‘அம்மா…’ என்று தென்றல் ஓடிவந்து அவரை தாங்கி பிடிக்க சரவணன் உடனே சீதாவை தூக்கி சென்று அறையில் படுக்கவைக்கவும் நிவி அவருக்கு முதலுதவி அளிக்க தொடங்கினாள்.
தனக்கு பதிவு திருமணமாகி விட்ட செய்தியை கேட்டு உறைந்து போன இளந்தளிரோ எதையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் நிலை குத்திய விழிகளோடு நின்றிருந்தாள்.
பல நிமிடங்களுக்கு பின் கூடா நட்பு தன் வாழ்வை பலி கொண்ட நிதர்சனம் மெல்ல அவள் புத்திக்கு புரிபட கசந்த புன்னகை அவள் இதழ்களில் நெளிந்தது.
இன்றோடு அவள் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டதை உணர்ந்து கொண்ட தளிரின் விழிகள் கண்ணீர் சுரக்கவும் மறந்துபோயிற்று… ஏற்கனவே சாவின் விளிம்பை தொட்டு மீண்டவளுக்கு மனமெங்கும் விரவிய வெறுமையும் விரக்தியும் அவளை வெகுவாக இறுக செய்தது.
அங்கே குழுமியிருந்தவர்களை ஒருகணம் பார்த்தவளின் நெஞ்சம் விம்மி வெடிக்க சொல்லிலடங்கா ரணம் வெகு தீவிரமாக அவளை ஆட்கொண்டது. இனி அவளுக்கென்று ஒரு வாழ்வு இல்லை என்ற நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைந்து அவளை கொன்று கூறு போட்டாலும் தாய் மற்றும் தங்கைக்காக அவள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.
அதற்கு முதல் தன் நிலையை விலக்கி தங்களால் பாதிக்கபட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு விலகுவது மட்டுமே அவள் செய்யகூடியது என்று முடிவு எடுத்தவள் சீதாவின் அருகே சென்று அமர அவள் கரம் அவர் தலையை வருடியது.
அதேநேரம் வெளியில் இருந்த அம்பலவாணனை பிடித்து கத்தி தீர்த்திருந்தார் அண்ணாமலை.
“பேசு அம்பலா ஏன் அமைதியா இருக்க? நீ கொண்டு வந்த வரன் தானே இது..! அப்பவே எல்லாம் தீர விசாரிச்சியான்னு நான் கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன, நானுமே இத்தனை வருஷத்துல எடுத்த காரியத்துல தோல்வி இல்லாம சரியா செய்து முடிக்கிறவன் என் பையன்னு ரொம்ப கர்வத்தோட என் பேரன் கல்யாண பொறுப்பை உன்கிட்ட கொடுத்தேன். ஆனா இப்படி ஏமாந்து வந்திருக்கியே இதுதான் நீ இத்தனை வருஷமா தொழில் நடத்தின லட்சணமா..?”
“அப்பா தளிர் நல்ல பொண்ணுப்பா.. கண்டிப்பா அவங்க பக்கம் தப்பு இருக்காது எனக்கு சீதா மேலயும் நம்பிக்கை இருக்கு”
“அப்படியா..! தப்பு பண்ணாதவங்க ஏன் அதை நம்மகிட்ட இருந்து மறைக்கணும்..? தன் பெண்ணுக்கு வலுக்கட்டாயமா நடந்த கல்யாணத்தை பற்றி சொல்லி இருக்கலாமே..! அதைவிட தளிருக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்ச பிறகும் நீ என்கிட்ட இருந்து மறைச்சது ரொம்ப பெரிய தப்பு..!”
“சொல்லு அம்பலா ஏன் என்கிட்டே சொல்லலை, என்ன காரணம்..?” என்று கேட்க அம்பலவாணன் பதிலின்றி தவித்து போனார்.
“சரி காரணம் எதுவா இருந்தாலும் அதனுடைய விளைவு நாம கனவிலும் எதிர்பாராதது.. என் பேரனோட இந்த நிலைக்கு அவங்க மட்டுமில்ல நீயும் ஒரு காரணம்”
“அது.. அது.. நானுமே இதை எதிர்பார்க்கல ப்பா” என்று இத்தனை நேரம் தளிர் மற்றும் சீதாவிற்காக துடித்து கொண்டிருந்த மனிதருக்கு இப்போது தான் மகன் குறித்த நினைவே எழ தந்தை சொல்வது போல தளிர் மீதான பிடித்தத்தில் உதய் அவசரபட்டிருந்தாலும் தான் நிதானித்து இருக்க வேண்டுமோ என்ற குற்றஉணர்வு அதிகரிக்க மகன் நிலையை எண்ணி வெதும்பி போனார்.
