“விருப்பம் இல்லை கண்ணு, ஆனா பார்த்திபன்” என்று நேற்றிரவு மோகனாவிற்கும் பார்த்திபனிற்கும் இடையே நடந்த வாக்குவாதம் அனைத்தும் சொல்லி, “சம்மதிக்க வச்சிட்டான்” என்றார்.
நன்றாகத்தான் கேட்டிருக்கான் என மனதில் மெச்சினாலும், “சொத்திருந்தா பொண்ணு கொடுத்துடுவோம்னு நினைச்சிருக்கான்” என்றான் கோபத்தோடு.
பதறிய அண்ணாமலை, “பார்த்தி அப்படிலாம் நினைக்கமாட்டான் கண்ணு, நீ இப்படி நினைக்கிற மாதிரி யார்கிட்ட என்ன சொன்னான்?” என்றார்.
“சிவாகிட்ட சொல்லியிருக்கான்” என்க, அண்ணாமலை சிவப்ரியாவை பார்க்க, “பெரியம்மா அத்தைக்கான சொத்தை கொடுக்காததால நான் வருத்தத்துல இருந்தேன், கவலைப்படாத சிவா, சொத்தை கொடுக்கலனா என்ன? பவ்யாவை நான் கட்டிக்கிட்டா கணக்கு டேலி ஆகிடும், அத்தைக்கான சொத்தை அத்தை அனுபவிச்சா என்ன? நானும் பவ்யாவும் அனுபவிச்சா என்னனு பார்த்திண்ணா என்னை சமாதானம் செய்யறதுக்காக சொன்னாங்க,
அன்னைக்குத்தான் பார்த்திண்ணாவோட விருப்பம் எனக்கு புரிஞ்சது. அன்னைக்கு நீங்க பெரியம்மாகிட்ட சொத்து வாங்காதேனு சொல்லவும், பார்த்திண்ணாவோட விருப்பத்தை சொல்லிடலாம்னு நினைச்சு சொன்னேன், ஆனா நீங்க முழுசா கேட்காம தப்பா நினைச்சிட்டு கோபமா வெளில போய்ட்டிங்க, பார்த்திண்ணா அப்படி நினைக்கமாட்டாங்க” என்றாள் தவிப்போடு.
சிவப்ரியா பேசுவது உண்மையெனத் தோன்ற, பவ்யாவிற்கும் விருப்பம் ஆதலால் இதற்கு மேல் எப்படி மறுக்கவென, “பொண்ணு கேட்க இப்படித்தான் வருவிங்களா?” என்றான்.
அனைவர் முகமும் சந்தோசத்தில் ஜொலிக்க, “எல்லாருமா சேர்ந்து பவ்யாவை திட்டிடுவிங்களோனுதான் கண்ணு வந்தோம். பாப்பாமேல ஒரு தப்பும் இல்லையாம், பார்த்திதான் அவசரப்பட்டு பேசிட்டான்” என அக்கறையாக சொல்லி, “எல்லாருக்கும் சம்மதம்னா முறைப்படி பொண்ணு கேட்டு வருவோம்” என்றார் அண்ணாமலை.
பார்த்திபன்தான் அழைப்பான் என சிவப்ரியாவிற்கும் தெரியும் ஆதலால், இங்கு நடப்பதை கேட்கத்தான் கூப்பிட்டிருப்பாங்க, நல்ல விசயத்தை சொன்னாதான் என்னவாம் என்பதாய் சிவப்ரியா முகம் சுருக்க, அதற்குள் அழைப்பு நின்றிருந்தது.
அடுத்து அருணாச்சலம் மொபைல் ஒலிக்க, “பார்த்திபா” என்றதுமே, எத்தனை தைரியம் இருந்தா தங்கைகிட்ட பேசுவான்? என “இங்க கொடுங்க” என கை நீட்டினான் அருட்செல்வன்.
வேறு வழியின்றி அருணாச்சலம் கொடுக்க, “பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னடா நடிப்பு?” என்றான் கடுப்பாக.
“நீங்களா?” என வியந்தவன், அங்கு என்ன முடிவோ என சற்று நேரம் அமைதிகாக்க, “அப்பா சித்தப்பாவை அனுப்பி வச்சிட்டு கோழைமாதிரி வீட்டுல இருக்க. விருப்பத்தை சொல்றதுல தைரியம் இருந்தா பத்தாது. எதுனாலும் ஃபேஸ் பண்ணனும்” என்றான்.
