“அம்மூ என்னடா இது..?” என்று தேம்பிய மகளை அணைத்து கொண்ட சீதாலக்ஷ்மி பின் நாற்பதுகளில் இருப்பவர் அவர் கணவர் ரகுபதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர் அங்கே கல்லூரியில் படித்து கொண்டிருந்த அவர்கள் ஜாதியிலேயே வேறு பிரிவை சேர்ந்த பெண்ணான சீதாலக்ஷ்மியை காதலித்து மணமுடித்ததில் வீட்டினர் அவருக்கு எதிரியாகி போயினர்.. தன்னையும் மனைவியையும் ஏற்காத வீட்டினரை எந்நாளும் தேடிசெல்லாத ரகுபதிக்கு மனைவி பிள்ளைகள் தான் உலகம், சொற்ப சம்பளமாக இருந்தாலும் அவர்களுக்கு எந்த குறையும் வைக்காத மனிதர்..
ரகுபதியின் அண்ணன் கஜபதி அவர் தந்தையை போலவே ஜாதிவெறி ஊறிப்போன மனிதர் பெற்றோருக்கு ஏற்ற மகன் என்பதால் அவர்களை போலவே தம்பியை ஒதுக்கி வைத்துவிட அது பலவகையில் அவருக்கு வசதியாகி போனது.. பின்னே ஜாதிக்காக ரத்தபந்தத்தை தூக்கி எரிந்ததில் ஊரில் மரியாதையை மட்டுமின்றி அவருக்கு பலவிதத்தில் நன்மையையும் கொடுத்தது..
ஆம் சீதாலட்சுமியை சேர்க்க மறுத்த வீட்டினரிடம் காதல் மனைவி தான் முக்கியம் உங்கள் பணமும் சொத்தும் பெரிதல்ல என்று கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு வந்த ரகுபதியால் அலுங்காமல் நலுங்காமல் தந்தையின் மொத்த சொத்தும் கஜபதிக்கு வந்துவிட்டது.
ஆனால் சிலவருடங்களுக்கு முன் தம்பி இறந்த பின்னர் எங்கே சீதாவும் அவர் பெண்களும் சொத்து கேட்டு வந்துவிடுவார்களோ என்ற எண்ணத்திலேயே தம்பியின் இறுதி சடங்கில் மட்டும் கலந்து கொண்டு அதன்பின் அவர் குடும்பத்திடம் இருந்து தள்ளி இருப்பவர் மறந்தும் அவர்களை நினைத்துவிட மாட்டார் அவர்கள் அவரை நினைக்கும் சந்தர்பத்தையும் கொடுத்து விடமாட்டார்.
மீறி தொடர்புகொள்ள அவர்கள் முயன்றாலும் முயன்றவரை அவர்களை தவிர்க்கவே பார்ப்பார்.. அப்படிதான் தளிருக்கு அம்பலவாணனின் குடும்பத்தில் சம்பந்தம் தகைத்த போது அவர்கள் குடும்பத்தின் மூத்த மனிதராக அவருக்கு பலநாட்கள் அழைப்பு விடுத்து ஓய்ந்த சீதா இறுதியில் தன் வீடு தேடி வந்த பிறகே அவர் பேச்சை கேட்டவர்.., அறுவடை சமயம் எங்குமே நகர முடியாது சம்பந்தம் நீங்களே பார்த்துகொள்ளுங்கள் என்றவர் பெரிய மனது வைத்து மனைவியையும் மகனையும் நிச்சயத்திற்கு மட்டும் அனுப்பியிருந்தார்.. சீதா என்ன வற்புறுத்தியும் முக்கிய வேலைகளை சாக்கிட்டு தளிரின் நிச்சயத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டார்.
