“சக்கரைக்கே சக்கரையா? கொடுத்திடுவோம்” என்று பக்கத்தில் இருந்த பல்லவியை பார்த்து, கிசுகிசுத்து கண் சிமிட்டினான் தேவா.
அவனையும் அறியாமல் வெகு இயல்பாக வந்து விழுந்திருந்தன வார்த்தைகள். தான் சொன்னது தனக்கே கேட்ட பின்பு தான், என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து மெலிதாக அதிர்ந்தான் அவன். “இதையும் சூர்யாவிற்காக செய்கிறாயா?” என்று அவன் மனமே அவனுக்கு எதிராக நின்று கேள்விக் கேட்க, பலமாக அதற்கு மறுப்பு தெரிவிக்க தோன்றியது அவனுக்கு.
பல்லவியோ தலையை திருப்பி அவனை விழி விரித்து பார்த்து, “நீ இன்னைக்கு ஆளே சரியில்ல தேவா” என்று மூக்கை சுருக்கினாள்.
“ஐயோ” என்றானது அவனுக்கு, “சொதப்புறோமோ?” என்று மனதினுள் பதறவே செய்தான்.
புதிதாக ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் கண் பார்த்து, காதல் வசனம் பேசுவது கூட எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
ஆனால், இத்தனை நாட்கள் அன்பு, நேசம், பாசம், அக்கறை என்று ஒரு எல்லைக்குள் நின்று விட்ட பல்லவியின் கண் பார்த்து காதல் வசனம் என்ன, அந்த அர்த்தத்தில் எதையுமே பேச அக்கணம் அவ்வளவு தடுமாறினான் தேவா. அவன் சொன்னதற்கு எதிர்வினையாக பல்லவி சிரித்திருந்தால் கூட போதும், மேலும் முன்னேறி காதல் வசனம் என்ற பெயரில் எதையாவது பிதற்றி இருப்பான். ஆனால், அவளோ, “நீ சரியில்லை தேவா” என்று விட்டிருக்க, அவனுக்கு தர்மசங்கடமாகிப் போனது.
அவளும் தீவிரமாக யோசித்து அவ்வார்த்தைகளை சொல்லவில்லை என்பது அவனுக்கு எங்கே தெரிய போகிறது.
அவனுக்கே அவனது நிலை சிரிப்பை மூட்டியது.
முகம் முழுக்க விரிந்த புன்னகையுடன் அவன் தலையை திருப்ப, அங்கே சேதுராமனிடம் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இருந்தது பாரதியின் குடும்பம்.
அதை கண்டதும் தேவாவிற்கு மின்னல் வெட்டாமலேயே, மனதில் பயக் காளான் ஒன்று முளைத்து வேக வேகமாக வளர ஆரம்பித்தது. ஆனாலும், தன்னையும், பல்லவியையும் மீறி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கையில் தன் மனதிற்கு தானே திடம் கொடுத்துக் கொண்டான் அவன்.
பல்லவியின் கையில் இருந்த பவித்ரா தூங்கி விட, அவளை படுக்க வைக்க குழந்தையோடு எழுந்தாள் அவள். அவளோடு சங்கவியும் நகர, வித்யாவும் மகனை தூக்கிக் கொண்டு கணவனை கண்களால் தேடினாள்.
“நம்ம வீட்டுக்கு போகலாம் மா. குட்டி பையன் தூங்கி விழறான். இவரை வேற காணோம்” என்று சொல்லி வித்யா எழுந்து கொள்ள, அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டான் தேவா.
அவர்களின் வீட்டிற்கு செல்ல தேவா நகர, குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு நின்றிருந்தவனையே எதிர்ப் பக்கம் இருந்த அறையின் கதவில் சாய்ந்து நின்றபடி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி.
அவள் கண்களில் அவன் இதுவரை கவனித்திராத, இன்று தான் காணும் ஏதோ ஒரு உணர்வு அவனை என்னவோ செய்தது. இதயம் வலப்பக்கம் துடிப்பது போலிருந்தது அவனுக்கு.
அவளுக்கு இப்படி பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு, கைகளில் ஏந்திக் கொண்டு நிற்கும் அப்பாக்களை எவ்வளவு பிடிக்கும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.
