குளித்து வெளியே வந்த அருட்செல்வன், “ஏன் டல்லா இருக்க? இன்னும் டையர்ட் போகலயா?” என்றான்.
“கொஞ்ச நேரம் படுக்கலாம்னுதான் படுத்தேன். அசந்து தூங்கிட்டேன், எழுப்பியிருக்கலாமில்ல?” என்றாள் தலைகுனிந்தபடி.
சத்தமில்லாமல் சிரித்தவன், “எதுக்கு?” என்றான்.
எதுக்கா? அப்போ இன்னும் நம்ம மேல உள்ள கோபம் போகலயா? என அதிர்வோடு நிமிர்ந்தவள், டவலோடு நின்றிருந்தவனைப் பார்த்ததும் தலைகுனிந்தபடி எழுந்து குளியலறை நோக்கி செல்ல, வழி மறைத்தவன், “குளிக்க டவல் வேணாமா?” என்றான்.
“ம்” என அறையில் கண்களை சுழற்ற, “எதுக்கு தேடிட்டிருக்க? இதையே எடுத்துக்கோ” என்று தனது இடுப்பில் கட்டியிருந்ததை காண்பித்தான் சிரிப்போடு.
“நிஜமா உருவிடுவேன்” என மிரட்டினாலும் அவ்விடம் நிற்க முடியாமல் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
பத்து நிமிடம் கழித்து “டவல் வேணுமா?” என்றான்.
“ம்” என்க,
“கதவைத் திற” என்றதும் உடனே திறந்தாள்.
“என்னடி இப்படி பட்டுனு திறந்துட்ட? இரு உள்ள வரேன்” என கதவைத் தள்ள, இவளே திறந்தாள் நன்றாக.
“அதுக்குள்ள எப்படி குளிக்க முடியும்? பல் தேய்ச்சேன்” என்றபடி அறைக்குள் வந்து, ஒவ்வொரு கபோர்டாக திறந்து பார்த்திருந்தாள்.
“என்ன அதுக்குள்ள முகம் டல்லாகிடுச்சு?” என நெருங்கி நின்றான்.
“என்கிட்ட இயல்பா இருக்கமாதிரி காட்டிக்கிறிங்க. அப்படிலாம் வேணாம், உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியிருங்க”
“அப்படியா?” என பின்னிலிருந்து அணைத்தவன், தன் முகத்திற்கு முன்னே திருப்பினான்.
இவள் குனிந்துகொள்ள, “உன் விருப்பம் தெரிஞ்சதால மட்டும் இல்ல, எனக்கும் உன்னை பிடிக்கவும்தான் நம்ம கல்யாணம் நடந்தது. ஆனாலும் உனக்கு என்மேல நிறைய வருத்தம் இருக்கு. ஒன்னும் பிரச்சனையில்ல, டைம் எடுத்துக்கலாம் சரியா?”
“அப்படிலாம் ஏதும் இல்லங்க” என அவசரமாய் மறுத்தாள்.
“என்ன இல்ல?” என முறைத்தவன், “உங்கப்பாம்மாவை அத்தை மாமானு கூப்பிடலனு வருத்தம் இல்லையா? கல்யாணத்துல உன் பெரியப்பா பெரியம்மா கால்ல நான் விழலனு வருத்தம் இல்லையா? உன் மனசு வாடினதை முகம் காட்டிக்கொடுத்துடுச்சு” என்றான்.
சிவப்ரியா முகம் தற்போதும் பொலிவின்மையை காட்ட, “பேசாலாம்னு வந்தா கையொரு பக்கம் கால் ஒரு பக்கம்னு பெப்பரபேனு படுத்து தூங்கிட்டிருக்க. இப்படி புடிச்சிதான் சரியா படுக்க வச்சேன்” என இடுப்பை இறுக்கியவன், இன்னொரு கையால் கழுத்தை வருடி, “பெரிய நகையெல்லாம் கழட்டிவிட்டேன். அதுகூட தெரியாம தூங்கறவளை வச்சிக்கிட்டு என்ன பண்ண சொல்ற?”
பிடிச்சி கல்யாணம் செய்தவங்க என்ன பண்ணனு என்னை கேட்குறாங்க. அதுவும் ஃபர்ஸ்ட்நைட் அன்னைக்கு! என மனதில் நகைத்தவளுக்கு, வெற்றுடம்போடு இவன் அணைத்திருந்தது பேரவஸ்த்தையை கொடுக்க, “ஒன்னும் பண்ணவேணாம், விடுங்க என்னை” என்றாள்.
“கொஞ்ச நேரத்துல கோவிலுக்கு போக ரெடியாக சொல்வாங்க. அப்புறம் உங்கப்பாம்மா விருந்துக்கு அழைக்க வந்திடுவாங்க. போய் குளிச்சிட்டு வா” என விடுவித்தான்.
“அண்ணி இங்கதான் கபோர்ட்ல என் டிரஸ் வச்சிருக்கேனு சொன்னாங்க. ஆனா காணோம்” என மீண்டும் தேட ஆரம்பிக்க, “அருளு” என பார்வதி அழைத்தாள்.