“வேறென்னம்மா அந்த பெரிப்பாக்கு நீங்க அவர் காலில் விழுந்து கெஞ்சி கூப்பிடனும் அதான் இப்படி செய்றார்.., போங்கம்மா உங்களை க்ஷ்டபடுத்துற பெரிப்பாவை எனக்கு சுத்தமா பிடிக்கலை..” என்ற மகளின் தலையை ஆதூரமாக வருடிக்கொண்டே,
“உங்கப்பா என்னோட துணை இருக்கப்போ எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல தங்கம்.. நான் எங்க போனாலும் என்கூட இருந்து வழிநடத்துறவர் என்னை எப்பவும் தனியா ஃபீல் பண்ணவிட்டதே கிடையாது.. உங்கக்காக்கு நல்லவரன் வந்திருக்கு பாசம் இருக்கோ இல்லையோ நமக்குன்னு நாலு பேர் வேணும்டா நாளைக்கு நம்மவீட்டு கல்யாணத்தில் சொந்தபந்தம் இல்லாம உங்கக்காவோட நீ நான் மட்டுமே நின்னா நல்லா இருக்காது.. அதைவிட எந்த விசேஷத்தையும் ஒரு ஆம்பளை முன்னாடி நின்னு எடுத்து செஞ்சாதான் கண்ணுக்கு நிறைவா இருக்கும் நமக்கும் மரியாதையா இருக்கும்.. நம்மோட துரத்திருஷ்டம் உங்களுக்கு அப்பாதான் இல்லைன்னு பார்த்தா அண்ணன் தம்பின்னு யாருமில்ல… உங்க பெரியப்பா இன்னைக்குன்னு கிடையாது அவர் எப்பவுமே இப்படிதான்!! கல்யாணத்துக்கு வந்து கால் கழுவி கொடுக்க ஒத்துகிட்டதே பெரியவிஷயம் அதுக்குமேல அவர்கிட்ட எதிர்பார்க்ககூடாதுடா..” என்றவரின் கண்களில் திருமணமானதில் இருந்து சீதாவின் மதிப்பை யாரிடமும் விட்டுகொடுக்காத கணவர் இல்லாத நிலையில் பெண்ணின் திருமணத்தை நன்முறையில் நடத்த எத்தனை பேர் காலை கட்டவேண்டி இருக்கிறதே என்று சொல்லிலடங்கா வலி.. ஆனால் தன் வலி பிள்ளைகளை இன்னுமே உருக்குலைக்கும் என்பதால் அதை மென்று விழுங்கி சாதரணமாக மகள்களை பார்த்தார்.
“ம்மா அதுக்காக நீங்க எத்தனை முறைதான் வேலூருக்கும் விழுப்புரத்துக்கும் அலைவீங்க.. இருக்கிற வேலைகளுக்கு நடுவுல இது எவ்ளோ அலைச்சல்மா உங்களுக்கு .. சரியான நேரத்துக்கு சாப்பிடறதுகூட கிடையாது கல்யாண வேலையில தூக்கமும் இல்லாம போயிடுச்சு ஏற்கனவே மூணு முறை லோ சுகர்ல மயங்கி விழுந்துடீங்க இப்படியே போனா உங்க ஹெல்த் என்னாகும்..?” என்று அவர்களுக்காகவே நிமிட நேரத்தைகூட வீணாக்காமல் உழைக்கும் தாயை கவலையோடு பார்க்க..,
“இருக்கட்டும்டா எனக்கு என் பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடந்து முடியனும்.. அதைத்தவிர வேற எதுவும் பெருசா தெரியலை.., ஒன்னு புரிஞ்சுக்க அம்மூ எப்பவும் மனுஷங்களோட அடிப்படை குணத்தை நாம மாத்த முடியாது.. உங்க பெரிப்பா இப்போன்னு கிடையாது எப்பவுமே இப்படிதான்!! அவரை மாற்ற முடியாது கல்யாணத்துக்கு வரேன்னு ஒத்துகிட்டதே பெருசு … யாரா இருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ ஒன்னு அப்படியே ஏத்துக்கணும் இல்ல விலகிடனும் இதை தாண்டி வேற யோசிக்கிற நிலையில நாம இல்லை..” என்று அவர் முடிக்கும் முன்னமே..,
“அதான்ம்மா நானும் சொல்றேன் உங்களை கஷ்டபடுத்துற அவங்க நமக்கு வேண்டாம் எதுக்காக ஏத்துக்கனும் நாம விலகிடலாம்..” என்றதில் சீதாவின் இதழ்களில் கசந்த முறுவல் படர்ந்தது.
“என்னமா சிரிக்கிறீங்க…?”
“உங்கப்பா இருந்திருந்தா அது வேற ஆனா இப்போ அப்படியில்ல அவரோட சேர்த்து நாம பலவிஷயம் இழந்துட்டோம்., இதுதான் நிதர்சனம் நாம ஏத்துகிட்டு தான் ஆகணும் அவரும் உங்க பெரிம்மாவும் வந்து கால் கழுவி ஆசிர்வாதம் பண்ணி என் மகளை தாரைவார்த்து கொடுக்கணும்”
“ஏன் அதை நீங்க செய்ய முடியாதா.. எங்க அம்மா நீங்கதானே..?? அப்புறம் எதுக்கு அவங்க செய்யணும்” என்ற இளைய மகளின் அறியாமையில் வெதும்பியவர் நெஞ்சை வேதனை கவ்விபிடிக்க கண்களில் திரண்டுவிட்ட நீரோடு மெல்ல குரலை செருமியவர்,
“இல்லடா என்னதான் பெத்தவளாவே இருந்தாலும் நாளைக்கு உங்கக்காவோட கல்யாணமேடையில நான் ஒரு ஓரமாதான் நிற்கணும்” என்றதில் பதறிய தளிர்..,
“ம்மா என்னம்மா பேசுறீங்க..?” என்று விசும்பலோடு சீதாவை கட்டிக்கொள்ளவும்..,
“அதுதான் நிஜம் தளிர் !! இன்னும் மனுஷங்க தாயை தாயா மட்டுமே பார்க்கும் அளவு பக்குவபடலை தன் பெண்ணோட கல்யாணத்துலயே தாய் சுமங்கலியா அமங்கலியான்னு தான் பார்க்குது.., அப்படியே எல்லாரையும் மீறி என் பொண்ணு நான் நிற்பேன்னு முன்னாடி வர என்னாலேயே முடியாது..”
