மயக்கும் மாலைப் பொழுது. கார்காலத்தின் தொடக்கம் என்பதால் மழைக்கான அத்தனை அறிகுறியும் காற்றில் இருந்தது. வானில் நிறைந்திருந்த கரும் மேகங்கள் காற்றில் ஈரத்தைக் கூட்டி இருந்தது. அந்த காலநிலை முன் மாலை பொழுதே இரவு நெருங்கியது போன்ற மாய தோற்றத்தை தந்தது.
அந்த கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்களால் நிறைந்திருந்தது. தங்களுக்குள் கலகலத்தபடி வாயிலை நோக்கி சிலரும், அவரவர் வாகனங்களை தேடி கல்லூரி வாகன நிறுத்துமிடத்தை நோக்கி சிலரும் நகர, கல்லூரி பேருந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது மற்றொரு கூட்டம்.
அக்கல்லூரியின் இரண்டாம் தளத்தில் இருந்த ஒரு வகுப்பறையில் இருந்து மின்னலாய் வெளிப்பட்டவள், படிகளை இரண்டிரண்டாக தாவிக் குதித்து இறங்க ஆரம்பித்தாள். இடையிடையே நின்று மெலிதாக கைகளை காற்றில் அசைத்து, தோள்களை உயர்த்தி, இடையை லேசாக வளைத்து, அனிச்சையாய் நடனமாடிக் கொண்டிருந்தது அவளது உடல். உதடுகளோ நடனத்திற்கு ஏற்றார் போல பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
“உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா?
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா?”
சத்தமாக பாடிக் கொண்டே படியிறங்கி கொண்டிருந்தவள் தன்னை சுற்றி நகர்ந்து கொண்டிருந்த மாணவர்களிலும், பாடலிலும், நடனத்திலும் மூழ்கி இருக்க, அவளது அலைபேசி ஒலித்த சத்தம் அவளது காதை எட்டவே இல்லை.
‘என்ன சொல்லு, இந்த தேவா மாதிரி உடம்பை வளைச்சு ஆட யாராலும் முடியாது’ மனதில் அலுத்துக் கொண்டு, நடனத்தை நிறுத்தி விட்டு, கையை வீசி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் அவள்.
தனது இரு சக்கர வாகனத்தின் சாவியை கையில் சுழற்றியபடியே நடந்தவளை, “அக்கா, உங்க ஃபோன் அடிக்குது பாருங்க” எனும் குரல் திரும்பி பார்க்கச் செய்தது.
சொன்ன மாணவனைப் பார்த்து கண்களை விரித்து, “ஆ, என்ன தம்பி?” என்றாள், அவன் சொன்னது புரியாமல்.
“உங்க ஃபோன் அடிக்குது கா” அவளது கைப்பையை கண் ஜடையாக காட்டியபடி சொன்னான் அவன்.
அப்போது தான் அவளுக்கு சுற்றுப்புறம் உரைத்தது. நுனி நாக்கை கடித்து, மெல்ல சிரித்து, “தேங்க்ஸ் தம்பி” என்று புன்னகைத்து விட்டு, விடாமல் அடித்துக் கொண்டிருந்த அலைபேசியை கைப் பையினுள் தேடி துழாவி எடுத்து காதிற்கு கொடுத்தாள்.
காதில் விழுந்த செய்தியில் அது வரை அவளது நடையிலும், குரலிலும் இருந்த துள்ளல் காணாமல் போய் இருந்தது.
“ஆமா, நான் பல்லவி தான் பேசுறேன். நீங்க யாரு? சொல்லுங்க” என்றாள் திடீரென்று முளைத்த பதட்டத்துடன்.
எதிர்ப்புறம் சொன்ன தகவலை அவளால் நம்பவே முடியவில்லை. ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து போனவளாக அப்படியே நின்று விட்டாள். அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.
“ஆமா, ஆனா… என் அண்ணா… எப்படி? என்னாச்சு அவனுக்கு? நீங்க, நீங்க யாரு?”
