கஜபதியையும் அவர் மனைவியையும் மேடையில் நிற்க வைத்த சீதாலக்ஷ்மி சற்று தள்ளி நின்று மகளின் திருமண சடங்குகளை கண்குளிர பார்வையிட்டு கொண்டிருந்தார். சட்டென ஏற்பட்ட சலசலப்பில் ஒன்றும் புரியாமல் சீதாவும் மற்றவர்களை போல சரத்தை பார்த்திருந்தவர் அவன் பேசிய பேச்சில் முற்றிலுமாக நிலைகுலைந்து போனார்.
தளிரை போலவே அவன் வரவை சீதாவும் எதிர்பார்க்கவில்லை சொல்லப்போனால் அவருக்கு அவனை அடையாளமே தெரியவில்லை அனால் தன் கைக்கு வந்து சேர்ந்த புகைப்படத்தை கண்டவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
மேலும் அங்கே ஓடிக்கொண்டிருந்த காணொளிகள் அத்தனையும் எங்கே மகளின் வாழ்வை அஸ்தமிக்க செய்துவிடுமோ..? என்று பதறிப்போனவரின் விழிகளில் அம்பலவாணன் பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருப்பதை கண்டு முற்றிலுமாக நொறுங்கி போனார்.
‘கடவுளே உடன்பிறவா சகோதரனாக தனக்கு துணை இருந்த மனிதரிடம் முன்னமே சொல்லாமல் எத்தகைய இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்திவிட்டேன் நான்..’ என்ற குற்றஉணர்வு ஆட்கொள்ள அவர் விழிகளில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
‘ஏங்க ஏன் இப்படி நடக்குது..? நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடத்தி கொடுக்க சொல்லி உங்ககிட்ட தானே பொறுப்பு கொடுத்தேன் ஆனா இப்.. இப்படியா..’ என்று முந்தானையில் வாயை பொத்திக்கொண்டே சுவரோடு சுவராக ஒன்றிபோனவருக்கு ‘அடுத்து என்ன செய்ய..? கேட்பவர்களுக்கு என்ன பதிலளிக்க..?’ என்று புரியாத நிலை.
அங்கே ஆவேசமாக சரத்தை அடித்து கொண்டிருந்த உதய்யை கண்டவரின் நெஞ்சம் விம்மி வெடிக்கும் நிலைக்கே சென்றுவிட்டது.. எத்தனை பெரிய தீரா களங்கத்தை உதயனோடு சேர்த்து அவர் குடும்பத்தாருக்கும் சேர போகிறதே என்றவரின் இதயத்துடிப்பு பன்மடங்காக கூடிவிட்டது.
இனி மகளை நோக்கி எழக்கூடிய கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னாலும் ஊர் ஏற்றுக்கொள்ளுமா..? ஊரை புறம் தள்ளினாலும் உதய்யும் அவன் குடும்பமும் ஏற்று கொள்ளுமா..? தவறு செய்யாத மகள் இன்று நண்பன் என்று நம்பிய பாவியால் இத்தனை பேர் முன்னிலையில் தவறாகி நிற்கிறாள். என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது அனைத்தும் இவர்கள் கைமீறி சென்றுவிட்டது என்பது மட்டும் ஓரளவுக்கு அவருக்கு பிடிபட்டது.
அம்பலவாணன் அமர சொல்லிவிட்டு போயிருந்தாலும் அங்கே திரையில் ஒவ்வொரு வீடியோவும் மாறிக் கொண்டு வர அதற்கு மேலும் அவனால் பொறுமை காக்க முடியாது போக தன்னை பிடித்திருந்த தளரின் கையை மெதுவாக விலக்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “பீ ஸ்ட்ராங்” என்று சொல்லி மனையை விட்டு எழ, அவன் கையை பிடித்தவள், “எங்க போறீங்க உதய் என்னோடவே இருங்க ப்ளீஸ்” என்றாள்.
