மணி இரவு ஒன்பது தான் ஆகியிருந்தது. இந்நேரம் தான் சென்னையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் இரு பேருந்தும், அங்கிருந்து சென்னை வரும் இரு பேருந்தும் கிளம்பும் என்பதை அவன் நன்கு அறிவான். பொதுவாக இந்நேரம் கதிர்வேலன் எத்தனை பிஸியாக இருப்பார் என்பது அங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும்.
அவரின் அலைபேசியும், அலுவலக தொலைபேசியும் அடித்துக் கொண்டே இருக்கும். டிரைவர்கள், பயணிகள் என விடாமல் அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.
பயணிகள் அனைவரும் பேருந்தில் ஏறி, பேருந்து சென்னையை கடந்ததும் தான் அவரால் நிம்மதியாக மூச்சு விட முடியும்.
அதே போல, அந்த பக்கம் சிவகாசியில் இருந்து கிளம்பும் பேருந்து மதுரையை கடந்தால் தான் ஓய்ந்து அமருவார் அவர்.
ஆனால், இன்று அனைத்தையும் போட்டு விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் வார இறுதி நாளான வெள்ளி இரவு. பேருந்து முழுவதுமாக பயணிகளால் நிறைந்திருக்கும் நாள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாள்.
ஆனால், அத்தனையையும் அப்படியே பாதியில், அலுவலக மேலாளரிடம் விட்டு விட்டு வந்திருக்கிறார். எதற்காக? இந்த பல்லவி அழைத்தாள் என்பதற்காக. ஏனோ, அவனுக்கு கோபமே வரவில்லை.
தன் காரியம் சாதிக்க, அதுவும் அண்ணனுக்காக சரியான ஆளைப் பிடித்த அவளை மனதில் பாராட்டத் தான் தோன்றியது.
“என்ன ஏலக்கா மணம் ஆளைத் தூக்குது. கனி நல்ல விஷயம் பேசுறோம்னு இனிப்பு செய்யறா போல..” என்று கதிர்வேலன் வாசனைப் பிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்தார் கனிமொழி.
“வாங்க ண்ணா, வாங்க அண்ணி. எப்ப வந்தீங்க? எனக்கு நீங்க வந்ததே தெரியல” என்று பல்லவியின் பெற்றோரை பார்த்து அவர் கேட்க,
“பெர்பெக்ட் டைமிங்” என்று அம்மாவை பார்த்து முணுமுணுத்தான் தேவா. அவன் கையை கிள்ளி வைத்தாள் பல்லவி.
“நாங்க வந்து, கால் மணி நேரத்துக்கு மேல ஆச்சு அண்ணி. மழை சத்ததுல எங்க குரல் அடுப்படி வரைக்கும் கேட்டு இருக்காது” என்றார் கஸ்தூரி.
“என்ன நீங்களும் வந்து இருக்கீங்க தேவாப்பா? சாப்பாடு எடுத்து வைக்கவா? தேவாகிட்ட கொடுத்து விடலாம்னு அப்பவே எடுத்து வச்சேன். ஆமா, என்ன விஷயம் எல்லோரும் வந்திருக்கீங்க?” என்று கேட்டவர், மற்றவர்கள் பதில் சொல்ல வாய்ப்பே கொடுக்காமல்,
“ஆமா, என்ன நல்ல செய்தி? அதை பேச தான் எல்லோரும் ஒன்னா வந்தீங்களா? அதுக்கு தான் பல்லவி இனிப்பு செய்ய சொன்னாளா?” என்று அப்பாவியாக கேட்டவரை, கண்களை சுருக்கி முறைத்து வைத்தாள் பல்லவி.
“ஒன்னு விடல. ம்ம், நீ நடத்து பல்லவி” என்று முணுமுணுத்தான் தேவா. பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் பல்லவி.
“உனக்கும், உங்க அத்தைக்கும் எவனாவது ஆஸ்கார் அவார்ட் தரேன்னு சொன்னானா? இந்த நடிப்பு நடிக்கறீங்க?” அவள் பக்கம் சாய்ந்து தேவா கேட்க, அதற்கு மேல் முடியாமல் மெலிதாக புன்னகைத்து விட்டிருந்தாள் பல்லவி.
