கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து சரத்தை பார்க்கிறாள் இளந்தளிர். நேற்று இரவு உதயாதித்தனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட இன்று காலை அவன் இங்கு வந்து நிற்பான் என்று சுத்தமாக நினைக்கவில்லை. என்னதான் உதய் தைரியம் கொடுத்தாலும் அவளால் கண்முன் நடக்கும் நிகழ்வுகளை அத்தனை எளிதாக ஏற்க முடியவில்லை.
“உதய் எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு எதுவும் புரியலை.. எப்படி இது திடீர்னு.. சரத் ஏன் இந்த மாதிரி செய்யறான்…?” என்று கலங்கிய குரலில் கேட்டவளுக்கு இப்போது தான் சரத் தவிர்த்து திருமணத்திற்க்காக கூடி இருக்கும் கூட்டம் விழிகளில் விழ பதறிபோய் விட்டாள்.
“எல்லாம் அப்பா பார்த்துப்பார் தளிர் நீ எதுவும் கவலைபடாத”
“என்னங்க சொல்றீங்க..? மாமாக்கு தெரியுமா..?”
“ஆமா ! நேத்து நைட் உன் ஃபிரென்ட் அவனை இங்கே பார்த்தேன்னு சொன்னபோதே நான் இதை எதிர்பார்த்தேன் அதுதான் அப்பாவை கூப்பிட்டு எல்லாமே சொல்லிட்டேன்..”
“எப்படிங்க மாமா.. மாமாக்கு என்மேல கோபமில்லையா..? அவர் இதுவரை ஒண்ணுமே சொல்லலை”
“ப்ச் என்னடி பேசுற தப்பே செய்யாத உன்மேல எதுக்கு அவர் கோபப்படனும்..? நைட் டிஎஸ்பி அங்கிளை ரீச் பண்ண முடியலைன்னு சொன்னாரு .. அவர் வரணும்ன்னு கூட கிடையாது அப்பாவே அவனை அடிச்சு விரட்டிடுவாரு.. நீ ரிலாக்ஸா இரு நத்திங் டூ வொரி.. ப்ச் முகம் எப்படி வேர்த்துடுச்சு பாரு” என்று தன் கைகுட்டையால் அவள் வியர்வையை மென்மையாய் ஒற்றி எடுத்தவன்..
“மாமா ராகவ் கூட இருக்காங்க எதையும் யோசிக்காம இதைபிடி” என்று தன்கையில் இருந்த பூக்களை கொடுத்தவன் “அமைதியா மந்திரத்தை சொல்லு” என்று ஐயர் கூறியபடி செய்தவன் அவளையும் செய்யவைக்க இன்னுமே படபடப்பு குறியாத தளிர் ஆச்சர்யமாக மண்டபத்தின் நடுவே நின்றிருந்த மாமனாரை பார்த்திருந்தாள்.
உதய் அவளை எந்த கேள்வியும் கேட்காமல் நம்பியதையே இன்னும் நம்பமுடியாமல் இருப்பவளுக்கு அம்பலவாணன் தன்மீது கொண்ட நம்பிக்கையில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.
பின்னே நேற்றிரவு தளிர் சரத் குறித்து கூறியபோது தன்னை கட்டுபடுத்திக்கொண்டு அவளுக்கு செவி சாய்ப்பது என்பது உதய்க்கு பெரும் சவாலாகவே இருந்தது.. கட்டுக்கடங்காத சீற்றம் மனதினுள் கட்டவிழ்த்த போதிலும் தன் கோபம் தளிரை எவ்விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்று மௌனமாக நின்றிருந்தாவனின் அணுகுமுறையே தளிரை இயல்பாக்கியது.
தளிர் கிளம்பியதுமே தந்தைக்கு அழைத்த உதய் பக்குவமாக அவரிடம் நடந்ததை சொல்லவும் முதலில் அதிர்ந்த அம்பலவாணன் உதய்யின் குரலில் இருந்த தீவிரத்திலும், அழுத்தத்திலும் தன்னை நிலைபடுத்தி அமைதியாக கேட்டுக்கொண்டவரிடம் அதன்பின் கனத்த மௌனம்.
