வீடு வரை இழுத்து வந்தவன் கையை கோபத்தில் விட, தடுமாறி கீழே விழுந்திருந்தாள் சிவப்ரியா.
“அவ்வளோ தைரியமாகிப்போச்சா உனக்கு?” என தீயாய் முறைத்தான் பார்த்திபன்.
வாயே திறக்கவில்லை சிவப்ரியா. ஆனாலும் செய்தது தவறில்லை என்பதுபோல் இறுமாப்பாய் அமர்ந்திருந்தாள். அது பார்த்திபனின் கோபத்தை அதிகப்படுத்த, “உங்க பையனுக்கு என்னை கட்டிட்டு போங்கனு சொல்லியிருக்கியே வெக்கமாயில்ல?” என்றான் உக்கிரமாக.
“பார்த்திண்ணா, நான் அந்த அர்த்ததுல சொல்லல, என்னை கட்டிட்டு போறதுக்கு பதிலா சொத்து வாங்கிக்கலாம்னு நினைப்பாங்கனுதான் அப்படி சொன்னேன்.” என்றாள் தவிப்பாக.
“முட்டாள்… அருள் அங்கதான் இருந்தார், எத்தனை அசிங்கத்தை தேடி வச்சிருக்கனு புரியுதா?”
“என்ன? அவங்க இருந்தாங்களா?” என அதிர்வோடு கேட்டவள், “இல்ல, நான் பக்கத்துல யார் இருந்தாங்கனு பார்த்துட்டுதான் பேசினேன். சங்கர்மாமா கொஞ்சம் தள்ளி உக்கார்ந்திருந்தார், அத்தையோட மகன், மகள் யாரும் இல்ல.” என்றாள் உறுதியாக.
முறைத்தவன், “வாரம் இரண்டு முறை டயாலிஸ் செய்து, நம்மளை கவனிக்க ஒரு ஆள்னு எல்லாருக்கும் தொல்லையா எதுக்கு இருக்கனும்னு யோசிச்சு, இனி வீட்டுலயிருந்து பார்த்துக்கிறதா சொல்லியிருக்கார் நம்ம பங்காளி.
வீட்டுலயிருந்து எப்படி பார்க்குறதுனு பங்காளி பொண்டாட்டி கேட்டுருக்காங்க. என் விதி அவ்வளோதான். கொஞ்சகாலம் வீட்டுல இருந்துட்டு போய் சேருறேன், மருத்துவம் பார்த்து கடனை சுமந்துக்க வேணாம்னு விரக்த்தியா சொல்லியிருக்கார்.
மருமகன் இப்படி இருக்காரேன்ற வேதனையில நம்ம பங்காளியோட தாய்மாமா நான் கிட்னி கொடுத்தா அக்கா பையன் நல்லாகிடுவானானு டாக்டர்கிட்ட கேட்டிருக்கார்.
உங்க கிட்னி பொருந்தி வந்தா செய்துடலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. நம்ம பங்காளி வேணவே வேணாம்னுட்டாராம். அவர் ஒத்துக்காம ஆப்ரேசன் செய்ய முடியாதுன்றதால யாரை வச்சி கவுன்சிலிங் கொடுக்கலாம்னு யோசிச்சிருக்காங்க.
நம்மூர்ல டாக்டருக்கு படிச்சவங்க யாரும் இல்லைன்றதால, வெட்னரி டாக்டர்னாலும் பரவால்ல, தெரிஞ்சவன் சொன்னா அக்காமகன் கேட்டுக்குவானு நம்ம அத்தைக்கு போன் செய்து வரசொல்லியிருக்காங்க.
நம்மகிட்ட உதவி கேட்டவங்களை போய் பார்க்கலைனா தப்பாகிடும்னும், அருளை தனியா அனுப்ப மனசுவராமலும் அத்தையும் மாமாவும் அருளோடவே வந்திருக்காங்க.
