மணமேடையில் திருமண சடங்குகள் ஆரம்பிக்க குழந்தைகள் இருவரும் மணமக்களின் அருகே அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றையும் ஆர்வமாக கவனித்திருந்தனர்.. பேரனின் திருமணத்தை அருகே இருந்து பார்க்கும் வகையில் அண்ணாமலை அன்னபூரணிக்கு அங்கேயே நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. தளிரும் உதயனும் குறையாத மகிழ்வோடு அம்பலவாணன் தம்பதியருக்கு பாதபூஜை செய்து முடித்த தருவாயில், “இந்த கல்யாணம் நடக்ககூடாது, நிறுத்துங்க” என்று ஓங்கி ஒலித்தது மண்டபத்தின் மத்தியில் நின்றிருந்த வாலிபனின் குரல்.
ஒலித்து கொண்டிருந்த மங்களவாத்தியங்களின் ஒலி நின்று போகவும் மேடையில் இருந்தவர்களின் கவனம் குரல் வந்த திசையில் குவிய விருந்தினர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு.
“என் பொண்டாட்டிக்கு நீ எப்படிடா தாலி கட்டுவ..? எந்திரி இல்ல நடக்கறதே வேற..” என்றவனை இமைக்காமல் பார்த்திருந்த இளந்தளிருக்கு என்ன முயன்றும் இத்தனை வருடங்களுக்கு பின்னர் தன் முன் தோன்றியிருப்பவனை கண்டு தூக்கிவாரி போட்டது. நெஞ்சம் படபடக்க இமைக்கவும் மறந்திருந்தவளுக்கு அவளுள் புதைந்து போன நினைவுகள் அத்தனையும் தன்னையறியாமல் மீண்டும் படையெடுத்தது.
அதிலும் இறுதியாக அன்று சாலையில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அவள் மனக்கண்ணில் தோன்றிய நொடி அவள் உடல் உதறல் எடுக்க தொடங்கிவிட்டது. அதுகாறும் தளிரின் அருகே இருந்த உதய் சரத்தை கண்டதும் அவள் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.
அப்போதும் அவள் நடுக்கம் குறையாதிருக்கவும் “ஒண்ணுமில்லடி ரிலாக்ஸ்” என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்த நொடி வந்திருந்தவன் அவர்களின் திருமண புகைப்படத்தை முதல் வரிசையில் தொடங்கி எல்லோருக்கும் விநியோகிக்க தொடங்கிவிட்டான். அதை கண்ட ஜெகா, ராஜி, கஜபதி கீழே இறங்க அவர்களுடன் தென்றலும் அவசரமாக இறங்கிட அவளிடமும் புகைப்படம் கொடுக்கப்பட்டது.
அதில் பட்டுபுடவை பூவோடு நின்றிருந்த இளந்தளிரின் கழுத்தில் புதிதாக வந்திருந்த வாலிபன் தாலி கட்டிக்கொண்டிப்பதை கண்ட இளந்தென்றல் அதிர்ச்சியோடு சிலையாய் சமைந்து போனாள்.
“ப்ளீஸ் தளிர் ஜஸ்ட் பீ ஸ்ட்ராங்! நத்திங் இஸ் கோயிங் டூ ஹேப்பென் நான் உன்கூட தான் இருக்கேன், டோன்ட் திங்க் அபவுட் எனிதிங்” என்று அவளுச்சியில் முத்தமிட்டவன் அவள் முதுகை வருடியவாறே, “எது வந்தாலும் பார்த்துக்கலாம்டி” என்ற உதயனின் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையின் கலங்க முற்பட்ட விழிகளை அவள் கட்டுப்படுத்த நினைத்தாலும் தன் போக்கில் கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைக்கதான் செய்தது.
