விருந்துண்ண வெளியே வந்ததிலிருந்து அருட்செல்வன் நேரத்தை மொத்தமாய் எடுத்துக்கொண்டாள் ஷிவாங்கி. உணவு, சினிமா ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் இவற்றில் அருட்செல்வனின் பிடித்தம் பற்றி கேட்டு தன்னோடு பேச வைத்திருந்தாள்.
ஐந்து மணிபோல் கிளம்பலாம் என்று சிவப்ரியாவிடம் சொல்ல, ஒரு நாளாவது தங்கிசெல்ல கேட்டார் கல்யாணி. அருட்செல்வன் பதிலளிக்கும் முன்னே, “இல்லம்மா, அங்க பவ்யாக்கு காய்ச்சல். நாங்க கிளம்பனும்” என்றாள் சிவப்ரியா.
பார்த்திபன், “வாரம் ஒருமுறையாவது வந்துட்டு போங்க” என இருவரிடமும் கோரிக்கை வைக்க, சிவப்ரியா சம்மதமாய் தலையசைக்க, மனைவியோடு கிளம்பினான் அருட்செல்வன்.
சிவப்ரியாவின் முகம் வாடியிருக்க, “என்ன?” என்றான்.
“பவ்யாக்கு காய்ச்சல் சரியானதும் வந்து இரண்டு நாள் இருந்துட்டு போலாமா?”
“ஒரு வாரம் கழிச்சு உன்னை வந்து விட்டுட்டு போறேன்” என்றான்.
“நீங்க இல்லாமலாம் நான் வந்து தங்கமாட்டேன்”
“ப்ச் லூசுத்தனமா பேசக்கூடாது”
“லூசுத்தனம்லாம் இல்ல, எனக்கு உங்களோடவும் இருக்கனும், இங்கையும் இருக்கனும்”
கோபம் விடுத்து, “என்னோட இருக்கனும், பார்க்கனும்னு சும்மா சொல்றதுதான், பக்கத்துல இருந்தா பார்க்குறதில்ல. மிரட்டிதான் பார்க்க வைக்க வேண்டியிருக்கு” என்றான் குறும்பாக.
முகம் சிவந்து தலைகுனிய, “உன் வீட்டுல நீ இயல்போட இருக்கத்தான் உன்னை தங்கிக்க சொல்றேன், என் மனசு இன்னும் தங்குற அளவுக்கு தயாராகல” என்றான் உண்மையாக.
சரியென தலையசைக்க, “என்ன உடனே ஒகே சொல்லிட்ட?” என்றான் ஆச்சர்யமாக.
“அப்பாக்கும் பெரியப்பாக்கும் நீங்க இங்க வந்தது, எல்லாரோடவும் உக்கார்ந்து சாப்பிட்டது, ஷிவாங்கியோட இயல்பா இருந்தது ரொம்ப சந்தோசம். மருமகன்றது மட்டுமில்ல, சொந்த அக்காள் மகன், ஆனா சின்ன வயசுலயிருந்து நீங்க வந்ததேயில்லயில்ல? அதனால சென்ட்டிமன்ட்டா ஃபீல் ஆகிட்டாங்க. அவங்களுக்கு உங்களோட நிறைய பேசனும்னு ஆசை. ஆனாலும் உங்களை சங்கடப்படுத்திடக் கூடாதுனு பேசல”
இது அருட்செல்வனிற்கும் புரிந்ததுதான் ஆதலால், “ம் வேற?” என்றான்.
“எங்களை மாமானு கூப்பிடனும்னு மாப்பிள்ளைகிட்ட சொல்லிடாத சிவாம்மா, கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத விசயமா என் அக்கா மகனோட உன் கல்யாணம் நடந்திருக்கு, நீங்க இரண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்தா அதைவிட சந்தோசம் வேற இல்லனு சொன்னாங்க”
சுடிதார் மாற்ற மறுத்ததை நினைத்து சொல்கிறானோ என, “என் ரூம்ல பாத்ரூம் இருந்தாலாவது அங்க போய் மாத்தினேனு மேனேஜ் பண்ணியிருப்பேன். எங்க வீட்டுல பாத்ரூம்லாம் பின்கட்டுலதான் இருக்கு. அதான்” என்றாள் நாணத்தோடு.
“அப்போ பாத்ரூம் இல்லாதது மட்டும்தான் பிரச்சனையா? நான் மாத்திவிட்டது ஒகேதானா?” என்றான் கண்ணிமைத்து.