“வரேன்க்கா” என கதவை திறக்க, “லைட் எரியவும் கூப்பிட்டேன். சிவா எழுந்துட்டாளா?”
“அண்ணி உள்ள வாங்க, என் டிரஸ்ஸை எங்க வச்சிங்க?” என்றாள் சிவப்ரியா.
“நைட் லேசா காய்ச்சல் அருளு, மாத்திரை முழுங்கிட்டு படுத்தா. இன்னும் எழுந்துக்கல”
“காய்ச்சலா?” என எழுந்தவன் பவ்யா அறைக்கு செல்ல, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். முகம் சற்று உப்பலாகவும் சிவந்தும் இருந்தது. தொட்டுப்பார்க்க, தற்போது காய்ச்சல் இல்லை, நேத்தே டையர்டா இருக்குனு சொன்னாளே என நன்றாக போர்த்திவிட்டு வந்தான்.
குளித்து வந்த சிவப்ரியா “அண்ணி நீங்க ஏன் க்ளீன் பண்றிங்க? நான் செய்திருப்பேன்” என்றாள் தவிப்பாக.
“அதனால என்ன? இரண்டு நாளா தூக்கமில்லாம டையர்டா இருக்கும்னுதான் பண்ணினேன். முடியை காய வை, சளி பிடிச்சிக்கப்போகுது” என்று வெளியேறினாள்.
சுற்றிக்கொண்டு வந்த சேரியை சரியாய் கட்டி, தலையில் துண்டையும் கட்டி, நெற்றிக்கிட்டு வெளியே வந்தாள். “டீ யா காபியா சிவா?” என்றார் தனம்.
“எதோ ஒன்னு அத்தை” என கிச்சன் சென்றாள்.
“நான் போடுறேன்லாம் சொல்லமாட்டியா?” என பார்வதி சிரிக்க, “காட்டு வேலை செய்திடுவேன் அண்ணி. சமையல்னா கொஞ்சம் சலிப்பு. அதிலும் காலங்காத்தால குடிக்கிற டீ நல்லா இல்லைனா அன்னைக்கெல்லாம் எரிச்சலா இருக்கும். அதான் எதுக்கு ரிஸ்க்குனு அத்தைகிட்ட சரண்டர் ஆகிட்டேன்” என்றாள் இயல்பாக.
“இந்தா” என சிரிப்போடு தனம் டீயை நீட்ட, அங்கேயே நின்று குடிக்க ஆரம்பிக்க, “ஹாலுக்கு போலாம் வா” என அழைத்து வந்தாள் பார்வதி.
“எழுந்தாச்சா சிவாம்மா?” என்றபடி சங்கர் வர, “எழுந்தாச்சு மாமா, டீ குடிக்கிறிங்களா?” என எழுந்தாள்.
“உக்காரு உக்காரு” என்று “தனம்” என அழைக்க, தனம் டீ யை நீட்டினார்.
சங்கர் மகனைப் பார்க்க, அப்பா எல்லாத்தையும் நோட்டம் விடுவார் என, “காலேஜ்க்கு எத்தனை நாள் லீவ் போட்டிருக்க?” என்றான் சிவப்ரியாவிடம்.
“எத்தனை நாளைக்கா? இனி எப்போவுமே லீவ்தான்” என்றாள்.
“என்ன?” என அதிர்ந்தவன், “கோர்ஸ் முடிக்க இன்னும் ஒன் இயர் இருக்குல்ல?” என்றான்.
“கல்யாணம் செய்தா படிப்பை விடனும்னு இருக்கா?” என முறைக்க, “சரி படிப்பை முடிக்கிறேன், முடிச்சிட்டு என்ன பண்ண?” என்றாள்.
“முடிச்சிட்டு வேலைக்கு அப்ளை பண்ணு, அதுக்குத்தான எல்லாரும் படிக்கிறாங்க?”
“ஓகே பண்றேன். ஆனா ஒரு கண்டிஷன்… நான் வேலைக்கு போனா நீங்க போகக்கூடாது” என்றாள்.
“என்ன?” இவன் அதிர்ந்து, பின்னே முறைக்க, “இரண்டு பேரும் வேலைக்கு போனா, நம்ம குழந்தையை யார் பார்த்துப்பா?” என ஒரு வேகத்தில் கேட்டவள், பின்னே சிவந்து தலைகுனிந்தாள் நாணத்தோடு.
“வெக்கப்படாத மச்சான், தங்கச்சி கேட்குதுல்ல? பதில் சொல்லு” என சிரித்தான் குணாளன்.
இம்சை இம்சை, ஒரு முத்தத்துக்கு கூட வழியில்ல, இதுல குழந்தை வரை போய்ட்டா என மனதோடு கடிந்தவன், “அம்மாப்பா பார்த்துப்பாங்க” என்றான்.
