யாராவது பிச்சை கேட்டு வந்தா பாவம்னுதான் சோறு போடுறோம். அதுக்காக வீட்டுக்குள்ள வச்சி போடறதில்லைதானே? பிச்சைக்காரனுக்கு அது சரிதான். இதே நம்ம வீட்டாளுக்கு அப்படி செய்தா?
பரம்பரை சொத்து தராம, தனியா வாங்கி கொடுக்க நினைச்சிருக்கார் தாத்தா. அது எதோ பெத்த கடமைக்கு பிச்சை போடுற மாதிரி அத்தைக்கு தோணியிருக்கலாமில்ல? ஆம்பிளைங்களுக்கு இருக்க உரிமை நமக்கு ஏன் இல்லனு யோசிக்கிறதுல என்ன தப்பிருக்கு?
உங்க கல்யாணத்துக்கு அப்புறம் சொத்து பிரிக்கும்போது பார்கவிக்காவுக்கு சரி பங்கு சொத்து கொடுக்கனும்னு பெரியப்பா நினைக்கிறார்தானே? நீங்களும் அதுக்கு ஓகே சொல்லிட்டிங்கதானே?
அத்தை அப்படி சரி பங்கா கேட்டாங்க? சொத்து கொடுக்கனும்னா பரம்பரை சொத்து கொடுங்க, இல்ல சொத்தே வேணாம்னுதானே சொல்லியிருக்காங்க? இதுல என்ன தப்பிருக்கு?
பணத்தாசையில பரம்பரை சொத்து கேட்டுருந்தாங்கனா, தாத்தா தர மறுத்ததும் கோர்ட் கேஸ்னு போயிருப்பாங்க, சட்டத்துக்கிட்ட போயிருந்தா தாத்தாவே நினைச்சாலும் கொடுக்காம இருந்திருக்க முடியாது.
ஒருவேளை அப்படி செய்திருந்தா தாத்தாவுக்கு எவ்வளோ மன உளைச்சலாகியிருக்கும்? பிறந்த இடத்து உரிமையை கோர்ட்டுக்கு போய் வாங்கியிருந்தாங்கனா நமக்கு எவ்வளோ அசிங்கமாகியிருக்கும்? ஊருக்குள்ள நம்ம குடும்பத்தைப் பத்தி என்னென்ன பேசியிருப்பாங்க?
இப்படி ஏதும் செய்யாம உரிமையாதானே கேட்டாங்க. தாத்தா மறுக்கவும் விலகிட்டாங்க. எதோ சென்ட்டிமன்ட்டான காரணத்துக்காகத்தான் பரம்பரை சொத்துல பங்கு கேட்டிருப்பாங்கனு எனக்கு தோணுது. அது இல்லன்னதும் எவ்வளோ ஏமார்ந்திருப்பாங்க?
இதெல்லாம் நினைக்கும்போது நமக்கு மூத்தவங்களோட உரிமையை ஏமாற்றி நான் அனுபவிக்கிறமாதிரி மனசு உறுத்துது பார்த்திண்ணா. இத்தனை உறுத்தலோட நான் எப்படி கல்யாணம் செய்துக்குவேன்? என்னால முடியல பார்த்திண்ணா.” என கலங்கினாள் சிவப்ரியா.
“நான் அப்படி சொல்லலை பார்த்திண்ணா, இப்படி குற்றவுணர்ச்சியோட வாழ்றதுக்கு அதுக்கான தீர்வை கண்டுபிடிக்கலாமே? இதெல்லாம் விட கல்யாணம் அவ்வளோ முக்கியமானு தோணுது.
தப்பு தாத்தா மேலதான். ஆனா அதை அப்படியே வளர விட்டுட்டு இருக்கிறதும் நம்ம தப்புதானே? என் பார்த்திண்ணா எவ்வளோ நல்லவங்க? நியாயமா பார்த்தா நீங்க எனக்குத்தானே சப்போர்ட் பண்ணனும்?” என்றாள் பாவமாக.
