“நான் விளையாடுல தனம். அந்த சிவாப்பொண்ணுதான் ஆட்டத்தை துவக்கி வச்சிருச்சு, உன் பையன் களத்துல இறங்காம இருந்தான்னா சரிதான்.”
“அருள் அப்படி நினைக்கமாட்டான். எனக்கு பிடிக்காதுனு அவனுக்கு தெரியும். என் மகன் எனக்கு பிடிக்காததை செய்யமாட்டான்.” என்றார் படபடவென.
“ஏய்… கொஞ்சம் மூச்சு வாங்கு.” என்றார் கிண்டலாக.
“நீங்க ஏதும் சொல்லவேணாம், பைக்கை வேகமா ஓட்டுங்க. நான் என் மகனோட பேசிக்கிறேன்.” என்றார் பிணக்கோடு.
“நீதான இந்த ரோட்டுல இவ்வளோ வேகமா போகக்கூடாதுனு சொல்லுவ?” என பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினார் சங்கர்.
சங்கருக்கும் சிவப்ரியாவை மருமகளாக ஏற்கும் எண்ணமில்லை. ஆனால் மனைவி, மற்றும் மகன் மனம் அறிந்தவராகிற்றே.
தனலஷ்மியின் அண்ணியும், தம்பி மனைவியும் தாய்மாமன் மகள்கள் என்பதால், தனம் தன் அண்ணனின் வாரிசுகளோடும் ஒதுங்கியிருக்கிறாரே தவிர, பார்கவி, பார்த்திபன், சிவப்ரியா ஷிவாங்கியோடு தனிப்பட்ட வெறுப்பு இல்லை.
சிவப்ரியா சொன்னதுபோல் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தனலஷ்மியின் மனம் நிச்சயம் வேதனை அடையும். அன்னையின் வேதனைப் போக்க அருள் எதையும் செய்வான் என இருவரையும் புரிந்திருந்தார்.
சங்கர் மகனை சரியாக கணித்திருந்தாரோ? இங்கே அருட்செல்வன் நினைவில் சிவப்ரியாதான் உழன்றாள்.
தனலஷ்மி அவரின் அண்ணன்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘என்னப்பா இப்படி பேசிட்டா?‘ என்றான் தந்தையிடம்.
‘உன் அம்மா பார்க்கும் முன்னவே சிவப்ரியாவை நான் பார்த்தேன், உடம்பு சரியில்லாதவனை பார்க்க வந்திருக்கும் நினைச்சா, உன் அம்மாவை பார்த்துகிட்டே பக்கத்துல போனா அருளு, தனம் குனிஞ்சிருக்கவும் அத்தைனு கூப்பிட்டா, சிவாப்பொண்ணைப் பார்த்ததும் தனம் அதிர்ச்சியாகிட்டா, அவாய்ட் பண்ண நினைச்சு நகரப்போனா.
உன்கிட்டதான்த்தை பேச வந்தேன், நீ எங்க போனாலும் பின்னாடியே வருவேனு என்ன உரிமைன்ற?
வேற வழியில்லாம உன் அம்மா என்ன விசயம்னு கேட்டா. அப்பா பெரியப்பா கொடுக்குற சொத்தை வாங்கிக்கோத்தை, என்னால நிம்மதியா இருக்க முடியலனு கெஞ்சல்ல இறங்கிடுச்சு அருளு.
அந்த பொண்ணு பேச்சு கேட்டு நானே ஸ்டன்னாகிட்டேன், உன் அம்மா ஆச்சர்யப்படாம இருப்பாளா? ஆனாலும் சொத்து பத்தி பேசினதால அத்தனை பேர் முன்ன எங்கடா உன் அம்மா திட்டிடுவாளோனு எனக்கே பதட்டமாகிடுச்சு.