எத்தனையோ முறை அவனைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வந்த போது அவனிடமே சொல்லவும் செய்திருக்கிறாள்.
“இந்த அப்பாங்க எல்லாம் குழந்தையை தூக்க தெரியாம, பயந்து பயந்து தூக்கி வச்சுட்டு, அதையே உலக அதியசம் போல பார்த்திட்டு நிக்குறது எவ்வளவு க்யூட்டா இருக்கு இல்ல தேவா? நீ அவங்ககிட்ட சொல்லலாம் இல்ல. நல்ல பிடிங்க சார், குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுன்னு” என்பவள்,
“எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சீன் இது. அவ்வளவு அழகா இருக்கு தேவா. இதுக்காகவே டெய்லி உன்னை பார்க்க வரலாம் போல” என்ற அவளின் ரசனையான வார்த்தைகள் இப்போது அவனின் காதில் கேட்க, அவளைப் பார்த்து, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.
மெலிதாக இதழ் பிரித்து புன்னகைத்து, “ஒன்றுமில்லை” என்று தலையசைத்து பார்வையை திருப்பி, மீண்டும் அவனில் விழிகளை பதித்தாள் பல்லவி.
“குட் நைட்” என்று வாயசைத்து விட்டு, தேவா நகர, பல்லவியும் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த வித்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
மெல்ல கனிமொழியின் பக்கம் திரும்பி, “அடுத்து தேவா அண்ணா கல்யாணம் தானே மா?” என்று அவள் குரலில் துள்ளலுடன் கேட்க,
“ஆமா டா. அவனுக்கும் வயசு ஆகிடுச்சு. சீக்கிரமே அவனுக்கும் முடிக்கணும். எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆச. நம்ம பல்லவி…” என்று அவர் சொல்லிக் கொண்டே நடக்க, அப்பொழுது, அவரின் காதில் விழுந்த வார்த்தைகள் அவரை மேலே பேச விடாமல் ஸ்தம்பித்து நிற்க செய்தது.
“அப்போ, பல்லவியை எங்க பிரவீனுக்கு கொடுக்க உங்களுக்கு சம்மதம் தானே சம்மந்தி?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாரதியின் பெரியம்மா.
வித்யா, கனிமொழி இருவரும் அதிர்ந்து நின்றனர்.
வாசலை நெருங்கி இருந்த தேவா, அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதவனாக சிலையாக மாறி நின்றான்.
அங்கிருந்த அனைவரும் சேதுராமன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடனும், பயத்துடனும் பார்த்திருந்தனர்.
மெதுவாக தொண்டையை செருமி, சரி செய்து, “பொண்ணு கல்யாண விஷயம், அவ தான் முடிவு செய்யணும். காலத்துக்கும் சேர்ந்து வாழப் போற அவ பிரியம், சம்மதம் தெரியாம, நான் எதுவும் சொல்ல முடியாதுங்க. பல்லவி கிட்ட பேசிட்டு நாங்க சொல்றோம்” என்றார் அவர்.
அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை வாயை திறந்து வெளியிட்டான் தேவா. அவரின் பதில் அப்படி ஒரு ஆசுவாசத்தை தந்தது அவனுக்கு, ஆனால், அவனின் உயிர் நண்பன் அதை ஒரு நொடி கூட நிலைக்க விடவில்லை.
“நான் ஏற்கனவே இதைப் பத்தி பல்லவி கிட்ட பேசிட்டேன் பா. அவளுக்கும் சம்மதம் தான்” என்றான் சூர்யா அழுத்தமாக, தேவா அதிர்ச்சியுடன் நண்பனை பார்த்தான்.
“என்னப்பா சொல்ற?” என்று சேதுராமன் கேட்க,
“நேத்தே பாரதி இதைப் பத்தி சொன்னா பா. அவங்க பெரியம்மாக்கும், அவங்க அண்ணா. அதான், பிரவீனுக்கும் நம்ம பல்லவியை பிடிச்சு இருக்குனு. நான் அப்பவே பல்லவி கிட்ட பேசினேன் பா. அவ சரி தான் சொன்னா” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தான் தேவா.