“எங்கம்மா, என்னமா உளருது பார். டைமிங் எல்லாம் சொல்லிக் கொடுத்து இருப்பியே? இல்லனா, இப்படி சரியான நேரத்துக்கு எங்கம்மா எண்ட்ரி கொடுக்காதே? முன்னாடியே, வாங்க அண்ணா, வாங்க அண்ணின்னு தண்ணீரோட வந்து நின்னு இருப்பாங்களே” என்று அவன் கேட்க,
“எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படாத தேவா. அத்தைக்கு நிஜமா கிட்சன் வரை சத்தம் கேட்டு இருக்காது. மழை பெய்யுது இல்ல?” என்று அவள் விளக்கம் கொடுக்க,
“நம்பிட்டேன் பல்லவி. ஆனாலும், எனக்கே காதுல பூ சுத்துற பார்த்தியா? அங்க நிக்கிற நீ” என்று அவன் புருவம் உயர்த்தி சொல்ல,
“சரி போனா போகுதுன்னு, பாவம் பார்த்து, உன் காதலுக்கும் இது போல ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, இனி அதுக்கு வாய்ப்பே இல்ல, போ. நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்ட” என்று அவள் சடைத்துக் கொள்ள,
“சூர்யா மாதிரியே நானும், எனக்கு ஹெல்ப் பண்ண கை வசம் ஆள் வச்சுருக்கேன். அப்போ நீ என்ன பண்றன்னு நானும் பார்க்கத் தானே போறேன்” என்று சொன்னவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் பல்லவி.
இங்கே அவர்கள் சலசலத்து கொண்டிருக்க, அங்கே பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன நல்ல செய்தி?” என்று கேட்ட மனைவிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கதிர்வேலன்.
“ஆமா கனி. நல்ல செய்தி தான். எல்லாம் நம்ம சூர்யா தம்பி கல்யாணம் விஷயம் தான். பொண்ணு பேரு பாரதி” என்றவர், “ஃபோட்டோ காட்டுங்க மாப்பிள்ளை” என்றும் சேர்த்து சொல்ல, வேறு வழியின்றி அலைபேசியில் தேடி பாரதியின் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான் சூர்யா.
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் பெற்றோரிடம் இருந்து சூர்யாவின் காதலுக்கு பலமாக பச்சைக் கொடி காட்டப்பட்டிருந்தது.
அவர்களுக்கு புகைப்படத்தில் பெண்ணை பார்த்ததும் பிடித்து விட்டிருந்தது. மேலும் விவரங்கள் கேட்டு அறிந்ததில் இன்னுமே திருப்தி. உடனே கல்யாணம் பேச தயாராகி இருந்தனர்.
வீட்டோடு மாப்பிள்ளை விஷயம் இப்போது சொல்ல வேண்டாம் என்று தேவா எச்சரிக்க, அதை அப்படியே சொல்லாமல் மறைத்தான் சூர்யாவும்.
கதிர்வேலன் கடகடவென்று இரவு உணவை முடித்துக் கொண்டு, வேலையைப் பார்க்க கிளம்ப, வேகமாக அவரிடம் போய், பருப்பு பாயாசம் இருந்த கிண்ணத்தை நீட்டினாள் பல்லவி.
அப்பாவின் காதை கடித்துக் கொண்டிருக்கும் பல்லவியை சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
பல்லவியோடு பேசிக் கொண்டே பாயாசத்தை உண்டு முடித்தவர், கிண்ணத்தை அவரை நோக்கி, நடந்து வந்த மனைவியிடம் நீட்டிக் கொண்டே,
“ஏன்பா சேது, நம்ம பல்லவி குட்டி வேலை பார்க்கற ஹாஸ்பிட்டல் ஒன்னும் சரியில்லை போலவே. காதுக்கு வர்ற செய்தி எல்லாம் அப்படி ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல. அதான், நாளையில் இருந்து வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டேன். ஊர்ல வேற நல்ல ஹாஸ்பிட்டலா இல்ல? அதுவும் நம்ம புள்ளை படிச்ச படிப்புக்கு எல்லாம் போட்டி போட்டுட்டு வேலைக் கொடுப்பான்.” என்று அவர் சேதுராமனிடம் சொல்ல, அடுத்த அதிர்ச்சியா என்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
“என்ன பிரச்சினை டா பல்லவி? யார் என்ன பண்ணாங்க?” என்று கஸ்தூரி மகளைப் பார்த்து கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா தங்கச்சி. பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல. ரெண்டு வருஷமா வேலைக்குப் போகுது. பாவம், புள்ளை கொஞ்ச நாள் வீட்ல இருக்கட்டும்” என்று பல்லவிக்கு பதிலாக, தானே பதில் அளித்தார் கதிர்வேலன்.
