பார்த்திபன் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க, சிவப்ரியாவிடம் சென்ற பவ்யா, “நான் அத்தையாகிட்டேன்” என சந்தோசித்து அணைத்துக்கொண்டாள் அண்ணியை.
“டாக்டர்கிட்ட போனிங்களா? நான்வேற காரெடுத்துட்டு போய்ட்டேனே” என தவித்தான் பார்த்திபன்.
மனமெல்லாம் மத்தாப்பூதான், ஆனால் இது குறித்து தங்கையிடம் என்ன பேச என அருட்செல்வனிடம் சென்றான் பார்த்திபன்.
பார்த்திபனை கண்டாலே வழக்கமாய் முறைக்கும் அருட்செல்வனிற்கு இம்முறை முறைக்க முடியாமல் போக, முகமும் சிவந்திருக்க, “அச்சோ… வெக்கப்படுறிங்களா?” என்றவன், “முழுக்க நனைஞ்ச பின்ன முக்காடு எதுக்குங்க?” என கிசுகிசுத்தான் புன்னகையோடு.
“டேய்… அறிவிருக்கா உனக்கு? உண்டாகியிருக்கிறது உன் தங்கை” என உண்மையாய் அதட்ட, சிரித்தவன், “அப்போ மலர்ந்தும் நாணமேனுங்கனு டீசண்ட்டா சொல்லலாங்களா?” என்றான் சத்தமாக.
“இதான் ஒரு மணிநேரமா?” என முறைக்க, அருட்செல்வன் பேச்சை மாற்ற முயல்வது தெரிந்தபோதும், தன்மீதான சங்கடம் மறைந்து அத்தையான பூரிப்பிலிருக்கும் வருங்கால மனைவியை நினைத்து நிம்மதியானவன், “ம்க்கூம், ஊரே சுத்தியும் உங்க தங்கை வாயே திறக்கல, இதுக்கு நான் அழைச்சிட்டு போகாமலே இருந்திருக்கலாம்” என பொய்யாய் அலுத்துக்கொண்டான் பார்த்திபன்.
நேரம் கலகலப்பாக செல்ல, இரண்டு மணி நேரம் கழித்து “கல்யாண வீட்டுல ஒருத்தர் கூட இல்லாம எல்லாரும் இங்க வந்துட்டோம். கிளம்பறோம்” என்று விடைபெற்றனர் அண்ணாமலை குடும்பம்.
தினமும் நாகராஜ் கோழிப்பண்ணைக்கு கிளம்பும்போதே சிவப்ரியாவும் அவரோடு கிளம்பிடுவாள். சிவப்ரியாவிற்கென கொடுத்த நிலம் குத்ததைக்கு விட்டிருப்பதால், கணவனின் இரண்டு ஏக்கரா காட்டில் தக்காளி, கீரை வகைகள் என விதைத்திருந்தாள்.
தனம், பவானிக்கு காட்டுவேலைகள் தெரியாதென்பதால் முதலில் மறுத்தனர். இதெல்லாம் பெருசா வேலை இழுக்காது அத்த, நான் பார்த்துக்கிறேன் என்று ஆரம்பித்திருந்தாள்.
மருமகளின் ஆசைக்காக ஒப்புகொள்ள, அவர்களே எதிர்பாராத வகையில் முனைப்போடு செயல்பட்டாள் சிவப்ரியா. கனிசமான வருமானமும் வந்தது. தனது காட்டில் விதைத்ததென்ற சந்தோசமும் கிட்டியது குடும்பத்தினருக்கு.
சிவப்ரியாவின் அயராத உழைப்பில் அசந்து போனார் சோலையம்மாள். நாட்கள் செல்ல செல்ல சிவப்ரியாவின் மீதான கடின முகம் மாறி, “படிச்ச பிள்ளை, அதுவும் இவ்வளோ சொத்துக்கார பிள்ள… இப்படி வேலை பார்ப்பனு நினைச்சே பார்க்கல” என வாய்விட்டே பாராட்டியிருந்தார் பேரன் மனைவியை.
பவ்யா திருமண வேலைகளால் ஒரு வாரமாக அதிகாலை காட்டிற்கு செல்லாதவள், இன்று பார்த்திபன் கிளம்பிய பின்னே நாகராஜோடு கிளம்பியிருந்தாள்.
காட்டிற்கு வந்தவள் சற்று நேரத்திலேயே மயங்கி விழ, உரம் போட்டுக்கொண்டிருந்த பெண் நாகராஜிற்கு சொல்ல, நாகராஜ் அருட்செல்வனிற்கு சொல்ல, பதறியடித்து வந்தவன் மனைவியின் நாடி பிடித்து தாய்மை என கணித்திருந்தான்.
