இன்று அவரே எதிர்பாராத விதமாக அவரின் பிரியத்திற்குரிய பல்லவி, அதை பொறுப்பேற்றுக் கொண்டது அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.
“சரி, பல்லவி மா. நீ பார்த்துக்கோ. ஆனா, ஏதாவது பிரச்சனைன்னா… வராது தான். அப்படி வந்தா, யோசிக்காம, மாமாக்கு உடனே கால் பண்ணணும், என்ன?” என்று அவர் கேட்க, “சரிங்க மாமா” என்றாள் பல்லவி.
அவர்கள் பேசுவதை மௌனமாய் பார்த்தபடி, உணவினை உண்டுக் கொண்டிருந்தான் தேவா.
கனிமொழி கலங்கிய கண்களை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார்.
அவருக்கு பதினைந்து வயது பல்லவி அவரிடம் பேசியது தான் அப்போது நினைவில் வந்தது.
அன்று தீபாவளி திருநாள். ஊரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது. தெருவே பலகாரம், புத்தாடை, பட்டாசுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
பல்லவி வீட்டிலும் அதே கதை தான். பல்லவிக்கு பட்டாசு வெடிக்கப் பிடிக்காது. அதனால் கனிமொழியிடம் வந்து விடுவாள் அவள். சூர்யா, சங்கவி மட்டும் வெடித்து தள்ளிக் கொண்டிருப்பார்கள்.
அன்றைய தினம் தீபாவளி பலகாரம் கொடுக்க தேவா வீட்டிற்கு வந்தாள் பல்லவி.
தேவா தன் மருத்துவ புத்தகத்திற்கு தலையை கொடுத்து இருந்தான். வித்யா, சங்கவியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். கனிமொழி மட்டும் தனியாக அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தார்.
“அத்த, இந்தாங்க. அம்மா கொடுத்திட்டு வரச் சொன்னாங்க.” என்று கொண்டு வந்திருந்த பாத்திரங்களை அடுப்படி மேடையில் எடுத்து அடுக்கினாள் பல்லவி. பதில் ஒன்றும் சொல்லாமல், அடுப்பில் வேலையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் கனிமொழி.
“ஏன் அத்த ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவர் கைப் பிடித்து கேட்டாள் பல்லவி.
அவள் குரல் கேட்டு அங்கு வந்து நின்றான் இருபத்தியோரு வயது தேவா.
“ஏன் மா, இப்படி இருக்கீங்க? அப்பா, எந்த பண்டிகைக்கு நம்ம கூட இருந்தார். இன்னைக்கு இல்லைனு ஃபீல் பண்றீங்க நீங்க?” என்று அவன் எரிந்து விழ, அவனை நன்றாக முறைத்து வைத்தாள் பல்லவி.
கனிமொழியின் கையில் இருந்த கரண்டியை பிடுங்கி, ஓரமாக வைத்தாள் பல்லவி.
“நீங்க கவலைப்படாதீங்க அத்த. நான் படிச்சு முடிச்சதும், நம்ம டிராவல்ஸை நான் பார்த்துக்கறேன். அப்புறம் மாமா ஃப்ரீ ஆகிடுவாங்க. அவங்க சாப்பிட்டாங்களானு நீங்க கவலைப்பட வேணாம். ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்டேங்கறாங்கன்னு ஃபீல் பண்ணி அழ வேணாம். முக்கியமா, இது போல பண்டிகை நாள்ல உங்க கூட இல்லைனு கண்ணை கசக்க வேணாம். அதுக்கு நான் பொறுப்பு. சத்தியமா சொல்றேன் அத்த. பாருங்க. ஒரு நாள் நான் அதை செய்துக் காட்டுவேன்”
கனிமொழியின் கைப் பிடித்து அவள் சொல்ல, கண் கலங்க, பல்லவியின் தலைக் கோதி அவள் நெற்றியில் ஆதூரமாக முத்தமிட்டார் கனிமொழி.