உதய்க்கு முதல் நண்பனே அம்பலவாணன் தான்..!! தளிர் மீதான தன் விருப்பத்தை ராகவனுக்கு முன்பாக தந்தையிடம் தான் பகிர்ந்தான் தளிர் விஷயம் என்றில்லை எப்போதுமே உதய் தந்தையிடம் எதையும் மறைத்ததில்லை… இப்போது தளிர் பேசி சென்ற பின் அத்தனையும் சொல்லிவிட்டவனுக்கு ஒருபுறம் தந்தை நிச்சயம் தவறாக புரிந்து கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தாலும் விஷயத்தை திருமணத்திற்கு முந்தைய தினமான இன்று சொன்னதில் எப்படி எடுத்துகொள்வாரோ என்ற கேள்வி இருக்கவே செய்தது.
அதற்கேற்றார் போல அவரும் எதுவும் சொல்லாமல் அமைதி காக்க குரலை செருமி, ‘ப்பா..’ என்று உதய் தயக்கமாகவே அழைத்தான்.
‘சொல்லுப்பா’ என்றவரின் புருவமத்தியின் முடிச்சு வெகுவாக இறுகி கிடந்தது.
‘நீங்க தளிரை..’ என்று அவன் வாக்கியத்தை தொடங்கவுமே, “அவன் பேர் என்ன சொன்ன..?”
“ப்பா.. ஆனா தளிர் மேல எந்த தப்புமில்லை அவ..”
“உதய் என் மருமகளுக்கு தொல்லை கொடுத்த அந்த பொறுக்கிநாய் பேர் என்னன்னு கேட்டேன்..” என்றதும் அத்தனை நேரம் ரௌத்திரம் கொண்டிருந்தவனின் முகத்தில் புன்னகை படர, “சரத் ப்பா.. ” என்றான்.
“சரத்” என்று மேவாயை நீவியவர், “இவ்ளோ நாளா எங்க இருந்தான்? இப்போ எங்க ஸ்டே பண்ணியிருக்கான்னு அவனை பற்றின டீடெயில்ஸ் தெரிஞ்சதா..?”
“இல்லப்பா நோ ஐடியா, பட் அவன் ஃபோட்டோ கிடைச்சிருக்கு உங்களுக்கு அனுப்பறேன்.. நாளைக்கு நம்ம ஆள்களுக்கு விஷயத்தை சொல்லாம அலெர்ட் பண்ணிடுங்க..”
“உதய் நாளைக்கு அவன் வருவான்னு உனக்கு தோணுதா..?” என்றவருக்கே ஆறு வருடமாக தளிர் புறம் திரும்பாமல் இருந்தவன் ‘நாளை ஏதேனும் கலகம் செய்வானோ..?’ என்ற கேள்வி எழுந்தது ஒருவேளை மகனுக்கும் அதே எண்ணம் இருந்தால் இப்போதே அவனை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.
“சென்ட் பெர்சென்ட் ப்பா.. எனக்கு இது சாதாரணமா தெரியலை ஏன்னா அவன் திரும்பவும் தளிரை ட்ராப் (trap) பண்ண வாய்ப்பு இருக்கு மை இன்டியூஷன் ஸ்பீக்ஸ் லௌடர் ப்பா (my intuition speaks louder) ஸோ அந்த சைக்கோ கண்டிப்பா வருவான்”
“தளிருக்கு இதைப்பற்றி ஏதாவது ஐடியா இருக்கா..?”
“இல்லப்பா தளிர் எக்ஸ்பெக்ட் பண்ணலை ஆனா எனக்கு பாஸிபிலிட்டி ரேட் ஹையா இருக்கு.. இதை சொன்னா அவ தேவையில்லாம இன்னும் டிஸ்டர்ப் ஆகிடுவா.., அதோட இவ்ளோநாள் இந்த விஷயத்தை நம்மகிட்ட சொல்லாம விட்டுட்டோமேன்னு லைட்டா அப்செட்டாகி இருந்தாளே தவிர அவன் வர வாய்ப்பு இருக்குன்னு நினைக்கவே இல்ல.. அப்படியே அவன் வந்தாலும் பெருசா ஒன்னும் கிழிச்சிட முடியாது ப்பா அதுதான் அவகிட்ட சொல்லல.. கல்யாணம் முடியட்டும் அவனை வெளியே வர முடியாதளவு செஞ்சுடலாம்.. ஆனா நாளைக்கு அவனை மண்டபத்துக்குள்ள வரவிடாம நீங்க செய்துட்டா போதும் முடிஞ்சா சிவானேஷ் அங்கிள் கிட்டயும் ஒருவார்த்தை பேசிடுங்க ப்பா”
“சரி உதய் நேத்தே விஷயத்தை சொல்லியிருக்கலாமே அட்லீஸ்ட் காலையில் தெரிஞ்சிருந்தாகூட இந்நேரம் அவனை நம்ம கஸ்டடி எடுத்திருக்கலாம்.. நிஜமாவே தளிர் இப்போதான் உங்கிட்ட சொன்னதா இல்ல நீ சொல்லாம டிலே பண்ணிட்டியா..?”