“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். உங்க வீட்டு தெருமுனையில இருக்க அங்கன்வாடி பள்ளிக்கூடத்துலதான் நின்னுட்டிருக்கேன்” என இணைப்பை துண்டித்து சந்தோசத்தோடு அருட்செல்வன் வீட்டிற்கு வந்தான் பார்த்திபன்.
“பார்த்தி, நீ எதுக்குடா வந்த? நான்தான் பேசிட்டு வரேனு சொன்னேன்ல?” என அண்ணாமலை கடுகடுக்க, “இவர்தான்ப்பா வர சொன்னார்” என அருளை காண்பிக்க, அருள் பேசியதை கேட்டிருந்தார்கள் ஆதலால், “அப்பா பின்னாடி ஒளிய வேணாம்னுதான் சொன்னான்? வரவா சொன்னான்?” என உரிமையாய் அதட்டினார் தனம்.
லோயர் டீசர்ட்டோடு இருக்கும் பார்த்திபனையே பார்த்திருந்தான் அருட்செல்வன். கண்களில் தூக்கமின்மை, பவ்யாவை திட்டினார்களோ என்ற பதட்டம் அனைத்தும் உண்மைதான் என்பது பார்த்திபன் முகத்தில் தெரிய, இவர்களை அனுப்பி வைத்து பின்னோடே வந்திருக்கிறான் எனப்புரிய சற்று கோபம் தணிந்தது.
“அச்சோ, என்கிட்ட ஏதுங்க சொத்து? பூர்வீக சொத்தை என்னோடதுனு சொல்லி பெருமைப்படுற ஆள் நானில்லைங்க. நானே பாவப்பட்ட வாத்தியார். அதுவும் ப்ரைவேட் ஸ்கூல் வாத்தியார். வருமானம் பத்தாம டியூசன் எடுத்திட்டிருக்கேன்” என்றான் பாவமாக.
பவ்யா மீதான பார்த்திபன் விருப்பத்தை அன்னை சொன்ன அடுத்தநாளே அவனைப்பற்றி ஜீவிதாவிடம் விசாரிக்க சொல்லி ராகவனிடம் கேட்டிருந்தான் அருட்செல்வன்.
தினந்தோறும் டியூசன் என்றெல்லாம் இல்லை, ஆனால் அவ்வூரில் உள்ள மாணவர்கள் தினமும் மாலைநேரம் சந்தேகம் கேட்க வருவார்கள் என்றும், ஏழை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி கொடுக்கிறான் என்றும், பள்ளியிலும் மாணவ மாணவிகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் என்றும் ராகவன் மூலம் அறிந்திருந்தான் அருட்செல்வன்.
தற்போது இலவசப் பயிற்சி எடுப்பதை வருமானத்திற்கு என்று பவ்யாவிற்காக பொய் சொல்வதை உள்ளுக்குள் ரசித்தவன், “இவ்வளோ பஞ்ச பாட்டு பாடுறவனுக்கு லவ் ஒரு கேடா?” என்றான் முறைப்போடு.
தன்னை அனைவர் முன்னும் போட்டுக்கொடுத்த அண்ணனை சிவப்ரியா முறைக்க, “ஆனா எங்க குடும்பத்தை விட உங்க குடும்பம் சூப்பர்ங்க, கல்யாணத்துக்கப்புறம்தான் காதல்னாலும் சும்மா கன்னாபின்னானு காதலிக்கிறிங்க” என்று அருட்செல்வனோடு சேர்த்து சங்கரையும் பார்த்தவாறு பெருமையோடு சொன்னான்.
“டேய்…” என சங்கர் சிறு நாணத்தோடு சிரிக்க, வயது பாராமல் தந்தையை வம்பிளுப்பனை அருட்செல்வன் முறைக்க, “உண்மையை சொன்னா கூட முறைக்கிறிங்க” என பாவமாய் சொன்னவன், “இவ்வளோ குளிர்ல உன்னை பார்க்க வந்திருக்கேன், சூடா டீ தரலைனாலும் பரவால்ல, தண்ணியாவது கொடுத்தியா?” என கோபித்தான் தங்கையை.