பார்த்திபன் மனது கரைந்துவிட்டதோ என்னவோ? “நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்றான் கோபமில்லாமல்.
“அத்தைக்கான சொத்தை அவங்ககிட்ட சேர்த்தாகனும். அதுக்கு எது செய்தாலும் எனக்கு சம்மதம்.” என்றாள் ஆவலாக.
“எதாவது செய்யலாம். ஆனா என்கிட்ட சொல்லாம நீ எதும் அதிகப்ரங்கித்தனம் பண்ணக்கூடாது.” என்றான் கட்டளையாக.
சிவப்ரியா சந்தோசமாக சம்மதம் தெரிவிக்க, இங்கே மோகனாவிற்கு பதறியது. பின்னே பதறாதா? என் கொழுந்தனுக்கு பெரிய இடத்துல பொண்ணு பார்த்திருக்காங்கம்மா. அவ வந்தா என்னை கீழ பார்ப்பாங்களோனு கவலையா இருக்கு என இரண்டு மாதம் முன்புதான் பார்கவி கவலை தெரிவித்தாள்.
இனி தனம் சொத்து வாங்கப்போவதில்லை என நினைத்து சொத்து பிரிக்கும்போது பதினைஞ்சு ஏக்கர் வேணும்னு அப்பாகிட்ட கேளு என மகளிடம் சொல்லியிருந்தார் மோகனா.
பார்கவியும் சந்தோசத்தோடு கணவனிடம் பகிர, விசயம் சம்மந்தி வரைக்கும் போய்விட்டதே. இனி குறைவாக கொடுத்தால் மகளை கீழாக பார்ப்பார்களோ என பயம் வர, இந்த சிவாப்பிள்ளையோட சேர்ந்து பார்த்தி என்ன செய்யப்போறானோ?
தனம் சொத்து வாங்க சம்மதித்துவிட்டால் கணவன் மறுபேச்சின்றி எழுதி வைத்திடுவாரே? சிவா பார்த்திபனோடு இத்தனை பேசியும் அருணாச்சலமும் கல்யாணியும் ஏதும் சொல்லவில்லையே…
எல்லாரும் எதிர்க்கும்போதே அத்தைக்கு சொத்து கொடுக்கனும்னு ஆடுனா. இப்போ பார்த்தி வேற அவ பக்கம் சாய்ஞ்சிட்டான். இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என யோசித்திருந்தார் மோகனா.
*** *** *** *** *** *** *** ***
பவ்யாவை ஹாஸ்டலில் சேர்த்து இரண்டு வாரமாகியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு அழைத்து வந்த அருட்செல்வன், இன்று திங்கட்கிழமையாதலால் கல்லூரியில் விட வந்திருந்தான்.
பைக்கிலிருந்து இறங்கிய பவ்யா, “அண்ணா ஹாஸ்டல்ல இருக்க பிடிக்கவேயில்ல, ஈவ்னிங்ல ரொம்ப போர் அடிக்குது.” என்றாள் பாவமாக.
“உங்களுக்கு சென்னையில சீட் கிடைச்சது அதனால போனிங்க. எனக்கு வீடு பக்கம்தானே? இந்தா இருக்கு கட்டுப்பட்டி, அங்கயிருந்து தருமபுரிக்கு படிக்க வர ஹாஸ்டலா?” என்றாள் பிணக்கோடு.
கடந்த பத்து நாட்களில் இதுபோல் பலமுறை சொல்லிவிட்டாள் பவ்யா. அவளிற்கு வீடுதான் இவ்வுலகில் பிடித்த இடம் என்றும் அருட்செல்வனிற்கு தெரியும். ஆனால் என்ன செய்வது என்ற வருத்தத்தோடு, “என்னால உன் பின்னாடியே அலைய முடியாது பவிம்மா.” என்றான் கெஞ்சலாக.
