“உதய் அவன் பொண்டாட்டின்னு சொல்றான் என்னன்னு விசாரிக்காம இப்படி அடிக்கிறது சரியில்லைப்பா” என்று தூரத்து சொந்தத்தில் பெரியவர் ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே உதயாதித்தன் சரத்தின் உயிர்நாடியில் விட்ட உதையில் சரத் சுருண்டு விழுந்தான்.
என்றுமில்லாத ஆக்ரோஷத்தோடு உதய் மீண்டும் சரத்தை நெருங்குவதை கண்ட ராகவனும், சரவணனும், “உதய் என்னடா பண்ற பொறுமையா இரு ஏதாவது ஆகிட போகுது” என்றுஅவனை ஆளுக்குஒருபுறமாக பிடித்துக்கொண்டனர்.
“விடுங்க மாமா.. இந்த பொறுக்கி என்ன செய்தான்னு தெரிந்தா நீங்களே அவனை கூறு போடுவீங்க என்னை விடுங்க” என்று திமிறியவன் குறையாத ஆவேசத்தோடு மீண்டும் அவன் உயிர்நாடியில் ஓங்கி உதைக்க போகவும் அவனை பிடித்திழுத்த ராகவன்,
“மச்சான் ஏன் இப்படி கண்ட்ரோல் இல்லாம போற..? ஏதாவது ஆகிடபோகுது சொன்னா கேளு சிவனேஷ் அங்கிள் வரட்டும் நாம மெதுவா விசாரிக்கலாம்” என்று உதய்யை பிடித்துக்கொண்டான்.
“டேய் நம்பி பழகின பொண்ணுக்கு துரோகம் செஞ்ச இந்த சைக்கோ இத்தனை நாள் நடமாடிட்டு இருந்ததே பெருசு… இவனை இதுக்கு மேலயும் விட்டுவைக்கிறது தப்பு விடுடா..” என்று உதய் மீண்டும் ஓங்கி மிதிக்க குறி தப்பி அவன் அடிவயிற்றை பதம் பார்க்கவும் வலியில் கதறிய சரத் இன்னுமே சுருண்டிருந்தான்.
“உதய் அங்கிள் வந்துட்டே இருக்காரு நாங்க இவனை அனுப்பி வைக்கிறோம் முகூர்த்த நேரம் முடியபோகுது நீ முதல்ல உள்ள போ” என்று உதயாதித்தனின் ஆவேசத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஆகிவிடுமோ என்று அதட்டல் போட்டு சரவணன் அவனை உள்ளே அனுப்ப முற்பட்டார்.
அதற்குள் அங்கிருந்த பெரியவர், “ஏன்ப்பா அந்த பொண்ணு நல்லா சிரிச்சு இவனோட ஊர் சுத்தியிருக்கு நீ ஏன் அடிக்கிற..? படாத இடத்துல பட்டு ஏதாவது ஆகபோகுது” என்று மனிதாபிமானத்தோடு சரத்தை பிடிக்க.,
“இன்னொருத்தன் பொண்டாட்டியை மண்டபம் வரை கூட்டிட்டு வந்தது நீங்க இப்போ பொண்டாட்டியோட சேரனும்னு வந்திருக்கவனை ஏன்ப்பா அடிக்கிற..?” என்று மற்றொருவர் கேட்க ஆவேசமாக அவர் புறம் திரும்பியவன் கோபத்தோடு சுட்டுவிரலை நீட்டி,
“அந்த கல்யாணத்தை நீங்க நடத்தி வச்சீங்களா..? அப்படி இருந்தா மட்டும் பேசுங்க” என்று கர்ஜித்தவனை நெருங்கும் தைரியம் யாருக்கும் இல்லாது போனது.
“நடந்தது என்னன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க..” என்றவாறே கீழே இருந்தவனை இழுத்து நிறுத்திய உதய், “தளிரை என்ன சொன்ன…?” என்று விழிகள் சிவக்க கேட்க சரத்திடம் பதிலில்லை.
