“தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு.. மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு..”
என்ற பாடலின் சப்தம் கூடிக்கொண்டே போகவும் மஞ்சள் நிற டாப்ஸ் மற்றும் ப்ளாஸோ பேண்ட் சகிதம் புருவமத்தியில் சிறுபொட்டுடன் சந்தனகீற்றோடு தளர பின்னபட்டிருந்த நெடுங்கூந்தல் அலட்சியமாக வலப்பக்கம் தவழ எதிரே கணினி மடியில் புத்தகம் என்று மும்முரமாக கேள்வித்தாள் தயாரித்து கொண்டிருந்த இளந்தளிரின் கவனம் சிதறியது.
“ப்ச் எத்தனைமுறை இவளுக்கு சொல்றது” என்ற முணுமுணுப்போடு தளிர் அறையினின்று வெளியில் வர அங்கே பாடல் வரிகளுக்கு ஏற்ப தோழிகளுடன் நடனமாடி கொண்டிருந்தாள் அவள் தங்கை இளந்தென்றல்.
“கைஸ் ரெடி..” என்ற தென்றல் மீண்டும் பாடலை ஒலிக்கவிட இசைக்கு ஏற்ப தற்போது பெண்கள் அனைவரும் இருபிரிவாக பிரிந்து சுழன்று பின் தத்தம் இணையுடன் சேர்ந்து ஆடவேண்டும்.. சுழன்ற தென்றல் சட்டென “ஹே ஸ்டாப் ஸ்டாப்!!” என்று நடனத்தை நிறுத்தி தன்னருகே இருந்தவளிடம் “ச்சோ என்ன வினோ இது எத்தனைமுறை சொன்னேன் நாங்க இந்த பக்கம் வரும்போது நீ எதிர்ல வரணும்னு திரும்ப திரும்ப அதே தப்பு பண்ற என்னடியாச்சு உனக்கு..??”
“ஸாரிடி மறந்துட்டேன்… எனக்காக மூணாவது முறையா நீ ஸ்டெப் மாத்தியும் எனக்கு இதுமட்டும் சொதப்புது பேசாம நான் இல்லாம நீங்க மட்டும் ஆடுங்களேன்..”
“என்ன பேசுற வினோ..? தளிர் அக்கா கல்யாண செலிபரேஷன்ல நீ இல்லாமையா நோ வே..!!” என்று கனி கூற..,
“வேறே என்ன செய்ய கனி ? நமக்கு ப்ராக்டீஸ் செய்ய அதிக நேரமில்ல கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு.. என்னமோ தெரியல என்னால அந்த பீட் மட்டும் ஆடமுடியலை இதனால நீங்க ரிஹர்சல் பார்க்க முடியாம போகுது.. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் எனக்கு ரைட் எடுக்க வரமாட்டேங்குது அக்காக்கு நாம பெஸ்ட் கொடுக்கணும்னுதான் சொன்னேன்”
“ஒன்னும் பிரச்சனையில்ல இப்போபார் நானும் கனியும் ஆடிக்காட்டுறோம்..” என்ற தென்றல் பாடலை ரீவைண்ட் செய்து தோழியுடன் கைகோர்த்து அசைவுகளை தொடர அதுநேரம் வரை அறை வாயிலில் அவர்களை கவனித்து கொண்டிருந்த தளிர் குறிப்பிட்ட வரிகள் முடியவும் வினோதினியுடன் கைகோர்த்து ஆடத்தொடங்கிட சுற்றியிருந்தவர்கள் ஹே என்று உற்சாக கூச்சலிட்டனர்.
“நீங்களும் ஆடுங்க..” என்று மற்ற பெண்களிடம் கூறியவள் பாடல் முடிவடையவும் ஹாலின் ஓரத்திற்கு விநோதினியை அழைத்து சென்று, “ரொம்ப பெர்ஃபெக்ட்டா ஆடுற வினோ ஏன் இந்த பீட் மட்டும் மிஸ் பண்ற..??” என்ற கேள்வியுடன் விநோதினியை அமர்த்தி அவள் அசைவுகளை தனியாக ஆடிக்காட்டவும்.
“வாவ் அக்கா சூப்பர் ஒரேமுறை பார்த்துட்டு கரெக்டா ஆடிட்டீங்க..”