“தளிர் அந்த சைக்கோ உன்னோட கேரக்டரை அஸாஸினேட் பண்ணிட்டு இருக்கான் நான் எப்படிடி அமைதியா இருக்க முடியும்? விடு என்னை ஐ ஹாவ் டு ஸ்டாப் திஸ்..!” என்றவனின் முகத்தில் கட்டுக்கடங்கா ரௌத்திரம். பின்னே அவனுமே இப்படி அம்பலவாணன் போட்டிருந்த காவலை மீறி உள்ளே நுழைந்து இந்தளவு அசிங்கபடுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லையே..!!
உதய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே அவன் திருமணத்தை படம்பிடிக்க வந்திருப்பவர்களையே விலைக்கு வாங்கி இருக்கும் சரத்தின் செயல்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டு அமைந்திருப்பதில் உதய்யிடம் அத்தனை ரௌத்திரம்..!!
“அக்கா” என்று அதிர்ச்சியில் உறைந்திருந்த சுஜியிடம் தளிரின் பொறுப்பை கொடுத்துவிட்டு மேடையிலிருந்து வேகமாக கீழே இறங்கி சென்றவன் பேசிக்கொண்டிருந்த சரத்தின் நெஞ்சில் ஓங்கி எட்டி உதைக்க இரண்டடி தள்ளி விழுந்திருந்தான்.
“மச்சான் நீ ஏன்டா வந்த போய் உட்காரு” என்ற ராகவனின் பேச்சுக்கள் எதுவுமே உதய்யின் காதில் விழவில்லை.
“டேய் பேசிட்டு இருக்காம முதல்ல ஸ்க்ரீனை ஸ்டாப் பண்ணு கோ..” என்றவன் தடுமாறி நின்ற சரத்திடம், “டேய் பொறம்போக்கு நீ இங்கிருந்து போகலன்னா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.. உனக்கு உயிர் பிச்சை கொடுக்கறேன் மரியாதையா இங்கிருந்து போயிடு.. இதுக்கு மேல ஒரு வார்த்தை தளிரை பேசினாலும் உன் உயிர் உனக்கில்லை” என்று அவன் முகத்தில் ஓங்கி குத்தியவன் தொடர்ந்து அவனை வரைமுறை இல்லாமல் மூர்கத்தனமாக தாக்க தொடங்கிவிட்டான்.
அவனை கட்டுபடுத்த முயன்றவர்களை அலட்சியமாக உதறிய உதய் சரத்தை தரதரவென இழுத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.
அப்போதும் அடங்காத சரத் “டேய் அவ எச்சதட்டு அதுதான் உனக்கு வேணுமா..?” என்று தெனாவட்டாக அவனை பார்த்த நொடி உதய் அடித்த அடியில் சுழன்று விழுந்தவனின் கடவாய்பல் கதகளி ஆடிக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து உதய் அவன் உயிர்நாடியில் ஓங்கி உதைக்கவும் சரத் சுருண்டிருந்தான். சுற்றியிருந்தவர்கள் பதறிப்போய் உதய்யை பிடித்து கொண்டனர்.
*************************************
அவசரமாக மேடைக்கு ஓடிய தென்றல், “என்னம்மா நடக்குது இங்க? யாரும்மா அவன்? எதனால் அக்காவை தன்னோடு வைஃப்ன்னு சொல்றான் இதெல்லாம் பொய்தானம்மா..?” என்று கேட்க சீதாவின் தலையோ இல்லை அத்தனையும் சத்தியமான உண்மை என்பதாக அசைந்தது.
அதை கண்ட தென்றலுக்கு ஒருநொடி இருதயம் நின்று பின் துடிக்க தொடங்கியது.
“ம்மா என்னம்மா சொல்றீங்க அக்காக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா..? இது எப்போ.. நிஜமாதான் சொல்றீங்களா..?” என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு கேட்க கண்ணீரோடு மகளைப் பார்த்து சீதாவின் தலை “ஆம்” என்பதாக மேலும் கீழும் அசைந்தது.