“ப்ச் தளிர் எதுக்குடி அழற..? அதுவும் அந்த பொறுக்கி முன்னாடி..” என்று சிவந்த விழிகளுடன் அவள் கண்ணீரை துடைத்தவன், “பீ ஸ்ட்ராங்..! இத்தனை வருஷம் கழிச்சு இதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல”, என்றவனுக்கு நேற்றிரவே அவளிடம் தன் சந்தேகத்தை சொல்லி அவளை தயார்படுத்தி இருக்க வேண்டுமோ..? என்ற எண்ணம் தோன்ற தலையை அழுந்த கோதியவன்,
“ப்ச் தளிர் லிசென் என்னை மீறி அவன் உன்னை எதுவும் செய்ய முடியாதுடி உனக்கு புரியுதா..? ட்ரஸ்ட் மீ” என்றவனின் விழிகளில் சரத் விநியோகித்த புகைப்படம் விழவும் கோபமாக மனையில் இருந்து எழ முயன்றான்.
“உதய் மனையை விட்டு எழக்கூடாதுபா நீ இரு நாங்க பார்த்துக்கறோம்” என்ற அம்பலவாணன், “ஐயரே மந்திரத்தை நிறுத்தாம சொல்லிட்டே இருங்க நான் வந்துடறேன்” என்றுவிட்டு மருமகன்களோடு கீழே இறங்கினார்.
விருந்தினர்களில் முக்கிய புள்ளிகள் எல்லாம் முதல் வரிசையை ஆக்கிரமித்து இருக்க அம்பலவாணன் கீழே இறங்கியதும் அவரை சுற்றிவளைத்து கொண்டனர். அவரின் நெருங்கிய நண்பரும்தொழிலதிபருமான சுந்தரேசன் புகைப்படத்தை காட்டி, “என்னடா அம்பலா இது…? அவன் சொல்றது உண்மையா..? உன் மருமகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா ஏன் இதை முதல்லயே சொல்லலை உதய்க்கு வேற பெண்ணே கிடைக்கலையா..? சொல்லியிருந்தா என் தம்பி பெண்ணை கட்டிகொடுத்திருப்பேனேடா..” என்று வருத்தத்தோடு நண்பன் மகனுக்கு இழைக்கபட்ட துரோகம் குறித்து பிறர் பேசுவதை பொறுக்காமல் கேட்கவும் மற்றொருவர்,
“அம்பலவாணன் உங்களுக்காக தான் சிஎம் கிட்ட கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு டேட் வாங்கினேன்.. அவரும் சென்னையில இருந்து கிளம்பிட்டார் நம்ம கல்யாணத்தை முடிச்சிட்டு மதியம் மதுரையில நடக்கிற கூட்டத்துல கலந்துக்க போறதா தகவல் வந்திருக்கு.. அவர் வரும்போது பிரச்சனை இல்லாம இருக்கணும் புரியுதா..?” என்று ஆளுங்கட்சியை சேர்ந்த மற்றொருவர்
“யார் இந்த பையன், இவனுக்கும் உன் மருமகளுக்கும் என்ன சம்பந்தம்..? ஏன்பா அப்படியே இருந்தாலும் இதையெல்லாம் மண்டபம் வரை வளர விடலாமா..?” என்று ஆளாளுக்கு அவரை பிடித்து கொண்டனர்.
“அப்படியில்லப்பா இது வேற ஒரு பிரச்சனை.. என் மகனுக்கும் மருமகளுக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும் நீங்க உட்காருங்க” என்று சொல்லிகொண்டிருக்க வந்திருந்தவனோ மண்டபத்தின் மத்தியில் நின்று, “என் பொண்டாட்டியை தட்டி பறிக்க பார்க்கிறான் நீங்களே கேளுங்க இந்த அநியாயத்தை.. எப்படியாவது தளிரை என்கூட அனுப்பி வச்சுடுங்க” என்று திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தவனை பிடித்து அறைந்த ராகவன் “யார்டா நீ..? உனக்கு என்ன வேணும்..? யார் இந்த கல்யாணத்தை கெடுக்க சொல்லி உன்னை அனுப்பினா உண்மையை சொன்னேனா தப்பிச்ச இல்ல மோசமா அனுபவிப்ப..” என்று மீண்டும் அறைய அத்தனையும் லோக்கல் சேனலில் லைவ்வாக ஒளிபரப்பபட்டு கொண்டிருந்தது.
