சரவணன் வீட்டில் விருந்து முடித்து “நாளைக்கு பந்தகிடா வெட்டுறோம் சரவணா, எல்லாரும் வந்திடனும்” என்று அன்பு கட்டளையிட்டு கிளம்ப ஆயத்தமானார்கள் அருட்செல்வன் குடும்பம்.
ராகவனின் சொந்தகார பெண்ணொருவர் பேசியதில் மனம் வாடிய சிவப்ரியா பவ்யாவோடுதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தாள் ஆதலால், “எங்களோட சிவா பேசினாதான் வருவோம்” என்றார் ராகவனின் அன்னை.
“ஜீவிதாக்கு எப்போ குழந்தை பிறக்கும்னு கேட்டேனே ஆன்ட்டி” என்க, “உன் ஃப்ரண்டைப் பத்திதான் பேசின. எங்களைப் பத்தி எங்க பேசின?” என்றார்.
சிவப்ரியா வருத்தம் தெரிந்து ராகவனின் அம்மா இப்படி கேட்க, சிவப்ரியா அருட்செல்வனை பார்க்க, “பேசு, நீயெல்லாம் வாயை மூடினாதான் அதிசயம்” என்றான் சிரிப்போடு.
மருமகளின் மனதை இலகுவாக்க நினைத்த தனம் “ஜீவிதாகிட்ட நம்ம வீட்டுக்கும் ராகவன் வீட்டுக்கும் எவ்வளோ தூரம்? என் அத்தை வீட்டுக்கு போக வேற வழியே இல்லையானு விசாரிச்சதெல்லாம் சொல்லேன், அந்த விசயம்லாம் ராகவன் அம்மா அப்புறம் என்னைத் தவிர இங்க வேற யாருக்கும் தெரியாது” என்றார் குறும்போடு.
சிவப்ரியா அதிர்ந்து விழிக்க, “ம்மா இதெல்லாம் எதுக்கு சொல்லிகிட்டு?” என சங்கடப்பட்டான் ராகவன்.
தனம் “இதிலென்ன ராகவா இருக்கு? அவ அத்தை மேல உள்ள பாசத்துல கேட்டிருக்கா” என இலகுவாய் சொல்லி, “ஆமாதானே?” என்றார் மருமகளிடம்.
“நீங்க நம்பலைன்னாலும் அதான் உண்மை, ஜீவிதா கல்யாணத்துல வச்சி உங்க மகன் என்னை திட்டுனதால அவங்களை எனக்கு பிடிக்கவேயில்ல. உண்மையா உங்ககிட்ட பேசத்தான் விசாரிச்சேன்” என்றாள் ரோசமாக.
“ப்ச் நானென்ன அருளை உனக்கு பிடிச்சிருக்குனா சொன்னேன்? ராகவன் அம்மா உன்னை பேச சொன்னாங்க, உனக்கு என்ன பேசனு தெரியல, சரி இதைப்பத்தி பேசுனு எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணினேன்” என்றார் இலகுவாக.
“குழந்தையை பெத்துட்டு வரட்டும் அவளை பேசிக்கிறேன், இங்கயிருந்து மட்டும் ஏதும் சொல்லல, ஆனா நான் பேசினதை மட்டும் ஒன்னுவிடாம சொல்லி வச்சிருக்கா” என்றாள் கோபத்தோடு.
தனமும் பவானியும் சிரிக்க, மனைவியை காப்பாற்ற எண்ணியும், தூக்கத்திற்கு தவிக்கிறாள் என்றும், “கிளம்பலாம்ப்பா. ஆயா தனியா இருக்கும்” என அருள் சொல்ல, அனைவரும் கிளம்பினர்.
வீட்டிற்கு வந்ததும், “டிரஸ் மாத்திட்டு தூங்கு” என்றான் அருட்செல்வன்.
“இல்ல, அத்தை மாமாவோட பேசிட்டிருக்கேன்” என சிவப்ரியா மறுக்க, “ப்ச், அம்மாவும் கல்யாணத்துலயிருந்தே இன்னும் சரியா ரெஸ்ட் எடுக்கல, உனக்கும் காலைல உங்கப்பாகிட்ட பேசும்போதே தூக்கம், அவங்க கிளம்பினதும் இங்க வந்துட்டோம். கொஞ்ச நேரம் படு. நான் ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வரேன்” என கிளம்பினான்.