தண்ணீர் கொண்டு வந்தவள், “இவ்வளோ குளிர்ல தண்ணி தாகம் எடுக்கும்னு எனக்கென்ன தெரியும் பார்த்திண்ணா?” என்று கிண்டலாக கேட்டபடி சொம்பை நீட்ட, “தண்ணி குடிச்ச பின்னயாவது டீ யாராவது கொடுப்பாங்கனுதான் கேட்டேன்” என கிசுகிசுத்தான்.
“ப்ரியா” என அருட்செல்வன் அதட்ட, “நல்ல டீயா வேணுமா மாமா? பவ்யாவை வைக்க சொல்லட்டா?” என்றாள் ஆவலாக.
“பவ்யா காலேஜ்க்கு கிளம்பனும்” என முறைத்து, பவானியிடம் டீ வைத்து கொடுக்க ஜாடை செய்து, தங்கை அறை கதவை தட்டினான்.
பார்த்திபன் வந்ததெல்லாம் பவ்யாவிற்கு தெரியாது. தன்னால் குடும்பத்தில் சண்டையோ என்ற பரிதவிப்போடு கதவை திறக்க, கொண்டையோடிருப்பவளிடம் “இன்னும் தலை பின்னலயா? என்ன பண்ணிட்டிருந்த? எட்டு மணிக்கெல்லாம் கிளம்பவேணாமா?” என்றான்.
“இதோ பத்து நிமிஷம்ண்ணா”
“ம் ரெடியாகிட்டு ரூம்லயே இரு, நான் கூப்பிடும்போது வந்தா போதும்” என்று கதவை சாற்றி ஹாலுக்கு வந்தான்.
“ம்மா டிபன் செய்யலயா?” என்றான் தனலஷ்மியிடம்.
“மணி ஏழுதான்டா ஆகுது. பத்து நிமிஷம் கழிச்சு பண்றேன்”
“பார்த்திபனுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகும், சீக்கிரம் செய்து சாப்பிட வச்சி அனுப்பி வை” என்றான்.
“ஏங்க எனக்கு சோறெல்லாம் வேணாம்ங்க, மனசு நிறையற மாதிரி ஒரு பதிலை சொல்லுங்க” என்றான் பார்த்திபன்.
“என்ன சொல்லனும்? உனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
“எனக்கு அவசரமில்லைங்க, எனக்கு தேவையானது பவ்யா வருங்காலத்துல பவ்யா பாத்திபன்தானான்றதுதான்” என்றான் ஆவலாக.
“எது?” என அருட்செல்வன் முறைக்க, “சரிங்க கோபப்படாதிங்க, பவ்யா பின்னாடி அவங்கப்பா பேரே இருக்கட்டும்” என விட்டுக்கொடுத்து, “பார்த்திபன் பவ்யா… இதாவது ஓகேங்களா?” என்றான்.
“எனக்கு டிபன் வேணாம், டைமாகுது. டீ மட்டும் போதும்” என்றான் பவ்யாவை பார்க்கும் ஆவலோடு.
பார்த்திபனை புரிந்து, “டீ தான? சொம்புல எடுத்துட்டு வர சொல்றேன்” என்று பவானியை பார்க்க, தயாராய் இருந்த டீயை ஊற்றிக்கொண்டு வந்தார்.
பவ்யா வராததில் ஏமாற்றம்தான் என்றாலும் கடுகளவு சந்தர்ப்பத்தையும் விடுவதாய் இல்லை பார்த்திபன். நாகராஜன் பவானிக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்றறிய, “அப்பறம் அத்தை, நல்லாயிருக்கிங்களா?” என்றான்.
அருள், “இரண்டு நாள் முன்னதான பார்த்த?” என்க, அத்தைகிட்ட கூட பேசக்கூடாதா என பாவமாக பார்த்தவன், “சரி விடுங்க” என்று, “நான் நல்லா இருக்கேனாத்த?” என்றான் தலைசாய்த்து.
சிரித்தபடி சமையலறைக்குள் சென்றார் பவானி.
பதில் தெரியாமல் விடமாட்டான் என்றுணர்ந்த அருள், “பவ்யாக்கு இப்போதான் பத்தொன்பது வயசு, இந்த வயசுல கல்யாணம்னு நினைக்கும்போது நல்லாத்தான் இருக்கும். ஆனா உன் அம்மாவை சமாளிக்கிற அளவுக்கு பவ்யாக்கு பக்குவம் கிடையாது. இன்னும் இரண்டொரு வருசம் போகட்டும். டிகிரி முடிக்கும்வரை தொல்லை செய்யக்கூடாது” என்றான் கட்டளையாக.