“ராஸ்கல் பணம் பறிக்க இப்படி ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து எடுத்துட்டு வந்திருக்கியா..? மரியாதையா உண்மையை சொல்லு” என்ற சரவணனும் அவன் முகத்தில் பளீரென அறைந்திருந்தான். எங்கே தொழில் போட்டி காரணமாக யாரேனும் உதய்க்கு எதிராக அனுப்பி வைத்திருக்கின்றனரோ என்று சந்தேகித்தவனின் மனம் யாராக இருக்ககூடும் என்றும் அலச தொடங்கிவிட்டது.
அவன் சட்டையை பிடித்து “உன் பேர் என்ன..?” என்று ராகவன் அப்புதியவனை கேட்க இங்கே மேடையில் உதய்யின் அருகே அமர்ந்திருந்த தளிரின் இதழ்கள் “சரத்” என்று அன்னிச்சையாக அவன் பெயரை உச்சரித்தது.
“தளிர் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என்று உதய் சொல்லிகொண்டிருக்கும் போதே இத்தனை பேர் பார்க்க இந்நிலையில் உதயாதித்தனை நிறுத்திவிட்டோமே..! என்ற எண்ணமே தளிரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக செய்தது.
“ஸாரி உதய் நான் இதை எதிர்பார்க்கல ப்ராமிஸ்..! அவன் ஏன் இப்படி பண்றான்னு எனக்கு தெரி..யா..” என்று குரல் உடைய தழுதழுத்தவளின் வார்த்தைகள் எத்தனை நிஜம் என்பதை உதய் நன்கு அறிவான்.
பின்னே நேற்று இரவு அவனிடம் சரத் பற்றி கூறிய போதுகூட திடமாக இருந்த தளிருக்கு இன்று அவன் இங்கு வந்து கலகம் செய்வான் என்ற அனுமானம் சுத்தமாக இல்லை. தளிர் எதிர்பார்க்கவில்லையே தவிர உதயாதித்தன் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்த்தான்.
அதுவும் நேற்று அவர்களின் வரவேற்பில் ஆறு நீண்ட வருடங்களுக்கு பிறகு தளிரின் பள்ளி மற்றும் கல்லூரி தோழியான சந்தியா பேசியதை தளிர் பகிர்ந்த போதே இதற்கு தயாராகிய உதய் நேற்றிரவே சரத்தின் புகைப்படத்தை தளிரின் தோழி மூலமாக வாங்கிக் கொண்டவன் உடனே அம்பலவாணனுக்கும் பேசியிருந்தான்.
சென்னையில் இருந்து ஆறுவருடங்களுக்கு முன்பாக வேலூரில் தஞ்சமடைந்து விட்ட தளிர் ஏழு பேர் கொண்ட அவர்கள் குழுவில் ஒருத்தியான அவள் நெருங்கிய தோழியை நேற்று வரவேற்பில் தான் சந்தித்தாள். சந்தியாவை கண்ட தளிரின் விழிகளில் முதலில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி பின் மகிழ்ச்சி என்று கலவையான உணர்வுகள்.
லேஹெங்காவை சரி செய்வதற்காக தளிர் அறைக்கு திரும்பிய நொடி அவள் பின்னே வந்தவள் தளிருக்கு உதவிக்கொண்டே, ‘எப்படிடி இருக்க..? உனக்கு யார் மேல என்ன கோபம் தளிர் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸான எங்க எல்லாரோடவும் இத்தனை வருஷம் டச்ல இல்லாம போயிட்டல… ஏன் தளிர் சொல்லாம கொள்ளாம காலேஜ் விட்டு நின்ன? நான் ஆன்டிகிட்ட உன்னை பற்றி கேட்டதுக்கும் அவங்க சரியாவே பதில் சொல்லல, நாங்க எல்லாருமே உன்னை ரொம்ப மிஸ் பண்ணினோம் லேகா கல்யாணத்துக்கும் உன்னை ரீச் பண்ண முடியலை என் கல்யாணத்துக்கு கூட உனக்கு பத்திரிகை அனுப்ப முடியல.. ஆனா நீ கூப்பிடாமயே நான் உன் கல்யாணத்துக்கு வந்துட்டேன் பார்த்தியா..?’