கீழ் உதட்டை கடித்தபடி சிவப்ரியா ஜன்னல் புறம் திரும்பிட, மரகதபச்சை நிற பட்டு சாரிக்கும், பார்டர் நிற நீலவர்ண ஜாக்கட்டிற்கும் இடையே ஓர் இன்ஞ்ச் அளவே தெரிந்த வெற்றிடையை ரசித்தவனின் மொபைல் அழைத்தது.
வழக்கமாய் மருத்துவமணைக்கு வரும் நபர்தான் ஆகையால், அழைப்பை ஏற்று, “நான் லீவ்ல இருக்கேன்ங்க, மன்டே வந்திடுங்க” என்றான்.
“நாய் நல்லாதான் இருக்கு டாக்டர். கன்னுக்குட்டி காலைலயிருந்து தீனி எடுக்கலங்க”
கன்னுக்குட்டியின் வயதை விசாரித்து, “மாட்டுகிட்ட பால் குடிக்க வச்சிங்களா? இல்ல பால் வேணும்னு பிரிச்சி வச்சிட்டிங்களா?” என்றான்.
“பிரிச்சிலாம் வைக்கலைங்க, நேத்தே எழுந்துக்காம படுத்தேதான் இருந்துச்சு, புது மாப்பிள்ளையை தொந்தரவு பண்ண சங்கடமா இருக்கவும் கால் பண்ணல, பூச்சு கடியோ என்னவோ? இப்போ வாயில நுரை தள்ளி படுத்துடுச்சு, பயமா இருக்குங்க கொஞ்சம் வீட்டுக்கு வரிங்களா?” என்றார் பதட்டத்தோடும், கெஞ்சலோடும்.
“ப்ச்” என சலித்தாலும் அரை மணி நேரத்தில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
என்ன என்பதாய் பார்த்தாள் அவனின் முகவாட்டம் கண்டு.
“ஔவை நகர் போகனும், போய்ட்டு ஒன் ஹார்ல வந்திடுவேன்” என்று காரின் வேகத்தை அதிகப்படுத்த, “ரொம்ப அர்ஜன்ட்ன்னா அங்கையே போங்களேன், நான் கார்க்குள்ளயே இருந்துக்கிறேன்” என்றாள்.
“இல்ல வேணாம், கார் போற அளவுக்கு அங்க ரோடு வசதி கிடையாது. பைக்தான் சரிவரும்” என்று வீட்டிற்கு வந்தவன், பவ்யா உடல்நலம் விசாரித்து, வெளியில் செல்லும் அவசியத்தை தந்தையிடம் விளக்கி மருத்துவ பெட்டியோடு கிளம்பினான்.
சங்கர் தனலஷ்மியிடம் பார்த்திபன் விசயத்தை பவானி சொல்லியிருக்க, தற்போது அருளுக்கு தெரிய வந்தால் என்னவாகுமோ என்ற பயத்திலிருந்தாள் பவ்யா.
சிவப்ரியா பவ்யா முகம் பார்க்க, பவ்யா தடுமாறி தலைகுனிய, பவானி நாகராஜ், சங்கர் தனம் என அனைவர் முகமும் வாட்டமாக இருக்கவே, வேறு ஏதும் பிரச்சனையோ என, “என்னாச்சு அத்தை?” என்றாள் கவலையாக.
“ஒன்னுமில்ல சிவா” என சுதாரித்து, “அருள் எல்லார்கிட்டயும் சரியா பேசினானா? அப்பாம்மா என்ன சொன்னாங்க?” என விசாரித்தார் தனம்.
“ஓ… அங்க இவர் சரியா நடந்துக்கிட்டாரான்ற டென்ஷன்ல இருந்திங்களா?” என ஆசுவாசப்பட்டு, “நான் கூட பவ்யாக்கு எதோ பிரச்சனையோனு பயந்தே போய்ட்டேன்த்த” என்றாள் ஆசுவாசமாக.
சங்கர் “தெரிஞ்ச விசயம்தானேம்மா? இவனும் பேசியிருக்கமாட்டானே” என்றார் மகனைப் புரிந்து.
“ஆமாம் மாமா. ஆனாலும் எதுக்கு பேசனும்?” என்றாள் கணவனிற்காக.
சங்கர் பெருமையோடு பார்க்க, “பவ்யா அஸைமன்ட் எழுதலாம் எடுத்து வை. டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்” என வீட்டிற்குள் செல்ல, “நானே முடிச்சிட்டேன் அண்ணி” என்றாள் பவ்யா.