பின்னே டீ குடித்து முடித்து, “அப்பா நீங்க சாப்பிட்டு வாங்க, எனக்கு ஸ்கூலுக்கு டைமாகிடும், நான் கிளம்பறேன்” என்று சங்கர் நாகராஜனிடம் விடைபெற்று சிவப்ரியாவை வெளியே வரபணித்து எழுந்தான்.
பார்த்திபன் பின்னோடு சென்றவள், “பார்த்திண்ணா எதுவாயிருந்தாலும் போன்ல பேசிக்கலாம். இப்போ கிளம்பு, அவர் நம்மளைத்தான் பார்த்திட்டிருப்பார்” என கிசுகிசுத்தாள்.
இங்கதான் பார்ப்பார், பவ்யா படிக்கிற காலேஜ் என் ஸ்கூல்லயிருந்து அரைமணி நேர ட்ராவல்தான். உன் புருசன் அங்க என்ன பண்ணுவாராம்? என மகிழ்வோடு நினைத்தபடி, தங்கையிடம் விடைபெற்று கிளம்பினான் பார்த்திபன்.
சிவப்ரியா உள்ளே வர, “போய் பவ்யாவை கூட்டிட்டு வா” என்றான்.
பவ்யா வெளியே வர, “வாம்மா, காலேஜ்க்கு கிளம்பிட்டியா?” என அன்போடு விசாரித்தார் அண்ணாமலை.
“நாளைலயிருந்து கத்துக்கிறனேப்பா” என கெஞ்சலாய் சொன்னவள், பவ்யா அருகே அமர்ந்து, “நீ பயந்தமாதிரி எந்த சண்டையும் வரல. இனி எந்த டென்ஷனும் இல்லாம படிக்கனும். சரியா?” என்றாள் புத்துணர்வோடு.
நிம்மதியோடு பவ்யா தலையசைக்க, “பேசிட்டிருங்கப்பா, நான் தலைபின்னிட்டு வரேன்” என்று கணவனை காண காதலோடு தனதறைக்குள் சென்றாள் சிவப்ரியா.
சங்கரிடம் அண்ணாமலை “எத்தனை வருசத்து பகை? எங்க பக்கம் எவ்வளோ பெரிய தப்பு? எல்லாத்தையும் மன்னிச்சு சிவாவை கட்டிக்க சம்மதிச்சதோட, என் மகனையும் ஏத்துக்கிட்டிங்க” என்றார் நன்றியோடு.
“எங்ககிட்ட எங்க சம்மதம் கேட்டான்? கட்டினா சிவாதானு கட்டளையில்ல போட்டான்” என சங்கர் சிரிக்க,
அருணாச்சலம், “என் பொண்ணோட வாழ்வு வீணாகிடக்கூடாதுனுதான் இந்த முடிவு எடுத்திருப்பாப்பில, பவ்யாகிட்ட பார்த்தி பேசுனது தப்புதான்னாலும் அவனோட குணமறிஞ்சு சம்மதம் சொல்லியிருக்கார்.
யாரோ ஒருத்தன் பவ்யாவை தப்பா நெருங்க நினைக்கிறான்னதும் தேடிப்பிடிச்சி அந்த அடி அடிச்சாப்பிலயாம். அருளோட கோபம் பார்த்து பயந்தே போய்ட்டேன்ப்பானு பார்த்தி சொன்னான்.
எங்க குடும்பத்துக்கும் உங்க குடும்பத்துக்கும் இடையில இருந்த அருளோட கோபம் ஊருக்கே தெரிஞ்சதுதான். ஆனா இனி எல்லாரும் அருளோட அன்பை பார்ப்பாங்க.
ஒரு பக்க தராசுல எங்க மொத்த குடும்பமும் நின்னாலும், ஒத்த ஆளா நிற்கிற அருளோட தட்டுதான் தாழ்ந்திருக்கும். அன்பை பொறுத்தவரைக்கும் தாழ்கிற தட்டே கனமானது. ஒரு குடும்பம் சந்தோசமா வாழ, குடும்பத்துல ஒருத்தர் இப்படி கனத்தோட இருந்தா போதும்” என கண்ணீர் மல்கினார் அருணாச்சலம்.