அவருக்கு கணவரின் வேலையை பற்றி நன்றாகவே தெரியும். திருமணமான புதிதில் கணவர் தன்னுடன் இல்லையே என்று அத்தனை கண்ணீர் வடித்திருக்கிறார்.
பின்னர் பிள்ளைகள் பிறந்து, அவர்கள் வளர்ந்து, அவர்களுக்கு பள்ளி, உடல்நிலை சரயில்லாத போது ஹாஸ்பிட்டல் என்று எதற்கும் கதிர்வேலன் வந்து நின்றது இல்லை. கனிமொழி போக போக அவரை புரிந்துக் கொண்டு, அவர் இல்லாமல் சமாளிக்கவும் கற்றுக் கொண்டிருந்தார்.
அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்கு பெரிதும் உதவினான் அவன்.
கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச வீடு என அனைத்திற்கும் பழகி விட்டிருந்தார். ஆனாலும், மனதின் ஓரம் சின்னதாக ஆசையும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் அவருக்கு இந்த வயதிலும் இருக்கத் தான் செய்தது.
அன்றைக்கு பல்லவி விளையாட்டுக்கு சொல்வதாக, தன்னை சமாதானப்படுத்த சொல்வதாக தான் நினைத்தார் கனிமொழி.
ஆனால், இன்று அவள் அதை செய்து விட்டு வந்து நிற்பதை பார்க்கையில் அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
அவள் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவில் இருப்பது போல தெரியவில்லை. ஆனால், கனிமொழிக்கு பல்லவியின் வார்த்தைகள் துல்லியமாக நினைவில் இருந்தது.
தேவா உணவை முடித்துக் கொண்டு, விக்ரமை தூக்கி, அவனுக்கு கை, வாய் கழுவி அவளிடம் வந்து நீட்டினான்.
“வித்யா, நம்ம வீட்ல இருக்கா” என்று சொன்ன பல்லவி.
“ரெண்டே நிமிஷம் இரு தேவா, வந்துடுறேன்” என்று கையை கழுவி விட்டு அடுப்படிக்குள் புகுந்தாள்.
கனிமொழி, கதிர்வேலனுக்கு டீயும், தேவாவிற்கு லெமன் டீயும் போட்டு கொண்டுப் போய் நீட்டினாள்.
மௌனமாய் அவள் நீட்டிய டீயை குடித்து, கோப்பையை அவளிடம் நீட்டிய தேவா, “உனக்கு விருப்பம் இல்லனா, எதுக்கு நான் சொன்ன படிப்பை எடுத்துப் படிச்ச பல்லவி?” என்று கேட்க, பதில் இல்லை பல்லவியிடம்.
“இல்ல தேவா. எனக்கு…” கை நீட்டி அவளை மேலே பேச விடாமல் தடுத்த தேவா,
“வேண்டாம், விடு. நான் கிளம்பறேன்” என்று விட்டு, வேகமாக வெளியேறி இருந்தான்.
அவன் காரை நோக்கி நடக்க, அவனையே பார்த்தபடி சிலையாக நின்றிருந்தாள் பல்லவி.
இது எதுவுமே அவள் திட்டமிட்டு செய்தது இல்லை என்று அவனிடம் எப்படி சொல்வாள்? புரிந்து கொள்வானா தேவா? இந்த விஷயத்தில் அவளிடம் ஏன் விளக்கம் கேட்கவே முனையவில்லை அவன்? அவனுக்குப் பிடித்த மருத்துவ தொழிலை, ஏன் அவள் மேலும் திணிக்கிறான் அவன்?
பல்லவியின் மனதில் கேள்விகள் சூழ்ந்து அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. அவள் மனதைப் போலவே வானமும் கரும் மேகங்களால் சூழ ஆரம்பித்தது.
அவள் நின்ற இடத்தில் இருந்தே தேவாவை பார்த்தாள். அவளைத் திரும்பியும் பாராமல் காரில் ஏறப் போனான் தேவா. ஓடிப் போய் அவன் கைப் பிடித்து நிறுத்தினாள் பல்லவி.