கதிர்வேலன் எதையும் காரணம் இன்றி சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை தான் அவர்களுக்கு. அதிலும் பெண் பிள்ளை விஷயத்தில் எப்பொழுதுமே கதிர்வேலனுக்கு கூடுதல் அக்கறை உண்டு என்பது அவருக்கு நன்றாக தெரியும். அது அவரின் மகள் வித்யா என்று இல்லை. சங்கவி, பல்லவிக்குமே அது தான் என்று அவருக்கு தெரியும்.
ஒரு புரிதலுடன், “நீங்க சொன்னா சரி தான்” என்றார் சேதுராமன்.
‘மாஸ்டர் மைண்ட் பல்லவி உனக்கு. ஒவ்வொரு காயையும் என்ன லாவகமா நகர்த்தறா பாரு. கேடி. இவளை காப்பாத்த எங்க அப்பாவும் ஹாஸ்பிட்டலை குறை சொல்றார் பாரு.’ மனதில் அவளை சிலாகித்துக் கொண்டான் தேவா. அவனுக்கு சிரிப்பு வரும் போலிருந்தது.
பல்லவிக்கு பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்து தான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன் தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளை கட்டாயப்படுத்தி வேலைக்கு செல்ல வைத்ததும் அவன் தான்.
“வேலைக்கு போக விருப்பம் இல்லனா? அப்புறம் எதுக்கு காலேஜ் போய் படிச்ச? பேருக்கு பின்னாடி போட்டு பீத்திக்கவா?” என்று அவன் கத்தியது இன்னமும் அவள் காதில் எதிரொலிக்கிறது.
அவள் ஒன்றும் பொழுது போகாமல் வேலைக்குச் செல்லவில்லை. விரும்பி தான் சென்றாள். ஆனால், அங்கிருந்த சூழல் அவள் எதிர்பாராதது. அவளை மிகவும் பயமூட்டியது. தொடர்ந்து அங்கே வேலையை செய்ய முடியாத அளவு பயம் அவளை மழை நனைத்த சாலையின் ஈரத்தைப் போல அப்பிக் கொண்டது.
தேவா சொல்லி தேர்ந்தெடுத்த படிப்பு தான். அவள் இரவு நேர வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்த போது, வீட்டில் அவன் தான் பேசி சம்மதிக்க வைத்தான். ஆனால், இன்று அவனை எப்படி சமாளிப்பது என்பது தான் வேலையை விட்டதை விடப் பெரிய கவலையாக பல்லவிக்கு தெரிந்தது.
அவள் விளக்கி சொன்னால் தேவா புரிந்து கொள்வான் தான். ஆனாலும், அவளுள் பயம், ஒற்றை மின்னலுக்கு முளைக்கும் மழைக் காளானை போல துளிர்த்து நிற்கிறதே.
அவளை பி.எம்.எல்.டி (BMLT) பேச்சுலர் ஆஃப் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி படிக்கச் சொன்னது தேவா தான்.
அவள் படித்து முடித்து ஒரு புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில், நல்ல சம்பளத்துடன் அசிஸ்டன்ட் லேப் டெக்னீசியன் வேலையிலும் சேர்ந்தாள். வேலைக்கு சேர்ந்த புதிதில் ரத்த மாதிரிகள் எடுக்கவும், அதை பரிசோதனை செய்யவும் என நாட்கள் கழிந்தது. அப்பொழுதெல்லாம் வேலையில் எதுவும் அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. எளிதாக தான் இருந்தது.
நாளடைவில் சாலையில், விபத்தில் அடிப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து வரச் சொல்லும் பொழுது தான் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வலியில் துடிப்பர்களை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. மனம் பதறிப் போனது.
அது போக குழந்தைகளுக்கான கேன்சர் வார்டில் சென்று இவள் ஒரு முறை ரத்தம் சேகரித்து விட்டு வர, அங்கிருந்த பிஞ்சுகளை கண்டவளின் மனதே கனத்துப் போய் விட்டது.
ஒரு முறை யாரும் இல்லா நள்ளிரவில் இவள் மட்டும் இரவு நேரப் பணி புரிகையில், வித்தியாசமாய் ஒரு நோயாளியை இவள் சந்திக்க நேர்ந்தது.
