“ஹலோ சிவா என்னடா ஆச்சு..? ஏன் உதய் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு கிளம்பிட்டான்” என்றார் மகன் அளித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அம்பலவாணன்.
“உதய் மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டானா..?”
“ஆமா சிவா ஆனா என்ன காரணம்னு சொல்லாம உன்னை பார்க்க கிளம்பிட்டான்.. ஏற்கனவே உதய் அடிச்ச வீடியோ வைரல் ஆகிட்டதால நீ சொன்ன மாதிரி சிஎம் வரவேண்டாம் கல்யாணம் முடிஞ்சு நானே ஆசிர்வாதம் வாங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ கல்யாணமே நடக்காதுன்னா வந்திருக்கவங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல..? ஏன் உதய் இப்படி ஒரு முடிவு எடுத்தான்..?”
“அம்பலா உதய் எடுத்தது ரொம்ப சரியான முடிவு! இல்லன்னா நானே வந்து கல்யானத்தை நிறுத்த வேண்டியதா இருந்திருக்கும்”
“என்னடா சொல்ற..?” என்றவருக்கு அடுத்தடுத்து கொண்ட அதிர்ச்சியில் வியர்வை பெருகியது. மெல்ல மணமகன் அறையின் வாயிலுக்கு சென்றவர் அங்கிருந்த ஃபேன்னை போட்டுவிட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைபடுத்தி கொண்டு, “என்ன பேசுற சிவா நீயே கல்யாணத்தை நிறுத்தியிருப்பியா..?” என்று கேட்க மேடையில் இருந்தவர்களின் பார்வை அவர் மீதே..!
“ஆமாடா அந்த பையன் தளிரை ஏமாற்றி தாலி மட்டும் கட்டலை கல்யாணத்தை ரெஜிஸ்டரும் பண்ணியிருக்கான்… இனியும் தளிர் உதய் கல்யாணத்தை நடத்துறது சட்டப்படி குற்றம்”
“டேய் என்னடா சொல்ற..? தளிருக்கு பிடிக்காம தாலி கட்டினவனை தளிர் எப்படி ரெஜிஸ்ட்ரேஷன் மேரேஜ் பண்ண முடியும்..?” என்றவர் அறையின் வாயிலுக்கு வர அவர் பார்வை அரங்கை ஆக்கிரமித்திருந்த உறவினர்கள், நட்பு வட்டம், தொழிலதிபர்கள், பள்ளி, கல்லூரி உரிமையாளர்கள், அரசியல் வட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் மீது படிந்திட இப்போது கைபேசியை பிடித்திருந்த அம்பலவாணனின் கையில் மெல்லிய நடுக்கம்.
“அதை தளிர் கிட்ட தான் கேட்கணும்.., எனக்கு தெரிஞ்சு ஒன்னு தளிருக்கு தெரியாம செய்திருக்கணும், இல்ல தளிரை மிரட்டி செய்ய வச்சிருக்கணும்… எப்படி இருந்தாலும் இப்போ தளிர் சட்டப்படி அவனோட மனைவி அதுதான் உதய்கிட்ட சொல்லவும் புரிஞ்சுகிட்டு அவனே நிறுத்திட்டான்” என்று சிவனேஷ் சொல்லவும் ஏற்கனவே கூடியிருந்த அம்பலவாணனின் ரத்த அழுத்தம் இப்போது ஏகத்திற்கும் எகிறி போக லேசான தள்ளாட்டத்தோடு நாற்காலியில் அமர்ந்தார்.
கணவனிடம் பேசிக்கொண்டிருந்த சுஜி தந்தையின் தடுமாற்றத்தை கண்டு ஓடி வந்தவள் “அப்பா என்னப்பா ஆச்சு” என்று அவர் முகத்தில் இருந்த வியர்வையை துடைக்க அம்பலவாணன் அருகே வந்த ஜெகதீஸ்வரி, “என்னங்க ஆச்சு ஏன் உட்காந்துடீங்க.. என்ன பண்ணுது உங்களுக்கு..? என்று பதட்டத்தோடு கேட்டவருக்கு அப்போது தான் நினைவு வர “நிவி அப்பா இன்னும் டேப்லெட் போடலை போய் எடுத்துட்டு வா” என்றதும் உடனே அறைக்கு சென்று அவருக்கு தேவையான மாத்திரையை கொண்டு வந்து கொடுத்தாள்.