உதய் கீழே சென்றதுமே தளிர் அருகே வந்த ராஜி, “எந்திரிடி முதல்ல” என்று தளிரை இழுத்து நிறுத்தியவர் “உனக்கு கல்யாணம் ஆனது நிஜமா..?” என்று கேட்க தளிரிடம் கனத்த மௌனம்.
“ராஜீமா எவனோ வந்து எதுவும் சொன்னா அது எல்லாமே நிஜமாகிடுமா..? கொஞ்சம் அமைதியா இருங்க இப்ப எல்லாம் ஃபேக்காக எவ்வளவு வேணும்னாலும் செய்யலாம் அதையெல்லாம் நம்பாதீங்க நம்ம என்னன்னு விசாரிக்கலாம்” என்று சுஜி கூறவும், “ஏய் இங்க பாருடி” என்று திரையில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை காண்பித்தார்.
அதில் தளிரும் சரத்தும் கோவில் படிக்கட்டுகளில் ஏறி செல்வது போலவும் அவர்கள் பின்னே மூன்று வாலிபர்கள் தளிரோடு ஒரு பெண் என்று அத்தனை பேரும் சிரித்த முகமாக மகிழ்ச்சியுடன் அப்படியே ஏறி கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர் அதை பார்த்த சுஜி அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் பார்த்து நின்றாள்.
“நான் ஆரம்பத்துல இருந்தே ஏதோ சரியில்லன்னு சொன்னேன் யாருமே கேட்கலை உங்களோட அலட்சியம் இப்போ நம்மளை எந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தீங்களா…?” என்று சுஜியை ராஜி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவள் மாமியாரும் நாத்தனாரும் அவளிடம் விசாரிக்க வந்துவிட்டனர்.
அதேபோல நிவியின் புகுந்த வீட்டு உறவுகளும், யாருக்கு என்ன சொல்வது என்று புரியாமல் அலமலந்து போயினர் சகோதிரிகள்.
“சொல்லுடி.. என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி நிற்ப..?” என்று ராஜி குரல் உயர்த்தவும் பதறிக்கொண்டு வந்த சீதாலட்சுமி, “சம்மந்தி அம்மா அதை பற்றி நான் உங்ககிட்ட பொறுமையா பேசுறேன்” என்றார்.
அக்கா நகரு என்ற ஜெகா “சொல்லு தளிர் உனக்கு கல்யாணம் ஆனது உண்மையா..?” என்று கேட்க, தனக்கு நடந்த அநீதிக்கு திருமணம் என்று பெயர் சூட்ட விரும்பாத தளிர் மௌனமாக நின்றாள்.
அதை கண்டு ஜெகாவின் கோபம் இன்னும் கிளறப்பட “உன்னைதான்டி கேட்கிறேன், சொல்லு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?” என்று கேட்க கண்களை மூடி “ஆம்” என்று தலையசைத்த தளிரை கண்ட சுஜி, நிவி, தென்றல் மூவருக்குமே ஒருகணம் மூச்சு நின்றுபோனது.
மறுபுறம் சீதாவிடம், “இத்தனை பேர் எதிர்ல எங்களை அசிங்கபடுத்திட்டு இதுக்கு மேல நாங்க பொறுமையா கேட்க என்ன இருக்கு..? அவனவன் என் பையனுக்கு என்ன குறைன்னு ஏற்கனவே கல்யாணம் ஆனவளை கட்டிக்க பார்க்கிறான்னு கேட்கிறான் நாங்க என்ன பதில் சொல்ல..?” என்று கேட்க சீதா கண்ணீரோடு பார்த்தார்.