“உனக்கு வராதுன்னு நீ முடிவு செய்துட்டு ஒரு விஷயத்தை செய்தா அது நிச்சயம் வராம போகும்டா உன்னால முடியும்னு நம்பு எல்லாருக்கும் வருது எனக்கு மட்டும் வரலைன்னு டென்ஷனாகாத.. ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் ஃபோகஸ், முக்கியமா வொர்க் ஆன் யுவர் வீக்னஸ்… ப்ராக்டிஸ் பண்ணினா நிச்சயம் உன்னாலயும் முடியும்” என்று அவளுக்கு சரியான அசைவுகளை சொல்லிகொடுத்து ஆடுவதற்கு உதவியவள் அடுத்த அரைமணி நேரத்தில் மற்றவர்களுக்கு இணையாக ஆட செய்திருந்தாள்.
“தேங்க்ஸ் க்கா..”
“இட்ஸ் ஓகேடா.. சத்தம் கொஞ்சம் கம்மியா வச்சுக்கோங்க நாளைக்கு குவெஸ்ட்டீன் பேப்பர் சப்மிட் பண்ணனும்”
“ஓகே ஓகேக்கா நீங்க கண்டினியூ பண்ணுங்க நாங்க குறைச்சுக்குறோம்” என்றவர்கள் சொன்னது போலவே சத்தத்தை குறைத்து மேலும் இரண்டு மணிநேரங்களுக்கு நடனபயிற்சியை முடித்திருந்தனர்.
அவர்கள் கிளம்பவும் அன்னைக்கு அழைத்த தளிர், “எங்கம்மா வந்துட்டு இருக்கீங்க..? நான் இப்போ வீட்ல இருந்து கிளம்பினா உங்களை பிக் பண்ண சரியா இருக்கும் கிளம்பட்டுமா..?”
“வேண்டாம் தளிர் ஆட்டோ பிடிச்சா பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன் கல்யாண பொண்ணுக்கு அதிகமா அலைச்சல்கூடாது.. அண்ணன் வர புதன்கிழமை கூரைபுடவை எடுக்க போகலாம்னு சொல்லியிருக்கார்..”
“புதனா..?”
“ஆமாடா ஏற்கனவே இரண்டுமுறை நாள் பிக்ஸ் பண்ணி தள்ளி போயிடுச்சு இனியும் தாமதிக்க வேண்டாம்னு சொல்லிட்டார்.. என்ன கலர் டிசைன் எப்படின்னு யோசிச்சு வை நான் வந்துடுறேன்” என்றதும் சரிம்மா என்றவள் தங்கையிடம் அவளுடைய தோழியின் அன்னையிடம் திருமண ப்ளவுஸ் தைப்பது குறித்து பேச சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
சாதத்தை வடித்துவிட்டு சாம்பாரை தாளித்து முடித்து அப்பளம் பொரிக்க துவங்கிய இளந்தளிர் இருபத்து நான்கு வயதின் நிறைவில் இருக்கும் பாவை. ரகுபதி சீதாலக்ஷ்மியின் மூத்த மகள் மட்டுமல்ல இன்னும் இரண்டு வாரத்தில் அம்பலவாணன் ஜெகதீஸ்வரியின் மருமகளாக செல்லவிருக்கும் புதுமணப்பெண்.
ஆசிரியர் பணியின் மீது கொண்ட அலாதி விருப்பத்தில் இளநிலை பட்டபடிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் வேலை பார்க்க துவங்கியவள் வேலை செய்துகொண்டே பிஎட் முடித்து முதுகலை பட்டப்படிப்பை முடிக்கவிருக்கிறாள். இருபது வயதான இளந்தென்றல் இளங்கலை இறுதியாண்டில் இருப்பவள் வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் முதுகலை சேர்ந்துவிடும் நோக்கத்தோடு தீவிரமாக படித்து கொண்டிருப்பவள் அதற்கான நுழைவு தேர்விற்கும் தயாராகிகொண்டு இருக்கிறாள்.