“மாமா.. என்று தளிரும் தென்றலும் அவரை நெருங்க, “அப்பா இன்னும் எதுவுமே சாப்பிடலைம்மா வெறும் வயித்துல எப்படி மாத்திரை போட.., இருங்கப்பா நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்ற சுஜியிடம்,
“நீங்க இருங்க அண்ணி நான் எடுத்துட்டு வரேன்” என்று தென்றல் கீழே செல்லவும் மருமகனை அருகே அழைத்த அம்பலவாணன், “மாப்பிள்ளை இந்த கல்யாணம் நடக்காது தயவுசெய்து காரணம் கேட்காம எல்லாரையும் அனுப்பி வைச்சுடுங்க” என்றார்.
“என்ன மாமா சொல்றீங்க..?”
“ஆமா மாப்பிள்ளை, எப்படியாவது எல்லாரையும் அனுப்பிடுங்க” என்று வேண்டுகோள் வைக்க கீழே சென்ற சரவணன்,
“தவிர்க்க முடியாத காரணத்தால கல்யாணத்தை நிறுத்துறோம், உங்களை சிரமபடுத்தினதுல எங்களுக்கும் வருத்தம்” என்றவர் காரணம் கேட்டு அம்பலவாணனை சந்திக்க முற்பட்டவர்களை தடுத்து ஒருவழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு இருபது நிமிடத்திற்கு பின் மணமேடைக்கு செல்ல இப்போது சீதா மற்றும் அம்பலவாணனின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.
அனைவரும் அம்பலவாணனை சூழ்ந்திருக்க ராஜியோ தன் கைபேசிக்கு வந்திருந்த வாட்ஸ்ஸப் மெசேஜை திறந்து பார்க்கவும் தான் இங்கு நடக்கும் கலவரங்கள் செய்தியாகி போயிருப்பதே அவருக்கு தெரிந்தது.
உடனே தங்கையை அழைத்து காட்டியவருக்கு ஏற்கனவே தளிர் மீது இருந்த கோபம் இப்போது பலமடங்காகி போனது.
ஆனால் தன் பேச்சு அங்கு எடுபடாது என்பதால் அண்ணாமலையிடம் சென்று வீடியோக்களை காட்டியவர், “நம்ம ஆதிக்கு என்ன குறைன்னு கேட்டு ஊரே என்னென்னமோ பேசுது, தகுதியை கூட பார்க்காம குணத்துக்காக தான் இந்த பெண்ணை சம்மதிச்சீங்க ஆனா இந்தமாதிரி ஒரு பொண்ணு நம்ம குடும்பத்துக்கு இனியும் சரிப்படுமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க மாமா.. எனக்கு ஆதி வாழ்க்கை நல்லபடியா அமையனும் இதுக்கு மேலயும் இந்த பெண்ணை கட்டினா காலம் முழுக்க நம்ம குடும்பத்துக்கு அவப்பெயர்தான்.. சொந்தகாரங்களுக்கே பதில் சொல்ல முடியாது” என்று சொல்ல காணொளியை கண்டு கண்ணீரோடு அமர்ந்திருந்த அன்னபூரணி,
“என் பேரன் என்ன தப்பு பண்ணினான் ராஜி..” என்றார் ஆற்றாமையோடு.
“அதே தான் அத்தை என்னோட ஆதங்கமும் ஆனா ஆதி எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான் நீங்களாவது எடுத்து சொல்லுங்க” என்று கண்ணீர் கசிய சொன்னவர்,
“ஜெகா வீட்டுகாரரும் அந்த பொண்ணு பக்கம் பார்க்கிறாரே தவிர உங்களை பற்றியோ ஆதியோட வாழ்க்கையை பற்றியோ நம்ம சம்பந்திங்க நம்ம குடும்ப கௌரவத்தை பற்றி பார்க்கலை எந்த ஜென்மத்துல யார் செய்த பாவமோ இவங்களால நாம அசிங்கப்பட்டு இருக்கோம்” என்றவரின் பேச்சில் அண்ணாமலைக்கு உதய் காக்க சொன்ன பொறுமை எல்லாம் எல்லை கடந்து போயிருந்தது.