மழை பூந்தூறலாக பொழிய ஆரம்பித்தது.
மெல்ல நிமிர்ந்து வானத்தை பார்த்த தேவா, “ஏய், கையை விடு பல்லவி” கத்தினான். மெல்ல மழை அவனை நனைக்கத் தொடங்கி இருந்தது.
“முடியாது” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“அதே தான், நானும், உன்கிட்ட எதையும் கேட்க முடியாது. உன் பதில் எனக்குத் தேவையில்ல.” என்று அவன் இறுகிய குரலில் சொல்ல, கண்களை மூடித் திறந்தாள் பல்லவி.
முத்து முத்தாக மழைத் துளிகள் அவள் முகத்தில் கோலம் போட துவங்கியது.
“உனக்கு என்கிட்ட சொல்லிட்டு செய்யணும்னு தோணல இல்ல? அப்புறம் எதுக்கு இப்போ மட்டும் காரணம் சொல்ல வர்ற? எனக்கு உன் காரணம் எதுவும் தேவையில்ல.” என்று அவளை மென்மையாக தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன், காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்தான்.
“தேவா” என்று அழைத்தாள் பல்லவி.
“எனக்கு ஹாஸ்பிட்டல் நேரமாச்சு பல்லவி. நான் என்ன எங்க மாமன் கம்பெனியிலா வேலை பார்க்கறேன். என் இஷ்டத்துக்கு வேலைக்குப் போக?” என்று அப்போதும் அவளை வார்த்தைகளால் குத்திக் காட்டி விட்டே காரை நகர்த்தினான்.
“மழையில நனையாம, வீட்டுக்குள்ள போ” அவனிடம் இருந்து அனிச்சையாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.
பல்லவியின் முகத்தில் அதுவரை இருந்த கோபம் மறைந்து மெல்ல புன்னகை முளைத்தது.
அதை அவனிடம் இருந்து மறைத்தபடி வீட்டிற்குள் போனாள் அவள்.
அடுத்த பத்தாம் நிமிடம் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு டிராவல்ஸ் ஆஃபீஸ் விரைந்தாள் பல்லவி.
நான் வீட்டில் ஓய்வெடுக்கிறேன் என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு, சேதுராமனுடன் இணைந்து கல்யாண வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் கதிர்வேலன்.
நாட்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக நகர, நாளை விடிந்தால் திருமணம் என்று வந்து நின்றது காலம்.
அன்றைய இரவு நிச்சயமும், வரவேற்பும் ஏற்பாடாகி இருந்தது.
பெரியவர்கள் முன்னிலையில் நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு, மணமக்கள் உடை மாற்றி வரவேற்பிற்கு தயாராக வந்து நின்றனர்.
வீட்டினர் ஓரிடத்தில் அமர முடியாத படி ஆளுக்கொரு வேலை அங்கே அவர்களுக்கு இருந்து கொண்டே இருந்தது.
மணமேடையில் மணமக்களுக்கு அருகே இருந்த பல்லவி, கீழே தேவா யாரையோ வரவேற்று முன்னிருக்கையில் அமர வைப்பதை பார்த்தாள்.
“தேவா..” என்று சத்தமாக அழைத்தாள்.
சூர்யா புன்னகையுடன் அதைப் பார்த்திருக்க, அவனின் மனைவியாகப் போகும் பாரதியின் முகத்தில் சின்னதாய் ஒரு அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது.
“என்ன பல்லவி?” என்று அவளுக்கு பக்கத்தில் வந்து நின்று கேட்டான் தேவா.
“எதுவும் வேணுமா சூர்யா?” என்று நண்பனையும் விசாரிக்க மறக்கவில்லை அவன்.
“அண்ணாக்கு இல்ல, எனக்குத் தான் பசிக்குது தேவா. குடிக்க ஏதாவது வேணும்” என்றாள் பல்லவி.
ஒரு நொடி நிமிர்ந்து அவள் முகம் பார்த்த தேவா, “இதோ வரேன்” என்று கீழே இறங்கி உணவு கூடத்தை நோக்கி நடந்தான்.