“அம்பலா என்னப்பா பேசுற..? அப்பா நீ சொன்ன வார்த்தையை நம்பி தானே இந்த பெண்ணை ஒத்துக்கிட்டாரு.. உதய் நம்ம குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு! அப்பா அவன் மேல உயிரா இருக்கிறது உனக்கு தெரியாதா..? உன்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகளை பற்றி என்ன விசாரிச்ச நீ..?” என்று கேட்க பதிலில்லை அம்பலவாணனிடம்.
“சட்டப்படி கல்யாணம் பண்ணின பெண்ணுக்கு எப்படி இன்னொரு வரன் பார்த்தாங்க, அதுகூட தெரியாம நீ கல்யாணத்தை நடத்துற..” என்று குறையாத ஆதங்கத்தோடு அவர் கேட்க இங்கே ராஜிக்கு அத்தனை கொண்டாட்டமாக இருந்தது.
பின்னே தளிருக்காக உதய் பரிந்து பேசியதில் சற்று மிரண்டிருந்தவருக்கு இப்போது அண்ணாமலையின் கேள்வியில் இந்த திருமணம் நடைபெறாது என்ற நம்பிக்கை கூடிட அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
ஆனால் ஜெகாவிற்கு தான் கணவரின் நிலை கண்டு தாளமுடியாமல், “மாமா அவர் வெளுத்தது எல்லாமே பால்ன்னு நினைக்கிறவர், அவருக்கே இது பெரிய அதிர்ச்சி வழக்கத்தை விட ப்ரெஷரும் அதிகமாகிடுச்சு நீங்க இன்னும் கேட்டு அவருக்கு எதுவும்.. ” என்று முடிக்கும் முன்னமே,
“அப்போ உனக்கு புருஷன் முக்கியம் பிள்ளை முக்கியமில்லையா..? என்னை கேட்டா அவங்களைவிட உன் பிள்ளை வாழ்க்கை இந்த நிலைக்கு ஆளாக காரணமே இவன்தான்..! என்ன தைரியத்துல என்கிட்டே இருந்து ஒரு உண்மையை மறைச்சு இந்த கல்யாணத்தை நடத்த ஒத்துகிட்டான்..? இவன் தேடி கொண்டு வந்த சம்பந்தத்துக்கு இவனை கேள்வி கேட்காம யாரை கேட்க சொல்ற..?” என்று மருமகளிடம் சீறியவர்,
“வாயை திறந்து பதில் சொல்லு அம்பலா, உன்னால இனி நாம சொந்தத்துக்கு மத்தியில தலை நிமிர முடியுமா..? டிவி நியூஸ்ல எல்லாம் நம்ம ஸ்கூல் கம்பனின்னு ஒன்னுவிடாம பேர் சொல்லி கிழிக்கறாங்க, எல்லாத்தையும் விட தப்பே பண்ணாத என் பேரனோட மதிப்பும் மரியாதையும் போச்சு இதெல்லாம் யாரால..?” என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த சீதாலக்ஷ்மி,
“அப்பா அண்ணாவை எதுவும் பேசாதீங்க, தப்பு எங்க மேல.. நான் தான் இதுக்கு காரணம்! உங்களோட கோபம் எனக்கு புரியுது என்னனாலும் என்னை பேசுங்க தயவுசெய்து அவரை பேசாதீங்க” என்று கண்ணீரோடு சொல்ல அவரை வெறுப்பாய் பார்த்தார் ஜெகதீஸ்வரி.
“சரிம்மா உன் பக்கத்து நியாயத்தையும் நான் கேட்கிறேன்.. ஏன் இந்த விஷயத்தை முதல்லையே எங்கிட்ட சொல்லாம மறைச்சீங்க..?”
“இல்லப்பா அதை மறைக்கணும்னு நினைக்கலை உண்மையாவே அப்படி ஒரு விஷயம் நடந்ததையே நாங்க மறந்துட்டோம்.. ஆனா உங்களை ஏமாத்தணும்னு நாங்க எதையும் செய்யலைப்பா இப்போ அண்ணா சொல்லித்தான் அவன் கல்யாணத்தை பதிவு செய்திருக்கிறதே எனக்கு தெரியும்…” என்றவருக்கு சூழலின் கனம் புரிந்தாலும் எப்படி தன் நிலையை விளக்க என்று புரியாமல் தவித்து போனார்.