அவளின் எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பாதவள், ‘எப்படி இருக்க சந்தியா..? நீ இங்க என் கல்யாணத்துல ஐ மீன் உனக்கு நான் இங்க இருக்கிறது எப்படி தெரியும்..?’ என்றதும்
‘நான் கல்யாணம் பண்ணி இங்க தான்டி செட்டில் ஆகியிருக்கேன்.. ஒன்றரை வருஷமாச்சு’ என்று தன் நாத்தனாரை அழைத்த சந்தியா,
‘இவங்க என்னோட அண்ணி இவங்களோட ஹஸ்பன்ட் உன் வீட்டுக்காரரோட ஷோரூம்ல தான் வேலை பார்க்கிறார்.. நீங்க அவங்களுக்கு கொடுத்திருந்த பத்திரிகையில உன் ஃபோட்டோ பார்த்துட்டு வந்தேன்’ என்று சொல்லவும் அவர்களிடம் பேசிவிட்டு மேடைக்கு சென்ற தளிரின் பின்னே வந்த சந்தியா அப்படியே கிளம்பியிருந்தால் பிரச்சனையில்லை.. அவள் அடுத்து கேட்ட கேள்வி தான் தளிரின் தலைவலிக்கு காரணமாகி போனது.
‘ஹே சரத்கூட வேலூர் வந்திருக்கான்டி.. போன வருஷம் எங்கயோ நார்த்ல இருக்கிறதா சொன்னவன் அப்புறம் யாரோடவும் காண்டாக்ட்ல இல்லை, நான் அஷோக் மூலமா என் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணேன் அவன் வரவே இல்லை தெரியுமா..?’
‘என்ன சொல்ற சரத்தா..?’ என்ற தளிர் முகத்தில் அத்தனை திகைப்பு.
‘ஆமா தளிர் சரத் இங்க வந்திருக்கான் காலையில உனக்கு கிஃப்ட் வாங்க கடைக்கு போயிருந்தேன் அப்போதான் அவனை எதிர்கடையில பார்த்தேன் நான் கூப்பிடறதுக்குள்ள போயிட்டான்.. அஷோக் கிட்ட வாங்கின நம்பர்ல அவனுக்கு கூப்பிட்டா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தது..’ என்றவள் கூட்டம் வருவதை கண்டு,
‘சரி அதைவிடு இது என்னோட நம்பர்’ என்று தளிரின் கைபேசியை வாங்கி பதித்து கொடுத்தவள், ‘கண்டிப்பா இனி அடிக்கடி பேசுடி உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஸ்கூல் காலேஜ் டேஸ்ல நாம எப்படி ஃபன் பண்ணிட்டு இருப்போம் இப்போ ஒரே ஊர்ல இருந்துட்டு மீட் பண்ணலைன்னா எப்படி..? நான் லேகா, அஜய் நம்ம கேங் எல்லாரையும் கூட்டிட்டு உன் வீட்டுக்கு வரேன்.. என்ன வரலாம் தானே..?’ என்று அவள் சம்மதம் பெற்று சென்றாள்.
இத்தனை வருடங்களாக அவனை கடந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியில் இருந்து மீண்டு அதை மறந்து புது ஜனனம் கொண்டவளாக மாறியிருந்த தளிருக்கு இப்போது சந்தியா சொல்லவும் தான் அவன் நினைவே வந்தது கூடவே அவன் தனக்கு தாலி கட்டிய அந்த தினமும்..!
சரத் குறித்த நினைவு அறவே இல்லாது இத்தனை வருடங்களாக தன் வாழ்வை எதிர்கொண்டு தன் திருமணத்தில் மகிழ்வோடு பங்கேற்று வந்தவளுக்கு இப்போது அப்படி இருக்க முடியவில்லை. இன்று இந்நிலையில் இது சரியோ? தவறோ? எதுவாகினும் உதயாதித்தனிடம் பேசிவிடுவது உத்தமம் என்ற முடிவிற்கு வந்தவள் நலங்கிட்டு முடிக்கவும் அவனை மாடியில் சந்திக்க கிளம்பிவிட்டாள்.
அதாவது அக்னியில் பிரவேசம் செய்ய கிளம்பிவிட்டாள்..!!