ஐந்தாம் நிமிடம் கையில் அங்கிருந்த அனைவருக்கும் குடிக்க குளிர்பானம் எடுத்து வந்திருந்தான். பல்லவிக்கு மட்டும் சூடாக காஃபி.
காஃபியை கையில் எடுத்த பல்லவி, “உனக்கு தேவா?” என்று கேட்க, “வேணாம். நீ குடி” என்றான்.
“ஓகே” என்று குடித்து முடித்து விட்டு, காகித கோப்பையை அவனிடம் நீட்டினாள் பல்லவி.
“இப்ப தான் எனக்கு மூச்சே வந்தது வித்யா” என்றாள் பல்லவி.
“உன்னை விட வயசுல பெரியவங்களை மரியாதையா பேச மாட்டியா பல்லவி?” என்று சிரித்துக் கொண்டே பாரதி கேட்க, அந்நேரம் ஒரு குடும்பம் மணமக்களை வாழ்த்த மேடை ஏறியது. பல்லவிக்கு என்னவோ போலாகி விட்டது.
“அவ குழந்தையில் இருந்தே அப்படி கூப்பிட்டு பழகிட்டா பாரதி. அதான் சட்டுனு மாத்திக்க முடியல” தங்கைக்கு மெல்லிய குரலில் பரிந்துக் கொண்டு வந்தான் சூர்யா.
“உங்களை, நான் என்ன சொல்லி கூப்பிட வித்யா?” என்று பல்லவி முணுமுணுக்க, அது பக்கத்தில் நின்றிருந்த பாரதியின் காதிலும் விழுந்திருந்தது.
“அக்கா சொல்லி கூப்பிடு. உன்னை விட அஞ்சு வயசு பெரியவங்க” பட்டென்று சொன்னாள் பாரதி.
“சரிங்க அண்ணி” என்ற பல்லவி, திரும்பி வித்யாவை பார்த்து,
“தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அக்கா” என்றாள் அழுத்தமாக, உதடு கடித்து சிரிப்பை அடக்கினாள் வித்யா.
சரியாக அப்பொழுது பார்த்து சங்கவி மேடையேறி வர, “அதோ காரணமே மேடை ஏறி வருது பார். என் செல்ல அக்கா சங்கவி” என்று அவள் கிசுகிசுக்க, “பேசாம இரு பல்லவி” என்றாள் வித்யா.
“நீ என்னை அண்ணி சொல்லு” என்று வித்யா சொல்ல, சடாரென்று அவர்களைத் திரும்பி பார்த்தாள் பாரதி. ஆனால், ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை அவள்.
“ரொம்ப கஷ்டம் வித்யா அண்ணி” என்று சொல்லி விட்டு, மேலே பாரதி பேச இடம் கொடுக்காமல் கீழே இறங்கிப் போனாள் பல்லவி.
அவளை கடந்து மேடையில் ஏறிய சங்கவி,
“உங்களை மேடையில் நின்னுட்டு வாயாடாம இருக்கச் சொன்னாங்க அத்த” என்று வித்யாவிடம் அவள் சொல்ல, சன்ன சிரிப்புடன் சரி என்று தலையாட்டினாள் வித்யா.
“இந்த குட்டி பிசாசு எங்க போச்சு? அம்மா அவளை அண்ணா கூடவே தானே நிற்கச் சொன்னாங்க” என்று சங்கவி சொல்ல, வித்யா பல்லவியை விழிகளால் தேடினாள்.
பத்து நிமிடம் கழித்து அவள் மீண்டும் மேடையேறி வர, “அதென்ன தேவா மட்டும் ஸ்பெஷல்? அவன் கிட்ட மட்டும் வேற மாதிரி பேசுற?” என்று சங்கவி கேட்க, பல்லவிக்கு கோபம் கொப்பளித்து கொண்டு வந்தது.