“இங்க பாரு மா. உனக்கு எல்லாத்தையும் ஃபோன்ல சொல்ல எனக்கு ஆசை தான். ஆனா, என்னால ரொம்ப நேரம் உன் அண்ணனுக்கு காவல் காக்க முடியாது. எனக்கு வேலை இருக்கு. எங்க வீட்டுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான். சீக்கிரம் ஸ்பாட்டுக்கு வந்து சேரு” படபடவென்று இடத்தையும், வழியையும் சொல்லி விட்டு போனை துண்டித்தாள் அப்பெண்.
ஒரு கணம் என்ன செய்வது, யாரை துணைக்கு அழைப்பது, அண்ணனுக்கு என்னவாகி இருக்கும், அவனை எப்படி வீட்டிற்கு அழைத்துப் போவது என்ற எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்து பயத்தைக் கொடுக்க, அலைபேசியை பார்த்தபடி அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள் அவள்.
அப்பாவை நிச்சயம் அழைக்க முடியாது. கதிர் மாமா வேலையில் இருப்பார். அம்மா பயந்து விடுவார்கள், என்று சிந்தனை ஓட உறைந்து நின்றிருந்தவளை,
“சீக்கிரம் வந்து சேரு” என்ற எரிச்சல் குரல் காதில் எதிரொலித்து, அவளை சட்டென்று தனது வாகனத்தை நோக்கி நகர்த்தியது அவளது கால்கள்.
ஐந்தாம் நிமிடம் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தை அடைந்து, தனது வண்டியில் ஏறி அமர்ந்து அதை வேகமாக இயக்கினாள்.
சாலையில் அதிவேகமாக விரைந்து கொண்டிருந்த அவளது ஸ்கூட்டியை விட வேகமாக சிந்தித்துக் கொண்டிருந்தது அவளது மனம்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் நினைத்ததாலோ என்னவோ, சட்டென அந்த பெயர் மூளையில் பளிச்சிட, வண்டியின் வேகம் குறைத்து சாலையின் ஓரத்திற்கு வந்தாள்.
அந்த பெயரை மறந்ததற்கு மண்டையில் ஓங்கி அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அலைபேசியை எடுத்து தன்னால் முடிந்த மட்டும் விரைவாக எண்களை அழுத்தினாள். ஒற்றை நொடியில், ஒரே ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டு, “சொல்லு பல்லவி” என்றான் அவன்.
“தேவா…” என்று தன்னையறியாமல் கத்தியிருந்தாள் அவள்.
“எங்க இருக்க பல்லவி?” என்று அவன் வெகு இயல்பாக கேட்க,
“நம்ம காலேஜ் பக்கத்தில… அது வந்து… அண்ணா” என்று அவள் சொல்லத் தொடங்க, சட்டென்று இடைமறித்தான் அவன்.
“பல்லவி, அவனுக்கு ஒன்னுமிருக்காது. பதட்டப்படாத, நானும் அங்க தான் வந்துட்டு இருக்கேன். எனக்கும் கால் பண்ணி சொன்னாங்க. நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன். நீ மெதுவா, பார்த்து வண்டி ஓட்டிட்டு போ. சூர்யாக்கு ஒன்னும் இருக்காது. சரியா?”
அவன் குரலை கேட்டதும் அப்படி ஒரு ஆசுவாசம் அவளுள். அவனுக்கு தெரியப் போவதில்லை என்பதை கூட உணராமல் அவன் சொன்னதற்கு தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
“பல்லவி..” அழுத்தமாக அழைத்தான்.
“ஆங், என்ன தேவா?”
“வண்டியை மெதுவா ஓட்டிட்டு போ”
“ஓகே, பார்த்து வரேன். நீ சீக்கிரமா வா, தேவா. எனக்கு பயமா இருக்கு. அண்ணாக்கு ஒன்னும் இருக்காது தானே?” கலங்கிய குரலில் கேட்டாள்.
“ப்ச், நான் வந்துட்டே இருக்கேன் பல்லவி. நீ முதல்ல போ” என்றான் அவசரமாக,
“சரி சரி” என்று அலைபேசியை அணைத்து கைப் பைக்குள் போட்டு விட்டு மீண்டும் வேக வேகமாக வண்டியை இயக்கினாள் பல்லவி.
