சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்துக் கொண்டிருந்தது.
அவர்கள் தேர்ந்தெடுத்து கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி.
மணமகன் – சூர்யநாராயணன்.
மணமகள் – திவ்யபாரதி
இருவரின் பெயரையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் அண்ணன் சூர்யா ஒரு புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் ஹெச்.ஆர். அதே நிறுவனத்தில் டீம் லீடராக பணி புரிகிறாள் அவளது வருங்கால அண்ணி திவ்யபாரதி.
பல்லவி எதிர்பார்த்த படி எல்லாம் அமைந்ததில் அவளுக்கு வெகு திருப்தி.
அம்மாவுடன் கூடவே, மழையையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு அலைந்து முக்கால்வாசி சொந்தங்களுக்கு பத்திரிக்கையும் விநியோகித்தாகி விட்டது.
நாட்கள் குறைவாக இருந்ததால், வெளியூர் சொந்தங்களுக்கு பத்திரிக்கையை தபாலில் அனுப்பி வைத்து விட்டார்கள்.
திருமண ஜவுளி, நகை என எல்லாம் நல்லபடியாக எடுத்து முடிந்தாகி விட்டது.
திருமணத்திற்கு இன்னும் ஒரே ஒரு வாரமே இருந்தது. வீட்டில் இருந்த மற்ற எல்லோரைக் காட்டிலும் பல்லவி தான் அத்திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தாள். அண்ணனின் காதலை தானே ஜெயிக்க வைத்து விட்ட குதூகலம் அவளுள் மிகுந்திருந்தது.
வித்யா, சங்கவி என இரு வீட்டு பெண்களும், தங்களின் பிள்ளைகளுடன் அப்போதே வந்து விட்டார்கள்.
அவர்கள் வீடு இப்போது முழுவதுமாக திருமண கோலம் பூண்டிருந்தது.
“பல்லவி, இங்க வாயேன். பல்லவி, உன்ன அப்பா கூப்பிட்டாங்க.” என்று வாசலில் நின்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் தேவாவின் தங்கை வித்யா.
“இதோ வந்துட்டேன் வித்யா” என்று பதிலுக்கு கத்தினாள் பல்லவி.
“உள்ள வந்து சாப்பிட்டு போடா வித்யா. உனக்குப் பிடிச்ச பூரி, கிழங்கு பண்ணேன்” என்று அவளை உள்ளே அழைத்தார் கஸ்தூரி.
பெரிதாக பிகு செய்துக் கொள்ளாமல், உள்ளே வந்து உணவருந்த அமர்ந்தாள் வித்யா.
“அம்மா, நான் வேலைக்கு கிளம்பிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு சிட்டாக பறந்த மகளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. சட்டென்று சிரித்தே விட்டாள் வித்யா.
வாசல் வரை சிட்டாக பறந்தவள், அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.
“உங்களுக்கு என் மேல பாசமே இல்லம்மா. பிள்ளை சாப்பிடாம போகுதேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா? என் மேல அக்கறையே இல்ல உங்களுக்கு” என்று புலம்பிக் கொண்டே, அடுப்படிக்குள் நுழைந்து கேஸரோல் தேடி எடுத்து, அதில் ஐந்தாறு பூரிகளை அலுங்காமல், குலுங்காமல் அழகாக அடுக்கி எடுத்துக் கொண்டாள்.
இன்னொரு குட்டி பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மாசலாவையும் எடுத்துக் கொண்டாள்.
திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாக, வேறொரு குட்டிக் கிண்ணம் எடுத்து, புசுபுசுவென உப்பலாக இருந்த இரண்டு பூரியை அதில் எடுத்துக் கொண்டவள், மெதுவாக திரும்பி கஸ்தூரியையும், வித்யாவையும் பார்த்தாள்.
“என்ன பார்க்கறீங்க? இது என் பங்கு, நான் எடுக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு பையை தேடி எடுத்து அதில் பாத்திரங்களை அடுக்கினாள்.
“ஏம்மா, பூரிக்கு தேங்கா சட்னி செய்யல?” என்று கேட்டவளை, கஸ்தூரி இடுப்பில் கை வைத்து முறைக்க,
“எங்க வீட்டு அடுப்பு சூடு, எங்கம்மா கண்ணுலயே தெரியுது” மெல்லச் சொல்லிக் கொண்டாள்.
அதை கேட்டு வித்யா சிரிக்க,
“நீயெல்லாம் ஒரு தாயா? சோத்த பார்த்ததும், உன் புள்ளையை மறந்துட்டு பூரியை முழுங்கிட்டு இருக்கப் பார்” என்று உதட்டை சுளித்து சொல்லிய பல்லவி,
“சரி, சரி. நான் சொன்னதுக்கு ஃபீல் பண்ணாம நல்லா சாப்பிடு. குட்டி பையனுக்கு நான் பூரி எடுத்துட்டு போறேன். இதோ..” என்று கிண்ணத்தை காட்டினாள்.