“அப்போ, வர்ற வாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து, வீட்டோட நிச்சயம் பண்ணிடலாமா? நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடணும்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாரதியின் பெரியம்மா.
தேவாவின் கண்கள் சூர்யாவின் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை.
உண்மையில் மனதில் பலமாக அடி வாங்கி இருந்தான் தேவா. நண்பனிடம் இருந்து நிச்சயமாக இப்படி ஒரு செயலை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை.
அவனுக்கு தன் மேல் கோபம் இருக்கும், அது உடனேயும் குறையாது என்று அவன் உணர்ந்தே இருந்தான். ஆனால், அவனை காயப்படுத்தும் நோக்கில் தங்கையை யாரோ ஒருவனுக்கு மணமுடிக்க அவன் கண் முன்னாலேயே சூர்யா பேசுவான் என்று தேவா கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
அவனுக்கு காரணம் சொல்ல முடியாமல் கண்கள் கலங்கியது. உணர்ச்சிகளை அடக்கியதில் தொண்டைக் குழி ஏறி இறங்க, சூர்யாவை கண்ணோடு கண் பார்த்து விட்டு, அதற்குள் மேல் ஒரு நொடி கூட தாமதிக்காது விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
“என்ன பண்றீங்க சூர்யா?” கோபமாக அவன் காதை கடித்த மனைவியை சூர்யா திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“நீங்க பண்றது சரியில்ல” சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பாரதி.
ஆம், பாரதி தான். அவளுக்கு தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்கு பல்லவியை கேட்கும் முன், அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியே சூர்யாவிடம் கேட்டிருந்தாள் பாரதி. அவனும் அவர்கள் நேசிக்கவில்லை என்று சொல்லவும் தான், அண்ணனுக்காக அவளை பெண் கேட்டது.
இருவரும் விரும்புகிறார்கள் என்று அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இந்த பேச்சையே தன் வீட்டினரை எடுக்க விட்டிருக்க மாட்டாள் பாரதி.
அன்று மதியம் புகைப்படம் எடுக்கையில் தேவா, பல்லவியை அணைத்தது போல நின்றிருந்த காட்சி அவளின் சந்தேகத்தை வலுப்படுத்த, தனது அண்ணன் பிரவீன் உடனான பல்லவியின் திருமண பேச்சை அவள் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.
அவளை உடை மாற்றி திருமண இரவிற்கு தயாராக பெரியவர்கள் சொல்ல, அதற்கு மேல் அங்கு நின்று எதையும் பேச முடியா நிலை அவளை அங்கிருந்து அதிருப்தியுடன் நகரச் செய்திருந்தது.
இரண்டு வருட காதலியே ஆனாலும், திருமண இரவை அதற்கே உரிய பதட்டமும், பரபரப்பும் இன்றி நிற்க வைத்த நண்பனின் மேல் முதலில் கோபம் தான் வந்தது சூர்யாவிற்கு.
தற்போது நண்பன் அடிபட்ட பார்வை பார்த்து விட்டு செல்லவும், அவன் அப்படியே அசையாமல் நின்றான். அவன் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. நண்பனின் கலங்கிய கண்கள் அவனை என்னவோ செய்தது. மெல்ல தலையை அசைத்து கொண்டான்.
தேவாவை பலமாக காயப்படுத்தி விட்டோம் என்று அவனுக்கு காலம் கடந்து புரிந்தது.
பதினேழு வயது பல்லவியை ஸ்கூட்டி ஓட்ட சொல்லித் தருகிறேன் என்று அவன் கீழே விழ வைத்திருக்க, நடுரோட்டில் வைத்து இருபத்தி மூன்று வயது சூர்யாவை, தேவா ஓங்கி அறைந்தது அவனுக்கு நினைவில் வந்தது.
“டேய் எருமை மாடே. உனக்கே ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாது. இதுல நீ அவளுக்கு சொல்லித் தர போறியாக்கும். அவளுக்கு பெருசா அடி படலை அதுனால நீ தப்பிச்ச. தள்ளிப் போடா” என்று அவனை ஒற்றைக் கையால் ஒதுக்கி தள்ளி விட்டு, பல்லவியின் கை, கால், முகம் என்று ஆராய்ந்தது அவனுக்கு கண் முன் காட்சியாக ஓடியது.