“மிஸ்டர் சூர்யா, இங்க அடிபட்டு.. மயங்கி கிடக்கார். உடனே வாங்க. வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க” என்ற அலைபேசி குரல் காதில் மீண்டும் எதிரொலிக்க,
“அச்சோ, என்னாச்சு? எப்படி? ஆக்சிடென்ட்டா?” என்ற இவளின் கேள்விக்கு பதில் வராததும் நினைவில் வந்தது.
ஆனால், இப்போது தேவா வருகிறான் என்றதும் மனதில் அதுவரை இருந்த பயமும், பதட்டமும் சற்றே குறைந்திருக்க, அவளால் இப்போது வண்டியை கவனமாக இயக்க முடிந்தது.
ஆனாலும், “அண்ணாக்கு ஒன்னும் இருக்காது. ஒன்னும் இருக்காது. சூர்யா என்ன பண்ணித் தொலச்ச?” என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டே தான் சென்றாள் அவள்.
அடுத்த இருபதாம் நிமிடம் போனில் அப்பெண் சொன்ன இடத்திற்கு வந்திருந்தாள். வண்டியின் வேகத்தை குறைத்து கண்களால் பூங்காவைத் தேடினாள். சிறுவர்களின் கூச்சல் அவளுக்கு பூங்காவை எளிதில் அடையாளம் காண உதவியது. சத்தம் வந்த திசையில் வண்டியை திருப்பினாள், மறுநொடி பூங்காவின் முன் இருந்தாள்.
அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு, பூங்கா வாயிலை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் பல்லவி. அவளுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும், நிற்கவில்லை அவள். அண்ணன் மேலிருந்த பாசம் அவளை மூச்சு வாங்க, நொடி நேரம் கூட நிற்க விடாமல் இயக்கியது.
பூங்காவினுள் நுழைந்து எல்லா பக்கமும் பார்வையை அலைய விட்டாள். அவளது அண்ணன் சூர்யா அவளது பார்வைக்கு தட்டுப்படவே இல்லை.
ஆனால், கைகளை பிசைந்தபடி, கோபமாக சிவந்த முகத்துடன், கலங்கிய கண்களுடன் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்த பெண் அவளது கவனத்தை ஈர்க்க, சட்டென்று அவளை நோக்கி நடந்தாள் பல்லவி.
அரை வினாடியில் அவளை நெருங்கி இருந்தாள்.
“பல்லவி?” என்றாள் எதிரில் இருந்தவள் கேள்வியாக,
“ஆமா…” என்று சொன்னவளின் பார்வை அப்போது தான் அங்கே பக்கத்தில் விழுந்து கிடந்த அவளது அண்ணனின் மேல் பதிந்தது.
மறுகணமே எதையும் பொருட்படுத்தாமல் அவன் பக்கத் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
“அண்ணா, சூர்யா ண்ணா..” அவனை லேசாக உலுக்கி எழுப்ப முயன்றாள். ஆனால், அவனோ அசைவதாக கூட இல்லை.
அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. கண்கள் கலங்க, உதடு கடித்து மீண்டும் ஒரு முறை, “அண்ணா… அண்ணா.. ” என்று அழைத்தாள். அசைவே இல்லை அவனிடம்.
மெல்ல அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள். ஆங்காங்கே இரத்த கறைகள் படிந்திருந்தது. நெற்றியில் இருந்து லேசாக இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க உதடு கடித்து அழுகையை அடக்கினாள்.
கைப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெளியில் எடுத்து, அவனது நெற்றிக் காயத்தை கழுவி விட்டாள்.
“ஆ.. ஆ..” வலியில் மெலிதாக முனங்கினான்.
“அப்பாடா…” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டு பொத்தென்று அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“ஹலோ, எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். உன் காதுல விழுகுதா, இல்லையா? போதையில மயங்கி கெடக்கறது உங்க அண்ணன் தானே, நீயில்லையே?” கத்தினாள் அப்பெண்.
