டேன். நாளைக்கு மண்டபத்துக்கு அனுப்ப வண்டியும் பேசிட்டேன்.
என்னோட ஃப்ரண்ட் நாளைக்கு காலைல வந்திடுவான். சீரெல்லாம் மண்டபத்துக்கு எடுத்துட்டு வரதை அவன் பார்த்துப்பான். நாம போகும் முன்ன பத்திரமா சீர் மண்டபத்துக்கு போய்டும். கவலைப்படாம சந்தோசமா இருங்க” என்றான்.
மண்டபம் தர்மபுரியில்தான் கிடைத்தது. வீட்டிலிருந்து தர்மபுரிக்கு ஒருமணிநேரம் பயணம் செய்யவேண்டும் ஆகையால், நாளை மாலையே கிளம்பிட முடிவெடுத்திருந்தனர்.
அவரவர் முறைக்கு உறவினர்கள் நலங்கு வைப்பது, புதுப்பெண்ணிற்கு மருதாணியிடுவது, அக்கம்பக்கத்தினரின் கிண்டல் பேச்சுகள், வீட்டில் விடாது ஒலிக்கும் இன்னிசை பாடல்கள் என ஒருவாரமாகவே விழாக்கோலாமாய்தான் இருந்தது அருணாச்சலம் இல்லம்.
எனவே தாய்மாமன் முறை செய்வதற்கு ஆளில்லாததால் சங்கரையே அழைத்திருந்தார் அருணாச்சலம்.
இவர்களின் முறைப்படி, தாய்மாமன்தான் மணப்பெண்ணை சபைக்கு அழைத்து வருவார் ஆதலால், “நானே எப்படி என் மகனுக்கு அழைச்சிட்டு போறது?” என சங்கடப்பட்டார் சங்கர்.
“இதுல சங்கடப்பட என்னயிருக்கு? தாய்மாமன் உறவுக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை அத்தைமாமன் உறவு. மனம் நிறைஞ்ச சந்தோசத்தோட நீங்க அழைச்சிட்டு போனாதான் எங்களுக்கும் பெருமை.” என வற்புறுத்தினார் அண்ணாமலை.
“சரி அருணா, நான் நாலுமணிபோல வரேன்.” என்றார் சங்கர்.
தாய்மாமன் முறையை சங்கர்தான் செய்கிறார் என அடுத்தநாள் காலை சிவப்ரியாவிற்கு தெரிய வர, இவங்களும் வருவாங்களா? வந்தாதான் என்னவாம்? என எதிர்பார்ப்போடு குறைபடவும் செய்தாள் சிவப்ரியா.
அன்றுமாலை தன் மனைவி மற்றும் நண்பனின் குடும்பத்தோடு சங்கர் வர, சிவப்ரியாவின் பார்வை காரில் இருக்க, “அங்க வரவங்களை பார்க்கனுமில்ல சிவா? அருள் மண்டபத்துக்கு வந்திடுவான்” என்றார் தனலஷ்மி.
“இல்லத்த, நான் ராகவன் அண்ணா வந்திருக்காங்களானு பார்த்தேன்.” என தோழி கணவனை சொல்லி தனது ஏமாற்றத்தை சமாளித்தாள் சிவப்ரியா.
பன்னீர்ரோஜா வர்ணப் பட்டில் கல் பதித்த நகைகளோடு ஜொலித்தவள் மனம், யார் பார்க்க இத்தனையும் என சலிப்பானது. “ஏய் சிவா, மண்டபத்துல மாமா இருப்பார் கவலைப்படாத” என கிண்டலோடு தேற்றினாள் ஷிவாங்கி.
“ப்ச் போடி” என சலித்தவள் “தினமும் நித்திஷ் கூட கடலை போடுற உனக்கு எப்படி தெரியும் என் கஷ்டம்” என முகம் வாடினாள்.
“ஹேய்… மாமா பக்கம் அநியாயத்துக்கு இப்படி ப்ளாட் ஆனா எப்படி கெத்து காட்டுறது? உன்கிட்ட கோவிச்சிட்டு போன மாமாவை பார்க்காம அவருக்கு தண்ணி காட்டுவனு பார்த்தா, இப்படி கவுந்திட்டியே சிவாக்கா. இனி மாமா பாடுதான் திண்டாட்டம் போல” என சிரித்தாள் மகிழ்வோடு.
கால் மணி நேரத்திற்கு பின்னே தாய்மாமன் நலங்கிட்டு, நடைப்பயணமாக மேளதாளங்களின் முழக்கத்தோடு அவ்வூரின் கோவிலுக்கு சிவப்ரியாவை அழைத்துசென்று பூஜை முடித்து, தனது மருமகளை மண்டபத்திற்கு அழைத்து வந்தனர் தனலஷ்மி சங்கர் தம்பதி.
