“அது பொண்ணு கொடுத்த வீட்டுக்கு அப்படி அடிக்கடி வரக்கூடாது தனம்.”
“கல்யாணம் ஆனபின்ன ஆம்பிளை பசங்களை கூடவே வச்சிக்கனும், பொட்டபிள்ளையை பார்க்க போகனும்னா கூட முறையிருக்குனு எனக்கு இந்த முறையெல்லாம் தெரியாதுப்பா.
சில விசயங்கள் இன்னமும் புரியல, பொண்ணு கொடுத்த வீட்டுக்கு அடிக்கடி போக்க்கூடாதுனா அப்போ அம்மாவை பார்க்க ஆயா எப்படி தினமும் வராங்க?”
“உங்கம்மா எனக்கு சின்ன அத்தை மகள்டா. சொந்தம்ன்ற முறையில வராங்க.”
“ஓ… அப்போ பிறத்தியில கொடுத்தா மகளை அதிகம் பார்க்க முடியாதுனு தெரிஞ்சே என்னை கட்டிக்கொடுத்திங்களா? மனசு ரொம்ப வேதனைப்படுதுப்பா.
யார்கிட்டயும் சொல்லவும் முடியல, சொன்னா தப்பாகிடுமோனு பயமா இருக்கு.” என கண்கலங்கிய தனலஷ்மி, “இப்போ அவர்கூட போகலனா நான் தப்பானவளா ஆகிடுவேன்ப்பா.” என்றார் முடிவாக.
மகளின் பேச்சில் கந்தசாமி மனம் தவிக்க, சங்கருக்கு கோபமானது.
“நான் கிளம்பறேன்ப்பா.” என கணவனை பார்க்க, “மாப்பிள்ளை, மூனு மாசம்கூட முடியாம அனுப்பி வச்சா எங்களுக்குத்தான் அவமானம். இனி அந்த கோவிந்தன் வரமாட்டான். என் மகள் இருக்கும்வரை நானும் வீட்டுலயே இருக்கேன்.” என உறுதிகொடுத்தார் கந்தசாமி.
மாமனாரை விடுத்து, மனைவியிடம், “வெளில சொல்ல முடியாத அளவுக்கு நானும் என் குடும்பமும் என்ன பண்ணினோம்? சொன்னா தப்பாகிடும், ரொம்ப வேதனையா இருக்குனு சொல்ற? என்னோட வாழ்றது அவ்வளோ வேதனையா இருக்கா?” என்றார் கந்தசாமி முன்னிலையிலேயே.
“கோவிந்தன் என்னைவிட பத்து வயசு சின்னவன், அக்கா அக்கானு என்பின்னாடியேதான் சுத்துவான், அப்படி பட்டுனு வெட்டிவிட முடியாம இங்க வர அனுமதிச்சேன். ஒத்துக்கிறேன் தப்புதான்…” எனும்போதே கந்தசாமி சரோஜாவை அடித்திட, மருமகன் முன்னே நடந்த அவமானத்தில் உள்ளே சென்றுவிட்டார் சரோஜா.
“அம்மாவை ஏன்ப்பா அடிச்சிங்க? மாமா குணம் தெரியாம அவங்க வீட்டுக்கு என்னை கொடுக்க சம்மதிச்சது உங்க தப்பு. சின்ன வயசுலயிருந்த அவங்கதான் என் உறவுனு சொல்லி வளர்த்துட்டு சொத்துக்காக என்னை பிறத்தியில கொடுக்க நினைச்சதும் நீங்க.” என தனலஷ்மி சொல்ல,
அப்போ வேறு வழியில்லாமல்தான் என்னை கட்டிக்கிட்டாளா என்ற அவமானத்தில் யாரிடமும் சொல்லாமல் தனது வண்டி நோக்கி நடக்க,
“தனம்” என கந்தசாமி அதட்ட, பிறகுதான் தன் கணவனின் வாகனமான டி.வி.எஸ் சத்தம் கேட்க, “என்னங்க.” என்ற மனைவியின் சத்தத்தில் வண்டியை திருப்பி வந்த சங்கர், “உங்கப்பா செய்த தப்புக்காகல்லாம் என்னோட வாழ வேண்டாம். உன்னால என்னோட வாழ முடியாதுனா என் பிள்ளையை என்கிட்ட கொடுத்துட்டு.” எனும்போதே,
சங்கர் அதிர, “என் நடத்தைமேல நம்பிக்கையில்லனா உங்க பிள்ளையை எடுத்துட்டு போங்க, இப்படி எண்ணத்தோட என்னைவிட்டுட்டு போனிங்கனா அதிக நாள் என் உயிர் உடம்பில தங்காது.