“நம்ம பார்வதிக்கா சொந்தத்துல…” என ஆரம்பித்து நடந்ததை விளக்கியவன், “அவனை நாலு தட்டு தட்டி அடக்கிடலாம்னுதான் நினைச்சேன். சித்தப்பாதான் பொண்ணு பிள்ளைங்க விசயத்துல இப்படி முடிவெடுக்கக்கூடாதுனு உன்னை ஹாஸ்டல்ல விட சொல்லிட்டார்.
அவரை மீறி நான் என்ன செய்யட்டும்? சாரி பவிம்மா. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அதுக்குள்ள அந்த நாய்க்கு ஒரு முடிவு கட்டிடறேன்.” என்றான் தன்மையாக.
பவ்யா முகத்தில் சிறு பயம் தெரிய, “ப்ச் எதுக்கு பயம்? எந்த பிரச்சனையானாலும் ஒரு கை பார்த்துடனும்.” என அதட்டி, “யாராவது தப்பா பேசினாங்கனா பயப்படாம பதில் கொடுக்கனும். நீ கொடுக்குற பதில்ல திரும்ப உன் பக்கமே அவன் வரக்கூடாது.
இப்படி விசயம் எதாவது நடந்தா உடனே எனக்கு கால் பண்ணு, என்னால உடனே வர முடியலனாலும், இங்க நமக்கு தெரிஞ்வங்க நிறைய பேர் இருக்காங்க. ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னா போதும். அடுத்த அஞ்சாவது நிமிஷம் உன் முன்ன நிற்பாங்க.” என்றான் தைரியமளிக்கும் விதமாக.
“சரி டாட்டா.” என்றாள் வாடிய முகத்தோடு.
தங்கை மூக்கை பிடித்து ஆட்டி, “சின்ன குழந்தைங்க ஸ்கூல் போக அழறதை போல டாட்டா சொல்ற? காலேஜ் ஸ்டூடண்ட்டா நீ?” என சிரித்தான்.
“சீக்கிரம் பிரச்சனை முடிச்சிட்டு என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போண்ணா.” என்றாள் சலுகையாக.
“சரி சரி.” என சம்மதித்து அனுப்பி வைத்தவன், தனது வாட்ஸாப்பிற்கு பார்வதி அனுப்பி வைத்தவன் முகத்தை தேடியபடி பைக்கை மெல்லமாக ஓட்ட ஆரம்பித்தான்.
எங்கும் தென்படாமல் போக, சித்தப்பா சொன்ன சில்லி கடைக்காரன்கிட்ட விசாரிப்போமா? என யோசித்தபடி சில்லி கடைக்கு வர, கடை பூட்டியிருந்தது.
பக்கத்தில் விசாரிக்க, மதியம்தான் வருவாங்க என்றனர். ஹாஸ்டலில் விடுவதால் எட்டு மணிக்கெல்லாம் வந்திருந்தான் அருட்செல்வன். ஒருவேளை கல்லூரிக்கு மாணவிகள் வரும் நேரம் பார்த்து வருவானோ என அரைமணி நேரம் வரை அருகிலிருந்த டீக்கடையில் நாளிதழ் பார்த்தபடி நின்றிருந்தான்.
பவ்யாவை நோட்டமிடுபவன் வராமல் போகவே, என்னைக்காவது மாட்டாமலா போய்டுவ என மனதில் கடுகடுத்தபடி கிளம்ப, பத்து நிமிட பயணத்திற்கு பின்னே வேறொரு வளைவில் அவனின் முகம் தெரிவதுபோல் தோன்ற, பைக்கை மீண்டும் பின்னே செலுத்தி உற்றுப்பார்த்தான்.
அவனேதான்… யாரிடமோ வழக்காடிக்கொண்டிருந்தான். இவனின் முகம் நன்றாக தெரிய, அவனிடம் பேசுபவனின் முதுகுதான் தெரிந்தது. பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தி அவனின் முன் வந்து நின்றான் அருட்செல்வன்.
“நீ யார்டா என்னை கேட்க? இதென்ன உன் அப்பமூட்டு ரோடா?” என பவ்யாவை நோட்டமிடுபவன் பார்த்திபனிடம் திமிறாக வினவ, அடுத்த நொடி ஓங்கி அறைந்தான் கன்னத்தில்.