“அம்மா, பை. வரேன் வித்யா” என்று விட்டு வாசலை நோக்கி நடந்தாள் பல்லவி.
“அங்க உங்க வீட்ல போய் சாப்பிட போறதுக்கு என்ன அலம்பல் பாரு இவளுக்கு” என்று மகளுக்கு கேட்காத சிறு குரலில் சொன்ன கஸ்தூரி, “தேங்கா சட்னி கேட்ட பல்லவி? வேணாமா?” என்று சத்தமாக கேட்டார்.
“வேணாம் மா. இனி நீங்க அதை எப்போ அரைச்சு.. தாளிச்சு… போங்க மா” பதிலுக்கு கத்திக் கொண்டே கேட்டை திறந்து வெளியில் நடந்தாள் பல்லவி.
ஏதோ ஒரு பாடலை மெலிதாக முணுமுணுத்துக் கொண்டே தேவாவின் வீட்டினுள் நுழைந்தாள் அவள்.
அவளைக் கண்டதும், “அத்த…அத்த” என்று தேவாவின் கைகளில் இருந்து, அவளை நோக்கி தாவினான் வித்யாவின் மூன்று வயது மகன் விக்ரம்.
“செல்லக் குட்டி” என்று அவனை வாங்கிக் கொண்டாள் பல்லவி. அவள் கைகளில் இருந்த பை தேவாவின் கரத்திற்கு மாறி இருந்தது.
“பல்லவி, சாப்பிட வாடா” உள்ளிருந்து கனிமொழியின் குரல் மட்டும் வெளியே வந்தது.
“இதோ அத்த” என்று அடுப்படியை நோக்கி தானாக நகர்ந்தன அவளது கால்கள்.
“வாவ், வெண்பொங்கல், கத்திரிக்கா கொத்சு. இந்த காம்பினேஷன் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு. இல்லத்த?” என்றவள், மெல்ல அவர் பக்கமாக குனிந்து,
“உங்க புள்ளைக்கு பிடிக்காதது செய்யறீங்களே, எப்படி?” என்று அவள் கண் சுருக்கி கேட்க, அவள் கேட்ட விதத்தில் சிரித்து விட்டார் கனிமொழி.
“மாமா சாப்பிட வர்ற நேரம். வாயடிக்காம, இதெல்லாம் எடுத்து வை, ஓடு” என்று அவர் சொல்ல, உணவு இருந்த பாத்திரங்களை சாப்பாட்டு மேஜைக்கு எடுத்துச் சென்றாள் அவள்.
அங்கே தேவாவும், குட்டி விக்ரமும் அமர்ந்து பூரியை உண்டு கொண்டிருந்தனர். அதிலும் சரியாக புசுபுசுவென்று பூரித்து மலர்ந்திருந்த பூரி விக்ரமின் தட்டில் இருந்தது.
பொங்கலுக்கு செய்திருந்த தேங்காய் சட்டினியை எடுத்து தேவாவின் தட்டில் பரிமாறியவள், “எண்ணெயில் பொரிச்ச புட் நிறைய சாப்பிடக் கூடாதாம் டாக்டர். உங்களுக்கு தெரியாதது இல்ல. இருந்தாலும் சொல்லி வைக்கறேன்” என்று அவள் சொன்ன விதத்தில் தேவாவுக்கு சிரிப்பு வரும் போலிருந்தது.
ஆனால், உணவில் மும்முரம் போல காட்டிக் கொண்டான்.
“இங்க பாரு விக்ரம். உன் மாமா கூட சேர்ந்து நல்லா பூரியா சாப்பிடு. அப்புறம் அவர்கிட்டயே போய் பம்ல ஊசிப் போட்டுக்கோ என்ன?” என்று அவள் சொன்ன நொடி,
“சாப்பிடுற குழந்தையை என்ன சொல்லி மிரட்டிட்டு இருக்க? நீ தானே பூரியை கொண்டு வந்த?” என்று தேவா எகிற,
“உங்களுக்கு பிடிக்கும்னு தான் கொண்டு வந்தேன் டாக்டரே. இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போனதும் முதல் வேலையா, உங்க ரத்த அழுத்தம் செக் பண்ணி பாருங்க. எக்கச்சக்கமா ஏறிப் போய் இருக்கும் போல. காலையிலேயே திட்டுறதை பாரு” கடைசி வாக்கியத்தை முணுமுணுத்துக் கொண்டே அவள் செல்ல,
“அவளை ஏன்டா அதட்டுற?” என்று அவனை அதட்டிக் கொண்டே வந்தார் கனிமொழி.
இனி தன் பேச்சு எடுபடாது என்று உணர்ந்து தலையை குனிந்து கொண்டு, பாதி பூரியை எடுத்து வாயில் திணித்தான் தேவா.
“பல்லவி மா, விக்ரம் குட்டி எல்லாம் சாப்பிட உட்கார்ந்தாச்சா? நான் தான் லேட்டா?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் கதிர்வேலன்.