தளிருக்கு தென்றல் தமக்கை என்பதைவிட மற்றொரு அன்னை என்று சொன்னால் சரியாக இருக்கும்.. தங்கை கேட்டு எதையும் தளிர் இதுவரை மறுத்ததில்லை ஆனால் குணத்தில் தளிரும் தென்றலும் நேரெதிர்.. அதிர்ந்துகூட பேசதெரியாத வார்த்தைக்கு கூட வலித்துவிடக்கூடாதே என்று பேச்சில் கவனம் கொள்ளும் தளிருக்கு நேரெதிர் பதம் தான் தென்றல்.
*********************************
“என்னக்கா இது இன்னும் அம்மா வரல ஃபோன் செய்தாங்களா இன்னும் எவ்ளோ நேரமாகும் சொன்னாங்க..? எனக்கு ரொம்ப பசிக்குது நீ போறியா இல்ல நானே போய் கூட்டிட்டு வரட்டா..” என்றவாறே தென்றல் சமைத்த உணவுகளை ஹாலில் கொண்டு வைக்க வீட்டினுள் நுழைந்தார் அவர்கள் அன்னை சீதாலக்ஷ்மி.
அவர் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்ட தளிர் “பெரிப்பா என்னம்மா சொன்னாரு..” என்று கேட்க தென்றல் அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
‘என்னக்கா பேசற கல்யாணத்துக்கு பிறகு நீ இல்லைன்னாலும் நான் டியூஷன் தொடர்ந்து எடுப்பேன் அதோட பார்ட் டைம் ஜாப் போவேன்க்கா எப்பவும் அம்மாவை கஷ்டப்பட விடமாட்டேன் நீ கவலைபடாத..’ என்று பேசிக்கொண்டே செல்ல…,
‘அம்மூ என்ன பிரச்சனை உனக்கு..? கல்யாண பொண்ணு சந்தோஷமா இல்லாம என்னென்னமோ யோசிச்சிட்டு இருக்க இதோபார் உன் அம்மா உடம்புல தெம்பிருக்கு என் பிள்ளைகளை என்னால கரையேத்த முடியும்.. ஆண்டவன் நாம கனவுலகூட நினைச்சு பார்க்காத சம்பந்தத்தை கொண்டு வந்திருக்கார்.. மாப்பிள்ளையோட அப்பா அந்தஸ்து பேதம் பார்க்காம நம்ம வீடு தேடி வந்து பெண் கேட்டார் அப்படியிருக்கப்போ அவங்களை நாம அலட்சியபடுத்த முடியாது..”
“அதோட உன்னை விரும்பி கட்டிக்கபோற மாப்பிள்ளையோட சவுகரியம்தான் எனக்கு முக்கியம்… அவர் வீடு, ஆபிஸ் முழுக்க ஏசிலயே இருந்து பழக்கப்பட்டவர் உங்க கல்யாணத்துக்கு பிறகு இங்க வந்து இரண்டொரு நாள் தங்க வேண்டாமா..? நம்மால வீடு முழுக்க போட முடியலைனாலும் உன் ரூம்க்கு கண்டிப்பா போடணும்” என்றிட தளிரின் வாய் தன்னால் முடிக்கொண்டது.
இரண்டு படுக்கையறைகள் ஒரு சமையலறை, சின்னதாக பூஜையறை மற்றும் ஒரு ஹால் என்று கச்சிதமான வீடு அவர்களுடையது.. தளிர் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னர் டியூஷன் படிக்க வரும் மாணவர்களுக்காக மேலே ஒரு அறையை கூடுதலாக கட்டியிருந்தனர் அதுவும்கூட நான்கு புறம் சுவரெழுப்பி மேலே ஷீட் போட்டு இருப்பர்.. இத்தனை ஆண்டுகளாக வேலூர் வெயிலுக்கு பழக்கபட்டிருப்பவர்களுக்கு பெரிதாக ஏசியின் தேவை இல்லாது போயிருந்தாலும் மாப்பிள்ளைகாக சீதாலக்ஷ்மி விரும்பி செய்கிறார்..
“சரிம்மா பெரிப்பா என்ன சொன்னார்..?” என்ற தளிர் மூவருக்கும் தட்டு வைத்து உணவு பரிமாறிக்கொண்டே கேட்க, சொல்றேன் முதல்ல சாப்பிடுங்க என்று பிள்ளைகளோடு உணவை முடித்துகொண்டவர் சுவரில் சாய்ந்து அமரவும் பாத்திரங்களை ஒதுக்கிய தளிரும் தென்றலும் அவரின் இருபுறம் வந்தமர்ந்தனர்.