கிட்னி டிரான்ஸ்ஃபர் பத்தி அருள் பங்காளிக்கு புரிய வச்சிட்டிருந்திருக்கார். அந்த நேரம்தான் நீபோய் அத்தைகிட்ட இப்படி பேசியிருக்க. நான் உன்னை இழுத்துட்டு வரும்போது அருள் வாசல்படியிலயிருந்து பார்த்தார்
அப்பா சித்தப்பாவால செய்ய முடியாததை நீ செய்துடுவியா? அங்க எல்லாரும் எப்படி பார்த்தாங்க தெரியுமா? இரண்டு குடும்பத்துக்கும் ஆகாதுனு ஊருக்கே தெரியும்னு நல்லா தெரிஞ்சிருந்தும் இப்படி பேசிட்டு வந்திருக்கியே? பொண்ணு கேட்டு வரவனுக்கு எப்படி உன்மேல நம்பிக்கை வரும்?” என்றான் தீராத ஆத்திரத்தோடு.
சொத்து பத்தி மட்டுமே பேசப்போனாள் சிவப்ரியா. நீ கல்யாணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால்தான் எனக்கென்ன என்பதாய் தனலஷ்மி பேச்சும் பார்வையும் இருக்க, இன்று விட்டால் இனி அத்தையை பார்க்க விடவேமாட்டார்கள் என திட்டமிடாத வார்த்தையாக திருமணம் பற்றி பேசிவிட்டாள்.
“நான் ஆப்ஸனலாதானே சொன்னேன்?” என்றாள் பாவமாக.
“ஆப்ஸனலா சொல்ற விசயமா இது? குடும்ப மானம் மொத்தத்தையும் வாங்கிட்டல்ல? இப்போ நிம்மதியா?” என அங்கிருந்து அகன்று, மீண்டும் உள்ளே வந்தவன், “சத்தியமா உன்கிட்டயிருந்து இப்படி வில்லத்தனத்தை எதிர்பார்க்கவேயில்ல. கொஞ்சம் கூட அப்பாம்மா பத்தி யோசிக்கவேயில்லயில்ல? யார் என்ன சொன்னா என்னனு நீ பாட்டுக்கு பேசிட்டு வந்துருக்க.?” என கத்தினான் ஆத்திரத்தோடு.
அவ்வளவு கோபம் இருந்தபோதும், அன்று ஜீவிதா திருமணத்தில் அருட்செல்வனோடு பேசியதும், படம் பிடித்ததும், பிறகு மொபைலில் இருந்தவன்தான் அத்தை மகன் என பார்த்திபன் மூலமாக அறிந்த பின்னே அருட்செல்வன் மீது விருப்பம் வந்திருக்குமோ என நிதானித்த அண்ணாமலை, “அருளை விரும்புறியா?” என்றார் சந்தேகத்தோடு.
“இல்ல பெரியப்பா.” என்றாள் தாமதியாமல்.
“அப்போ எதுக்கு வீண் பேச்சு? விடுங்க.” என அனைவருக்கும் சொல்லி, “பார்த்தி, நாங்க அங்க போறோம். நீ சிவா, ஷிவாங்கியோட இரு.” என கட்டளையிட்டு கிளம்பினார் அண்ணாமலை.
சற்று தூரம் வந்தபின்னே, “நில்லுங்க, எத்தனை அதிங்கப்பிரசங்கித்தனம் பண்ணிட்டு வந்துருக்கா? ஒத்த வார்த்தை கூட சொல்லாம விட்டுட்டிங்க? இன்னும் என்னெல்லாம் திட்டம் வச்சிருக்காளோ?” என பொறிந்தார் கல்யாணி. இக்கூற்றை மோகனாவும் ஆமோதித்தார்.
