சூர்யாவின் திருமணம் நிறைவாக முடிந்திருந்தது. மதிய உணவு முடித்து திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் எல்லாம் விடை பெற்றிருக்க, குடும்பத்தினர் வீட்டிற்கு செல்ல நல்ல நேரம் பார்த்து வைத்து, அதன் பின் கிளம்ப காத்திருந்தனர். அதுவரை சற்றே ஓய்வாக அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
அந்த கிடைத்த கொஞ்ச நேரத்தையும் வீணாக்க விரும்பாமல் புகைப்பட கலைஞர்கள் மணமக்களை நிற்க வைத்து வளைத்து, வளைத்து விதவிதமாக படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் எல்லாம் சூர்யா சலிப்புடன் உச்சு கொட்டி, போதும் என்று விட, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் மீது கவனம் திரும்ப, மீண்டும் ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முதலில் பாரதியின் குடும்பமும், பின்னர் பல்லவியின் குடும்பமும் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பல்லவி, சங்கவி மற்றும் அவளின் கணவர், குழந்தை, பல்லவியின் பெற்றோர் என ஒன்றாக நின்று நாலைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, அதன் பின்னர் மேடையேறியது தேவாவின் குடும்பம். கனிமொழி, கதிர்வேலன், வித்யா அவளின் கணவர் மற்றும் மகன், கூடவே தேவா.
அவர்கள் மேடையேறவும் ஏற்கனவே அங்கு நின்றிருந்த பல்லவி குடும்பம் கீழிறங்க பார்க்க, அவர்களை நிறுத்தி அவர்களுடன் சேர்ந்து நின்று ஓரிரு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அதன் பின் அவர்கள் கீழிறங்க, வித்யா எட்டி சங்கவியின் கையைப் பிடித்து அவளை தன்னோடு நிறுத்திக் கொள்ள, அவர்கள் இருவரின் குழந்தைகளும் மணமக்களின் கைக்கு மாறி இருந்தது.
மறுபுறம் தேவாவின் கரம் நீண்டு, பல்லவியை பிடித்து நிறுத்தியது.
அதை சற்றும் எதிர்பாராத பல்லவி என்னவென்று அவனை நிமிர்ந்து பார்க்க, அவளை மென்மையாக இழுத்து தன்னருகில் நிறுத்தி இருந்தான் தேவா.
இதற்கும் முன்பும் இது போல, பல்லவி, சங்கவி உடன் அவர்கள் வெகு இயல்பாக பல புகைப்படங்கள் எடுத்து இருந்ததால் யாருக்கும் அவனது செய்கை தவறாக தோன்றவில்லை. யாரும் அவனை தடுக்கவும் இல்லை.
அனைவரும் முன்னே பார்த்து அசையாமல் நிற்க, தேவா எவ்வித தயக்கமும் இன்றி பல்லவியின் முதுகில் கைப் படர, அவளின் கரம் பிடித்து நின்றான். அவன் அத்தனை நெருங்கி நின்றதே பல்லவிக்கு அதிர்ச்சி தான். அதிலும், அவளை சுற்றி அவனது இடக் கரம் கொண்டு, அவளின் இட கரம் பற்றி இருக்க, லேசாக உள்ளுக்குள் இனிமையாக அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“மேடம் நேரா நில்லுங்க, இங்கப் பாருங்க” என்ற புகைப்பட கலைஞரின் குரலில் சட்டென்று அவள் திரும்பி முன்னே பார்க்க, சூர்யா லேசாக தலையை திருப்பி அவர்களைப் பார்த்தான்.
அவன் முகம் போன போக்கைப் பார்த்து, பாரதி அவன் இடையில் இடித்து சிரிக்க, அவனோ அதை கண்டுக் கொள்ளாமல் நின்றான்.
அவளின் ஒருபக்கம் கனிமொழி, மறுபக்கம் தேவா என்று நிற்க பல்லவியால் அவனிடம் எதுவும் கேட்கவும் முடியவில்லை.