இது சங்கவி அடிக்கடி கேட்கும் கேள்வி தான். ஆனால், இன்று பதில் கொடுத்தே ஆவது என்ற முடிவுடன் அவளைத் திரும்பிப் பார்த்தாள் பல்லவி.
வித்யா கிளுக்கென்று சிரித்து விட திரும்பி அவளை முறைத்தாள் சங்கவி. “பல்லவி சொன்னா, தேவா இப்பவும் உன்னை அடிப்பான் சங்கவி. பார்த்துக்கோ. அப்புறம் உன் இஷ்டம்” என்றாள் வித்யா, சிரித்துக் கொண்டே.
அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த விருந்தினர் மேல் கண் இருந்தால் கூட, காதை பின்னால் பேசிக் கொண்டிருந்தவர்களின் மேல் வைத்திருந்த சூர்யாவுக்கு, சட்டென்று சிரிப்பு வரும் போலிருந்தது.
ஒரு தொண்டை செருமலில், இருமலில் அதை லாவகமாக மறைத்தான் அவன்.
ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியை கைக் காட்டி சொன்னது அவன் நினைவில் வந்து போனது.
தேவாவின் முன் பதினொரு வயது சங்கவி மிரண்டு நின்றதும் அவனுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
“இன்னொரு தடவை அவளை அழ வச்ச, உன் மண்டையை வீங்க வச்சிடுவேன்” என்று தேவா மிரட்டியது, அப்படியே படம் போல அவன் கண் முன் தோன்றி மறைந்தது.
சங்கவி அழுது கொண்டே சென்றது. வித்யா, பல்லவியின் கைப் பிடித்து அவர்களின் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனது, தேவா பல்லவியை தேற்றி, “வா சைக்கிள்ல ஒரு ரவுண்ட்ஸ் போவோம்” என்று அழைத்துப் போனது என தொடர் காட்சிகள் அவன் கண் முன் வலம் வர, சூர்யாவின் இதழ்கள் தாமாக புன்னகையில் மலர்ந்தது.
“அவ குட்டி பாப்பா சங்கவி. அவளை நாம தான் பார்த்துக்கணும்” என்று தங்கையிடம் அவன் சொன்னதும் சூர்யாவிற்கு பசுமையாய் நினைவில் இருக்கிறது.
அதுவரை வீட்டின் செல்லமாய் இருந்த சங்கவிக்கு, தன் இடத்தை தட்டிப் பறித்த குட்டித் தங்கையை பிடிக்கவே இல்லை. அதிலும் அனைவரும் அவளைத் தூக்கி கொஞ்ச, பல்லவியின் மேலான அவளின் கோபம் கூடிக் கொண்டே போனது.
இப்போது அவளுக்கும் திருமணமாகி, அவளே தாயான பின்பு தான் தங்கையின் மேல் அவளுக்கு பாசம் துளிர்த்து இருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது துளி வெறுப்பும் இது போல அவளை அறியாமல் வெளிப்பட்டு விடும்.
“அக்கா” என்று சங்கவியை அழைத்த பல்லவி,
“நாம எல்லோரும், எல்லோர்கிட்டேயும் ஒரே முகம் காட்டுறது இல்ல கா. அம்மாகிட்ட ஒரு மாதிரி இருக்கோம்.
அதுவே அப்பா கிட்ட, சூர்யா அண்ணா கிட்ட வேற ஒரு முகம் காட்டுறோம்.
உன்னையே எடுத்துக்கோ, அத்தான் கிட்ட ஒரு முகம் காட்டுற, உன் பொண்ணு, நம்ம பவி பாப்பா கிட்ட வேறொரு முகம் காட்டுற, இதுவரை நாங்க யாருமே பார்க்காத முகம் அது. பாசம், அன்பு, ஓவர் ப்ரொட்டக்டிவ்னு முழுக்க முழுக்க நாங்க யாரும் பார்க்காத உன்னோட முகம் அது.
உன்னை போல தான் கா, நானும். ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு முகம் காட்டுறேன்.