தலையில் மூன்று இடங்களில் வெட்டு. முக்கியமாக அந்த அரிவாள், அப்பொழுதும் அவரின் தலையில் தான் இருந்தது. அவருக்கு தேவையான முதலுதவி செய்தும், அரிவாளில் சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தை காண்கையில் பல்லவிக்கு மூச்சே வரவில்லை.
அன்று வந்திருந்த நோயாளிக்கு தன் நிலை குறித்து கவலை இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், பல்லவி வெகுவாக பயந்துப் போய் இருந்தாள். பரிசோதனைகளுக்கு தேவையான அளவு ரத்த மாதிரிகளை எடுப்பதற்குள், அவளின் கைகளில் இருந்த நடுக்கம் உடல் முழுமைக்கும் பரவி, ஒரு மாதிரி ஆகி விட்டாள் அவள். அப்பொழுதே, அந்த நிமிடமே முடிவு செய்து விட்டாள் பல்லவி. தனக்கு இனி இந்த வேலை வேண்டாமென்று, தன்னால் இனி இந்த வேலையை செய்ய முடியாது என்று அவளுக்கு தெளிவாக தெரிந்து போனது.
எதற்கும் தயங்காமல் வேலையை விட்டு விட்டாள். இதோ, இன்று கதிர்வேலனை வைத்து வீட்டிற்கும் அதை தெரியப்படுத்தியும் விட்டாள். இப்போது, அவள் மனம் மழை துடைத்த பூமியை போல் பளிச்சென்று மாறி இருந்தது.
“சரிம்மா, நேரமாச்சு. நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார் சேதுராமன்.
“சரிங்க அண்ணா” என்ற கனிமொழி, கஸ்தூரிக்கு ஒரு தலையசைப்பை தந்து, அவரின் கைகளில் பாயாசம் நிறைந்த பாத்திரத்தை திணித்தார்.
“நாளைக்கு வேலைக்கு போகாம, வீட்ல இருந்து ரெஸ்ட் எடு சூர்யா” என்று சூர்யாவை பார்த்து சொல்லவும் மறக்கவில்லை கனிமொழி.
“சரிங்க அத்த” என்று அவனும் கஸ்தூரியுடன் இணைந்து நடந்தான்.
கதிர்வேலன் சிறிது நேரத்திற்கு முன்பு தான் கடைக்கு கிளம்பி இருந்தார்.
“நாளைக்கு வரேன் அத்த” என்று கனிமொழியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வேகமாக ஓடிப் போய் தாயுடன் இணைந்துக் கொண்டாள் பல்லவி. ஆனாலும், அவளால் தப்பிக்க முடியவில்லை.
“பல்லவி, ஒரு நிமிஷம் இங்க வா” என்று சத்தமாக அழைத்தான் தேவா. பல்லவி, சூர்யா இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்.
“தேவா, கூப்பிடுறான் பாரு. என்னனு கேட்டுட்டு வா பல்லவி” என்று விட்டு முன்னே நடந்தார் கஸ்தூரி. தேவாவின் முறைப்பை பார்த்து விட்டு, அமைதியாய் அம்மாவை வால் பிடித்து நடந்தான் சூர்யா.
சின்ன தயக்கத்துடன் அவன் முன் போய் நின்று, “என்ன தேவா?” என்றாள் பல்லவி.
“சூர்யாக்கு டிடி இன்ஜக்சன் இன்னும் போடல. ஃப்ரிட்ஜ்ல இருக்கு, நாளைக்கு போட்டுக்கலாம்” என்று சத்தமாக சொன்ன தேவா, சத்தத்தை குறைத்து,
“இன்னைக்கு சாயங்காலம் எனக்கு கால் பண்ணும் போது நீ எங்க இருந்த பல்லவி?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க,
‘அச்சோ, மாட்டினேன்’ என்று மனதினுள் அலறினாள் பல்லவி.
“வேலை முடிச்சுட்டு வந்துட்டு.. அப்புறம்…” என்று அவள் திக்கி, திணற, அவன் பார்வையை மாற்றிக் கொள்ளவேயில்லை.
அவன் கண்களைப் பார்த்து பொய் சொல்ல முடியாமல், “காலேஜிக்கு போனேன் தேவா. ப்ரெண்ட் அங்க வேலைப் பார்க்கறா இல்ல? அவளைப் பார்க்க போனேன்” என்று உண்மையை ஒப்பித்து இருந்தாள்.