“ப்பா அந்த சைக்கோ பண்ணினதுக்கு பேர் கல்யாணமா இருந்திருந்தா தளிர் முதல்லையே நம்மகிட்ட சொல்லியிருப்பா ப்பா அதுக்கு பேர் கல்யாணமும் இல்ல அந்த பரதேசி கட்டினதுக்கு பேர் தாலியும் இல்ல அப்புறம் ஏன் சொல்லணும்..? இப்பவும் அவளோட ஃப்ரெண்ட் அவனை பார்த்ததை சொல்லலைன்னா தளிர் சொல்லியிருக்க மாட்டான்னு தான் நினைக்கிறேன்.. அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்ல இந்த குப்பையை எல்லாம் நியாபகம் வச்சுக்காம அவ ஒழிச்சு கட்டினது நல்ல விஷயம் தானேப்பா”
“ஐ அண்டரஸ்டான்ட் உதய்! ஆனா இப்போதைக்கு விஷயத்தை யாருக்கும் சொல்லாத..” என்றவருக்கு மனைவியின் பேச்சுக்கள் நினைவில் எழ நெற்றியை வருடிக்கொண்டே,
“இப்போ மட்டுமில்ல இனிமேலும் நம்ம வீட்ல யாருக்கும் சொல்ல வேண்டாம்.. நீ சொன்னது போல தேவையில்லாத குப்பையை கிளற வேண்டாம் தளிருக்கும் சொல்லிடு..” என்ற தந்தையை எண்ணி உதய் கர்வம் கொள்ள,
“என்கிட்டே விஷயத்தை சொல்லி முடிக்கவுமே அவளுக்கு சரி ஆகிடுச்சுப்பா” என்று புன்னகையோடு சொன்னவனுக்கு விஷயத்தை தன்னிடம் பகிர்ந்த போது ஓரிரு இடங்களில் கலங்கினாலும் தவறிழைக்காதவளிடம் தென்பட்ட நிமிர்வு நினைவு வர அவன் அதரங்களில் மனைவியை எண்ணி மீண்டுமொரு கர்வபுன்னகை குடிகொண்டது.
“சரிப்பா நீங்க அவனை நாளைக்கு..” என்றவனை இடையிட்டு,
“சரி உதய் நாளைக்கு பற்றி நீ எதுவும் யோசிக்காத லீவ் இட் டூ மீ..! நான் பார்த்துக்கறேன் டைமாச்சு காலையில நேரமே எந்திரிக்கனும் போய் தூங்குப்பா” என்றவர் உடனே நெருங்கிய நண்பரும் காவல்துறையை சேர்ந்தவருமான சிவனேஷுக்கு அழைத்துவிட்டார்.
********************************************
புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து போயிருந்த அதேவேளை திருமண மண்டபம் முழுதும் இருந்த வெள்ளை திரைகளில் தளிரும் புதிதாக வந்திருந்த வாலிபனும் கடற்கரை, பூங்கா, கல்லூரி, காஃபி ஷாப் என்று ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்ற போது எடுத்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
தளிரின் முகத்தில் இருந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் அவ்வப்போது அவள் மீது ரசனையோடு படிந்த அவன் பார்வையையும் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இடையே, ‘அம்பலவாணன் ஸார் எப்படி இந்த மாதிரி ஒரு பெண்ணை மருமகளா தேர்ந்தெடுத்தார்..? பணக்காரன் கிடைச்சதும் இவனை கழட்டிவிட்டுட்டா போலயே..! உதய் ஸார் அழகுக்கும் பண்புக்கும் அடுத்தவன் பொண்டாட்டியா கிடைச்சா..? என்ற பேச்சுக்கள் கிளம்பிய அதேவேளை,
“பாருங்க ஸார் நானும் அவளும் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே உயிருக்கு உயிரா காதலிச்சோம்.. காலேஜ் படிக்கும் போது இனியும் பிரியக்கூடாது சொல்லி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இரண்டு மாசம் என் பிரென்ட்டோட அப்பார்ட்மென்ட்ல குடுத்தினம் பண்ணினோம்.. ஆனா என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு என்னை விட்டு போயிட்டா, எங்க போனான்னே தெரியாம தேடின நான் இப்போ இங்க கல்யாண கோலத்துல இவளை பார்க்கிறேன்.. என் பொண்டாட்டியை எனக்கு கொடுத்துடுங்க..” என்று அங்கே வந்த அம்பலவாணன் காலில் விழவும் அவனை தூக்கி நிறுத்தியவர் அடுத்த நொடியே ஓங்கி அறைந்திருந்தார்.