பின்னே அவன் நினைத்து வந்ததென்ன இங்கே நடப்பதென்ன..? அவன் ஒளிபரப்பிய காணொளிகளை பார்த்த பிறகு உதய் தளிரை உதறி செல்வான் என்று நினைத்திருந்தவன் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே தளிரை பற்றி மோசமாக பேசி உதய்யை விலக வைக்க முயன்றான் ஆனால் அதையும் நம்பாமல் அவன் தன்னை சுழற்றி அடிப்பதை கண்டவனுக்கு இதற்குமேலும் தளிரை தவறாக சொன்னால் நிச்சயம் உயிரை எடுத்துவிடுவான் என்பது புரிபட, “எனக்கு என் பொண்டாட்டி வேணும் அவளை அனுப்புங்க நான் கிளம்பறேன்..” என்று திக்கி திணறும் போதே அங்கே வந்து சேர்ந்தது காவல்துறை வாகனம்.
வந்தவர்கள் சரத்தை அள்ளி ஜீப்பின் பின்னால் போட அவன் நிலையையும் உதய்யின் கோபத்தையும் கண்ட சிவனேஷ், “காம் டவுன் மை பாய்..! அப்பா பேசினாங்க இனி நாங்க பார்த்துக்கறோம் ஆனா உனக்கு இவ்ளோ டென்ஷன் அதுவும் இன்னைக்கு கூடவே கூடாது புரியுதா..? கல்யாண மாப்பிள்ளை சிரிச்ச முகமா தான் தாலி கட்டனும்” என்று தோளில் தட்டிக்கொடுக்க,
“இவன் வெளியிலேயே வரக்கூடாது அங்கிள்.. என்ன தைரியம் இருந்தா என்னோட கல்யாணத்தை கேப்சர் பண்ண வந்தவங்களை விலைக்கு வாங்கி தளிரோடு வீடியோஸ் போட்டிருப்பான்” என்றவன் ராகவனிடம்,
“மச்சான் அது யாருன்னு பார்த்தியா..? அவனையும் இழுத்துட்டு வந்து போடு” என்றவன் சிவனேஷிடம் குறையாத சீற்றத்தோடு பேசவும் “இவ்வளவு கோபம் உனக்கு இப்போ நல்லது இல்ல உதய்! நான் பார்த்துக்கிறேன் இப்போ சந்தோஷமா போய் கல்யாணம் பண்ணு” என்றவர் உள்ளே சென்ற ராகவன் காணொளி ஒளிபரப்பிய இருவரையும் அழைத்து வந்திருக்க அவர்களையும் ஜீப்பில் ஏற்ற சொல்லிவிட்டு நின்றிருந்த கூட்டத்திடம்,
“அவன் ஒரு கிரிமினல்! இந்த கல்யாணத்தை கெடுக்கணும்னு தேவையில்லாம பிரச்சனை செய்திருக்கான் அந்த பெண் மேல எந்த தப்பும் இல்லை இனி நாங்க பார்த்துப்போம் இன்னும் ஏன் நின்னுட்டு இருக்கீங்க கல்யானத்துக்கு வந்துட்டு ஆசிர்வதிக்க வேண்டாமா..? எல்லாரும் உள்ள போங்க” என்று காவல்துறை அதிகாரியே சொல்லவும் அதை ஏற்பதா இல்லை காணொளியை நம்புவதா என்ற குழப்பத்துடனே அனைவரும் மண்டபத்திற்குள் சென்றனர்.
“தேங்க்ஸ் அங்கிள்”
“அதெல்லாம் இருக்கட்டும்.. அடுத்த வீக் விருந்து என்னோடது நீ தளிரை கூட்டிட்டு வீட்டுக்கு வர மறந்துடாத” என்றதும் சிறு புன்னகையோடு “சரி அங்கிள்” என்றவன் கிளம்பவும்,
“ராகவ் உதய்க்கு ஏதாவது குடிக்க கொடு..” என்றவர் அங்கே வந்த அம்பலவாணனிடமும் பேச தொடங்கினார்.
*****************************
“என்ன தென்றல் இதெல்லாம்..? ஏன் நீகூட எங்ககிட்ட சொல்லவே இல்ல” என்ற நிவியால் இன்னுமே அதிர்வில் இருந்து மீள முடியவில்லை.