ஆமாம் பதட்டம்தான் ஆகிடுச்சு. வயசு பொண்ணுன்றதால பார்க்குறவங்க என்ன நினைப்பாங்களோனு சிவாப்பொண்ணுகிட்ட பேசி அனுப்பி வைக்கலாம்னு நான் போனேன். அதுக்குள்ள உன் மாமனுங்களும் பார்த்திபனும் வந்துட்டாங்க.‘
என தந்தை சொன்னதை நினைத்திருந்தவனிற்கு, பார்த்திபன் கோபத்தோடு சிவப்ரியாவின் கையைப் பிடித்து இழுத்தது, விடுண்ணா என கையை உதறியபோது, இன்று விட்டால் அத்தையிடம் பேசமுடியாது என்ற தவிப்பும், நான் தவறு செய்யவில்லை… என்னை ஏன் இழுத்துட்டு போற என்பதாய் பார்த்திபன் மீதான கோபத்தையுமே மீண்டும் மீண்டும் நினைத்தான்.
அந்த நொடி, தனது குடும்பத்தை தாண்டி தன் அன்னையின் மனதை குளிர்விக்க நினைக்கும் ஜீவனாய் தெரிந்தாள் சிவப்ரியா.
ஒன்னு சொத்து வாங்கிக்கோங்க, இல்ல உங்க மகனுக்கு என்னை கட்டிட்டு போங்க. ம்… என்ன தைரியம்? என நினைத்தவன், அதுக்கு உன்னை எனக்கு பிடிக்க வேணாமாடி? என நினைத்தான் கோபமாக.
கோபம்தான். அன்று தன்னை அவளின் அப்பா போல இருக்கிறாய் எனும்போது அறியாமல் பேசுகிறாள் என அவளின் நண்மை கருதி திட்டித்தான் அனுப்பினான். ஆனால் கோபமெல்லாம் இல்லை.
ஆனால் இன்று, தன் அன்னையின் மனதை புரிந்துகொள்ளாமல் பலவருடம் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியவர்களின் மகள் என நினைக்க கோபம் தலைக்கேறியது. இவ நிம்மதிக்காக என் அம்மா பட்ட அசிங்கத்தையெல்லாம் மறந்து சொத்து வாங்கிக்கனுமா?‘ என நினைத்தான் கோபமாக.
இவர்கள் சொத்து கொடுக்காத காரணத்தால் என் பாட்டி வார்த்தைகளால் கொஞ்சம் சித்திரவதையா செய்தாங்க? உன் அம்மா தவறு செய்ததால்தான் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாம அழுதிட்டிருக்கா என பாட்டி சொன்னதை நம்பி, சிறு வயதில் நானும் கூட தவறாக நினைத்தேனே?
எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஓர்நாள் அன்னையின் ஓயாத அழுகையில், தப்பும் செய்துட்டு எதுக்கும்மா எப்போ பார்த்தாலும் அழுதுட்டேயிருக்க? என தான் கேட்டதில் அதிர்ந்தது அன்னை மட்டுமல்ல, தன் அத்தையும்தானே?
அம்மா எந்த தப்பும் பண்ணல அருளு, இப்படி எண்ணத்தை வளர்த்துக்காத, உன் ஆயா வேணும்னே திட்டிட்டிருக்கு என அத்தை சொல்ல, சும்மா ஆயா திட்டாது என பாட்டி மீதுள்ள நம்பிக்கையில் தான் வாதாட, இல்லப்பா உன் அம்மாக்கு அவங்க அப்பமூடு சொத்து கொடுக்கலன்ற காரணத்துக்காக ஆயா தினமும் திட்டிட்டேதான் இருக்கு.
ஆயா திட்டுறதுக்கு மறுபேச்சு கூட பேசாது உன் அம்மா. செல்வ செழிப்போட ராணிமாதிரி வாழ்ந்த பொண்ணு, பெத்தவங்க செய்த தப்புக்கு உன் ஆயாகிட்ட பேச்சு வாங்கிட்டிருக்கு என அத்தை சொன்ன பின்னே, சித்தியும் அதையே சொல்ல, அதன்பின்னே ஆயாவின் நடவடிக்கைகளை கவனிக்கலானான்.