சூர்யா அன்று காலையில் இருந்தே நண்பனை வேண்டுமென்றே தவிர்க்க, தேவாவிற்கு அத்தனை கோபமாக வந்தது. ஆனால், நண்பனின் கோபம் நியாயம் என்பதால் அமைதி காத்தான் அவன்.
அவன் முந்தைய இரவில் பேசியது, தன் மனதின் பயத்தை சொன்னது நண்பனிடம் தான். ஆனால், அவன் பல்லவிக்கு அண்ணன் என்பதை மறந்த தன்னையே இரவு முழுவதும் உறக்கமின்றி அத்தனை திட்டித் தீர்த்திருந்தான் தேவா.
விடியலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்கவே செய்தான்.
“சாரி டா சூர்யா. நீ பல்லவிக்கு அண்ணங்கறதையே அந்த நேரம் மறந்துட்டேன் டா. அந்த நேர பதட்டத்துல… ஐ வாஸ் எமோஷனல் டா. அதான்..” சூர்யாவின் முகம் பார்த்து தயக்கத்துடன் சொன்னான்.
ஆனால், சூர்யா அவனை மதிக்கவே இல்லை. அவ்வளவு அலட்சியப்படுத்தினான். பார்வையிலேயே அவனை தூர நிறுத்தினான் சூர்யா. அது தேவாவை அதிகமாக காயப்படுத்தியது.
இப்போதும், என்னவோ, “என் தங்கை உனக்கு இல்லை” என்று அவன் பார்வையும், செய்கையும் சொல்லாமல், சொல்வது போலிருக்க, வேண்டுமென்றே கூடி இருந்த குடும்பத்தினர் அத்தனை பேரின் முன்பும் அவள் எனக்குத் தான் என காட்டவே முயன்றான் தேவா.
அதிலும் பல்லவி அவனது வித்தியாசத்தை விழி விரித்து பார்த்தாளே தவிர, அவனிடமிருந்து விலகவில்லை. அவனை தள்ளி நிறுத்தவும் இல்லை எனவும் மெல்லிய மழைச்சாரல் அவன் மனதை நனைக்கவே செய்தது.
“அவளுக்கு நான் நல்ல கணவனாக இருப்பேனா?” என்று சந்தேகம் கொண்டு கேட்ட கணத்தில் இருந்து, சூர்யா கோபப்பட்டு, மறுத்து விட்டு சென்ற நொடியில் இருந்து அவன் மனம் அனிச்சையாய் பல்லவியின் பக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாய் சாயத் தொடங்கி இருந்தது.
அதுவரை அவன் கையிலே இருந்த ஒன்றை, அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போக முயற்சிக்கையில், விட்டு கொடுக்க முடியாமல் இறுக பற்றிக் கொள்ள சொல்லியது அவன் மனம்.
இரவு மணி எட்டை நெருங்கியிருக்க, உணவை முடித்து விட்டு, மாப்பிள்ளை, பெண் வீட்டார் இருவரும் பல்லவியின் வீட்டில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தனர்.
பல்லவி, சங்கவி, தேவா, வித்யா மற்றும் கனிமொழி, கஸ்தூரி என ஒன்றாக அமர்ந்து கல்யாணத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கஸ்தூரியை யாரோ வேலையாக அழைக்க, அவர் எழுந்து போனார்.
பல்லவியின் முகம் பற்றி, “சித்தி, சித்தி. எனக்கு மங்கி கதை சொல்லு” என்று பல்லவியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கவியின் மகள் பவித்ரா.
“அதுவே ஒரு குட்டி மங்கி தான்” பல்லவியை பார்த்து, சங்கவி சட்டென்று சொல்ல, தேவா அவளைத் திரும்பி முறைத்தான்.
“போ மா. சித்தி மங்கி இல்ல. நீ தான் மங்கி” என்றாள் குட்டி பவித்ரா.
“அப்படி சொல்லுடி, என் தங்கமே” என்றாள் வித்யா சிரித்துக் கொண்டே, அதற்கு பவித்ரா கூச்சத்துடன் கிளுக்கி சிரிக்க,
“அப்புறமா அம்மா கிட்ட தானே வரணும். அப்போ இருக்கு உனக்கு” என்று கோபமாக மகளை மிரட்டினாள் சங்கவி.