“எனக்கும் தெரியலை அண்ணி ஆனா இவங்க எல்லாரும் அக்காவுடைய ஃப்ரெண்ட்ஸ் சின்ன வயசுல பார்த்திருக்கேன் அண்ணி எனக்கு ஞாபகம் இருக்கு… ஆனா அக்கா இங்க வந்த பிறகு அவங்க யாரோடவும் டச்ல இல்ல, ஆனா எங்கக்காவை இந்த அண்ணா எப்படி கல்யாணம் பண்ணினாங்கன்னு எனக்கு தெரியாது அண்ணி..”
“என்ன சொல்ற உனக்கு தெரியாதா..?”
“ஆமா நான் நைன்த் படிக்கிறப்போ ஒருமுறை அக்கா டியூஷன் விடப்போன போது இவரையும் லேகா அக்காவையும் பார்த்தேன் அதோட சரி ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்குறேன்” என்று தென்றல் சொல்லபேசிக்கொண்டிருந்த அதேவேளை நடக்கும் கலவரத்தை கண்ட குழந்தைகள் பயத்தோடு நிவியை ஆளுக்கு ஒருபுறமாக பிடித்துகொண்டு நின்றிருந்தவர்கள் பெரியவர்களின் பேச்சில் அழவே செய்தனர்.
அவர்களை சமாதானபடுத்திய நிவி உடனே அவர்களை கீழே இருந்த தன் நாத்தனர்களிடம் அழைத்து சென்றாள்.
“சித்தி ஏன் கல்யாணம் நடக்கல.. ராஜி பாட்டி அப்புறம் அந்த தாத்தா எல்லாரும் மாமியையும் சீதா பாட்டியையும் எதுக்கு திட்டறாங்க..?” என்று அழுகையினூடே வைஷு கேட்க, கௌஷிக்கோ, “சித்தி மாமா ஏன் அந்த அங்கிளை அடிக்கிறாங்க.. அப்பா, சித்தா, மாமா எல்லாரும் எங்க போயிருக்காங்க” என்றான்.
“ஷ்ஷு வைஷு அழக்கூடாது நீங்க இரண்டு பேரும் குட் கிட்ஸ்ஸா சித்தி சொல்றதை கேட்டு இங்க ஆன்டி கூட இருப்பீங்களாம் நான் வந்து கூப்ட்டுக்கறேன்”
“சித்தி அப்போ மாமா மாமி கல்யாணம் நடக்காதா..?” என்று அங்கு நடக்கும் களேபரங்கள் கொண்டு தங்களுக்கு எழுந்த சந்தேகத்தை கேட்கவும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நிற்கும் நிவி மட்டும் என்ன பதில் சொல்லிவிட முடியும்..?
“மாமா வந்ததும் நான் கேட்டு சொல்றேன் நீங்க சமத்துகுட்டிகளா இங்கயே இருக்கணும்” என்றவள் விழிகள் உதய்யை தேடி மண்டபத்தின் வாசலுக்கு செல்ல அவள் கைபேசியில் குறுஞ்செய்தி வந்திருந்தது.
திறந்து பார்த்தவள் விழிகள் நம்ப முடியாமல் கூர்மையாக அவளின் அதிர்ச்சி இருமடங்காகி போனது அதில் ஒளிபரப்பபட்டிருந்த செய்தியை கண்டு.
“மாற்றான் மனைவியை மணம் புரிய முனைந்த பணக்கார வாலிபரின் வெறிசெயல்.. தட்டி கேட்க வேண்டிய காவல்துறையும் கைகட்டி வேடிக்கை” என்று தலைப்பிட்டு உதய் சரத்தை அடிக்கும் புகைப்படங்களும் காணொளியும் வந்திருப்பதை கண்டவள் பதறிக்கொண்டு வெளியே சென்றாள்.
“மச்சான் இப்படியே மணமேடையில் உட்கார வேண்டாம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு போகலாம்” என்ற ராகவனின் பேச்சை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த உதயாதித்தன் விழிகளில் மேடையில் இருந்த ராஜி தளிரை ஏதோ கேட்டுக் கொண்டிருப்பதை கண்டவன் வேகமாக செல்ல ராகவனை பிடித்து நிறுத்திய நிவி காணொளியை காண்பித்தாள்.