“ப்ச், உடம்பு முடியலனு சொன்னதானே? எதுக்கு ஸ்டரெய்ன் பண்ணின?” என அறைக்கு உடை மாற்ற செல்ல நினைக்கும்போதுதான் சோலையம்மாளின் நியாபகம் வர, அவரின் அறைபுறம் திரும்பினாள்.
சோலையம்மாள் முகத்தை திருப்ப, சிரித்தவள், உடைமாற்றும் எண்ணத்தை விடுத்து அவரிடம் செல்ல எத்தனிக்க, “அம்மாக்கு பிடிக்காதும்மா, கொஞ்ச நாள் கழிச்சி பேசிக்கலாம். இப்போ போனா சங்கடப்படுற மாதிரிதான் பேசும்” என்றார் சங்கர்.
“பரவால்ல மாமா, நேத்தும் பேசல. கல்யாணத்துக்கும் வரல, ஒரே பேரன் கல்யாணம். அவங்க மனசுக்கு பிடிக்காம நடந்திருக்கு, இதையே நினைச்சு ஃபீல் பண்ணுவாங்கதானே? பேசிப்பார்க்குறேன், கொஞ்சமா திட்டினா வாங்கிக்கிறேன். ரொம்ப திட்டினா ஓடியாந்துடறேன்” என்று இலகுவாய் சொல்லி சோலையம்மாளிடம் சென்றாள்.
இவ்வீட்டின் எதிர்புறத்தில் சற்று தள்ளிதான் சோலையம்மாளின் அறை. ஊர் நடப்பை அறிந்து கொள்ளவும், தோழிகளோடு தாயம் விளையாடவும் அதுதான் அவருக்கு வசதி ஆதலால், அம்மாவைசை நாள்களில் கணவனை வணங்க, நல்ல நாட்களின் பூஜை போன்ற முக்கிய தேவையிருந்தால் மட்டுமே மகன் மருகள் வசிக்கும் வீட்டிற்குள் வருவார்.
சோலையம்மாள் கதவை சாற்றிவிட, “அச்சோ அம்மா… கை கை” என்ற சிவப்ரியாவின் பொய் அலறலில் சங்கர் பதைத்து அருகே வந்திட, சோலையம்மாளும் கதவைத் திறந்தார் பதறி.
சங்கரிடம் கண்ணிமைத்தபடி அறையினுள் சென்றவள், “என்ன பாட்டி இப்படி பண்ணிட்டிங்க? கை மாட்டியிருந்தா துண்டாகிருக்கும்” என்றாள் பாவமாக.
அப்போ மாட்டலயா என கோபப்பார்வை பார்க்க, சொத்தை வைத்துதானே இவருக்கும் நம் குடும்பத்திற்கும் பிரச்சனை என, “வீட்டு பெரியவங்க நீங்க, பேரனுக்கு என்ன சீர் செய்தாங்கனு அத்தை மாமா சொன்னாங்களா?” என்றாள் விசாரணையாக.
அருளை நினைத்து சோலையம்மாள் தனது வாய்க்கு கடிவாளமிட, “அத்தை சொல்லலைனா என்ன? நான் சொல்றேன் பாட்டி” என்று நகை, சொத்து சீர் என அனைத்தும் சொன்னாள்.
நேற்று மதியம்போல் சீர் வந்து இறங்கும்போது பீரோ, கட்டில் போன்ற வீட்டுப்பொருள்களை பார்த்தார்தான். வெள்ளிப்பொருள்களையும் கூட பார்த்தார். ஆனால் தங்க நகைகளும் காட்டு பத்திரமும் ப்ரீப்கேஸில் இருந்ததால் அதனை பார்க்கவில்லை.
தற்போது சிவப்ரியா சொல்லித்தான் சோலையம்மாவிற்கு தெரிய வர முகம் ஆச்சர்யத்தை காட்டியது. ஆனால் வெளிகாட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பினார்.
“நீங்க நல்லவங்க பாட்டி, கம்மி நிலம்தான் வச்சிருந்திருக்கிங்க, ஆனாலும் மகன் பங்குக்கு ஈடா மகளுக்கு நகை, ரொக்கம்னு கொடுத்து சமன் செய்திட்டிங்க. என் பாட்டி போல மோசம் இல்ல” என்றாள் பாராட்டுதலாக.