“வர மாட்டேன் போ மா. நான் சித்தி கிட்டயே இருந்துப்பேன்” என்று மழலையில் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு, சித்தியின் கன்னத்தை எச்சில் செய்து கொஞ்சியது குழந்தை.
“நல்லதா போச்சு. அவ கிட்டயே இருந்துக்கோ. நான் நிம்மதியா நாலு நாளைக்கு படுத்து தூங்குவேன்” என்ற சங்கவி,
“பதிலுக்கு என்னடா வேணும்” என்று கேட்டபடி வந்து நின்றார் கதிர்வேலன்.
அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க, “மாமா” என்று கோபமாக சொல்ல முயன்று முடியாமல், தானும் சிரித்து விட்டாள் சங்கவி.
“நீ குட்டி பிசாசு, நான் குட்டி சாத்தான் சித்தி” என்று பல்லவியின் கன்னம் பற்றி பவித்ரா சொல்ல,
சிரித்துக் கொண்டே, “ஆமா செல்லக் குட்டி. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பேர் வச்சிருக்கா, உங்கம்மா” என்று சொல்லி குட்டி பவியின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த தங்கையையே பார்த்தாள் சங்கவி.
“ஞாபகம் இருக்கா சங்கவி?” என்று கதிர்வேலன் கேட்க, “இல்லை” என்று மறுப்பாக தலையை அசைக்கத் தான் நினைத்தாள் சங்கவி.
ஆனால், பழைய நினைவுகள் தானாக வந்து, கோடை மழையைப் போல எட்டிப் பார்க்கவே செய்தது.
அவளுக்கு அப்போது எட்டு வயது தான். அன்றைக்கு அவள் பேசியது அவளுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக நினைவில் நின்றிருக்காது. ஆனால், இரண்டு குடும்பமும் பல முறை அதை சொல்லி, சொல்லியே அவளை கிண்டல் செய்து, அதை அவளின் மனதில் அழுத்தமாக பதிய வைத்து, அவளை மறக்க விடாமல் செய்திருந்தனர்.
அவளின் மனம் மெல்ல பல வருடங்கள் பின்னே போய், எட்டு வயது சங்கவியிடம் சென்று நின்றது.
அன்று காலை வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார் கஸ்தூரி.
“சங்கவி, சங்கவி இங்க வாடா” என்று அவர் சத்தமாக அழைக்க, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவர் முன் வந்து நின்றாள் சங்கவி.
“பாப்பாவை கனி அத்தை கிட்ட கொடுத்துட்டு, இந்த டம்ளரில் சீனி வாங்கிட்டு வாடா” என்று அவர் சொல்ல, ஏற்கனவே பள்ளி செல்ல பிடிக்காமல் நின்றிருந்த சங்கவி, மூன்று வயது பல்லவியை முறைத்து பார்த்து,
“என்ன மட்டும் ஸ்கூலுக்கு போக சொல்லி கம்பெல் பண்றீங்க மா. ஆனா, இவ மட்டும் வீட்ல இருக்கா? ஸ்கூல் போகலை?” என்று சிணுங்கிக் கொண்டே கேட்க,
“பாப்பா கேஜி தானே படிக்கறா சங்கவி. அவ லீவ் போட்டா எதையும் பெருசா மிஸ் பண்ண மாட்டா டா. அதுவும் இல்லாம அவ மழையில் நனைஞ்சு அவளுக்கு லேசா ஃபீவர் இருக்கு டா. கோல்ட் வேற. அதான், அவ ரெண்டு நாளைக்கு வீட்ல இருக்கட்டும். சரியா?” என்று மகளுக்கு புரியும் படியாக எடுத்துச் சொன்னவர், அவளின் தலைக் கோதி,
“பாப்பாவை அத்தை கிட்ட விட்டுட்டு வாடா. அம்மா ஆஃபீஸ் போகும் போது, அவளுக்கு மருந்து கொடுத்துட்டு, அத்தைக்கிட்ட சொல்லிக்கறேன்” என்க, மெல்ல தலையாட்டி விட்டு, தங்கையின் கையை பற்றிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள் சங்கவி.