“என்ன சீதா புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா..? நீங்க என்ன சின்ன குழந்தையா மறந்துட்டேன்னு சொல்ல அதுவும் இவ்ளோ பெரிய விஷயத்தை எப்படி மூடி மறைக்க முடிஞ்சது உங்களால..?” என்று ஆவேசமாக கேட்ட ஜெகாவுக்குமே இப்போது அவர்கள் மீதான கசப்பு எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு கணவர் மற்றும் தங்கள் குடும்பத்தின் நிலையே முன்னே நின்றது.
**********************************
“தாத்தா அம்மா சொல்றது நிஜம்..! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” என்று முன்னே வந்த தளிரை கண்டதும் வெறுப்போடு ஜெகா விலகிட, அண்ணாமலையின் முன் மண்டியிட்டு அமர்ந்த தளிரிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த அன்னபூரணி முன் கைகூப்பிய தளிர்,
“எனக்கு உங்களோட ஆதங்கம் புரியுது ஆனா இன்னைக்கு இப்படி நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை, இந்த மாதிரி ஒரு சூழல்ல உங்களை நிற்க வச்சதுக்கு முதல்ல என்னை மன்னிச்சிடுங்க”
“அந்த பையன் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறதா சொன்னானே நீ ஏம்மா அவனை விட்டுட்டு வந்த..?”
“தாத்தா ப்ளீஸ் அவன் சொன்ன எதுவுமே நிஜமில்லை”
“எதும்மா நிஜமில்லை.. என்று திரையை சுட்டிகாட்டியவர் கொஞ்ச முன்னாடி அதுல அவனோட நீ சிரிச்சு சந்தோஷமா பேசிட்டு போனதா இல்ல விளையாடினதா இல்ல தாலி கட்டி வாழ்ந்ததா..? எது நிஜமில்லைன்னு சொல்ல வர..” என்று அழுத்தமாக அண்ணாமலை கேட்க,
“எதுவுமே, நீங்க பார்த்த, கேட்ட எதுவுமே நிஜமில்லை! ஒருவேளை இன்னைக்கு இப்படி நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த கல்யாணத்துக்கே ஓத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன், நான் மோசமான பொண்ணு இல்ல தாத்தா என்ன நம்புங்க” என்று கலங்கிய விழிகளோடு தளிர் சொல்ல சற்று நிதானித்தார் அண்ணாமலை.
“நண்பனா நினைச்சு பழகின சரத்தை கண் மூடித்தனமாக நம்பியது தான் நான் செய்த ஒரே தப்பு! நான் மட்டுமில்ல தாத்தா எங்க கேங்கில் எல்லாருமே ஒருத்தர் மேல ஒருத்தர் அளவுகடந்த அன்பும் நம்பிக்கையோடும் தான் இருந்தோம். சந்தியா, லேகா, அசோக், தீனா, அஜய், சரத் எல்லாருமே சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்… ஒன்னா ஸ்கூல், டியூஷன் போறது ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்றது, ஸ்போர்ட்ஸ் டே கல்சுரல்ஸ் எல்லாமே நாங்க சேர்ந்து பார்டிசிபேட் செய்வோம்”
“எங்க அப்பா இது தப்புன்னு சொன்னது கிடையாது. எங்களுக்கும் நட்பில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்க தெரியல. எல்லாரும வெளியில போறப்போ எங்க அப்பா தான் பெரும்பாலும் கூட வருவாங்க சில நேரம் சந்தியாவோட அப்பா சில நேரம் அஜய் அப்பாவும் வருவார். அது காலேஜ் போன பிறகும் தொடர்ந்தது.. என்ன ஒன்னு எல்லாரும் கொஞ்சம் பெரிய பிள்ளைகளாகிட்டதால அப்பாம்மா இல்லாம நாங்களே போய் வருவோம் அப்போ எடுத்தது தான் நீங்க பார்த்த வீடியோ..” என்றவளுக்கு துக்கப்பந்து தொண்டையை கவ்விபிடிக்க முயன்று அதை விழுங்கியவள் கண்ணீரை உள்ளிளிழுத்தவாறே அண்ணாமலையிடம்.
“மனுஷங்கன்னு நம்பினது தவிர நான் வேற எந்த தப்புமே செய்யலை தாத்தா.. எனக்கே தெரியாம தாலி கட்டின சரத் இப்போ எப்படி இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்தான்னும் எனக்கு சத்தியமா தெரியாது” என்றவளின் குரல் உடைய இமையோரம் திரண்டிருந்த கண்ணீர் வேகமாக இறங்கியது.