ஆசுவாசமாகி மயக்கம் தெளிய வைத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றதும் கிட்டை கொடுத்து பரிசோதிக்க, தாய்மை உறுதியானது. பின்னே அனைவருக்கும் சொல்ல, உறவுகள் சூழ்ந்துகொள்ள தற்போதுதான் மனைவியோடு தனிமை கிட்டியது.
வம்சம் தழைக்க, உடலை வருத்தி உயிரை பணையம் வைப்பவள் தன்னை பெற்ற உறவிற்கு சற்றும் குறையாதவள் என்று மனைவியை மனதில் பெருமையோடு போற்றியபடி உன்னத நிலையில் இருந்தவன் உள்ளே வந்ததும் கட்டிலில் சரித்து, மென்மையாய் அணைத்துக்கொண்டவன், “ரொம்ப ரெஸ்ட்லசா இருக்கா?” என்றான் அக்கறையாக.
“முன்ன இருந்தது, இப்போ இல்ல” என்றவள், “நான் கூட வெக்கப்படல, இன்னைக்கெல்லாம் உங்க முகம் சிவப்பு குறையவேயில்ல” என்றாள் கிண்டலாக.
“போடி” என முறைக்க முயன்று தோற்று, மனைவி நெற்றியில் முத்தமிட்டவன், “ஆனாலும் உன் அண்ணன் இருக்கானே… அறிவேயில்ல அவனுக்கு” என்று பார்த்திபன் சொன்னதை சொல்ல, “அதானே? மலர்ந்த பின்ன நாணம் எதுக்கு மாமா?” என்றாள் சிரிப்போடு.
“நேரம்டி எல்லாம்” என முறைத்தவன், “இன்னைக்காவது என் ஆசையை நிறைவேத்துடீ” என்றான்.
பெட்ரூம்லயாவது உரிமையா பேர் சொல்லி கூப்பிடு என்று ஒரு வருடமாக கேட்டுக்கொண்டிருக்கிறான் அருட்செல்வன். எனக்கு அப்படி பிடிக்கல என்று வார்த்தைக்கொரு மாமா சொல்வாள் சிவப்ரியா.
“ம்ஹும்… இனி அப்பாம்மா ஆகிட்டோம். மரியாதையா பழகனும்” என்று இன்றும் அருளின் ஆசையை மறுக்க, அருள் முறைக்க, சற்று நேர அமைதிக்கு பின்னே தயக்கம் உடைத்து, “மலர்ந்தும் நாணமேனடா?” என்றாள் கிசுகிசுப்பாக.
“ஹேய்… என்ன சொன்ன?” என வியந்தவன், “அதுக்குனு டா சொல்வியாடீ?” என முறைத்தான் பொய்யாக.
சிவப்ரியா சிரிக்க, “இன்னைக்கு மட்டுமில்ல, எப்போலாம் எனக்கு தோணுதோ? அப்போலாம் சொல்லனும்” என்று அருள் குழைய, “ஆத்தி… ஆயாக்கு தெரிஞ்சது என்னை கொன்னே போட்டுடும்” என்றாள்.
ரகசிய பேச்சுகள் என்றில்லை, அறையை விட்டு வெளியேறிவிட்டால் ரகசிய பார்வை கூட கிட்டாது கணவனிடம். கணவன் வெக்கமறிந்து தற்போது சிவப்ரியா இப்படி சொல்ல, “நான் மனுசன், வெக்கம் மானரோசம்லாம் இருக்கும். உனக்கும் உன் அண்ணனுக்கும் இது ஒரு வீக் பாய்ண்ட்டா போச்சு” என்றான் முறைப்போடு.
“பின்ன? அக்மார்க் டெரருக்கு இப்படி வெக்கம் வரும்னு யாரு கண்டா?” என்றாள் சிரிப்போடு. “உன்ன…” என நெற்றி, கன்னம் என முத்தமிட்டு வழக்கம்போல் கோபத்தை காதலாய் காண்பித்து, கர்பகால அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தான்.
*** *** *** ***
பத்து நாள்கள் கடந்திருக்க, பார்த்திபனின் திருமண நாள் வந்தது.
வேறிடத்தில் கட்டிக்கொடுக்க நேர்ந்திருந்தால் கவலை கொள்வானோ என்னவோ? பார்த்திபனோடு தனது தங்கையின் திருமணம் அத்தனை நிறைவை கொடுத்திருந்தது அருட்செல்வனிற்கு.
சொத்து இல்லை என்ற ஏமாற்றத்திலிருந்த மோகனா… பவ்யாவிற்கு செய்த சீர்வரிசையில் சற்று மனதை தேற்றியிருந்தார்.