“இதோபார் சீதா நான் கேட்டது ஏற்கனவே உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா..? அதுக்கு பதில் சொல்லு” என்று ராஜியிடம் “ஆம்” என்று கண்ணீர் மல்க சீதா தலையசைக்கவும் அதிர்ச்சியில் ராஜிக்குமே வார்த்தை எழவில்லை. ‘எத்தனை பெரிய உண்மையை மறைத்து தங்களை அசிங்கபடுத்தி இருப்பர்’ என்று கொதித்து போனவர் ஜெகாவிடம் ஏதோ விளக்கம் கொடுத்து கொண்டிருந்த சீதாவை தன்புறம் திருப்பி,
“ச்சை என்ன பொம்பளை நீ..? எப்படிடி எப்படி உன் பொண்ணுக்கு கல்யாணமான விஷயத்தை மறைச்சு என்னமோ புதுசா கட்டிகொடுக்கிற மாதிரி நாடகமாடி மணமேடை வரைக்கும் வந்திருக்கீங்களே எப்படி முடிஞ்சது உங்களால..? ஏன்டி இதுக்கு பேர் தான் முழு பூசணிக்காய்யை சாதத்துல மறைக்கிறதா..? ஏற்கனவே கட்டினவன் இருக்கப்போ இன்னொருத்தனுக்கு கட்டிகொடுக்க துணிஞ்சு இருக்கியே எப்படி முடிஞ்சது உன்னால..? அவனுக்கு அடுத்து என் பையன் தானா இல்ல இன்னும் எத்தனை பேர் இருக்காங்க..?”
“சம்மந்தியம்மா அப்படி எல்லாம் இல்லை என் பொண்ணு எந்த தப்பும் பண்ணலை” என்று கண்ணீரினூடே பேசிய சீதாவின் பேச்சை கேட்க தான் ராஜி தயாராக இல்லை.
“என்னது உன் பொண்ணு எந்த தப்பும் செய்யலையா..? இதை நாங்க நம்பனுமா..? கல்யாணத்துக்கு முன்னாடியே என் மகனை எப்படியெல்லாம் வளைச்சு போட பார்த்தான்னு எனக்கு தானே தெரியும்.. எப்படி இப்படி பணக்காரனா பார்த்து வலைவீசி ஒன்னும் தெரியாத மாதிரி கல்யாணம் வரைக்கும் கொண்டு வரீங்க..? உண்மையை சொல்லு இது இவளுக்கு எத்தனாவது கல்யாணம்..?” என்றிட சீதா உள்ளுக்குள் மறித்து போனார்.
“என்ன தைரியம் இருந்தா கல்யாணமானதை மறைச்சு என் பிள்ளையை எங்களை எல்லாம் முட்டாளாக்கி இவ்வளவு தூரம் வர வச்சு அசிங்கப்படுத்தி இருப்ப.. சொல்லுடி நான் உனக்கு என்ன பாவம் செய்தேன் ஏன் இப்படி எங்க கழுத்தருத்தீங்க…?” என்று ஜெகா கேட்க முதல்முறையாக வாயை திறந்த தளிர்,
“இன்னிக்கு இங்க சரத் வருவான்னு நான் நினைக்கல அத்தை” என்றாள்.
“யாரு சரத்..?” என்றார் ஜெகதீஸ்வரி.
“ஏன்டி ஒன்னும் ஒன்னும் இரண்டுங்கிற கணக்கு கூடவா உனக்கு தெரியாது.. அதோ அங்க நிக்கிறானே அவன் பேருதான்டி சரத். இதோ இவ புருஷன்” என்று ராஜி சொல்லவும் மேடையில் பேரனின் திருமணத்தை பார்ப்பதற்காக அமர்ந்திருந்த அண்ணாமலையும் அன்னபூரணியும் அதிர்ந்து போயினர்.
“அவன் வரமாட்டான்னா எனக்கு புரியலை.. ஏன்டி எங்களை பார்த்தா உங்களுக்கு பைத்தியக்கார கூட்டம் மாதிரி தெரியுதா..?” என்று ஜெகா கேட்டுக்கொண்டிருக்க, “ஏன்ம்மா உங்க பெண்ணுக்கு திருமணம் ஆனதை மறைச்சீங்க” என்று அண்ணாமலை வேதனையோடு கேட்டவாறே அவர்களிடம் வந்தார்.
“சொல்லுங்க எங்க மாமாவே கேட்கிறார் இல்ல, பதில் சொல்லுங்க ஏன் இந்த விஷயத்தை எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க..?” என்று ஜெகாவும் அவமானம் தாளாமல் உரத்த குரலில் கேட்டார்.