அது இறங்கிய வேகத்தை விடவும் வேகமாக துடைத்தவளுக்கு கண்ணீர் கொண்டு தன்னை நியாயபடுத்தவோ தன்னால் அவர்கள் கொண்ட அவமானத்தை கடந்துசெல்லவோ மனமில்லை.. நிச்சயம் மறந்துவிட்டேன் என்ற உண்மை காரணத்தை இத்தனை நடத்த பிறகும் அவள் சொல்வது எத்தனை அபத்தமாக இருக்கும் என்பது புரிபட அதை தவிர்த்து வேறு எப்படி தன்னை நிருபிக்க என்று புரியாமல் அலமலந்து போனாள்.
“உனக்கு தெரியாம தாலி கட்ட முடியும் ஆனா நீ கையெழுத்து போடாம எப்படிம்மா கல்யாணத்தை பதிவு செய்திருக்க முடியும்..?”
“தாத்தா போதும் இதுக்கு மேல தளிரை எதுவும் கேட்காதீங்க..” என்று சொன்ன சுஜி நிவியின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது. பின்னே அவர்களுக்குமே திருமணத்திற்கு பிறகும் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் நண்பர்களுடன் நட்பு உண்டு, அதில் ஆண் பெண் பேதமில்லை, அவ்வப்போது குறுஞ்செய்திகள், நலம் விசாரிப்புகள், குழந்தைகள் குறித்தான பேச்சு, வருடத்திற்கு இருமுறை குடும்பத்தோடு சந்தித்து கொள்வது என்று இருப்பவர்களுக்கு நண்பனால் ஏமாற்றபட்டு குற்றவாளியாகி இருக்கும் தளிரின் நிலை வெகுவாக பாதித்திருந்தது.
“நான் கையெழுத்து போடலை தாத்தா ஆனா எனக்கு என்னை நிரூபிக்க நிஜமா எந்த ஆதாரமும் கிடையாது நீங்க பார்த்த வீடியோ எல்லாமே நிஜம் நான் ஒத்துக்குறேன் ஆனா அவன் என்னை இப்படி பாக்குறது கூட இப்ப இந்த வீடியோல தான் எனக்கு தெரியும் அப்போ எங்க யாருக்குமே அவன் மேல துளி சந்தேகம் கூட கிடையாது இருந்திருந்தா அவனோட ஃபிரெண்ட்ஷிப்பை கண்டிப்பா துண்டிச்சிருப்பேன்”
“அக்கா வேண்டாம் க்கா நீயேன் எல்லாருக்கும் நிரூபிக்க நினைக்கிற நாங்க உன்னை நம்புறோம்.. ப்ளீஸ் தாத்தா என் அக்காவை விட்டுடுங்க அவ ரொம்ப நல்லவ இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்று கைகூப்பினாள்.
“இல்ல நான் விளக்கம் சொல்ல கடமைபட்டிருக்கேன் நீ போ தென்றல்” என்று தங்கையை அனுப்பிட,
“எப்படிமா நீ சொல்றத நாங்க எப்படி நம்புறது..? ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தாகூட நம்பி இருப்போம் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து எங்க குடும்பத்த இந்த நிலையில் நிறுத்தினது பிறகு எப்படிம்மா நம்ப சொல்ற..? தவிர்க்க முடியாத இடத்தில் நிக்க வச்சுட்டா கல்யாணத்து நடத்திடலாம்னு நினைத்தீர்களா..?” என்று கேட்ட அண்ணாமலையின் குரலில் அடக்கப்பட்ட கோபம், ஏமாற்றம், கழிவிரக்கம் அத்தனையும் போட்டிபோட்டது.
“நான் நிஜமா எதையுமே பிளான் பண்ணல இது எல்லாமே என் கை மீறி நடக்குது தாத்தா” என்றவளுக்கு இத்தனை நேரம் கட்டுபடுத்தியிருந்த கண்ணீர் வழிந்தோடி அவர் பாதத்தில் விழுந்தது.
என்னதான் அவர்கள் மறைத்தது தவறாக இருந்தாலும் இப்போது தன் முன்னே இருக்கும் தளிரின் கண்ணீர் அவரை வெகுவாக அசைத்திருந்தது.. அவள் வார்த்தைகள் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை அதனால் நடந்த முடிந்த எதை மாற்றிவிட முடியும்..? என்று கேள்வியோடு பேரனின் நற்பெயரும் அவர் மனதை ஆக்கிரமித்தது.
“நீ என்ன பேசினாலும் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் நடந்த எதையும் மாத்திட முடியாது.. ஆனா என் பேரனை பற்றி ஊருக்குள்ள இருக்க பேச்சை பொய்யாக்கனும்னா இப்போ இங்க உதயாதித்தன் கல்யாணம் நடந்தாகணும் அதுவும் உன் தங்கச்சியோட நடக்கணும்” என்று சொல்ல தூக்கிவாரி போட்டது இளந்தளிருக்கு.