“எப்படிங்க இது..? யார் செய்தது..?” என்று கேட்கவும் நெற்றியை பிடித்துகொண்டவன்,
“நான் மேரேஜை கவர் பண்ண வந்தவங்களை ஸ்டாப் பண்ணிட்டேன் ஆனா இப்போ எல்லார் கையிலயும் செல்ஃபோன் இருக்கு.. அதுல எடுத்து போட்டிருக்காங்க போல” என்றவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கும் தொழில் வட்டத்தில் இருந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது.
ஓரிருவருக்கு பதில் சொன்னவன் அதற்கு மேலும் அழைப்பை ஏற்காமல் ஸ்விட்ச்ஆஃப் செய்துவிட்டான்.
************************************
சரத் தன் மேல் சுமத்திய பழிகளை கேட்ட தளிருக்கு அதிர்ச்சியில் மயக்கம் வராத குறைதான்..! பின்னே தாலியை கழற்றி வீசி அவனிடமிருந்து தப்பித்து வந்த பிறகு இன்று தான் அவனை பார்க்கிறாள்.. அப்படியிருக்கையில் தன்னை அவன் மனைவி என்று சொல்லி அவன் புனையும் கட்டுக்கதைகளை திரையில் ஓடும் காணொளிகளும் நிஜமென்று நம்ப செய்திடுமே! இதில் சூழ்ந்திருப்பவர்களின் பார்வைக்கும் ராஜியின் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்லி அவள் எப்படி தன்னை நிருபிக்க..?
அதுவும் இன்று இத்தனை பேர் நிறைந்திருக்கும் சபையில் அவளோடு சேர்த்து உதய்யும் மற்றவர்களிடையே பேசுபொருளாகி போயிருக்கும் நிலையை கண்டவளுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது. தொண்டைகுழி ஏறி இறங்க சுஜியும், ஜெகாவும் ஒருபுறம் பதில் சொல்ல முடியாமல் திணறி கொண்டிருப்பதையும் மறுபுறம் அம்பலவாணன் தன்னை சூழ்ந்து கொண்டவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது அல்லல் படுவதையும் பார்த்தவளுக்கு நெஞ்சம் கனத்து போனது.
அவள் கனவிலும் எதிர்பாராத தருணம் இது..!
சூழலின் கனம் கூடிக்கொண்டே செல்வதை கண்டவளுக்கு எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியவில்லை. ஏன் இப்படி தன்னால் ஒருபாவமும் அறியாத உதய்யும் அவன் குடும்பமும் இந்நிலைக்கு ஆளாகிவிட்டனரே என்று பதறியவள்,
“அத்தை ப்ளீஸ் எனக்கு உங்க கஷ்டம் புரியுது ஆனா கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்ற அவள் பேச்சு பெரிதாக ஜெகாவிடம் எடுபடவில்லை. ‘பின்னே இன்னொருத்தனின் மனைவியை கரம் பிடிக்கும் அளவு உதய்யின் நிலை தாழ்ந்துவிட்டதா..? அவனுக்கு என்ன குறை..?’ என்று மகன் குறித்து எழுப்பப்படும் கேள்விகளில் அவருமே நிலைகுலைந்து போயிருந்தார்.
கைமீறி போயிருக்கும் சூழலில் மற்றொருமுறை சூழ்நிலை கைதியாகி நிற்பவளுக்கு தான் கொண்ட கூடா நட்பினால் அவள் பாதிக்கப்படலாம் ஆனால் அவளோடு சேர்த்து ஒரு பாவமும் அறியாத உதய்யும் குடும்பத்தாரும் பாதிக்கபடுவதை தான் தாள முடியவில்லை.
ராஜியின் கேள்விகள் தரம் தாழ்ந்ததாகவே இருந்தாலும் அவர் கேட்பதற்கு அவளல்லவா காரணமாகி போயிருக்கிறாள்..! இத்தனை பேர் நிறைந்திருக்கும் சபையில் உதய் தாலி கட்டவிருப்பது மற்றொருவன் மனைவி என்பது அவனுக்கு எத்தனை பெரிய அவச்சொல்..! நிச்சயம் இதற்கு அவளையன்றி வேறுயாரும் காரணமாகி விடமுடியாது.