கனி அத்த, கதிர் மாமா, வித்யா, தேவா என்னை குழந்தையா கொண்டாடினவங்க. இன்னமும் எனக்குள்ள இருக்க குழந்தையை தொலைய விடாம பார்த்துக்கறாங்க. நான் அவங்ககிட்ட நானாவே இருக்க முடியுது. அதுனால எனக்கும் அவங்களை அதிகம் பிடிக்குது.
நம்மளை யார் நம்மோட குழந்தைத் தனத்தோட இருக்க விடுறாங்களோ, அங்க.. அவங்க பக்கத்துல நாம ரொம்ப சந்தோசமா இருப்போம் கா. உன்கிட்டயும் அத்த, மாமா பாசமா தானே இருக்காங்க. நீயும் தேவா, வித்யா கிட்ட பேசு. யார் வேணாம்னு சொன்னா?.” என்று பல்லவி நீளமாக சொல்லிக் கொண்டே போக,
“தேவா கிட்ட, சோடா கொண்டு வர சொல்லவா பல்லவி?” என்று வித்யா கேட்க, தன் இறுக்கம் மறைந்து பக்கென்று சிரித்து விட்டாள் பல்லவி.
“இப்படி மேடையில் நின்னு பேசிட்டு இருக்கறதுக்கு அத்தை திட்டப் போறாங்க” என்று வித்யா சொல்ல,
சூர்யா, பாரதி, சங்கவி என அனைவரின் முகத்திலும் புன்னகை கீற்றாக வந்து போனது.
சூர்யா மலர்ந்த முகத்துடன் நண்பனை கண்களால் தொட்டு பார்வையால் சிரித்தான்.
“சாரி, பாப்பா” என்றாள் சங்கவி. பல வருடங்களுக்கு பிறகான அவளின் பாப்பா எனும் அழைப்பு, பல்லவியை கண் கலங்க செய்தது.
“மன்னிச்சுட்டேன் கா” என்று சிரித்துக் கொண்டே மேடையை விட்டு கீழிறங்கிப் போனாள் பல்லவி.
அவளின் கைப் பிடித்து தடுத்து நிறுத்திய சங்கவி, “தேவா உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல?” என்று கேட்க,
“ம்ம்ம், எனக்கு என்னை விட அவனைத் தான் அதிகம் பிடிக்கும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு நகர்ந்தாள் பல்லவி.
தேவா நின்ற இடத்தில் இருந்தே பல்லவியை முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ அவனைத் திரும்பிப் பார்ப்பதாகவே இல்லை.
ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறான், இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்துடன் அவளை நெருங்கினான் அவன்.
பாரதியின் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தாள் பல்லவி. சத்தமாக சிரித்து, மலர்ந்த முகத்துடன் நின்றவளின் பக்கத்தில் போன தேவா, “பல்லவி” என்று அழைக்க, அதிர்ந்து திரும்பினாள் பல்லவி.
அவனை பார்வையாலேயே முறைத்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல், “உன்னை அம்மா கூப்பிட்டாங்க. என்னனு போய் கேளு” என்று கோபக் குரலில் சொல்ல, நிமிர்ந்து அவன் முகத்தை ஆராய்ந்தாள் பல்லவி.
“சாரி” என்று அதுவரை அவளுடன் பேசிக் கொண்டிருந்த பாரதியின் அண்ணன், அவளின் பெரியப்பா மகன் பிரவீனிடம் விடைப் பெற்று கனிமொழியை தேடி நகர்ந்தாள் பல்லவி.
மேடையில் சூர்யாவின் கையை சுரண்டினாள் அவனின் தற்போதைய காதலி, நாளை மனைவியாகப் போகும் திவ்யபாரதி.
“என்ன பாரதி? எதுவும் வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே, அவர்களுக்கு பின்னே நின்றிருந்த தங்கை சங்கவியை பார்த்தான் சூர்யா.
“இல்ல சூர்யா, எதுவும் வேணாம்” என்ற பாரதி, “ஒன்னு கேட்கவா? தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல?” என்று கேட்க,
“கேளு மா” என்றான் சூர்யா.