“எதிர்பார்க்காததை பண்ணிட்டா, இனி அதைப் பத்தி பேசி எந்த லாபமுமில்ல, சிவாதான் அருளை விரும்பலனுட்டாள்ல? அப்புறமென்ன? அந்த பையனை வர சொல்லி பேசி முடிச்சிடுவோம். இனி காலேஜ் போகவேணாம்.” என்றார் அண்ணாமலை.
அருணாச்சலம், “எனக்கு வர கோபத்துக்கு நாளைக்கே கல்யாணம் செய்து வச்சிடனும்னு இருக்கு. ஆனா என்ன பண்றது? பொண்ணை பெத்தவன் வலியபோய் ஏதும் செய்ய முடியாதே.” என்றார் இயலாமையோடு.
“பார்த்துக்கலாம் விடுடா.” என தேற்றி, “அங்க தனத்தை சங்கர் என்ன சொல்லிட்டிருக்கானோ? வா போலாம். சிவா சின்னபிள்ளை, உன் மேல உள்ள பாசத்துல பேசிடுச்சுனு சமாதானம் செய்து அனுப்பி வைப்போம். இல்ல, இதை வச்சே பெரிய பிரளயம் வரும்.” என கிளம்பினர்.
நால்வரும் பங்காளி வீட்டையடைய, இறுகிய முகத்தோடு தனம் அமர்ந்திருந்தார். அருகே சங்கரும் அமர்ந்திருந்தார். ஆனால் தனம்போல் கோபமாக அல்லாமல், யோசிக்காமல் எப்படி பேசிவிட்டாள்? அன்று ராகவன் ஜீவிதா திருமணத்திலும் என் தந்தையை போல் இருக்கிறாய் என மகனிடம் கேட்டிருக்கிறாள்.
இத்தனை பேர் முன்னிலையில் பேசிவிட்டாளே? இனி எப்படியெல்லாம் திரித்து பேச்சு வருமோ? என சிறு பெண்ணின் எதிர்காலத்தை குறித்த யோசனை வர, அப்பொழுதும் சிவப்ரியா மீது கோபத்தைவிட வருத்தமே வந்தது. வருந்தினாலும் மருகளாக நிச்சயம் ஏற்க முடியாது என்றும் தோன்ற, சிவப்ரியா பேசியதையே நினைத்திருந்தார் சங்கர்.
சிவப்ரியாவின் பேச்சால் அருட்செல்வனிற்குள் அத்தனை ஆத்திரம். ஆனால், இவ்விடம் இதுகுறித்த விவாதம் சரியல்ல என, “அம்மா, அவ பேசினதுக்கு நீ என்ன பண்ணுவ? இங்க கோபமா முகத்தை வைக்காதம்மா, எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். ஃப்ரீயா விடு.” என தந்தைக்கும் இதையே சொல்லி வந்த வேலையில் கவனமானான் அருட்செல்வன்.
அருணாச்சலம் அண்ணாமலையை கண்டதும், மகளுக்கு எடுத்து சொல்றதை விட்டுட்டு எதுக்கு திரும்ப வந்துருக்காங்க? என்று கோபம் வர, அவர்களை விடுத்து வேறுபுறம் திரும்பிக்கொண்டார் சங்கர்.
மற்ற நாள்களிலும் சங்கர் இவர்களோடு உறவாடமாட்டார்தான், ஆனால் இன்று மகளின் செயலுக்கு பின்னே சங்கரின் பாராமுகம் அண்ணாமலை அருணாச்சலத்திற்கு மேலும் கீழாக நினைப்பதாய் தோன்ற அவமானமாய் உணர்ந்தனர்.
ஆனாலும் மகள் செய்த காரியத்திற்கு இதெல்லாம் தாங்கித்தானே ஆகவேண்டுமென சங்கரிடம் சென்றனர். வீட்டிற்கு வந்துபோங்கள் என சம்பிரதாயத்திற்கு சொல்லும் சொல்லை கூட இன்று சொல்லமுடியாமல் தவித்து நின்றனர் இரண்டுநிமிடம்.