“ம்மா என்னம்மா பேசுறீங்க.. ஏன் ஏன் நீங்க நிற்க முடியாது..” என்ற தென்றலிடமும் இப்போது குறையாத கண்ணீர்..
“ம்மா என்னமா பேசுறீங்க..?? ஒரு குழந்தைக்கான நல்லதை அம்மா அப்பாவைவிட வேற யாரும் பெருசா நினைச்சிட முடியாதும்மா, நீங்கதான் எங்களுக்கு எல்லாமே உங்க வாழ்த்து தான் எங்களுக்கு முக்கியம் ப்ளீஸ் ஏன் இப்படி பேசுறீங்க..” என்ற தளிருக்கோ திருமணபேச்சு ஆரம்பத்ததில் இருந்து இத்தனை நாட்கள் இதுபோன்ற பேச்சுக்கள் இல்லாத நிலையில் அன்னையின் வேதனை அவளை உருக்குலைக்க தான் செய்திருந்தது..
“இல்லடா உன் கல்யாணம் எந்த தடையும் இல்லாம நல்லபடியா நடக்கணும் நீ சீரும் சிறப்புமா வாழனும்.. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு சொல்லுவாங்க நாளைக்கு என் பெண்ணுக்காக நான் முன்னாடி நின்னு யாராவது ஏதாவது சொல்லி அதனால உன்.. உன்னோட ப்ச் இல்லடாம்மா உனக்கு ஏதாவதுன்னா எனக்கு நிச்சயம் தாங்காது… நான் எங்க இருந்தாலும் என் மனசு உனக்காக துடிக்கும்னு உனக்கு தெரியாதா..” என்று மகளை அணைத்துகொண்டு அவள் உச்சியில் முதமிட்டவரின் கண்ணீர் தளிரின் நெற்றியை தாண்டி வழிந்தது.
************************
திருமணபேச்சு ஆரம்பித்ததில் இருந்தே தளிரின் ஜாதகத்தை கொடுக்ககூட சீதா முன்வராததில் பிள்ளைகளுக்கு அத்தனை வருத்தம்.. பின்னே எத்தனை வற்புறுத்தியும் சீதா மறுத்ததில் தளிரே பள்ளிக்கு செல்லும்போது தன் திருமணத்திற்கு ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க வரங்களின் ஜாதகத்தை கொண்டு செல்வாள்.
“ம்மா நீங்க போயிட்டு வாங்க.. நானே எப்படி..?” என்றாலும் இதுல என்னடா இருக்கு உன்னோட ஸ்கூல் போற வழியில தானே அங்க போயிட்டு நான் கம்பனிக்கு போக எனக்கு நேரமாகிடும் நீயே பார்த்துட்டு வந்துடு என்று விலகிவிடுவார்.
“எனக்கு தெரியும்மா ஆனா ப்ளீஸ் நீங்க இந்த மாதிரி பேசாதீங்க.. எங்களுக்கு நீங்கதான் எல்லாமே யார் என்ன சொல்லிடுவான்னு நீங்க விலகி போறீங்க நான் உங்க பெண்தானே..?”
“அதுதான் அம்மூ நானும் சொல்றேன் யார் முன்ன நின்னாலும் என் பெண் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா போதும் உங்கப்பாவோட ஆசையும் அதுதான்… புரிஞ்சுக்கோ”
“அதுக்காக அந்த பாய்சன் பெரியப்பாவை ஏத்துக்கணுமா..?”
“சிட்டு..” என்று தளிர் அதட்ட..,
“போதும் போதும் நீ திரும்ப கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாத… நான் எதுவும் சொல்லலை” என்றவள் அன்னையின் தோள் சாய்ந்து, “நீங்க இருங்கம்மா” என்றிட..,
“இல்ல தங்கம் ஆண்டவன் நமக்கு வேற வாய்ப்பு கொடுக்கலடாமா.. நிச்சயத்துலயே உங்க அண்ணன் வந்து நின்ன போது தட்டு மாத்த பெரியவங்க யாருமில்லயான்னு சில பேச்சு காதுல விழுந்தது… அப்படி எதுவும் கல்யாணத்துல இருக்க கூடாதுன்னா நாம அவரை ஏத்துகிட்டு அனுசரிச்சுதான் ஆகணும்” என்றவரின் கண்களிலும் கணவரின் நினைவில் நீர் திரண்டுவிட்டது.