தேவாவின் வீட்டிற்குள் நுழைந்து, “அத்த, அத்த” என்று சத்தமாக அவள் அழைக்க,
“இதோ வந்துட்டேன் சங்கவி” என்றபடி வந்து நின்ற கனிமொழி, பல்லவியை நோக்கி கை நீட்ட,
எப்போதும் தங்கையை அழ வைக்க, அவள் கேலியாக சொல்லும் வார்த்தைகள் அந்நேரம் அவளையும் அறியாமல் வந்து விட்டிருந்தது.
அப்போது பார்த்து டிராவல்ஸ் ஆஃபீஸ் செல்ல கிளம்பி வெளியில் வந்த கதிர்வேலன் சங்கவி சொன்னதை கேட்டு, ஒரு நொடி புரியாமல் விழித்து பின் சத்தமாக சிரிக்க ஆரம்பித்திருந்தார்.
கணவரை பொய் கோபத்துடன் முறைத்த கனிமொழி, சங்கவியை பார்த்து, “அம்மா என்ன சொன்னாங்க டா சங்கவி” என்று கேட்க,
“பாப்பாவை உங்க கிட்ட கொடுத்துட்டு, சீனி வாங்கிட்டு வரச் சொன்னாங்க அத்த” என்று இரண்டு கைகளிலும் இருந்ததை முன்னே நீட்டினாள் சங்கவி. ஒரு கரத்தில் டம்ளரும், மறு கரத்தில் பல்லவியின் கரமும் இருந்தது.
“பல்லவியை கொடுத்துட்டு, பதிலுக்கு சீனி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. அப்படித் தானே சங்கவி?” என்று கதிர்வேலன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க, “ஆமா மாமா” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் சங்கவி.
இப்போது கனிமொழியும் கூட சிரிக்கவே செய்தார்.
“ஒரு டம்ளர் என்னடா, ஒரு டன் சீனியே தரேன் தங்கமே” என்றவர்,
“இனி இந்த மாதிரி எல்லாம் சொல்லக் கூடாது சங்கவி மா. அம்மா சீனி கேட்டாங்க தான் சொல்லணும். பாப்பாக்கு பதிலாக கேட்டாங்க, சொல்லக் கூடாது என்ன?” என்று அவளுக்கு புரிய வைத்துக் கொண்டே திரும்பிப் பார்க்க, அங்கிருந்த குட்டி உணவு மேஜையின் மேல் அமர்ந்து கொண்டு, வித்யா, தேவா இருவரின் தட்டில் இருந்து இட்லி எடுத்து உண்டு கொண்டிருந்தாள் பல்லவி.
“பல்லவிக்கு பதிலாக சீனி கொடுங்க அத்த” என்று கனிமொழி சத்தமாக சொல்ல, நினைவுகளில் இருந்து அனைவரும் நிகழ் காலத்திற்கு திரும்பி இருந்தனர். அப்படி ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தனர். சங்கவியும் சேர்ந்து சிரிக்கவே செய்தாள்.
பல்லவிக்கு சிறு வயதில் அவளை அக்கா அழ வைத்த தருணங்கள் எல்லாம் இப்போது புன்னகைக்க வைக்கும் தருணங்களாக மாறி இருந்தன. வாழ்க்கை அவளுக்கு அப்போதைய சங்கவியின் மனநிலையை புரிந்துக் கொள்ள கற்றுத் தந்திருந்தது.
சங்கவிக்கு தன் குழந்தையை மடியில் இட்டு, தாய்மையுடன் தட்டிக் கொடுத்து உறங்க வைக்கும் தங்கையை பார்க்கையில் அவளுக்கு மனது தானாக நெகிழ்ந்து போனது.
இந்த சித்திக்கள் எப்படி சட்டென அக்காவின் குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் இன்றி, இன்னொரு அம்மாவாகி விடுகின்றனர் என்று அதிசயித்து பார்த்தாள் சங்கவி.