சரத் குறித்த நினைவுகளை மறந்து அதை கடந்து தன் வாழ்வை அமைத்து கொண்ட தளிர் ஒருவேளை அதை செய்யாமல் போயிருந்தால் இன்று அவளை மண்ணோடு மண்ணாக புதைத்த இடத்தில் மரமே வளர்ந்திருக்கும். ஆனால் அதை தடுத்த மீனாட்சிக்கு கொடுத்த வாக்கினால் இன்று இவர்கள் முன் குற்றவாளியாக நிற்கும் அவலத்தை தளிரும் எப்படி விளக்க..? இந்நிலையில் அவள் அதை செய்தால் மட்டும் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வர்..?
அம்பலவாணனின் உயரம் என்ன..? அவர்கள் செல்வாக்கு, நற்பெயர் அத்தனையும் கலங்கபடுத்தும் விதமாக தன்னோடு நடைபெறவிருக்கும் திருமணம் அமைந்து போகும் என்று அவள் கனவிலும் எண்ணிபார்க்கவில்லை. எத்தனை சமாதானம் சொன்னாலும் இன்றைய நாள் அவர்களின் வாழ்வின் கருப்பு தினம் அல்லவா அதற்கு அவளே காரணமாகி போயிருப்பதில் இத்தனை நேரம் இல்லாத குற்ற உணர்வு அதிகரித்து பெண்ணை கூறுபோட தொடங்கியது.
சுஜி நிவியின் புகுந்த வீட்டினரின் கேள்விகள், முக்கிய விருந்தினர்கள் அம்பலவாணனிடம் பேசிக்கொண்டிருந்த விதம் அதற்கும் மேலாக உதய் சரத்தை அடிக்கும் காட்சி திரையில் ஒளிபரப்பபட்டு கொண்டிருந்தது என்று அத்தனையும் கவனித்தவளுக்கு மூச்சே ஒருகணம் நின்று போனது.
அவள் கைபேசிக்கு அழைப்பு வரவும் அதை ஏற்றவள் சந்தியா பேசிய பேச்சையும் அவள் அனுப்பிய காணொளியை கண்ட பின்பு முழுதாக நொறுங்கி போனாள்.
“ஏற்கனவே திருமணமான பெண் ஆசிரியை அதை மறைத்து பணக்கார வாலிபரை திருமணம் செய்ய முயன்ற மோசடி முன்னாள் கணவரால் வெட்டவெளிச்சமாகியது.. மண்டபத்தில் ஏற்பட்ட கலவரம்” என்ற தலைப்போடு அவள் தான் இன்றைய நாளின் தலைப்பு செய்தியாகி போயிருந்தாள்.
ஒரு காணொளியில் அவள் தலைப்பு செய்தி என்றால் மற்றொரு கானொளியில் உதய் தலைப்பு செய்தியாகி போயிருந்தான் அடுத்ததில் அவள் ஆசிரியராக பணிபுரியும் பள்ளியின் தாளாளரான அம்பலவாணன், அவர் கொண்ட நற்பெயர் என்று அத்தனையும் இன்று கேள்விக்குட்படுத்த பட்டு மக்கள் மத்தியில் விவாத பொருளாகி போயிருந்தனர்.
கண்ணீரோடு பார்த்து நின்ற தளிரின் மனமெங்கும் சொல்லிலடங்கா ரணம்..!!
“என்ன தளிர் இதெல்லாம்..? சரத் எப்போ உன்னை கல்யாணம் பண்ணினான் ஏன் சொல்லல..?” என்று பதிறிக்கொண்டு சந்தியா கேட்க, அவளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் நின்றிருந்தாள் தளிர்.
இதுதானே..! இதைத்தானே சரத் எதிர்பார்த்தான்..!
இப்படி ஒரு நாளுக்காக தான் அவனது ஆறுவருட காத்திருப்பு. உதயாதித்தன் என்றில்லை தளிர் வேறு யாரை திருமணம் செய்ய முயன்றிருந்தாலும் அவன் இன்று அரங்கேற்றிய நாடகத்தை தான் என்றிருந்தாலும் வெற்றிகரமாக செய்து முடித்து இருப்பான்.
தன்னை நிராகரித்த, தனக்கு கிடைக்காத தளிரின் வாழ்வை சீரழித்து அவளை நிர்மூலமாக்க அவன் எடுத்த முயற்சியில் தளிரோடு சேர்த்து அவள் மணக்கவிருக்கும் மணமகன் உதய் என்றில்லை அவன் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதே நிலை தான்..!