அருட்செல்வன் சென்ற ஐந்து நிமிடத்திலேயே உறங்கியிருந்தாள் சிவப்ரியா. மாலை ஐந்து மணிபோல் வந்தவன், உடைகூட மாற்றாமல் உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தான்.
சிவப்ரியா கண் லேசாய் அசைந்து கொடுக்க, இவன் அவளின் உடையை சரிசெய்துவிட, பட்டென விழித்தாள். “ஹேய்… நான்தான். எதுக்கு இவ்வளோ பதட்டம்?” என்றான் இலகுவாக.
“இல்ல” என்றவள் கண்கள் கலங்க, “என்ன?” என ஊன்றிப்பார்த்தான்.
“எனக்கு நிஜமாவே உங்களோட கல்யாணம் ஆகிடுச்சு” என உளறி, “கனவுல நான் எங்க வீட்டுல இருந்தேன், நமக்கு கல்யாணம் ஆகல, ரொம்ப அழுதேன். நீ என்ன அழுதாலும் உன் நினைப்பு பலிக்காது. ஒழுங்கா என் பேச்சை கேளுடினு அம்மாவும் அழுதாங்க, எனக்கு என்ன பண்றதுனு தெரியல, மாமா அத்தை எல்லாரும் இதையேதான் சொன்னாங்க, நீங்களும் என்னை வேணாம்னு சொல்லிட்டிங்க” என்றாள் கண்ணீரோடு.
நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாள் எனப்புரிந்தவன், “நேத்து நைட்க்கு அப்புறமும் இப்படி கனவா? அப்போ இன்னைக்கு நைட் வேற மாதிரி கவனிக்கவேண்டியதுதான்” என்றான் கண்ணிமைத்து.
முகம் சிவந்தாலும், “உங்களைப்பத்தி தெரிஞ்சவங்களே இப்படி சொல்லலாமா?” என்றாள் அடுத்த கவலையாக.
“என்னால ஃப்ரீயா விட முடியல மாமா, ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் வருத்தத்தோடு.
ராகவனின் வீட்டில் விருந்துண்ணும் போது தனலஷ்மியிடம், “எப்படியோ உன் மருமக நினைச்சதை சாதிச்சிட்டா, அருள் வாயாலயே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சிட்டாளே, கெட்டிக்காரிதான். அருளையே ஜெயிச்சிட்டாளே” என ஒரு வயதான பெண்மணி பெருமையாகத்தான் பேசினார்.
ஆனால் சிவப்ரியாவிற்கு அருளை தோற்கடித்ததுபோல் சொன்ன வார்த்தை பலமாய் தாக்கியது. அதோடு பார்வதியின் சொந்தங்களும் அருள் இப்படி மாறுனது சந்தோசம்னாலும் நாங்க யாரும் எதிர்பார்க்கவேயில்ல என்று இவர்களின் திருமணத்தின் போது நடந்ததையும் வியப்போடு சொல்ல, இத்திருமணத்தால் அருட்செல்வனிற்கு எத்தனை பின்னடைவு என்று நினைக்க, யாரிடமும் இயல்பாய் பேச முடியவில்லை சிவப்ரியாவால்.
சொத்தை வாங்கிக்கிட்டா சொத்துக்காக உன்னை கட்டிக்கிட்டமாதிரி ஆகிடும்னு அன்று தன் வீட்டில் வைத்து இவங்களும் இதைத்தானே சொன்னாங்க?” என வருந்தினாள்.
இவளின் முகவாட்டம் கண்டு அருட்செல்வன் முறைக்க, “நீங்களும் என்னை பிடிச்சி கல்யாணம் செய்துக்கலயே” என்றாள் ஏக்கமாக.
வரவழைத்த இயல்போடு சரி என்பதாய் தலையசைக்க, “ப்ச்” என முறைத்தான் அருள்.
“அருளு” என தனலஷ்மி அழைக்க, “எனக்கு டீ வேணும், வாங்க போலாம்” என எழுந்தாள்.
“முகம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வா” என இவன் ஹாலுக்கு வந்தான்.
“ம்மா ராகவன் வீட்டுல நடந்ததை நினைச்சு ரொம்ப டிஸ்டர்பா இருக்கா, பேசிட்டு வரேன்” என அவளிற்கான டீயையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
முகம் கழுவி வந்தவள், “நீங்க ஏன் எடுத்துட்டு வந்திங்க? எல்லாரோடவும் பேசிக்கிட்டே குடிக்கலாம் வாங்க” என வெளியே போக எத்தனிக்க, “ப்ச் இங்கையே உக்காரு” என அதட்டி அவளிற்கான டீயை கொடுத்தான்.