********************************************
‘தளிர் தன்னோடு இரண்டு மாதங்கள் வாழ்ந்த பின்னர் காணாமல் போய்விட்டாள்’ என்று சரத் சொன்னது அதன்பின் உதய் அவனை அடித்தது எல்லாமே அத்தனை வேகமாக பகிரப்பட்டதில் சோஷியல் மீடியா முழுக்க உதயாதித்தனும் இளந்தளிரும் தான் தலைப்பாகி போயிருந்தனர்.
‘சரத்தோடு வாழ்ந்த வாழ்க்கையை மறைத்த தளிர் குழந்தையையும் மறைத்துவிட்டாளோ..? உதய்க்கு மாற்றான் மனைவிதான் கிடைத்தாளா..? இத்தனை வசதி இருந்தும் திருமணமானவளை மணமுடிக்க முயன்றதற்கு என்ன காரணம்..? ஒருவேளை அவனுக்கு தந்தையாகும் தகுதியில்லாததால் ஏற்கனவே குழந்தையோடு இருக்கும் பெண்ணை மிரட்டி சம்மதிக்க வைத்திருப்பதாக’ என்று யூகத்திற்கு பஞ்சமின்றி ஆளாளுக்கு புதுப்புது கதை புனைந்து வீடியோ வெளியிட்டிருக்க அதை விஞ்சியது அதற்கு கிடைத்த பின்னூட்டங்கள்.
ஓரிருவர் இளந்தளிர் உதயாதித்தனின் பணத்திற்காக அவனிடம் இருந்து உண்மையை மறைத்திருப்பாள் என்று சொல்ல ஒரு சிலர் தளிர் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கு சாபக்கேடு என்றும் அப்பாவி சரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் சரத்திற்காக போர்க்கொடி உயர்த்தி இருந்தனர்.
பின்னே அவன் கொடுத்த காணொளிகள் புகைப்படங்கள் தளிரை தவறானவளாகவும் சரத்தை நிரபராதியாகவும் சித்தரிக்க போதுமானதாக இருக்கையில் சிறுவயது முதல் பழகிய தோழனை அவன் நேசத்தை பணத்திற்காக விட்டுச் சென்றவளை தண்டிக்க வேண்டும் என்பவர்களின் கோரிக்கையில் தவறில்லை..!
இதையெல்லாம் இடுங்கிய கண்களுடன் தன் கைபேசியில் பார்த்து கொண்டிருந்த உதயாதித்தனின் முகம் உணர்வுகளற்று போக அவன் புருவமத்தி வெகுவாக சுழிந்திருந்தது.
அவன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்த ராகவன் “மச்சான் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதடா அவங்களுக்கு உண்மை என்னன்னு தெரியுமா..? கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு பார்க்கிறதை வச்சு முடிவு பண்ணி பேசறாங்க ஒவ்வொருத்தருக்கும் நாம விளக்கம் கொடுக்க முடியாது ப்ளீஸ் நீ ஃபீல் பண்ணாதடா.. இது எதுவுமே நிஜம் இல்லை என்று நமக்கு தெரியும்! உண்மை தெரியாதவங்க இப்படித்தான்டா பேசுவாங்க ஆனா இதுவும் கடந்து போகும் மச்சான்” என்று நண்பனை தேற்ற முயன்றான்.
ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கண்களை மூடி தலை சாய்த்து கொண்ட உதய் “நீ இன்னும் தளிரை நம்பறியாடா..?” என்றான்.