“தேவா..” என்று அவள் ஆரம்பிக்க சூர்யாவின் முகம் லேசாக மாறவே செய்தது.
“பல்லவி, தேவா நடுவுல… ஏதாவது?” என்று அவள் கேள்வியாக இழுக்க, சிறிய தயக்கத்திற்கு பின்,
“ச்சே, இல்ல பாரதி. அப்படி எதுவும் எனக்கு தெரிஞ்சு இல்ல” என்றான் சூர்யா.
‘எதுவும் இருக்குமோ?’ என்று பதில் சொன்ன பிறகே அவன் மனதில் கேள்விகள் முளைத்து கிளைப் பரப்ப ஆரம்பித்தது.
“இல்ல, ஏன் கேட்டேன்னா… எங்க பிரவீன் அண்ணாக்கு பல்லவியை கேட்கலாம்னு பெரியம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு. எங்க அண்ணனுக்கும் தான்” என்று சேர்த்தே சொன்னாள் பாரதி.
“ஓ, சரி பாரதி” என்று முடித்துக் கொள்ளப் பார்த்தான் சூர்யா.
“வீட்ல இதைப் பத்தி பேசும் போது, மாமா கிட்ட நீங்க தான் பேசி, சம்மதிக்க வைக்கணும்” என்று அவள் அழுத்தி சொல்ல, புது மாப்பிள்ளையின் தலை தானாக ஆடியது.
கனிமொழியை தேடிக் கொண்டு சென்ற பல்லவியை கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தான் பிரவீன்.
தேவாவிற்கு அவனுள் அதுவரை மறைந்து இருந்த ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் பளிச்சிட்டு வெளியில் வந்தது.
வேக வேகமாக மணமேடையை நோக்கி நடந்தான் அவன். நேரே போய் நண்பனின் முன் நின்றான்.
நெருங்கிய உறவினர் குடும்பம் ஒன்று அவர்களை வாழ்த்தி கொண்டிருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழிறங்கும் வரை பொறுமையாய் நண்பனின் பக்கத்தில் நின்றான் தேவா.
அவர்கள் சென்றதும் திரும்பி நண்பனைப் பார்த்த சூர்யா, “என்ன தேவா? ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமே சரியில்ல?” என்று கேட்க, தேவாவின் பார்வை பாரதியை தொட்டு மீண்டது.
உடனே தேவாவின் கரம் பற்றி அங்கிருந்து நகர்ந்து நின்றான் சூர்யா. தங்கள் பேச்சை பாரதி கேட்க முடியாத அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தினான்.
“சொல்லு தேவா” என்றவனை, தீர்க்கமாக பார்த்த தேவா, நொடிக் கூட தாமதிக்காது, “பல்லவி, பல்லவியை என்கிட்ட… எனக்கு கொடுத்துடு சூர்யா” என்றான்.
ஆனால், அதைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவிற்கு தான் பலவித உணர்வுகள், பல்வேறு கேள்விகள்… கேட்டதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறினான் அவன்.
இதே கேள்வியை முன்னொரு முறை சூர்யாவின் பெற்றோரிடம் தேவா கேட்டது அவன் காதில் அந்நொடி எதிரொலித்தது.
“தேவா… தேவா, நீ பல்லவியை… அவளை நேசிக்கிறியா? டூ யூ லவ் ஹர்?” கேட்டான் சூர்யா.
என்ன சொல்லப் போகிறான் தேவா?
தேவாவின் பதிலை கேட்கும் சூர்யாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறது?
ஒருபக்கம் வித்யாவின் மகன் விக்ரமையும், மறுபக்கம் சங்கவியின் மகள் பவித்ராவையும் கையில் வைத்துக் கொண்டு, ஜன்னல் வழியே மழை நீரைப் பிடித்து அவர்களுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த பல்லவி அறிவாளா?
தன் பிரிய மழை தன்னுடன் விளையாடப் போகும் ஆட்டத்தை???