அன்றைக்கு அவளுக்கு லேசான சிராய்ப்புகள் தான். அப்போது முழு மருத்துவனாக மாறி இருந்த தேவா, மருந்தகம் சென்று தானே மருந்துகள் வாங்கி, பல்லவியை கவனித்ததும் அவனுக்கு நினைவில் இருக்கிறது.
இன்று யாரோ ஒருவனின் கையில் அவளது விருப்பத்தை அறியாமலேயே, அவளை பிடித்துக் கொடுக்க தான் சம்மதித்ததை, முதலில் தங்கை அறிந்தால் என்ன செய்வாள் என்று நினைத்து தலைக் குனிந்தான் சூர்யா. இன்னொருவன் அவளை காயப்படுத்தினால் தேவா என்ன செய்வான் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க விரும்பவில்லை அவன்.
அங்கே தந்தையும், பாரதியின் பிறந்த வீடும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவே இல்லை.
“சூர்யா, கொஞ்சம் இங்க வாங்க” என்று சங்கவியின் கணவர் அவனை அழைக்க, அவரோடு நடந்தவனின் மனது, நண்பனின் பின்னேயே போய் நின்றது. கண்கள் கலங்க, தொண்டைக் குழி ஏறி இறங்க தேவா பார்த்த பார்வையை இனி ஒருநாளும் தன்னால் மறக்கவே முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது.
இங்கே வீட்டிற்குள் நுழைந்ததும் தன் புலம்பலை ஆரம்பித்து விட்டார் கனிமொழி.
“என்ன வித்யா இப்படி பண்ணிட்டாங்க. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை டா. நம்ம கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுட்டு தான் செய்வாங்கன்னு நினைச்சேன்” என்று அவர் தொடங்க, வித்யா அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று அம்மாவை கேட்கவே இல்லை.
“இரு மா, வந்துடுறேன்” என்று விட்டு, ஓடிப் போய் கணவரும் மகனும் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை மூடி விட்டு வந்தாள்.
குழந்தையை உள்ளே கிடத்தி, அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டு, வெளியில் வந்த தேவா, நேராக மாடிக்கு சென்று விட்டான். அவன் மனநிலையை ஓரளவு புரிந்துக் கொண்ட வித்யா அண்ணனை கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யவில்லை.
தன் முன்னே வந்து நின்ற மகளின் கைப் பற்றி, “பல்லவியை நம்ம தேவாக்கு கேட்கலாம்னு இருந்தேன் டா. உங்க அப்பா தான். அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இதைப் பத்தி பேசுற வரை நாமளே அவங்க மேல கல்யாணத்தை திணிக்க கூடாதுனு சொன்னார். இப்போ பாரு. பல்லவி யார் வீட்டுக்கோ போக போறா. அன்னைக்கு அவ சூர்யா, பாரதி அவங்க கல்யாணம் பத்தி பேசும் போது கூட சொன்னேன் உங்கப்பா கிட்ட. சூர்யா கல்யாணத்தோட சேர்த்து, தேவா கல்யாணமும் பண்ணிடலாம். பல்லவி வீட்ல பேசுங்கன்னு.
அப்பவும் அவர் என் பேச்சை கேட்கல. புள்ளைங்க ரெண்டும் யதார்த்தமா பழகறாங்க கனி. அவங்களா விரும்பி கேட்கட்டும்னு சொன்னார். இப்ப என்ன ஆச்சு பார்” கனிமொழியின் குரலில் அத்தனை வருத்தம்.
அறைக்குள் செல்வதற்காக கீழிறங்கி வந்து கொண்டிருந்த தேவா, அம்மாவின் பேச்சை கேட்டு அப்படியே சத்தம் போடாமல் நின்று விட்டான்.
பல்லவியையும், அவனையும் இணைக்க அனைவருமே ஆவலாக இருந்திருக்கிறார்கள். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தானே அனைத்தையும் கெடுத்துக் கொண்டதை நினைத்து தலையை சுவற்றில் முட்டிக் கொண்டான் தேவா.