மண்டபத்திற்குள் நுழைந்ததும் மனம் அருட்செல்வனை தேட, சிவப்ரியாவை ஏமாற்றாமல் அங்கேதான் நின்றிருந்தான் அருட்செல்வன். கட்டுப்பட்டியின் ஊர் பெரியவர்கள், மற்றும் தனது ஊர் பெரியவர்கள் என இருநூறு பேர்வரை தன்னை சூழ்ந்திருக்க, மனம் அருட்செல்வனை காண உந்தியபோதும் விழியை நிமிர்த்த முடியவில்லை சிவப்ரியாவால்.
“அருள் இங்க வாடா” என அழைத்த சங்கர், மருமகள் பக்கத்தில் மகனை நிற்கசெய்து “இரண்டுபேரும் பெரியவங்களை வணங்கிக்கோங்க” என்றார்.
“நூத்தியொரு தட்டு, ஒருகிலோ தங்க நகை, வெள்ளிப்பாத்திரங்கள்” என சீர் வரிசைகள் சபையில் பகிரப்பட்டு, சம்பிரதாய பேச்சுக்கள் முடிய இரண்டு மணிநேரம் வரை ஆகியிருக்க, அதன்பின்னே அருட்செல்வனின் கல்லூரி நண்பர்கள் இணைந்துகொண்டனர்.
“ஏண்டா டேய், அஞ்சரை வருசம் ஒன்னாதான படிச்சோம்? இப்படி ஒரு அத்தை மக இருக்கிறதை ஒருநாளாவது சொல்லியிருக்கியாடா? சென்னையிலயிருந்து எதுக்கு டிரான்ஃபர் வாங்கிட்டு வந்தனு இப்போதான புரியுது” என நகைக்க, “புரிஞ்சிடுச்சா? டோட்டலா புரிஞ்சிடுச்சா? என இவன் பதிலுக்கு சிரிக்கவென நேரம் கலகலப்பாக சென்றது.
நண்பர்களிடம் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் உரையாடிக்கொண்டிருந்தவனின் பாவனையை ரசித்தவள், நல்லவேளை நம்ம மேல உள்ள கோபத்துல உர்ருனு இருக்காம கலகலப்பா இருக்காங்களே என நிம்மதியானாள்.
அடர் நீல நிற ஓட்டோ பேண்ட், ஆகாய வர்ண சர்ட் என ஆர்பாட்டமில்லாமல் உடை அணிந்திருந்தான். கையில் தான் போட்ட பிரேஸ்லெட் இருந்தது. இன்னும் முகத்தை காண முடியவில்லை.
பின்னே? போட்டோ ஷுட் என்றால் அங்கும் நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள். சாப்பிடும்போதாவது தனிமை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சொன்னாள் சிவப்ரியா.
“மணி ஏழுதான் ஆகுது. எனக்கு பசியில்ல, நீ சாப்பிடு” என முடிக்கும் முன்னே, “எனக்கும் பசிக்கல” என்றாள் வெடுக்கென.
பார்த்திபன் அங்கிருந்து விலகிட, “ப்ச், பேச்சுலர் பார்ட்டிக்கு அரேன்ஜ் பண்ணியிருக்கேன். இங்க பக்கத்துலதான் க்ளப். நான்போய் ஜஸ்ட் ஸ்டார்ட் பண்ண வச்சிட்டு ஒன் ஹார்ல வந்துடுவேன். அதுக்குள்ள சாப்பிட்டுடு, போட்டோ எடுத்து முடிக்க லேட் ஆகிட்டா டையர்ட் ஆகிடுவ” என்றான்.
“எத்தனை மணியானாலும் உங்களோடதான் சாப்பிடுவேன்”
அருட்செல்வனிடம் பதிலில்லாமல் போக, “நான் இன்னும் உங்க முகத்தை கூட பார்க்கல, நீங்க மட்டும் நல்லா முறைச்சி பார்க்குறிங்க” என குறைபட, “இம்சை இம்சை” என அலுத்துக்கொண்டவன், “முகத்தை பார்க்க ஆசையிருந்தா பத்தாது. என் மனசையும் நினைக்கனும்” என கடுகடுக்க, இவள் கலங்கி நிமிர, “ப்ச், உடனே பம்ப் செட்டை திறந்து விட்டுடாத. பவ்யா ஷிவாங்கியோட போய் சாப்பிடு, அவனுங்களை பார்ட்டிக்கு அனுப்பிட்டு வரேன்” என கிளம்பினான்.