பின்னே சங்கரின் முதுகுப்புறத்திலிருந்து முன் புறத்திற்கு சென்ற அண்ணாமலை, “சின்ன பொண்ணு புரியாம பேசிட்டா. சிவாக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம், இரண்டொரு மாசத்துல கல்யாணம் வச்சிடுவோம், இதை மனசுல வச்சிக்கிட்டு தனத்தை ஏதும்.” என முடிக்கும்முன்னே அங்கே வந்த தனம்…
“அவர் என்னை திட்டுவாருன்னு உங்களுக்கு தெரியுமா? நீங்களா எதாவது நினைச்சிட்டு பேசாதிங்க. போய் மகளுக்கு புத்தி சொல்லி, இனி இப்படி நடக்காதமாதிரி பார்த்துக்கோங்க. அருள் வந்தான்னா பிரச்சனை செய்வான்.” என்றார் தனலஷ்மி.
சட்டென திரும்பியவர்கள் நீயும் இங்குதான் இருந்தாயா என அருட்செல்வனை பார்த்து அதிர்ந்து நின்றனர்.
சங்கர், “அருள், நான் பேசிக்கிறேன், நீ போ.” என்றார் கட்டளையாக.
“வந்த வேலை முடிஞ்சதுப்பா, அந்தண்ணா ஆப்ரேசன் செய்ய ஒத்துக்கிட்டார், நாளைக்கு பெங்களூர் போகப்போறாங்க. அங்க இருக்க டாக்டர்கிட்டயும் பேசிட்டேன்.
என் கிளாஸ்மேட்டோட அப்பாதான் அங்க இருக்கார். என்னை அவருக்கு நல்லா தெரியும், இவரோட ரிப்போர்ட்ஸெல்லாம் வாட்ஸாப்ல அனுப்பினேன், நானும் வரவானு கேட்டேன், தேவையில்ல, பேஷண்ட், டோனர், அவங்களோட ஹெல்ப்புக்கு இரண்டு பேரையும் அனுப்பி வை போதும்னு சொல்லிட்டார்.” என்றான்.
மகன் கிளம்பும் தோரணையில் நிற்க, “சரிப்பா, போலாம்.” என எழுந்தார் சங்கர். அருணாச்சலம் அண்ணாமலை தவிப்போடு நின்றிருக்க, சிவப்ரியாவின் நலன்கருதி, தனத்தோடு பேசட்டும். நம் மனதில் நினைப்பதைதான் மனைவியும் பேசுவாள் என, “சீக்கிரம் பேசிட்டு வா தனம்.” என மகனோடு சற்று தூரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார் சங்கர்.
“அப்போ அமைதியா இருந்தது தப்புத்தான்னு பலமுறை உன்கிட்ட மன்னிப்பு கேட்டாச்சு.” என்றார் தவிப்போடு.
“என் அம்மாப்பா, என் சொந்தம், என் சொத்து, என் உரிமைனு நினைச்சிருக்கும்வரை வேதனை மட்டும்தான் மிஞ்சுனது.
நீங்க வேற, நான் வேற, இவங்க சொத்து நமக்கெதுக்கு? என் புருசன்தான் என் குடும்பம், என் குடும்பம்தான் முக்கியம்னு என்னைக்கு யோசிக்க ஆரம்பிச்சேனோ அன்னைலயிருந்து இன்னைக்கு வரைக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கேன். கடைசி வரைக்கும் இந்த சந்தோசம் கிடைச்சா எனக்கு போதும்.
பழைய விசயம்லாம் தெரியாம உங்க பொண்ணு எதோ ஆர்வக்கோளாறுல பேசிட்டா, உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒத்தே வராதுனு மகளுக்கு புரிய வச்சி சீக்கிரம் கல்யாணம் செய்யப் பாருங்க.” என்று கிளம்பியிருந்தார் தனலஷ்மி.