“அம்மா, கல்யாணம் மா. அப்படி ஒன்னும் நாளைக்கே நிச்சயம் பண்ணி, நாளைக் கழிச்சு கல்யாணத்தை வைக்க மாட்டாங்க. நாம பேசுவோம். பொறுமையா இரு மா.” என்று வித்யா சொல்ல, மனதே இல்லாமல் மறுப்பாக தலையை அசைத்தார் கனிமொழி.
“எழுந்திரு மா. படுக்க போவ. ரொம்ப லேட்டாகிடுச்சு” என்று அம்மாவின் கைப் பிடித்து, எழுப்பி, அவரை அறைக்குள் அனுப்பி விட்டே படுக்கச் சென்றாள் வித்யா.
அறைக்குள் நுழைந்து, உடை கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்த தேவாவுக்கு, பல்லவி அவனை கதவில் சாய்ந்து நின்று இமைக்காமல் பார்த்ததே கண் முன் வந்தது.
அந்த பார்வை இப்போதும் அவனை என்னென்னவோ செய்தது.
சூர்யா அவளின் திருமணம் குறித்து பேசிய வார்த்தைகளை நினைக்கையில் ஓடிப் போய் அவள் கைப் பிடித்து இழுத்து, அவளை தன்னோடு இறுக்கி கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
மெல்ல புரண்டு படுத்தான். அவனது அறையில் இருந்த ஒற்றை சோஃபாவில் இப்போதும் பல்லவி அமர்ந்து, அவனையே பார்ப்பது போலிருந்தது.
கண்ணை மூடித் திறந்தான், காட்சிகள் மாறி அவள் அங்கில்லை என்று உணர்ந்தவன், தலையணையில் ஓங்கி குத்தினான்.
கையெட்டும் தூரத்தில் இருக்கும் போது தோன்றாத உணர்வுகள் இப்போது புதிதாக முளைத்து அவனை இம்சிக்க, எதையும் தடுக்க இயலாமல் பல்லவியை சரணடைந்திருந்தான் தேவா.
அன்று, “என் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவியா பல்லவி?” என்று அவளிடம் நான் ஏன் கேட்டேன்? அவள், “உன் காதலை பிரித்து விடுவேன்” என்று சொன்ன போது, நான் ஏன் மகிழ்ந்தேன்?
என் வீட்டை, ஏன் அவளிடம், “நம் வீடு” என்று குறிப்பிட்டேன்?
காதல் கோட்டை தொட்டு, அவளிடம் பேசிய கணங்களை அவன் மனம் மெல்ல நினைவுப்படுத்த, தன்னைத் தானே கேள்விக் கேட்க ஆரம்பித்திருந்தான் தேவா.
“சக்கரை” என்று கண் சிமிட்டிய தேவாவின் முகம் கனவிலும் வந்து இனிப்பை கூட்ட, மென்நகையுடன் தன் உறக்கத்தை தொடர்ந்தாள் பல்லவி.
அன்று பகலில் எட்டி எட்டிப் பார்த்த மழை இரவில் ஓய்வெடுத்திருந்தது.
பல்லவியின் பிரிய மழை அவளை, அவளின் பிரியமானவனுடன் சேர்த்து வைக்குமா?
அன்று மழை வராதது போல, தேவாவும் அவள் வாழ்வில் வராமல் போய் விடுவானா?
மறுநாள் விடியலில் பல்லவியின் வீட்டுக்கு வந்த வித்யா, சூர்யாவின் முதுகில் ஓங்கி அடி ஒன்றை வைத்தாள்.
“என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று அவள் கத்த,
“அச்சோ, அம்மா. ஆளாளுக்கு என்னைப் போட்டு அடிங்க. புது மாப்பிள்ளை வித்யா நானு” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்த வித்யா,
“என்ன சொன்ன? ஆளாளுக்கா? அப்படின்னா? வேற யார் உன்னை அடிச்சா?” என்று அவள் கேட்க, அவன் சொன்ன பதிலில் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.
அவளை பொய் கோபத்துடன் கண்ணை சுருக்கி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, நண்பனின் மேல் இன்னும் கோபத்துடன் தான் இருக்கிறானா?