பிறகுதானே அத்தை சொன்னது உண்மை என விளங்கியது. காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை தொட்டதற்கெல்லாம் சொல்லால் வறுத்தெடுத்திருக்கிறார்கள்… அதிலும் கவனமாக தன் தந்தை இல்லாத நேரம் பார்த்துதான் பேசுவது என்ற உண்மையெல்லாம் தெரிந்த பின்னே ஆயாவை வெட்டிப்போடும் ஆத்திரம்தான்…
ஆனால் தந்தையை பெற்றவர்களாகிவிட்டார்களே? அடிக்கவா முடியும்? ஆனாலும் ஆத்திரத்தை அடக்க முடியாமல், உணவை கொடுத்து அறைக்குள் அடைத்து பூட்டு போட்டு பள்ளிக்கு சென்றுவிட்டான் அருட்செல்வன்.
ஏன் இப்படி செய்தாய் என பள்ளி முடித்து வந்தபின்னே சங்கர் விசாரிக்க, நடந்ததை சொல்லி, “பெத்த தாய்கிட்டயா இருந்தாலும் பொண்டாட்டியை விட்டுக்கொடுக்குறவன் சவத்துக்கு சமானம்.” என்றான் அச்சிறு வயதிலேயே.
பிறகுதான் சங்கருக்கே அன்னையைப்பற்றி தெரிய வந்தது. ஏன்ம்மா? நீயாவது சொல்லக்கூடாதா என தம்பி மனைவியிடம் குறைபட்டு, அன்னையையும் முறைத்தார் சங்கர்.
ஆயிரம் வேலையா வெளில போறிங்க? வந்ததும் இப்படி விசயங்களை சொல்லி கஷ்ட்டப்படுத்த வேணாம்னுதான் என்ற தனலஷ்மி, அதோட உங்கம்மா உண்மையைத்தான சொல்றாங்க? நான் இன்னொருத்தனை மனசுல நினைச்சுட்டு, அப்புறம்தானே உங்களை கட்டிக்கிட்டேன்.” என கதறியழுதது இன்றும் அருட்செல்வன் மனதை பிசைந்தது.
அன்னை இப்படி இழிவு படுத்தியிருப்பார் என பேரதிர்ச்சியான சங்கர், “அவ மனசுல என்னைத்தவிர வேற யாரும் இல்ல, நான் வேற யாரும்னு சொன்னது அவ தாய்மாமனை மட்டுமில்ல, அவ அம்மாப்பாவையும் சேர்த்துதான் சொல்றேன்.
சொந்தங்கள் எல்லாரையும் விட்டொழிச்சிட்டு என்னை மட்டுமே நினைச்சிட்டிருக்கா. அதெல்லாம் நல்ல ரத்தம் ஓடுறவங்களுக்கு தெரியும். உனக்கெப்படி தெரியும்?
என் பொண்டாட்டி யோக்கியம் அவளை கட்டிக்கிட்ட அன்னைக்கே எனக்கு தெரியும். இவ்வளோ கேவலமான பொம்பளையா நீன்னு உன் யோக்கியம்தான் தெரியாம போய்டுச்சு. இனி என் பொண்ட்டாட்டியை எதாவது சொன்ன… உசுரோட கொள்ளி வச்சிடுவேன்.” என சோலையம்மாளை மிரட்டி,
என் அம்மா இப்படிலாம் பேசுறாங்கனு ஒத்த வார்த்தை சொன்னா, அதுக்கே செத்துடுவனா நானு? இவங்களை இப்படி பேச விட்டுட்டிருந்தது எனக்குதான்டி அசிங்கம். இனியாவது எதாவதுனா சொல்லித்தொலை.” என அன்னையையும் சாடினார் தந்தை.
அதற்கடுத்து வந்த நாட்களிலும் சோலையம்மாள் தந்தையில்லாத நேரம் அன்னையை சாட, பாட்டியோடு தாயம் விளையாட வரும் பெருசுகளை விரட்டிவிட்டு, உள்ளேயே கிட. என வீட்டில் சிறை வைக்க ஆரம்பித்தான் அருட்செல்வன்.