ரகுபதியின் வீட்டில் இவர்களை ஏற்காமல் போனாலும் ரகுபதியின் தமக்கை மீனாக்ஷியின் குடும்பம் மட்டுமின்றி சீதாவின் பெற்றோரும் அவர்களை அரவணைத்திருந்தனர்.. சீதா அவர் பெற்றோருக்கு ஒரே பெண் அவர் தந்தைக்கு சொல்லுகொள்ளும் படி நிலையான வேலையில்லை வாடகை வீடுதான் என்றாலும் காதல் திருமணம் புரிந்த பெண்ணை அவர்கள் விட்டுவிடவில்லை.. ஆனால் கேன்சரால் பாதிக்கப்பட்ட சீதாவின் தந்தை தளிர் பிறந்த சில மாதங்களிலேயே காலமாகிவிட அவர் தாயும் அதற்குபின் பல வருடங்கள் இருந்திருக்கவில்லை.
பெற்றோர் இல்லாத குறையே சீதாவிற்கு தெரியாத வகையில் அவரை ரகுபதி தாங்கினார் வேலையில் எத்தனை பிரச்சனை என்றாலும் அதை வீட்டிற்கு தூக்கி வராத மனிதருக்கு மனைவி மகள்களை கண்டாலே கொண்ட அலுப்பெல்லாம் தூரம் சென்றுவிடும்.. கல்லூரி படிப்பின் இறுதியில் இருந்த மனைவியை திருமணத்திற்கு பின் ரகுபதி படிப்பை நிறைவு செய்ய வைத்திருந்தாலும் குடும்பதலைவியாக ஒருவர் சம்பளத்திலேயே குடும்பத்தை சிறப்பாக நிர்வகித்தார் சீதாலக்ஷ்மி.. கணவன் மனைவிக்கிடையில் அத்தனை புரிதல்.
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியை அதிக நாட்கள் நீட்டிக்கவிடாமல் இடியென விழுந்தது விபத்தில் சிக்கி உயிரிழந்த ரகுபதியின் மறைவு குறித்த செய்தி.
ஆம் இளந்தளிரின் பதினான்காம் வயதில் சென்னைக்கு வந்திருந்த ரகுபதியின் அக்கா கணவரையும் அவர்களின் இரு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வெளியில் சென்றவர் எதிர்பாரா விபத்தில் சிக்க அவரோடு சேர்த்து அக்கா கணவரும் பிள்ளையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் குழந்தை மட்டும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு நான்கு மாதங்கள் கோமாவில் இருந்து பின் இறந்துபோனது. சீதாலக்ஷ்மியும் மீனாட்சியும் இத்தகைய பேரிழப்பை எதிர்பார்க்கவில்லை.. சீதாலக்ஷ்மிக்கு கணவர் மட்டுமென்றால் மீனாக்ஷிக்கோ குடும்பமே..!! யாரை யார் தேற்றுவது என்று புரியாத நிலை.
தளிர் புரிந்து கொண்டாள் !! தந்தையின் இழப்பை ஏற்று தாய்க்கு துணை நிற்க கற்றுகொண்டாள். ஆனால் தென்றலை சமாளிப்பது சீதாவிற்கு பெரும்பாடாகி போகும்… ரகுபதிக்கு இரு மகள்களும் இரு கண்கள் என்றாலும் இளையவளாக தென்றலின் ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் ரகுபதியுடனே ..!! உணவு கொடுப்பது, பள்ளிக்கு அழைத்து செல்வது, கதை சொல்லி தூங்கவைப்பது என்று முற்றிலுமாக அவர் நிழலில் இருந்த தென்றலை தந்தையின் நினைவிலிருந்து மீட்பது சீதாவிற்கு பெரும் சவாலாகவே அமைந்துபோனது.
நினைவுகளில் மூழ்கியிருந்த சீதாவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்குவதை கண்ட தளிர் “ம்மா..” என்று அவரை ஆதரவாக அணைத்துக்கொள்ள தென்றலும் அவர் வயிற்றை கட்டிக்கொண்டு தந்தையை எண்ணி கண்ணீர் உகுக்க மகள்களை கட்டிக்கொண்ட சீதாலட்சுமியின் காதில் “என்ன பண்ற லக்ஷு முதல்ல கண்ணை துடை குழந்தைகளை அழவிடாத..” என்று எப்போதும் போல கணவரின் குரல் ஒலிக்க முதலில் தன்னை மீட்டெடுத்து மெல்ல மகள்களையும் இயல்புக்கு கொண்டுவர அவர்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது.
தென்றல் கதவை திறக்க அங்கே தளிரின் அறையில் ஏசி பொருத்துவதற்காக ஆட்கள் வந்திருந்தனர்.