“அதெல்லாம் முடியாது. இவ்வளோ நாள் உங்களை பார்த்துக்கிட்டவங்க இனி உங்க குழந்தைகளை பார்க்கனுமா? அப்போ அவங்க எப்போ ரெஸ்ட் எடுக்குறது? அத்தை மாமா சப்போர்ட் பண்ணலாம், அதுக்காக ஃபுல்லா அவங்களை கஷ்டப்படுத்த கூடாது.
நம்மள்ல யாராவது வீட்டுல இருந்து குழந்தையை பார்த்தே ஆகனும். நீங்க பார்த்துக்கிறிங்கனா நான் படிக்க போறேன், வேலைக்கும் போறேன். உங்களுக்கு வேலையை விட விருப்பம் இல்லைனா நான் படிக்க போகமாட்டேன். குழந்தையை நல்லபடியா வளர்க்கவும், குடும்பத்துல பிரச்சனை வராம பார்த்துக்கவும் பெரியவங்க சொன்ன அனுபவ அறிவோட சேர்த்து ஒரு டிகிரி போதும்!”
“ஒரு டீ போட தெரியாது. நீ வீட்டை பார்த்துக்கப்போறியா? ஒழுங்கா பி.ஜி முடிக்கற!” என்றான் கட்டளையாக.
“பி.ஜி முடிச்சாலாம் டீ போட வராது. சமையல் கட்டுக்கு போய் ட்ரை பண்ணினாதான் வரும்” என்றாள் ராகமாக.
நான் இல்லைனா என்ன பண்ணுவ? என கேட்க வந்தவன், “எனக்கு வேலை போய்டுச்சுனா என்ன பண்ணுவ?” என்றான்.
“ப்ரைவேட் க்ளினிக் வச்சிக்கலாம். இல்லனா காட்டு வேலைக்கு போய் சம்பா அரிசி போட்டு உங்களை காப்பாத்துவேனாக்கும்” என்றாள் பெருமையாக.
இவன் முறைக்க, “வீட்டு வேலைதான் தெரியாது. காட்டு வேலை அத்தனையும் அத்துபடி. நெல்லுதான் பயிரிடனும்னு இல்ல, சீசன்க்கு ஏத்தமாதிரி பூச்செடி வச்சி கூட பொழப்பை நடத்திடுவேன். அந்தளவுக்கு அப்பா என்னை ட்ரைன் பண்ணியிருக்கார்” என்றாள்.
கோடிக்கு சொந்தக்காரியாக இருந்தாலும் மனைவியின் எளிமையான பேச்சில் மயங்கித்தான் போனான். “ம்” என மூச்சிழுத்தவன், “ஆக… நீ படிக்கிற ஐடியால இல்ல” என்றான்.
“அதான் சொன்னேனே” எனும்போதே, “போதும் நிறுத்து, சொன்னதையே திரும்ப சொல்லிகிட்டு” என கடுகடுக்க, மருமகளின் பேச்சில் மடங்கிய மகனைப் பார்த்து சங்கர் சிரித்தார்.
“தலைல இருக்க துண்டை கழட்டிட்டு முடியை காய வை சிவா. கோவிலுக்கு போகனும்” என்றார் தனம்.
பவ்யா இன்னும் எழாமல் இருக்கவே அவளிற்கு துணையாக பவானியும் கோவிலுக்கு செல்லவில்ல. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் குலதெய்வக் கோவில் என்பதால் ஏழு மணிக்கு கிளம்பியவர்கள் எட்டரை மணிக்கெல்லாம் வந்திருந்தனர்.
“ஏற்கனவே ஸ்கூலுக்கு ஒரு வாரம் லீவ் போட்டாச்சு, பையனுக்கு விட்டா வருவோம். அப்போ பழகிக்கலாம். ஒரு வாரம் கழிச்சு விருந்துக்கு அழைக்க வரேன்” என எடுத்துரைத்து, “அதுக்கு முன்ன என் தம்பியோட நல்லா பழகிக்க.” என ரகசியம் பேசி கிளம்பியிருந்தாள் பார்வதி.
டிகிரி முடித்ததும் பெண் கேட்டு வருவேன், அப்போ ஏமாத்திடாத என்று பார்த்திபன் சொன்னதை பவ்யா அன்னையிடம் சொல்லியிருக்க, அனைவரிடமும் மறைப்பது, முக்கியமாய் அருட்செல்வனிடம் மறைப்பது பவானிக்கு பெரும் தடுமாற்றத்தை கொடுத்திருந்தது.
என்ன வேலை செய்தாலும் சிந்தனை அதிலேயே தேங்கி நிற்க, சிவப்ரியா கேட்டதும் சுதாரித்து, “கல்யாண அலைச்சல் சிவா. இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றார் வரவழைத்த இயல்போடு.
சித்தி எதோ சரியில்லை என யோசித்தவன், பின்னே பவ்யாவிற்கு உடல்நிலை சரியில்லாதது, மற்றும் கல்யாண அலைச்சலாக இருக்கும் என நினைத்துக்கொண்டான்.