பெத்த பிள்ளையை பார்க்க வரதுக்கே ஆயிரம் சாங்கியம் பார்க்குறவங்க, பேரப்பிள்ளையையா பார்ப்பாங்க? அதிலும் மகள் வழி பேத்தின்னும்போது சோறு கூட போடமாட்டாங்க, நானுமில்லாம உங்க பிள்ளை அநாதையாக வேண்டாம். எடுத்துட்டு போங்க.” என்றார் தீர்க்கமாக.
தனலஷ்மி முன்பு விட்ட வார்த்தையின் கோபம் குறையவில்லை என்றபோதும், தற்போதைய பேச்சில் சிறு ஆசுவாசம் பிறக்க, “வா போலாம்.” என அழைத்துச்சென்றார் சங்கர்.
நடந்த சம்பவத்தால் தன் மனைவி மீதும் மாமியார் மீதும் கோபத்தில் இருந்த சங்கர் தன் அன்னையின் வசைபாடலை கண்டுகொள்ளாமல் போக, சோலையம்மாளின் துணிவு மேலும் அதிகமாகவே, புகுந்த வீட்டிலும் நிம்மதியை இழந்தார் தனலஷ்மி.
** ** ** ** **
இளங்கலை படிப்பு முடித்து ஒரு மாதம் முடிந்திருக்க, மேற்படிப்பிற்கு வெளியே போகவில்லை, தர்மபுரி அரசு கல்லூரியிலேயே படிப்பதாக சொன்னாள் சிவப்ரியா.
சிவப்ரியா சொல்லும் கல்லூரிக்கு வீட்டிலிருந்து போக வேண்டும் என்றால் அருட்செல்வன் பணிபுரியும் கால்நடை மருத்துவமணையை தாண்டித்தான் செல்ல வேண்டும் என்பதால், “அங்க வேணாம், வெளில படிக்கிறதுனா படி, இல்ல வீட்டுலயே இரு.” என்றார் அருணாச்சலம்.
“ஏங்க, அவதான் இங்கையே படிக்கிறேன்றாளே? விடுங்களே. ஹாஸ்டல்ல சேர்த்துட்டா சொந்த பந்தங்களுக்கு நம்ம பிள்ளையை எப்படி தெரியும்? கல்யாணம் காட்சினு கூட்டிட்டு போனாத்தான் மாப்பிள்ளை பார்க்க வசதியா இருக்கும்.” என்றார் கல்யாணி.
“உன் வேலையை பார்க்குறியா?” என முறைத்தார் மனைவியை.
கல்யாணி முகம் வாட, “சின்னவ இப்போதான் முதல் வருசத்தை முடிச்சிருக்கா, இன்னும் இரண்டு வருசத்துக்கு சிவாவும் படிச்சா சின்னவளுக்கும் நல்லது கெட்டது புரிய வைக்கலாம்ல? அதுக்குத்தான இரண்டு பேரையும் ஒரே காலேஜ்ல சேர்த்தோம்?
பண்டிகை, கல்யாணத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய், மகளை அறிமுகம் செய்து மாப்பிள்ளை பார்க்க நாம என்ன சொந்தத்துல கொடுக்கற முடிவுலயா இருக்கோம்? கண்டிப்பா பிறத்திலதான் பார்க்கப்போறோம்.
சிவாக்கு கல்யாணம் செய்யனும் முடிவு பண்ணிட்டா, குடும்ப விவரத்தை தரகர்கிட்ட சொன்னா போதும். நமக்கேத்த இடமா பார்த்து தருவான். இப்போதைக்கு கல்யாண பேச்சு வேணாம். சின்னவ டிகிரி முடிச்சி வரும்போது சிவாக்கு பார்க்க ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் படிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்.” என்றார்.