“என்னடா சொல்ற..? ஒரு வீடியோ ஃபோட்டோ போதுமா ஒருத்தரை நாம தப்பா நினைக்க..? அதுவும் ai எல்லாம் சாதாரணமாகி போயிருக்கும் இந்த காலத்துல..? யாரு என்னன்னு தெரியாதவங்களை ஃபேக்கா என்னனாலும் செய்யலாம் அந்த பொறுக்கி தளிரோட பிரெண்ட்டா இருந்திருக்கான் வலுக்கட்டாயமா தாலி கட்டியிருக்கான்.., இந்த வீடியோ ஃபோட்டோல்லாம் உண்மையாவே இருந்தாலும் அவன் நட்புக்கு துரோகம் செய்திருக்கான் கூட படிச்ச பெண்ணை காதல் என்ற பெயரில் கலங்கபடுத்தியிருக்கான்.. இதுக்கு எதுக்கு நான் தளிரை நம்பாமல் போகணும்” என்று காரை ஓட்டியவாறே ராகவன் பேசிக்கொண்டே செல்ல,
“தளிர் அன்ட் சரத் ஆர் லீகலி வெட்டட்” (இருவரும் சட்டப்படி திருமணம் செய்திருக்கின்றனர்) என்று உதய் கண்களை திறக்காமல் கரகரத்த குரலில் சொல்லவும் சட்டென காரை ப்ரேக்கிட்டு நிறுத்திய ராகவன் அதிர்வோடு உதய் புறம் திரும்பினான்.
“இப்பவும் தளிரை நம்பறியா..? என்று உதய் நண்பனை ஆழ்ந்து பார்த்தான்.
சில நொடிகளில் அதிர்வில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டவன், “த.. தளி.. இப்படி.. என்ன மச்சான் சொல்ற தளிருக்கு.. ப்ச் நிஜமா இப்படி நடக்குமா..?” என்றவனுக்கே முன்பு போல தளிர் மீதான நம்பிக்கையை அழுத்தமாக சொல்ல முடியவில்லை.
“நடந்திருக்கு அதுவும் தளிருக்கே தெரியாம..”
“என்னது தளிருக்கு தெரியாமலா..? எப்படிடா..? உனக்கு எப்படி அது தெரியும்..?”
“நேற்று என்கிட்ட அவன் தாலி கட்டினதை சொன்னவ இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா மறைக்காம சொல்லியிருப்பா.. ஆனா சொல்லலை அப்போ அதுவும் அவளுக்கே தெரியாம தானே நடந்திருக்கணும்” என்று கண்களை திறந்து தொண்டைகுழி ஏறி இறங்க நண்பனை பார்த்தவன்,
“நேரமாச்சு அங்கிள் காத்துட்டு இருப்பார் கார் எடு” என்றான்.
“மச்சான் தளிருக்கே தெரியாங்கிறதை என்னால நம்ப முடியலை.. எப்படிடா மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் பண்றது சாதாரண பிராசஸ் கிடையாதே… அப்புறம் எப்படி அவன் செய்து இருப்பான் தளிர் எப்படி கையெழுத்து போட்டிருக்க முடியும்..?” என்று ராகவ் சாலையில் கவனம் வைத்துக் கொண்டே கேட்க,
“பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு தெரியாதாடா..? அவன் தளிரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்ல இருக்கிறவன்.. ஃப்ரண்டுங்கிற டேக் யூஸ் பண்ணி எல்லாத்தையும் செய்திருக்கான்”
“மச்சி என்னடா சொல்ற..? ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு இப்படியுமா ஒருத்தன் இருப்பான், தளிர் எப்படி அவனை கண்மூடிதனமா நம்பினாங்க..?” என்று தாள முடியாமல் ராகவன் கேட்க…..,
கண்களை மூடி கார் சீட்டில் சாய்ந்திருந்த உதயாதித்தன் புருவமத்தியும் வெகுவாக இறுகி கிடந்தது. அவன் நிலை புரிந்த ராகவனும் மேலும் கேள்வி கேட்காமல் அமைதியாக வண்டியை ஓட்ட துவங்கினான்.
“எஸ் பிரெண்ட்ஸ் எல்லார் மேலும் தளிர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான் அவ செய்த ஒரே தப்பு”
“புரியுதுடா க்ளோஸ் ப்ரெண்டை யாரும் சந்தேகபடமாட்டாங்க..”