“எங்களுக்கு நியாபகம் இல்ல அதை நாங்க மறந்துட்டோம் சம்பந்தியம்மா” என்றார் சீதலக்ஷ்மி
“என்னது மறந்துட்டீங்களா..?” என்ற ராஜியின் கோபம் இருமடங்காகி போனது.
“என்னம்மா பேச்சு இது..? ஒரு பொண்ணு தாலி கட்டினவனை ஆயுசுக்கும் மறக்கமாட்டா அதையே மறந்துட்டேன்னு சொல்றீங்க..? ஏம்மா சீதா என் பையன் உன் வீட்டுக்கு வந்து முறைப்படி பொண்ணு கேட்டு நிச்சியம் பண்ணோம் ஒவ்வொரு விசேஷமும் எடுத்து நடத்தினோம் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லியிருக்கலாமே ஏம்மா சொல்லல..?” என்று கேட்க அழுகையில் கரைந்து கொண்டிருந்த சீதாவிடம் அவர்களின் நியாயமான கேள்விக்கு பதிலில்லை..
அவருக்கு நினைவில் இருந்திருந்தால் தானே அவரும் சொல்வதற்கு அதோடு மீனாக்ஷிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு பிறகு முற்றிலுமாக இதை அவருமே மறந்து போனார் என்பது தான் நிஜம்.
மொத்த கூட்டமும் ஒருபுறம் உதயன் மற்றும் சரத்தின் இடையிலான பேச்சுவார்த்தையையும் மறுபுறம் மேடையில் இருந்த பெண்களின் பேச்சையும் கேட்பதற்காக பிரிந்து இருந்தது ஏற்கனவே தளிரின் மீதான அபிப்பிராயம் இப்போது ஊர்ஜிதப்பட்டு போனதில் ராஜியின் ஆத்திரம் பன்மடங்கு அதிகரித்திருந்தது மறுபுறம் நின்றிருந்த கஜபதியும் தளிரும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தியில் உச்சக்கட்ட கோபத்தோடு சீதாவை நெருங்கி..,
“ச்சை இதெல்லாம் ஒரு பிழைப்பா..? எத்தனை பேரை இப்படி ஏமாத்தி இருக்கீங்க..? உங்களுக்கு வேணும்னு கேட்டிருந்தா நானே போனா போகுதுன்னு பிச்சை போட்டிருப்பேனே..! இப்படியா கல்யாணங்கிற பேருல அப்பாவிகளை ஏமாத்துவீங்க..? இதுக்கு நான் ஆசிர்வாதம் பண்ண வரலைன்னு பேச்சு வேற.. இத்தனை வருஷமா பணம் காசு, சொத்து எதுவும் வேணும்னு தேடி வராதப்பவே நினைச்சேன் இப்பதானே தெரியுது..” என்று அருவெறுப்போடு சொன்னவரின் வார்த்தைகள் தளிர், தென்றலை சுக்குநூறாக சிதற செய்திருந்தது.
“த்து அந்த வீட்ல குடும்பம் தான் நடத்துறீங்ளா இல்ல வேறெதுவுமா..? இப்படிப்பட்ட பொழப்புக்கு..” என்று அவர் பார்த்த பார்வையே சீதாவை முழுதாக மரிக்க செய்திட குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தவரின் கரம் மகளை பத்திரமாக பிடித்துகொண்டது.
அதேநேரம் குறையாத ஆவேசமாக மேடையேறிய உதயாதித்தனின் செவியில் கஜபதியின் நாராசமான வார்த்தைகள் விழ வேகமாக நெருங்கி அவரை ஓங்கி அறைந்தவன் “இதுக்கு மேல ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்தது கொன்னுடுவேன், அவுட்” என்று கர்ஜிக்க அதை கண்ட ராஜியின் கன்னமோ தானே அடி வாங்கியது போல காந்திட அவர் உடலோ வெகுவாக வெடவெடத்து போனது.