“அப்போ உங்கப்பா சொல்ற மாதிரிதான் கேளேன் சிவா. தினமும் பஸ்ல போய் வரது கஷ்டம்தானே? ஹாஸ்டல்னா பத்திரமா இருக்கலாம்.” என்றார் கல்யாணி.
“அப்பா சொன்னதும் அப்படியே பல்டி அடிச்ச பார்த்தியா? அங்க நிற்கறம்மா நீ.” என முறைத்தாள் அன்னையை.
“அப்பா சொல்றதும் சரிதானே சிவா?” என பாவமாய் கேட்க, “ம்மா, எப்படியும் இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் செய்து வச்சிடுவிங்க, அதுவரையாவது உங்களோட இருக்கேனே.” என்றாள் இவளும் பாவமாக.
அச்சோ அது அதைவிட கொடுமை, நாமக்கல் சென்றுவிட்டால் அத்தையிடம் நெருங்க முடியாது, இங்கேயே இருந்தால் ஜீவிதாவிடம் பேசி, அப்படியே அத்தையின் மனநிலையை அறிந்துகொள்ளலாம், அவளை காண செல்வதுபோல் அவ்வூருக்கு தோழிகளோடு சென்று வரலாம், அப்பொழுது அத்தையிடம் பேசும் வாய்ப்பை பெறலாம் என இப்படி திட்டங்களுக்காகத்தான் இங்கேயே இருக்க நினைத்தாள்.
கல்லூரிக்கு போகாமல் இருந்தால் தந்தை அனுமதியில்லாமல் எங்கும் செல்லமுடியாது, அப்படியே சென்றாலும் பார்த்திண்ணாவோடதான் அனுப்புவாங்க. அப்போ எப்படி அத்தையை காண்பது? அவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதோடு, தந்தையும் பெரியப்பாவும் அத்தையை நினைத்து வருந்துவதெல்லாம் எப்படி எடுத்துரைப்பது?
இன்னும் இரண்டு நாள்ல பி.ஜிக்கு அப்ளை செய்யலனா சீட் கிடைக்காதே என கவலைகொண்டாள் சிவப்ரியா.
மாலை பள்ளி முடித்து பார்த்திபன் வர, அண்ணனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடி சென்றாள். “என்ன சிவா?” என்றான்.
இங்கிருந்து படிக்கும் தன் ஆசை நிறைவேறாது, கிடைக்கும் வாய்ப்பை விட்டால் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டியதாகிடும் என, “நான் வெளில போய் படிக்கனும்னா எனக்கு நீ ஒன்னு செய்தாகனும்.” என்றாள் சலுகையாக.
தங்கை மனம் மாறியதில் மகிழ்ந்தவன், “என்ன செய்யனும்?” என்றான்.
“அத்தைக்கும் நமக்கும் எனக்குத் தெரியாத பகை என்னயிருக்கு? உனக்கு தெரியும்னு அன்னைக்கு சொன்னல்ல? அது என்னனு எனக்கு தெரிஞ்சாகனும்.”
தன் குடும்பத்து தரப்பு தவற்றை சொல்லவில்லையென்றால் அத்தை மீது மேலும் வெறுப்பாகிடுவாள் என, தனலஷ்மி பார்வதியை ஈன்றெடுக்கும்போது கோவிந்தன் பேசியது, அதற்கு பாட்டி மறுப்பு சொல்லாதது, குழந்தை பிறந்த பின்னே அத்தையிடம் கோவிந்தனின் தவறான பார்வையை சங்கர் அறிந்து கொண்டு பிரச்சனையானது, அப்பொழுதும் கூட பாட்டி பிறந்த வீட்டினரை விட்டுக்கொடுக்காமல் இருந்தது என அனைத்தும் சொன்னவன்,
“இதெல்லாத்தையும் விட பதினாறு வயசுல கல்யாணம் செய்துட்டு போன அத்தையால அவங்கப்பாவை விட்டு இருக்க முடியல, ஏன் பார்க்க வரலனு கேட்டதுக்கு பொண்ணு கொடுத்த இடத்துக்கு அப்படி அடிக்கடி வரக்கூடாதுனு தாத்தா சொல்லியிருக்கார்.