“ஏன்டா ஏன் தளிர் மேல தப்பு இல்லாதப்போ இதை மறைக்கணும்.. சொல்லியிருக்கலாமே”
“தெரியலை ஒருவேளை அவ சொல்றதை எத்தனை பேர் நம்புவாங்கன்னு பயந்திருக்கலாம்..” என்று நெற்றியை பிடித்துகொண்டவன், மச்சான் ரொம்ப தலைவலிக்குது டா என்னன்னே தெரியலை..”
“நைட் சாப்பிட்டது இந்நேரம் வரை சாப்பிடாம இருந்தா தலை வலிக்கத்தான் செய்யும். நீ இரு நான் ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று ராகவன் கீழே இறங்க,
“எதுவும் வேண்டாம்டா ஒரு காஃபி மட்டும் வாங்கிட்டுவா போதும்” என்று கண்களை மூடிக்கொண்ட உதய்க்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை. அத்தனையும் கைமீறி சென்று கொண்டிருக்கிறது.. ஏற்கனவே தளிர் திருமணமானவள் என்பதையே ஏற்க முடியாமல் போனவர்களுக்கு இப்போது அவள் சட்டப்படி சரத்தின் மனைவி என்பதை மட்டும் எப்படி ஏற்க முடியும்..?
ராகவன் கொண்டு வந்த காபியை பருகிய உதய்யின் மனதில் தளிரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவளுடனான நினைவுகள் படையெடுக்க தலைவலி இன்னுமே அதிகரித்தது. ‘என்ன விளக்கம் சொன்னாலும் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.. தளிரின் ஒப்புதல் இல்லாமல் எப்படி பதிவு திருமணம் செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்.. ஆனால் இதுவும் சரத்தின் சூழ்ச்சி என்று சொன்னால் அதை நம்புவது மற்றவர்களுக்கு சற்று கடினமே..!’ என்று உதய் மனதினுள் உழன்று கொண்டிருந்த அதேநேரம் டிஎஸ்பி அலுவலத்தினுள் ராகவன் நுழைந்திருந்தான்.
******************
“டிஎஸ்பி என்ன மாமா சொன்னாரு, உதய் ஏன் கல்யாணத்தை நிறுத்தினான்” என்று சரவணன் கேட்க மாத்திரை எடுத்துக்கொண்ட அம்பலவாணன் அப்போது தான் ஓரளவு தன்னிலை திரும்பியிருந்தார்.
தன் எதிரில் நின்றிருந்த சீதாவிடம், “என்கிட்ட இதை பற்றி முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே சீதா” என்று வேதனையோடு கேட்க அவருக்கு பதில் சொல்ல முடியாதவரின் விழிகளில் ஓயாத கண்ணீர் மழை.
ஏற்கனவே தங்களால் இங்கே மாறியிருக்கும் சூழல் அம்பலவாணனின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் எல்லாம் அவரை மீளா குற்றஉணர்வில் தள்ளியிருந்தது என்றால் இப்போது தடுமாற்றத்தோடு அமர்ந்திருந்த அம்பலவாணனின் முகத்தில் மண்டிக்கிடந்த வேதனை அவரை சுக்குநூறாக சிதற செய்திருந்தது.
‘எங்கு சென்று இப்பாவத்தை நான் கழுவ..?’ என்பதாக நின்றிருந்தவருக்கு சுத்தமாக வார்த்தை எழாதளவு துக்கம் தொண்டையை கவ்வி பிடித்திருந்தது.
“அப்பா என்னப்பா ஆச்சு அங்கிள் என்ன சொன்னாரு..? உதய் ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னான்” என்று தளிரை ஒரு கையால் அணைத்துபிடித்தவாறு சுஜி கேட்க,
“தளிருக்கும் அந்த பையனுக்கும் ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துடுச்சு சுஜி, சட்டப்படி தளிர் அவனோட மனைவி! நாம இதுக்கு அப்புறமும் இந்த கல்யாணத்தை நடத்தினா நம்… நம்மை…” என்றவரால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.
“எல்லாரும் கிளம்பலாம்” என்று தொண்டையை செருமிக்கொண்டு அவர் எழுந்து கொண்ட அதேவேளை சீதா மயங்கி சரிந்திருந்தார்.