“ஸார் ப்ளீஸ் ஸார் தயவுசெய்து என் பொண்டாட்டியை என்கூட அனுப்பி வச்சுடுங்க அவ இல்லன்னா எனக்கு வாழ்க்கை இல்ல நான் செத்துடுவேன் ஸார்” என்று சரத் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்ததாக கோவிலுக்கு இருவரும் தம்பதியராக நடந்து செல்லும் காணொளியும் ஒளிபரப்பப்பட்டது அவர்களுடன் மேலும் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் அதை பார்த்த கூட்டம் மொத்தமும் அதிர்ந்து போனது.
அத்தனை நேரம் திடமாக அமர்ந்திருந்த இளந்தளிரும் ஒவ்வொரு காணொளியும் கண்டு அதுகாறும் கொண்டிருந்த தைரியம் மொத்தமும் வடிய நெஞ்சம் படபடக்க உதயாதித்தனை தான் பார்த்தாள். அவனோ விழிகளில் குறையாத ரௌத்திரத்தோடு கைமுஷ்டிகள் இறுக நண்பன் என்ற போர்வையில் தளிரை இந்நிலையில் நிறுத்தி இருப்பவனை கொன்று கிழிக்கும் ஆவேசத்தோடு அமர்ந்திருந்தான்.
ஆம் சரத் இளந்தளிரின் பள்ளி தோழன். பள்ளியில் படிக்கையிலேயே இளந்தளிர், லேகா, சந்தியா, அஜய், அசோக், சரத், தீனா என்று அவர்கள் குழுவில் மொத்தம் ஏழு பேர்.. அனைவருமே ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் ஓரிருவர் பக்கத்து தெரு.. ஒரே பள்ளி, ஒரே டியூஷன் என்றிருந்தவர்களின் நட்பு ஆறாம் வகுப்பில் வலுபெற்று பள்ளிக் கடந்து கல்லூரியிலும் ஒரே பட்டபடிப்பில் சேர்ந்ததன் மூலம் தொடர்ந்திருந்தது. சரத் தவிர மற்ற அனைவருமே மத்தியதர வகுப்பை சேர்ந்தவர்கள் ஆனால் எந்தவித பேதமின்றி பழகுபவனின் எளிமையே அவர்களுக்குள் சரத்தை சேர்த்து கொள்ள வைத்தது.
தரமான கல்வி மகள்களுக்கு கிடைக்க வேண்டி ரகுபதி அவர்களை இருபாலர் படிக்கும் பள்ளியில் சேர்த்திருந்தார். அவர் இறைவனடி சேர்ந்த பின் எதிலுமே மகள்களுக்கு தந்தை இல்லாத குறை தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே இருவரையும் அதேபள்ளியில் தொடர் செய்திருந்த சீதாலட்சுமி பள்ளி மட்டுமல்ல முடிந்தவரை கணவர் இருந்த போது மகள்களுக்கு கிடைத்த சுதந்திரம் எதையும் அவர் தடுக்கவில்லை.
மகள்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ரகுபதி தளிர் ஆண் பெண் பேதமின்றி நட்புடன் இருப்பதை என்றுமே தடுத்ததில்லை. ‘என் பொண்ணு லக்ஷ்மி..! அவளோட சுதந்திரத்தை எப்பவும் தப்பா பயன்படுத்த மாட்டா, மத்தவன் சொல்றதுக்காக எல்லாம் என் பெண்ணை நான் வீட்டோட முடக்கி போடமுடியாது.. அவளோட படிக்கிற பசங்களையும் எனக்கு நல்லா தெரியும்’ என்று வயது வந்த பின்னரும் மகளை பள்ளி, டியூஷன் இன்ன பிற இடங்களுக்கு ஆண்பிள்ளைகளோடு செல்வதை அனுமதிக்கும் கணவரிடம் சீதா கேட்ட கேள்விக்கு அவரின் பதில் இதுதான்.