சடாரென்று அவளை நிமிர்ந்து பார்த்த பல்லவியின் கண்கள் அனலைக் கக்கின. மனதில் இனம் புரியா கோபம் மூள,
“ஹலோ, யாரைப் பார்த்து என்ன பேசுறீங்க? மரியாதையா பேசுங்க” எகிறினாள் பல்லவி.
“ஓஹோ, மரியாதை கேட்குதா, மரியாதை. பட்டப் பகல்ல குடிச்சுட்டு விழுந்து கிடக்கிறான். அவனுக்கு அடிபட்டது கூட தெரியல. சுரணை இல்ல. இவ்வளவு நேரம் பாவம் பார்த்து, அவனுக்கு நான் காவல் காத்ததுக்கு நீ பேச மாட்ட பின்ன… மரியாதை கொடுக்கணுமாம் இல்ல, மரியாதை… ஒழுங்கா உங்க அண்ணனை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பு.” என்று பொரிந்து தள்ளியவள்,
“நீ கிளம்பறியோ, இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனா, நான் கிளம்பறேன் மா. எனக்கு வேலை இருக்கு. குடிகார வெட்டிப் பயலுக்கு எல்லாம் காவல் காத்தா இப்படி தான் பேச்சு வாங்க வேண்டி வரும்” பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே முணுமுணுத்தாள். ஆனால், பல்லவியால் அவளது கோபத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது.
“சாரி..” என்றாள் சிறியதாகிப் போன குரலில், அப்பெண் இன்னும் கோபம் குறையாமல் அவளை முறைக்க,
“சாரி. நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. ரொம்ப தேங்க்ஸ். இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்கறேன். எங்க அண்ணன் குடிக்கவே மாட்டான். ரொம்ப நல்லவன்…” என்று பல்லவி சொல்லிக் கொண்டே போக, கை நீட்டி அவள் பேசுவதை தடுத்தாள் அப்பெண்.
“ஓகே, ஓகே. உங்க அண்ணன் கதை எல்லாம் எனக்கு எதுக்கு? இப்போ எப்படி இவரை வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போற?” என்று அவள் வினவ, தேவாவை அழைத்ததையே மறந்துப் போனவளாக அண்ணன் குறித்த கவலையில் மூழ்கி இருந்தாள் பல்லவி.
“நான் என்னோட ஸ்கூட்டியில் வந்தேன். கொஞ்சம் என் வண்டி வரைக்கும் அண்ணாவை தூக்கிட்டுப் போக ஹெல்ப் பண்ணீங்கன்னா…” பல்லவி சொல்லிக் கூட முடிக்கவில்லை. புசு புசுவென்று கோபமாக மூச்சு விட ஆரம்பித்தாள் அப்பெண்.
“சாரி, நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்” என்ற பல்லவி குனிந்து மீண்டும், “அண்ணா, சூர்யா…” என்று அவனை அழைக்க,
“இங்க பாரு பல்லவி. உன் அண்ணன் தூங்கல. பாசமா, கெஞ்சி எழுப்பிட்டு இருக்க… அவன் போதையில் மயங்கி கிடக்கான்.” சுள்ளென்று சொன்னாள் அவள்.
கண்கள் கலங்க, “இப்ப என்ன பண்றது?” என்று பல்லவி கலங்கி நின்ற நொடி, “பல்லவி.. ” என்று சத்தமாக அவள் பெயர் சொல்லி அழைத்து, அவள் பார்வையில் படும்படி வந்து நின்றான் தேவா.
அவனைப் பார்த்ததும் அதுவரை கோபமாக என்றாலும் கூட, ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்த அப்பெண், சட்டென்று வேக எட்டுக்கள் வைத்து அங்கிருந்து விலகி நடந்தாள். பூங்காவின் வாயிலை அடைந்து, திரும்பி அவர்கள் மூவரையும் நன்றாக முறைத்து விட்டு வெளியேறினாள் அவள்.
மழையை கண்ட மலரென அவனைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள் பல்லவி. ஆனால், பதிலுக்கு அவன் சிரிக்கவில்லை. முறைத்து வைத்தான் தேவா.