தற்போதுதான் அருட்செல்வனைப் பார்த்த பார்த்திபன் அருள் எதுக்கு இங்க வந்தார்? எதுக்கு இவனை அடிக்கிறார்? என அதிர்ந்து பார்த்தான். அங்கு பார்த்திபனை எதிர்பார்க்காத அருட்செல்வனிற்கும் அதிர்ச்சிதான்.
ஆனால் பார்த்திபனை கண்டுகொள்ளாமல், “ஏன்டா நாயே? உனக்கு என் தங்கை கேட்குதா? யாருக்கு கட்டி கொடுக்கப்போறாங்க பார்த்துடறேனு சவால்லாம் விட்டியாம்?” என உதைத்தான் ஆத்திரத்தோடு.
இவ்விடம் அருட்செல்வனை எதிர்பார்க்காதவன் முகம் அதீத பயத்தில் இருக்க, அதை மறைந்திருந்து பார்த்த மாணவிகள் தைரியமாக முன்னே வந்து, “நல்லா உதைங்க அண்ணா, பத்து நாளா எங்களால ஸ்கூலுக்கே வரமுடியல, ரொம்ப அசிங்க அசிங்கமா பேசறான். காலைல மட்டுமில்ல, கரெக்ட்டா ஸ்கூல் விடற டைமுக்கும் வந்திடறான்.” என்றனர் பழி தீர்க்கும் பாவனையோடு.
இரண்டு வாரமாக கொதித்திருந்த மனது தற்போது இன்னும் கோபம்கொள்ள, “பொறுக்கி நாயே.” என உதைத்து, சரமாரியாக அடிக்க, சற்று முன் அருட்செல்வன் பேசியதை நினைத்தும், அவனின் நியாயமான கோபம் உணர்ந்தும் ஐந்து நிமிடம் வரை அடிவாங்க விட்டவன், பின்னே இடைமறித்து, “செத்துடப்போறான் விடுங்க, போலீஸ்கிட்ட ஹேண்டோவர் பண்ணிடலாம்.” என்றான் பார்த்திபன்.
வியர்த்து வழிந்திருந்த அருட்செல்வனின் முகம் கோபத்தில் சிவந்திருக்க, “இந்தாங்கண்ணா.” என ஒரு மாணவி தண்ணீரை நீட்டினாள்.
“எங்க சார்கூட இதைத்தான் சொல்வார். ஆனாலும் பேரண்ட்ஸ்கிட்ட சொல்ல பயம். அதனாலதான் இவனைப்பத்தி பார்த்திபன் சார்க்கிட்டயே சொன்னோம். எங்களுக்காகத்தான் பார்த்திபன் சார் இவனை மிரட்ட வந்தார். நீங்க அடிக்கவே செய்துட்டிங்க.” என்றனர் சந்தோசத்தோடு.
பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் கூட்டம் கூடிட, “ஸ்கூலுக்கு டைம் ஆகுதில்ல? கிளம்புங்க.” என்றான் அருட்செல்வன்.
“எங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கிங்க, தண்ணியாவது குடிங்கண்ணா ப்ளீஸ்.” என நீட்ட, வாங்கியவன் கொஞ்சமாய் குடித்து, “இப்படி ஆளுங்களைப் பார்த்து பயப்படக்கூடாது, அதே நேரம் கேர்லஸாவும் இருக்கக்கூடாது.” என மாணவிகளிடம் சொன்னவன்,
“இன்னைக்கு போறேன், இனி எப்போவவது என் தங்கை முன்ன வந்தேன்னு தெரிஞ்சது, அன்னைக்குத்தான் உன் வாழ்க்கையோட கடைசி நாளாயிருக்கும்.” என எச்சரித்து பைக்கில் அமர்ந்தவன், பார்த்திபனை மெச்சுதலாய் நினைத்தபடி பயணித்தான்.