அருட்செல்வன் கவனமெல்லாம் கர்பவதியான மனைவி மீதிருக்க, “ஹப்பா… என் மருமகனோ மருமகளோ… யாராயிருந்தாலும் ஆயிரம் நன்றி.” என மனைவியிடம் கிசுகிசுத்து புன்னகைத்தான் பார்த்திபன்.
பவ்யா புரியாமல் பார்க்க, “உங்கண்ணன் கவனமெல்லாம் சிவா மேல இருக்கு. உன்கிட்ட ஃப்ரீயா இருக்க வாய்ப்பளித்த என் தங்கை வாரிசுக்கு நன்றி சொன்னேன்” என்றான் கண்ணிமைத்து.
பவ்யா நாணத்தோடு சிரம்தாழ்த்த, “ஏங்க பாருபொண்ணே, என் மகனையும் மகளையும் மேடைக்கு அழைச்சிட்டு வாங்க” என்றான் சற்று தள்ளியிருந்த பார்வதியிடம்.
“டேய்… இத்தனை பேர் முன்ன பேர் சொல்ற?” என பார்வதி முறைக்க, “இன்னைக்கும் முறைப்பிங்களா?” என சிரித்தவன், “எத்தனை வருச ஏக்கம்ங்க, சிவாவை கொடுத்தது பெரிய சந்தோசம்ன்னாலும், நானும் என் அத்தை குடும்பத்தோட நெருக்கமாகயிருக்கேன். கொண்டாட வேணாமா? என் வயசுல இருக்க யாராவது உங்க பேரை இப்படி சொல்ல முடியுமா? எனக்கு உங்ககிட்ட இருக்க உரிமை எல்லாருக்கும் தெரியனும்ங்க” என உரிமையோடு பார்வதியிடம் உள்ளார்ந்து சொன்னவன், தன் திருமணத்தை மிகுந்த மகிழ்வோடு ரசித்து அனுபவித்தான்.
மேடைக்கு வந்த அருட்செல்வன், பார்த்திபனிற்கு சங்கிலி அணிவிக்க, பார்த்திபன் பெருமையாய் பார்க்க… “இந்த மாட்டுக்கெல்லாம் கட்டுவாங்களே… மூக்கனாங்கயிறு. அதுதான் இது. நீ எதாவது ஏடாகுடம் செய்தாலும், உன் அம்மா செய்தாலும் கயித்தை இறுக்கிடுவேன்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
“ஏங்க… இன்னைக்குத்தான் வாழ்க்கையை ஆரம்ப்பிக்கபோறேன், அனுபவஸ்தனா நாலு அறிவுரை சொல்லலைனாலும் பரவால்ல, சின்ன பையனை இப்படி பயமுறுத்தலாமா?” என அலறினான் பொய்யாக.
“யாரு? நீயா? சின்ன பையனா?” என முறைத்தபடி மேடையிலிருந்து இறங்கியவன் முகமெல்லாம் நிறைந்த புன்னகை.
பதினொரு மணிபோல் புதுமணத் தம்பதியாக மாமனார் வீட்டிற்கு வந்தவன், பால் பழம் உண்ணும்போது, “ஏங்க பாரு பொண்ணே, உங்களுக்கு பசிக்கல?” என பால்கிண்ணத்தை நீட்ட, மதிய உணவு தயாரிக்க ஆயத்தமான பார்வதி கரண்டியை மேலுயர்த்தி மிரட்ட, “பசிக்கலனா விடுங்க, இதுக்கெல்லாமா கரண்டியை தூக்குவிங்க?” என பயந்த பாவனையோடு சொல்லி, பவ்யாவை ஓய்வெடுக்க பணித்து பார்வதியிடமும் மற்ற உறவினர்களிடமும் வம்பளத்துக்கொண்டிருந்தான்.
அழுகை, ஆர்பாட்டம் போன்று ஏதும் பண்ணக்கூடாதென சித்தி சித்தப்பாவிடம் சொல்லியிருந்தவன், மாலை ஐந்து மணிபோல் இன்முகத்தோடு தங்கையை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான் அருட்செல்வன்.
அன்று காரில் சிறு முத்ததிற்கு அத்தனை ஆர்பாட்டம் செய்தவள், அன்றிரவு கணவனோடான தனிமையில், பெண்களுக்கே உரித்தான நாணமும் அச்சமும் சேர்ந்து சில மறுப்புகளை தெரிவித்தபோதும், பார்த்திபன் ஆசையை நிறைவேற்றும் ஆசையும் எழ, அவனின் விருப்பப்படி ஆடையணிந்து ஆசான் கற்றுகொடுக்கும் பாடத்தை சமத்தாய் கற்று தேர்ந்த பவ்யா… அடுத்து வந்த நாள்களும் திகட்ட திகட்ட காதல் செய்து, பார்த்திபன் மனதை குளிர்வித்தாள்.