ஆனா என்ன? நீங்க கொடுத்ததை போலவே மருமகளுக்கும் எதிர்பார்த்திருக்கிங்க. சொத்து கொடுத்திருந்தா நீங்களா தலைல தூக்கிட்டு போயிருப்பிங்க? மகனுக்கு கஷ்டம் வரும்போது கை கொடுக்க ஆகுமேனு நினைச்சிருப்பிங்க. இதுல என்ன தப்பிருக்கு?” என்றாள்.
“என்னடா சொல்றா? பாதி புரியுது, பாதி புரியல” என மகனிடம் கேட்க, “காது கொஞ்சம் கேட்காது சிவாம்மா, கொஞ்சம் சத்தமா பேசனும்” என்று மருமகள் சொன்னதை சொல்ல ஆரம்பிக்க, “நானே சொல்றேன் மாமா” என சொன்னதை மீண்டும் சொன்னாள் சிவப்ரியா.
இக்குடும்பத்தில் தன்னை நல்லவள் என்று சொல்லும் சிவப்ரியாவை தற்போதுதான் நேர்கொண்டு பார்த்தார் சோலையம்மாள்.
“அதெல்லாம் இருப்பேன் பாட்டி, நீ சொல்லித்தா, அதே மாதிரி இருக்கேன்” என்றாள் மகிழ்வோடு.
“அருளு மாதிரி எப்போபாரு அந்த பொட்டிய தடவிட்டு இருக்கக்கூடாது, நான் பேசுற எதையும் என் பேரன்கிட்ட சொல்லக்கூடாது” என்றார் கட்டளையாக.
“போனை சொல்றாங்களா மாமா?” என சங்கரிடம் தெளிவு படுத்தி, “அவ்வளோதான பாட்டி? இன்னும் சொல்லுங்க” என்றாள் ஆர்வமாக.
“இப்போதைக்கு அவ்வளோதான், மிச்சத்தை காலைல சொல்றேன். அவன் வந்திடப்போறான் போ” என விரட்ட, வெளியே வந்தவள், “அவங்களுக்கு அவ்வளோ பயமா மாமா” என்றாள் வியப்போடு.
“ஆமாம்மா… அருளுக்கு மட்டும்தான் பயந்துக்கும். உன்கிட்ட இவ்வளோ தன்மையா பேசினதே ஆச்சர்யம் சிவாம்மா, எப்போவும் இப்படி பேசும்னு நினைச்சிடாத. எப்போ வார்த்தையை விடும்னே தெரியாது” என எச்சரித்து, “ஆமா… என் தங்கைக்கு செய்ததெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என வியந்தபடி வீட்டிற்குள் வந்தார்.
“அப்பாகிட்டயும் பெரியப்பாகிட்டயும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் மாமா” என்றாள் பெருமையாக.
தனமும் பவானியும் இரவு சமையல் வேலையில் இருக்க, “டிரஸ் மாத்திட்டு வந்து எதாவது ஹெல்ப் பண்றேன்த்த, கொஞ்சம் கொஞ்சமா சமையல் கத்துக்கறேன்” என்றாள்.
“எதுக்கு மாத்திக்கிட்டு? இந்த சேரியில ரொம்ப அழகா இருக்க, இப்படியே இரு” என ரசித்து, “காட்டு வேலை செய்யிறவளுக்கு சமையல்லாம் ஒரு வேலையா? மெதுவா பழகிக்கலாம்” என்றார் இலகுவாக.
“பவ்யா எங்க அத்த?”
“ஒரு பிரச்சனை சிவா, எல்லாம் காலைல சொல்றேன், அருள் முன்ன ஏன் இப்படி இருக்கிங்கனு யாரையும் கேட்காத”
“என்ன பிரச்சனை அத்த?”
“நான்தான் காலைல சொல்றேனு சொன்னேனே?” என அதட்டி, “டி காபி எதாவது வேணுமா?” என்றார்.
“வரும்போதுதான் குடிச்சிட்டு வந்தோம்” என்றவள் முகத்தில் பதட்டம் இருக்க, “நேத்துதான் கல்யாணம் ஆகியிருக்கு, இப்படி முகத்தை வச்சிட்டிருந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்றார் அதட்டலாக.
இவள் முயன்று சிரிப்பை வரவழைக்க, “ஜீவிதாக்கு அடுத்த வாரம் குழந்தை பிறந்திடும் போல” என்று பேச்சை மாற்றி மருமகளை இயல்பாக்கியபடி சமையலை முடித்து, என்ன விரும்பி சாப்பிடுவ? என்பது போன்ற விசயங்களை கேட்டறிந்துகொண்டிருந்தார்.