டீ குடித்து முடிக்கும்வரை அமைதிகாத்து, “உங்க குடும்பம்னு இல்ல, இங்க ஊர்லயும் எங்களை புரிஞ்சவங்களைத் தவிர மற்ற எல்லாரும் தனத்துக்கு எதுக்கு இவ்வளோ வீராப்பு? அப்பமூடு சொத்து கொடுக்கலனா சொன்னாங்க? அஞ்சு ஏக்கரா காடு கொடுக்கறேனுதானே சொன்னாங்க? அதுவும் நல்ல விளைச்சல் பூமி, வாங்கிகிட்டா என்னவாம்னு சொல்லாதவங்க இல்ல.
இங்க என் ஆயாவும் செம டார்ச்சர் கொடுத்திருக்கு. பதினாறு வயசு வரைக்கும் ராணி மாதிரி வாழ்ந்துட்டு இங்க சமையல், வீட்டுவேலைனு எல்லாமும் செய்யிறது அம்மாக்கு பெரிய சவாலா இருந்துருக்கு. இரண்டு நாள் பிறந்த வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னா அதுக்கும் வழியில்ல.
மகளை கட்டிக்கொடுத்தோமே, நல்லா வாழுறாளா இல்லையானு கூட கேட்க ஆளில்ல. கட்டிக்கொடுத்தாச்சு, இனி தனம் பாடுனு விட்டுருக்காங்க. பெத்தவங்கனு இல்ல, கூடப்பிறந்தவங்களும் ஒருநாளும் வந்து பார்த்தத்தில்ல. அதையெல்லாம் நினைச்சா” என இறுக கண்மூடித் திறந்தவன்,
“உன் தாத்தா என் அம்மாக்காக வாங்கின அஞ்சு ஏக்கர் நிலம் இங்க பக்கத்துலதான் இருக்கு, பைக்ல போனா அரைமணி நேரத்துல போய்டலாம். ஆனாலும் ஏன் வேணாம்னு சொல்றாங்கனு யாரும் யோசிக்கல.
கொஞ்சம்னாலும் பூர்வீக சொத்துல கொடுங்கனு அம்மா கேட்டதுக்கு காரணம்… அப்பாம்மா உறவுதான் இல்லனு ஆகிடுச்சு, அண்ணி, தம்பி பொண்டாட்டிகளும் கோவிந்தனுக்கு சொந்தம்ன்றதால வீட்டுக்கும் போக முடியல.
காட்டுக்கு போக வர இருந்தாலவது அண்ணன் தம்பியோட உறவு விட்டுபோகாம இருக்கும், எப்படியாவது பிறந்த வீட்டு உறவை தக்க வைக்கலாம்ன்ற ஆசையிலதான் பூர்வீகத்துல கேட்டுருக்காங்க. அண்ணன் தம்பி சொந்தம்லாம் சொத்தை தாண்டிய பந்தம்னு அம்மாக்கு அந்த வயசுல தெரியல”
“ஏங்க அது அப்படியில்ல, தாத்தாக்கு பயந்து” எனும்போதே, “எந்த காரணமாயிருந்தாலும் என் அம்மாக்கு ஏமாற்றம் ஆனது ஆனதுதானே?” என முறைத்து, “சொத்துனு இல்ல, உன்தாத்தா பாட்டி சாகறதுக்கு முன்னவரைக்கும் வேற எதுக்குமே உன் அப்பா பெரியப்பா அம்மாக்காக நின்னதில்ல.
அப்படி நின்னுருந்தா அண்ணன் தம்பி இரண்டு பேரிருக்கும்போது கோவிந்தனுக்கு எங்கம்மாகிட்ட தப்பா நடக்க தைரியம் வந்திருக்காது. சொத்து கொடுக்காததெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல, கூடப்பிறந்த பொண்ணுக்கு இந்த பாதுகாப்பை கூட கொடுக்காதவங்க என்ன மனுஷனுங்க? அதை நினைச்சாதான் அவ்வளோ கோபம் வருது” என்றான் கோபத்தோடு.