*** *** ***
ஐந்து வருடங்கள் முடிந்திருக்க,
பார்த்திபனிற்கு அழைத்த அருட்செல்வன், “என்னடா பண்ணி வச்ச என் மகனை?” என திட்டி, “ஒழுங்கா ஈவ்னிங் வர… உன் முகரையை பார்க்காம என் மகனுக்கு காய்ச்சல் வந்துருச்சு” என்றான்.
பள்ளியில் பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்க பார்த்திபன் சிவா வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. பார்த்தி மாமாதான் வேணும் என மருந்தை குடிக்க சிறுவன் மறுக்க, இன்று தேர்வுகள் முடிந்திருந்ததால் பார்த்திபனிற்கு அழைத்திருந்தான் அருட்செல்வன்.
“எனக்கும் மருமகனை பார்க்கனும்ங்க” என்றவன் அன்று மாலையே தன் மகன் மனைவியோடு வந்திருந்தான்.
பார்த்திபன் குழந்தை அருளிடம் ஒட்டிக்கொள்ள, பார்த்திபன் தன் மருமகனை கொஞ்சிக்கொண்டிருந்தான். அருட்செல்வனின் ஒன்றரை வயது புதல்வி மட்டும் அருள் இருந்தால் அவனைத் தவிர யாரிடமும் போகமாட்டாள்.
“என் பொண்ணு என் பேச்சு கேட்கறா… மகனை மட்டும் மயக்கிட்டான்” என கடிய… “ப்பா பார்த்தி மாமா திட்டாத” என தந்தையிடம் மல்லுக்கு நின்றான் அருட்செல்வன் புதல்வன்.
“இப்போ எங்கடா போச்சு உன் காய்ச்சல்?” என மகனை முறைக்க… பார்த்திபனும் சிறுவனும் சிரிக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தன் மகளோடும் தங்கை மகனோடும் வெளியே வந்தான் அருட்செல்வன்.
ம்… தாய்மாமன் என்ற நிலையில் வைக்க முடியாவிட்டாலும் தற்போதெல்லாம் விஷேச நாட்கள், பவ்யாவை பார்க்க என்று மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வரும் சூழல் உண்டானது அருட்செல்வனிற்கு.
அண்ணாமலை அருணாச்சலத்திடம் இன்னமும் சரிவர பேசாவிட்டாலும், தன் மீதான அன்பும், பேரன் பேத்தி மீதான பாசமும் பழைய கசப்புகளை மொத்தமாய் மன்னிக்க செய்தது.
வெளியே வந்த சிவப்ரியா “மலர்ந்தும் நாணமேனடா?” என கிசுகிசுத்தாள் கணவனிடம்.
அருட்செல்வன் முறைக்க, “எல்லார் மேலயும் அக்கறை இருக்கு. கொஞ்சம் சிரிப்போட பழகினாதான் என்னவாம்?” என வழக்கமாய் சொல்லும் வசனத்தையே சொல்ல, “போடி” என்றான் முறைப்பாக.
“இப்போ சரிப்பட மாட்டிங்க, நைட் ரூம்க்கு வாங்க பேசிக்கறேன்” என்றாள் கண்ணிமைத்து.
“குழந்தைங்க முன்ன என்ன பேச்சுடீ பேசற?” என அதற்கும் முறைக்க, “தங்கம்… மாமா அத்தையை திட்டுறார் பாரு” என அண்ணன் மகனிடம் முறையிட்டாள் சிவப்ரியா.
பார்த்திபன் மகன் அருட்செல்வனை அடிக்க சுகமாய் வாங்கிக்கொண்டான் மருமகனின் அடியை.
குறைவில்லாத காதலை மனைவிக்கும், அனுதாபத்தை தாண்டிய அன்பை பார்த்திபன் ஷிவாங்கிக்கும், மனிதாபத்தை தாண்டிய மரியாதையை மாமனார் மாமியாரிடத்திலும் காண்பித்தான். ஆனால் இவையெல்லாம் அனுபவிப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியாது.
இது அனைவருக்கும் புரிந்ததால் இரு குடும்பமும் சாப விமோட்சனம் பெற்ற மகிழ்வோடு ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு கழித்தனர்.
விருட்சத்தில் சற்று சாய்ந்த கிளைகளே நிழலை தருவது போல, பகையை மறந்து அன்பை புரிந்த உறவுகள் பக்கம் சாய்ந்தவன் மனம் கடந்த ஐந்து வருடமாக மகிழ்வை மட்டுமே அனுபவித்தது. இம்மகிழ்வு இறைவனின் இறுதி தீர்ப்பு நாள்வரை தொடர வேண்டி விடைபெறுவோம் மகிழ்வோடு.