தளிர் அன்னையின் முதுகின் பின்னே தலையணை வைக்க தென்றல் அவர் பாதங்களை பிடித்து விட்டவாறே “சொல்லுங்கம்மா” என்றாள்.
“வரேன் சொல்லியிருக்காங்கடா எதுக்கும் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன ஃபோன் பண்ணி நியாபகபடுத்த சொல்லியிருக்கார்” என்றதில் தென்றலுக்கு அப்படி ஒரு கோபம்..
“என்னம்மா இது நாங்க அவரோட தம்பி பொண்ணுங்க தானே அப்பா இல்லாதபோது அவர்தானே அக்கா கல்யாணத்தை முன்னே நின்னு எடுத்து நடத்தனும் அதைவிட்டுட்டு ஒவ்வொன்னுக்கும் உங்களை இப்படி அலையவிடறது இல்லாம நியாபகபடுத்த சொல்லுறார் அவரை போய் நீங்க முன்னாடி வைக்கறீங்க.. ஏற்கனவே நிச்சயத்துக்கு அவர் வராம பெரியம்மா, அப்புறம் அவர் பையன் மருமகளை மட்டும் அனுப்பினார்.. அவங்களும் ஒப்புக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு நான் மதிக்கலை அதுஇதுன்னு ஏதேதோ நொண்டி சாக்கு சொல்லி உங்களை மனம் நோகடிச்சாங்க…”
“இல்ல நான் தெரியாம கேட்கிறேன் ஏன் பெரிப்பா இல்லாம நாம இந்த கல்யாணம் நடத்த முடியாதா..? சின்ன வயசுல இருந்து எங்களுக்காக ஒத்த பைசாகூட செலவு செய்யாத பாசமே இல்லாத அவர் அப்படி என்ன முக்கியம்..?? விட்டுத்தள்ளுங்கம்மா அவர் வரணும்னு அவசியமில்ல நீங்க தேவையில்லாம அலையாதீங்க” என்று ஆதங்கத்தோடு தாயை பார்க்க..,
“சிட்டு என்ன பேச்சுடா இது..? பெரியவங்க அப்படிதான் இருப்பாங்க நாம மதிச்சு கூப்பிடறது தப்பு கிடையாது..” என்று ஏற்கனவே அன்னையிடம் இதுகுறித்து பேசியபோது அவர் கண்டிப்புடன் கூறிய வார்த்தைகளை தளிர் மென்மையாக எடுத்து சொல்லவும்..,
“நீ சும்மா இருக்கா.. பெரியவங்க பெரியவங்களா நடந்துக்கணும் அப்போதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.. விசேஷத்துக்கு நாம மதிச்சு கூப்பிடறது வேற ஆனா எனக்கு சுத்தமா அவரை கூப்பிடறதுல இஷ்டமே இல்ல.. உன் கல்யாணத்துக்காக நாம மூணு பேரும் தான் நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம் ஒன்னுக்கு இரண்டு ஆம்பளை பசங்க இருக்கு அவருக்கு ஆனா பெரிப்பாவோ அவர் பசங்களோ துணைக்கு வந்தாங்களா..?? உதவி வேணுமான்னு தான் கேட்கலை அட்லீஸ்ட் கல்யாண வேலை எப்படி போகுதுன்னு விசாரிச்சாங்களா அவருக்கு நம்ம மேல கொஞ்சமும் பாசம்தான் இல்லன்னு பார்த்தா இப்படி கல்யாணம் நெருங்கிறப்போ அம்மாவை இவ்ளோ அலையவிடறது கொஞ்சமும் சரியில்ல.. ச்சை இவரெல்லாம் நம்ம பெரியப்பான்னு சொல்லவே பிடிக்கலை.. இதுவே நம்ம அப்பா இருந்திருந்தா உன் கல்யாணத்துக்காக கண்டவங்க காலை பிடிக்க வச்சிருப்பாரா..? இல்ல அம்மாக்கு இவ்ளோ கஷ்டம் இருந்திருக்குமா நீயே சொல்லு …?” என்று கோபத்தில் தொடங்கி அழுகையில் முடித்திருந்தாள் தென்றல்.