அதற்கும் சோலையம்மாள் அடங்காமல் போக, அன்னையை திட்டும் நாளெல்லாம் வீட்டு வேலைகளை செய்ய விடாமல் செய்தான். ஆயா அப்பாலாம் பசி தாங்கமாட்டாங்கடா என தனலஷ்மி கெஞ்ச, அந்த அறிவு ஆயாக்கு இருக்கனும். ஒருநாள் பட்டினி கிடக்கட்டும் என மாலை வரை அருட்செல்வனும் சாப்பிடாமல், அன்னையையும் சித்தியையும் சமைக்கவிடாமல் அறையில் அடைத்து வைத்திருந்தான்.
மதிய உணவிற்கு வந்த சங்கர், ‘ஏன்டா ஸ்கூல் போகலயா?’ என விசாரிக்க, நடந்ததை சொன்னவன், சாப்பாடு வேணும்னா நீங்க செய்ங்க, என் அம்மா செய்யமாட்டாங்க. என்றான்.
அன்றைய அருட்செல்வன் செயல் சோலையம்மாளிடம் சிறிது வேலை செய்தது. ம்… சோலையம்மாவால் மகன்கள் வீட்டு வேலை செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் கோபமில்லாமல் செய்வது மருமகள் சுகமாய் இருப்பதாய் தோன்ற, வேறுவழியின்றி தனலஷ்மியை சாடுவதை குறைத்தார்.
பிறகு அருட்செல்வன் சென்னையிலுள்ள கல்லூரியில் மருத்துவம் படிக்கும்போதும், பல மாதங்கள் கழிந்து வந்தாலும் அன்னையையும், சித்தியையும் பாட்டி திட்டுவதை அப்படியே ஒப்பித்துவிடுவாள் பவ்யா.
விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்லும்வரை தந்தை சித்தப்பாவை சமைக்க விட்டதோடு வீட்டு வேலைகளையும் பார்க்க வைத்த பின்னே சோலையம்மாள் மொத்தமாய் அடங்கிப்போனார்.
சொத்துப் பிரச்சனையால் எத்தனை வலிகளை கடந்து தன் அன்னை இன்று நிம்மதியாக இருக்கிறார்கள்… தன் திருமணத்தை எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்க்கிறார்கள்… இவபாட்டுக்கு வந்து படபடனு பேசிட்டு போய்ட்டாளே? அன்னை இதை சுலபமாய் மறப்பார்களா? என்ற கவலை அழுத்தியது அருட்செல்வனை.
வீட்டிற்கு வந்த தனம் மகனின் அறைக்கதவை தட்ட, “தாழ் போடலம்மா, சும்மாதான் சாத்தியிருக்கு, உள்ள வா.” என்றான்.
உள்ளே வந்த தனலஷ்மி, “அருளு, அந்த பைத்தியக்காரி பேசினதை மனசுல வச்சிக்காத. நம்ம குடும்பத்துக்கு அவ வேணாம். நான் நல்ல பொண்ணா பார்க்குறேன்.” என்றார் தவிப்பாக.
உள்ளுக்குள் உள்ள கோபத்தை மறைத்து சிரித்தவன், “அவ சொன்னதும் கல்யாணம் வரைக்கும் நினைக்க நான் என்ன சின்ன பையனாம்மா?” என இலகுவாக கேட்டு, “அவ அவளோட அப்பா பெரியப்பா மனக்குறையை போக்க நினைச்சு பேசுறானு தெரியுது. அவ பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நீ மனசு தடுமாறாம இருந்தா சரிதான்.” என தேற்றினான் அன்னையை.
தனலஷ்மி முகம் நிம்மதியாக, “பசிக்குது, சாப்பாடு எடுத்து வைம்மா, நான் கை கழுவிட்டு வரேன்.” என தன்னையும் சகஜமாக்க முற்பட்டான் அருட்செல்வன்.