எங்கே தந்தையை இழந்த பின் மகள்களை ஒவ்வொன்றுக்கும் கட்டுபடுத்தினால் ‘அப்பா இருந்திருந்தா நாங்க இன்னும் சந்தோஷமா இருந்திருப்போமே ம்மா.. ஏன்ம்மா எல்லாத்துக்கும் ரெஸ்ட்ரிக்ட் பண்றீங்க..? நாங்க எல்லாருமே பிரெண்ட்ஸ் ம்மா, அப்பாவை போல உங்களுக்கு எங்க மேல நம்பிக்கையே இல்லையா..?’ என்ற கேள்வி எழுப்பி மகள்கள் தந்தைக்காக ஏங்கி விடக்கூடாது என்றே அவர்களை தடுத்ததில்லை.
இளந்தளிர் இளந்தென்றல் இருவருமே தங்கள் எல்லை உணர்ந்து நடந்துகொண்டு ரகுபதியின் நம்பிக்கையை காப்பாற்றி இருந்ததில் சீதாவிற்கு மகள்கள் குறித்து பெருமிதமே..!!
இளந்தளிர் அனைவருடனும் பலவருட நட்பு கொண்டிருந்தாலும் அவளுக்கு மற்ற ஆறு பேருமே ஒன்றுதான்! யாரிடமும் பேதம் காண்பித்ததில்லை நட்பு என்ற கோட்டை தாண்டி முதன்முதலாக சென்றது அஜய் மற்றும் லேகா தான். ஆம் கல்லூரி முதல் ஆண்டு இறுதியில்தான் இவர்களின் காதல் விவகாரம் மற்ற ஐவருக்கும் தெரிய வந்தது. மற்றவர்கள் அதை எளிதாக ஏற்றுக் கொண்டாலும் நட்பை காதலோடு பொருத்தி பார்க்க முடியாத இளந்தளிரால் அதை சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை. அவர்களுக்குள் காதல் மலர்ந்ததில் பெரிதாக உடன்பாடு இல்லாமல் போனாலும் காதல் அவர்களின் தனிப்பட்ட விடயம் என்று ஒதுங்கிகொண்டாள்.
ஆனால் சரத் தளிரை காதலித்தது தீனா அசோக் தவிர இன்றுவரை வேறு யாருக்குமே தெரியாது.. மற்ற நண்பர்களைப் போலத்தான் சரத்துடனும் பழகிய தளிருக்கு அவன் தன்னை காதலிக்கும் விடயம் தெரிந்திருந்தால் அப்போதே அதற்கு ஒரு முடிவு கட்டி அவனிடம் இருந்து ஒதுங்கியிருப்பாள். ஆனால் அவன் தன் காதலை அவளிடம் தெரிவிக்காமல் போனதோடு அவள் விருப்பமே இல்லாமல் அவளுக்கே தெரியாமல் அவள் கழுத்தில் தாலி கட்டி இருந்தான்.
ஆனால் கட்டிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தளிர் அதை கழற்றி அவன் முகத்தில் வீசுவாள் என்பதை எதிர்பாராதவன் இத்தனை வருடங்களாக அவளை பழிதீர்க்க காத்திருந்து இதோ கட்சிதமாக காய் நகர்த்தி அவள் நண்பர்களுடன் இருந்த காணொளிகளை அவளுக்கு எதிராகவே எய்திவிட்டான்.
சொல்லப்போனால் கடற்கரையில் அவர்கள் விளையாடிய காணொளியை எடுத்ததே ரகுபதிதான். அது மட்டுமல்ல இன்னும் பல இடங்களுக்கு அவரும் சந்தியாவின் தந்தையும் சேர்ந்தே பிள்ளைகளை அழைத்து சென்றிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் காணொளிகள் சிலவற்றில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பது போல செய்தவன் உண்மையான நட்பிற்கு இன்று காதல் என்ற சாயம் பூசி தன்னை அவமதித்த தளிரின் அவமானபடலத்தை அட்டகாசமாக அரங்கேற்றி இருந்தான்.