சிவப்ரியா தலைகவிழ, “எத்தனை உயரப் பறந்தாலும் திரும்பிப்போக நமக்குனு ஒரு கூடிருக்குன்றதும், கூட்டுக்கு போறதுக்கான வழியிருக்குன்றதும்தான் ஒரு பறவைக்கு சிறகை விட நம்பிக்கையானது. செத்தாலும் பிழைச்சாலும் இங்க விட்டா எனக்கு வேற போக்கிடம் இல்லைனு என்னோட சின்ன வயசுல அம்மா சித்திக்கிட்ட அழுதுட்டு சொல்லி ஒருமுறை கேட்டேன்.
கொஞ்சம் வருசம் கழிச்சு அதுக்கான அர்த்தம் தெரியும்போதுதான் பிறந்த வீட்டால எவ்வளோ மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்கனு புரிஞ்சுக்க முடிஞ்சது.
கல்யாணத்துக்கு முன்னவரைக்கும் ராஜ வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு கல்யாணத்துக்கப்புறம் பிறந்த வீட்டு உறவு மொத்தமா அறுந்து போன உணர்வை எல்லாருமா சேர்ந்துதான் கொடுத்திருக்காங்க. நாலஞ்சு வருசம் கழிச்சு உன் தாத்தா பாட்டி இறந்தபின்ன வந்து சொத்தை வாங்கிக்கோனா எப்படி வாங்கிப்பாங்க?” என்றான்.
சிவப்ரியா அமைதியாக இருக்க, “பழசு ஏதும் நினைக்கக்கூடாது என்னை நானே திடப்படுத்திட்டுதான் உன்னை கல்யாணம் செய்துகிட்டேன். என் மேலான உன் காதல் செய்த மாயாமோ என்னவோ தெரியல,உண்மையா இப்போ உங்கப்பா பெரியப்பா மேல கோபம் இல்ல. அம்மா விசயத்துல என் ஆயாவும்தானே தப்பு பண்ணியிருக்கு? அவங்களை மன்னிச்சு பார்த்துக்கிறோம்தானேனு மனசை தேத்திக்கிட்டேன்.
நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நடந்த மனஸ்த்தாபம் ஊருக்கே தெரியும். இத்தனை வருசத்து பகை நம்ம கல்யாணத்துல சரியாகியிருக்குன்றது நம்ம குடும்பத்துக்கே ஆச்சர்யம்ங்கும்போது, மத்தவங்களுக்கு பெரிய அதிசயமாத்தான் இருக்கும்.
கொஞ்ச நாளைக்கு யாராவது ஒருத்தர் இப்படி பேசிட்டுதான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டு இப்படி மூஞ்சை உர்ருனு வச்சிட்டிருக்கக் கூடாது. என்னையும் பழசை பத்தி பேச வைக்கக்கூடாது புரியுதா?” என்றான் கோபமில்லாமல்.
தனத்தின் கடந்த காலத்தை நினைத்து வேதனைதான் என்றாலும், “ம்” என்றாள் சமாதானமாக.
“எத்தனை கசப்புகள் இருந்தாலும் இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் பிறந்த வீட்டு பாசம் போகவே போகாது போல. நம்ம கல்யாணம் முடிவான பின்ன என் அம்மா முகத்துல புதுசா வந்திருக்க ஜொலிப்பு இருக்கே… அப்பப்பா” என்றான் பெருமையாக.
“ம்… அவங்க என் அத்தை. எங்க வீட்டு பொண்ணு. எனக்கு மூத்தவங்க” என்றாள் சந்தோசமாக.
“எதை வேணா சொல்லு, உங்க வீட்டு பொண்ணுனு மட்டும் சொல்லாத” என இவன் முறைக்க, “என் மனசுல அப்படித்தான் இருக்காங்க. அதான் உண்மையும் கூட, அப்போ வேற எப்படி சொல்ல?” என முணுமுணுத்தாள் சலுகையாகவும் உரிமையாகவும்.
அன்னை மேலான இவளின் உரிமையும், தன் மீதான காதலும் மனதை இதமாக்க, “புத்தி தப்பு தப்பா பண்ண சொல்லுது. வெளில போய்டலாம் வா” என்றான்.
எழுந்து கதவருகே வந்தவள், தன் மாங்கல்யாத்தை காண்பித்து, “இதுக்கப்புறம் எதுவும் தப்பில்ல மாமா” என்று கண்ணிமைத்து சிரிப்போடு வெளியேறினாள்.