அதேநேரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் திருமணத்திற்காக அணிந்திருந்த பட்டு வேட்டி சட்டை நெற்றியில் இடப்பட்ட சந்தனம் கட்டப்பட்டிருந்த பட்டை கையிலிருந்த மங்கள கயிறோடு வேகமாக நுழைந்த உதயாதித்தனின் மீது தான் அங்கிருந்தவர்களின் பார்வை மொத்தமாக குவிந்திருந்தது.
கைபேசியில் சிவனேஷை உதய் தொடர்பு கொள்ளவும் அறையின் வெளியே இருந்த கான்ஸ்டபிள் “ஐயா காத்துட்டு இருக்கார் உள்ள போங்க ஸார்” என்று சொல்லவும் ராகவனோடு உள்ளே சென்றான்.
“கம் உதய் வெரி குட் டிசிஷன்” என்று அவனுக்கு கை கொடுத்தவரிடம், “எங்க அங்கிள் அந்த ***” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டவனின் ஆவேசத்தை கண்டவர்,
“கூல் டவுன் உதய்! அவன் இப்போ ஜிஹெச்ல ட்ரீட்மென்ட்ல இருக்கான்.. பொதுவா இந்த மாதிரி கேஸஸ்ல இரண்டு பக்கமும் நாங்க விசாரிக்க வேண்டி இருக்கும் உன்மேல தப்பில்லைன்னு தெரிஞ்சாலும் நீ அடிச்சது இப்போ சோஷியல் மீடியா நியூஸ்ன்னு கொஞ்சம் காம்ப்ளிகேட் ஆகிடுச்சு..”
“அங்கிள் ஆனா அவன் தளிரை பழிவாங்க இவ்வளவும் செய்யறான், அவன் மேல டிஃபாமேஷன்..”என்ற உதய்யை தடுத்த சிவனேஷ் “அவன் என்ன செய்தான்னு நான் பார்த்துக்கறேன் இனி நீ என்ன செய்ய போற அதை சொல்லு உதய்..?”
“என்ன சொல்ல வரீங்க எனக்கு புரியலை” என்று நெற்றியை நீவிக்கொண்டே கேட்கவும்,
“எனக்கு மேலிடத்துல இருந்து ப்ரெஷர் கூடியிருக்கு இப்போதைக்கு அவனோட மேரேஜ் சர்டிஃபிகேட் பற்றி நான் யாருக்கும் ஐ மீன் மீடியால சொல்லல அவன் ட்ரீட்மென்ட்ல இருக்க வரை சமாளிக்க முடியும் அதுக்கு அப்புறம் உன்னையும் விசாரிக்க வேண்டி இருக்கும்..” என்று சொல்ல ‘புரியுது’ என்பதாக தலையசைத்தான் உதய்.
“சட்டப்படி இன்னொருத்தனோட மனைவியை நீ கல்யாணம் செய்ய இருந்தது மிகப்பெரிய அஃபென்ஸ் உதய்.. அவன் எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணி செய்திருக்கான் நீ நடுவுல வருவங்கிறதை அவன் எதிர்பார்க்கலை, அவனோட லாயர் உன்னை விசாரிக்காம ஒருதலை பட்சமா செயல்பட்டா உன்மேல கேஸ் போடுவேன்னு சொல்லிட்டு இருக்கான்… எப்பவும் சட்டத்துக்கு சாட்சி தான் முக்கியம் அது அவன் பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கு.. எனக்கு தெரிஞ்சு இனி இதுல நீ தலையிடாம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்”
“அங்கிள் என்ன சொல்றீங்க..?” என்றான் குறையாத திகைப்போடு.