விபரம் அறியாத வயசுலயிருந்து கோவிந்தன்தான் புருசன்னு சொல்லி வளர்த்துட்டு, சொத்து கேட்டாங்கன்னதும், சொத்து கேட்காத சங்கர் மாமாக்கு கல்யாணம் செய்து வச்சுட்டாங்க, அப்போ எனக்காக சொத்தும் கொடுக்கமாட்டார், புகுந்த வீட்டுல எப்படி வாழ்றேனு பார்க்கவும் வரமாட்டார்ன்ற வேதனையில இவங்க மகளா இருந்து என்ன கண்டோம்னு நினைச்சிட்டாங்க.
அடுத்த ஒரு வருசம் கழிச்சு கல்யாணி சித்திக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க, சித்தி சித்தப்பாவை (அருணாச்சலம்) தவிர யாரையும் கட்டிக்கமாட்டேனு சொல்லவும், சரோஜா ஆயாகிட்ட விசயத்தை சொல்லியிருக்காங்க.
உன்னை தவிர யாரையும் கட்டிக்கமாட்டேனு கல்யாணி பூச்சி மருந்தை குடிச்சிட்டானு சித்தப்பாகிட்ட சொல்லவும், சித்தப்பா சித்தியை பார்க்க போயிருக்கார்.
பிறந்த வீட்டு சொந்தத்துக்காக ஆயா பொய் சொல்லியிருக்காங்கனு தெரிஞ்சும், சித்தப்பாக்கும் சித்தியை பிடிக்கும்ன்றதால தாத்தாகிட்ட பிடிவாதம் செய்து சித்தியோட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினார் சித்தப்பா.
தனம் அத்தைக்கு இந்த விசயம் தெரியவும், உன் தம்பி சொன்னமாதிரி அவங்க அண்ணன் பொண்ணையே திரும்பவும் மருமகளாக்கிக்க முடிவு பண்ணிட்டிங்க, அப்போ நான் யாருக்கும் முக்கியமில்லனு ஆயாகிட்ட அழுதுருக்காங்க. சொத்துக்காக என்னை வேண்டாம்னு சொன்ன குடும்ப உறவை இன்னும் வலுப்படுத்தற மாதிரி பண்ணியிருக்கிங்க,
அப்போ என்னை விட அம்மாக்கு பிறந்த வீட்டு உறவும், உங்களுக்கு மகன் விருப்பமும்தான் முக்கியமா போய்டுச்சு, அருணாச்சலத்துக்காக யோசிக்க மாதிரி என்னை கல்யாணம் செய்து கொடுக்கும்போது என் மனசுல என்ன இருக்குனு யாராவது கேட்டிங்களானு அழவும், சங்கர் மாமாக்கு கோபம் வந்துடுச்சாம்.
பிறந்த வீட்டு மோகம் போகலயா? இல்ல சின்ன வயசுல பேசி வச்ச உறவை மறக்க முடியலயானு கேட்டுருக்கார். அத்தை ஒன்னை நினைச்சு சொல்ல, சங்கர் மாமா இப்படி நினைச்சிக்கிட்டார். இதுல ஆயா தாத்தாவை தவிர யாரையும் குற்றம் சொல்ல முடியாது.” என வருந்தினான் பார்த்திபன்.
தனலஷ்மியின் சிக்கலான வாழ்வை நினைத்த சிவப்ரியாவின் மனது கணமாய் உணர, பதினாறு வயதுவரை இவர்தான் கணவன் என நினைத்திருந்து திடீரென மாற்றம் ஆகும்போது அது பெரும் துயரமாக அல்லவா இருந்திருக்கும்? என அத்தையின் புறம் இருந்து யோசித்தவளின் மனது அவர் மீதிருந்த மொத்த கோபத்தையும் போக்கி, உடனே அத்தையை பார்த்தாக வேண்டும் என்ற ஆவலையும் தூண்டியது.