அதில் மெலிதாக புன்னகைத்தவன், “வேலையை எப்ப விட்ட?” என்று அவன் அடுத்த கேள்வியை கேட்க,
“நேத்து காலையில பேப்பர் போட்டேன்”
“நோட்டீஸ் பீரியட்?” என்று அவன் புருவம் உயர்த்த,
“முடியாது சொல்லிட்டேன்” என்றாள் தயங்கி,
“சரி போ. நல்லா ரெஸ்ட் எடு. குட் நைட்” என்று அவன் சொல்ல, இப்போது அவனை சந்தேகமாக பார்ப்பது அவள் முறையானது.
ஆனாலும், தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடி விட முயற்சித்தாள்.
இரண்டே எட்டில் அவளை நெருங்கி, அவளோடு வீடு வரை துணைக்கு வந்து, அவள் வீட்டிற்குள் போனதும் தான் திரும்பி நடந்தான் தேவா.
அடுத்தடுத்து வந்த நாட்களில் கல்யாண பேச்சு வார்த்தை தொடங்கி, ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
பல்லவி நினைத்தது போல, எதுவும் அத்தனை சுலபத்தில் நடந்து விடவில்லை.
அவர்களுக்கு சாதகமாக பேசிய கதிர்வேலனே பெண் வீட்டாரை குறித்து நன்கு விசாரித்து திருப்தியான பின்னே, அடுத்த கட்டத்துக்கு நகர விட்டார்.
அவள் பெரிதும் பயந்த, வீட்டோடு மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் நிபந்தனை அல்ல. கல்யாண பெண்ணின் நிபந்தனை என்பது பின்னர் தான் தெரிய வந்தது.
சூர்யா ஒரு பக்கம் பாரதியிடம் பேசி அவளை சரிக் கட்ட, பாரதியின் வீட்டினரும் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் கல்யாணத்திற்கு பின் அண்ணன் இங்கு தான் இருப்பான் என்பதில் நிம்மதி கொண்டாள் பல்லவி.
அவளுக்கே அது அல்பத்தனமாக தான் பட்டது. தன்னைப் போல தான் பாரதியும், பெற்றவர்களுக்காக யோசித்து இருக்கிறாள் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது.
ஆனாலும், அவளது பெற்றோரை அவளால் தனியாக விட முடியாது என்ற எண்ணமே பல்லவிக்கு மேலோங்கி இருந்தது.
அடுத்த பதினைந்தாம் நாள் அவளது அண்ணன் சூர்யாவின் திருமணம் முறையாக பேசி முடிக்கப்பட்டு, கல்யாண தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த மாத இறுதியிலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டினரும் ஒருமனதாக முடிவெடுத்து இருந்தனர். ஏனென்றால் அடுத்த மாதம் மார்கழி. பின்னர் தை வரை காத்திருக்க வேண்டும், எதற்கு நல்லக் காரியத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு என்று கார்த்திகையில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணத்துடன் உடனே தேதியை குறித்திருந்தனர்.
இடையில் இருபது நாட்களே இருந்ததால் அனைவருக்கும் திருமண வேலை வரிசைக் கட்டி நின்றது.
நல்லவேளையாக வேலையை விட்டோம். பெற்றோருக்கு உதவியாக இருக்க முடிகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள் பல்லவி.
ஆனால், அதே அண்ணனின் திருமண வீட்டில் தான், அவளின் திருமணமும் யாரோ ஒருவனுடன் முடிவாகப் போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
நாளை நடக்கப் போவதை அவள் அறிந்திருந்தால், அண்ணன் காதலுக்கு உதவி இருப்பாளா பல்லவி?
அவன் கல்யாணத்திற்கு இத்தனை முனைப்பை காட்டி இருப்பாளா? செய்திருப்பாள் தான். ஏனென்றால், அண்ணன் சூர்யா மேல் அவள் வைத்திருந்த பாசம் அப்படி.
ஆனால், அதே அண்ணன் தங்கையின் மேல் அவள் அளவுக்கு பாசம் கொண்டிருந்தானா?
அதே திருமண வீட்டில் நண்பன் தேவா கேட்கப் போகும் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறான் சூர்யா?
திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்துக் கொண்டிருந்தது. பத்திரிக்கை அடித்து வந்தாகி விட்டது. ஆனால், அலைந்து திரிந்து கொடுக்க முடியாமல் மழை, இடையில் நுழைந்து தொல்லை செய்துக் கொண்டிருந்தது.
பல்லவியின் பிரிய மழை அவளுக்கு என்ன தரக் காத்திருக்கிறதோ?