அவருக்கு பொங்கலை தட்டில் பரிமாறினாள் பல்லவி.
“என்ன விக்ரம் குட்டிக்கும், தேவாக்கும் பூரி. எனக்கு மட்டும் பொங்கல்? அதுலயும் நெய் வாடையே காட்டாத பொங்கல்?” என்று கதிர்வேலன் கேட்க,
“பூரி தேவாக்கு, பல்லவி கொண்டு வந்தா. உங்களுக்கு நாளைக்கு தண்ணில பொரிச்சு தர்றாளாம் பூரி. இப்ப பொங்கலை சாப்பிடுங்க” என்று கறாராக கனிமொழி சொல்ல, அமைதியாய் உணவில் கை வைத்தார் கதிர்வேலன்.
பல்லவி தனக்கும், கனிமொழிக்கும் இரு தட்டுகளில் உணவை வைத்து, ஒன்றை அவர் பக்கமாக நகர்த்தி விட்டு, தானும் உண்ண ஆரம்பித்தாள்.
“நீங்க ஈவ்னிங் நாலு மணிக்கு மேல வாங்க மாமா போதும். அதுவரை ஆஃபிஸை நான் பார்த்துக்கறேன்” என்ற பல்லவி,
“இடைல சந்தேகம் எதுவும்னா உங்களுக்கு கால் பண்றேன் மாமா. நீங்க அத்தையை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க.” என்று விட்டு அவர் பதில் சொல்ல இடம் கொடுக்காமல் மீண்டும் உண்ண ஆரம்பித்தாள் அவள்.
“ஒரு வாரம் தானே ஆகியிருக்கு மா. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் டா. அதுக்கு அப்புறம் நீ மட்டும் ஆஃபீஸை தனியா கவனிப்ப. இப்போ நானும் வர்றேன்” என்று சற்றே தயங்கியபடி கதிர்வேலன் சொல்ல, மறுத்து தலையை பலமாக அசைத்தாள் பல்லவி.
“முடியாது மாமா. நீங்க ஒரு வாரம் கழிச்சு, ஆஃபீஸ் வர்றதுக்கு இன்னொரு சாக்கு சொல்வீங்க. அதெல்லாம் சரி வராது. இன்னையில் இருந்து ஆஃபீஸ் நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க. நைட் மட்டும் நீங்க ஆஃபீஸ் வந்தா போதும். அவ்ளோ தான். நான் சொல்லிட்டேன்.” லேசாக சிரித்தபடியே சம்மதமாக தலையை அசைத்தார் கதிர்வேலன்.
விஷயம் இது தான், கடந்த ஒரு வாரமாக பல்லவி தேவா டிராவல்ஸில் வேலை செய்கிறாள். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. தேவா டிராவல்ஸை கதிர்வேலனுடன் இணைந்து அவள் தான் பார்த்துக் கொள்கிறாள்.
டிக்கெட் புக்கிங், பார்சல் புக்கிங், பேருந்துகளின் அன்றைய கண்டிஷன் தொடங்கி, போதுமான அளவு டீசல் நிரப்பப்பட்டு விட்டதா மற்றும் ஓட்டுநர்களின் உடல் நலம் வரை அனைத்தையும் சரி பார்க்க, ஒரே வாரத்தில் கற்று விட்டிருந்தாள் பல்லவி.
தனக்கு பின்னர் தேவா டிராவல்ஸை யார் பார்த்துக் கொள்வார் என்ற கவலை கதிர்வேலனுக்கு எப்போதுமே உண்டு. அதிலும் மகளும், மகனும் வளர்ந்த பின்னர் இன்னுமே அதிகரித்து இருந்தது.
மகள் வித்யா விருதுநகரில் ஒரு தொழில் குடும்பத்தில் மருமகளாகி போன பின்னர் டிராவல்ஸை அவள் கவனிப்பாள் என்று எதிர்பார்க்கவே முடியாது என்பதும் அவருக்கு நன்றாக புரிந்தது.
தேவா பனிரெண்டாம் வகுப்பு முடித்து மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதும், ஒரு தந்தையாய் மகனை மருத்துவனாக்கி பார்ப்பதில் அவருக்குமே பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் இருந்தது தான். ஆனால், உள்ளூர சிறு ஏமாற்றமும், ஏக்கமும் அவருக்கு இருக்கவே செய்தது.
தேவா எம்பிபிஎஸ் முடித்து, மேலே பிடியாட்ரிஷன் படிப்பும் முடித்து, குழந்தைகள் நல மருத்துவனாக ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் பணிக்கு சேர்ந்த போது, அவருக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து போனது தேவா டிராவல்ஸின் எதிர்காலம்.
இனி தேவா டிராவல்ஸ் நிலை என்ன என்ற கவலை அவரை பெரிதும் வருத்தவே செய்தது.
ஆனால், சிறிது காலத்தில் எல்லாம் மனதை தேற்றிக் கொண்டு தொழிலை கவனித்தார் அவர்.