“ஆமா இந்த கேஸ் நாம் நினைச்சது போல இல்லாம வேற டைமென்ஷன்ல போகுது.. இது அரேன்ஜ்ட் மேரேஜ் தானே..! நம்ம ஸர்கிள்ல நானே உனக்கு வேற பெண் பார்க்கிறேன் பெட்டர் நீ இதுல இருந்து வெளியில போறது உனக்கு, உன்னோட பிசனஸ், உன்னை சார்ந்தவங்களுக்கு நல்லது” என்றவர் மேலும் விளக்கமாக பேசிக்கொண்டே செல்ல இறுகிய முகத்தோடு அவரை பார்த்திருந்த உதய் வெளியில் வர அவனை சுற்றி வளைத்து கொண்டனர் பத்திரிக்கையாளர்கள்.
வேகமாக சென்றவன் அவர்களை கண்டதும் ஒருகணம் நிதானிக்க, “மச்சான் எந்த பதிலும் சொல்ல வேண்டாம் கிளம்பு” என்றான் ராகவன் ஆனால் அதற்கு அவர்கள் விட்டால்தானே.. வேறொரு வழக்கு குறித்து கவர் செய்வதற்காக வந்திருந்த ஓரிரு பத்திரிக்கையாளர்கள் அங்கே உதய்யை கண்டதுமே மற்றவர்களுக்கும் தெரிவிக்க இப்போது அவனை சூழ்ந்துகொண்டனர்.
“ஸார் ஒரே ஒரு கேள்வி, நிஜமாவே அவங்க கல்யானமனவங்கன்னு தெரியாம தான் கல்யாணம் செய்ய பார்த்தீங்களா..? அப்படி என்ன ஸார் அவசியம் உங்க அழகுக்கும் வசதிக்கும் எத்தனை பெண்கள் கிடைப்பாங்க” என்று உதய் முன் மைக்கை நீட்ட அவனோ அடக்கபட்ட கோபத்தோடு நின்றிருந்தான்.
அதற்குள் சிசிடிவியில் வெளியில் நடப்பதை கண்டுவிட்ட சிவனேஷ் உதய் பதில் சொல்லும் முன்பாக அங்கே வந்தவர், “விசாரணையை தொடங்கிட்டோம் காவல்துறை என்னைக்கும் இரண்டு பக்கமும் நேர்மையா செயல்படுவோம்.. இப்போதைக்கு அந்த திருமணம் நடைபெறாது பொறுமையா இருங்க” என்றவர் “நீ கிளம்பு உதய் நான் பார்த்துக்கறேன்” என்று அனுப்பி வைத்தார்.
*************************
“தாத்தா என்ன பேசுறீங்க…?” என்ற தளிர் நம்பமுடியாமல் அவரை பார்த்தாள்.
“இதோ என் பேத்திய எங்க ஆளுங்கள விட்டுட்டு வேற ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததே என் அனுபவத்துக்கு அதிகம்மா.. அந்த பையன் உன்னோட ரெண்டு மாசம் வாழ்ந்ததா சொல்லி இருக்கான் அது நிஜமா இருக்காதுன்னு உன்னோட கண்ணீர் நம்ப சொல்லுது.. ஆனா முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம் என்னைக்கும் சேலைக்கு தான்! இப்பவே உனக்கு கல்யாணம் மட்டும்தான் ஆச்சா இல்ல குழந்தையும் இருக்கான்னு கேட்கிறாங்க அதை நான் நம்பலை ஆனா இதைவச்சு என் பேரனுக்கு தகுதி…” என்றவருக்கு அதற்கு மேலும் தொடர முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டு வர கண்கள் கலங்கி போனது.
“இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு ம்மா நாங்க மானத்துக்கு கட்டுப்பட்டு வாழறவங்க. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் எதுக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்ல அவங்கவங்க வாழ்க்கையை அவங்க தான் வாழனும்னு புத்திக்கு புரிஞ்சாலும் மனசு தப்பே செய்யாத என் பேரனை நோக்கி வரக்கூடிய ஒரு சொல்ல தாங்காது..!”
“என் பையன் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லம்மா.. நீ எப்படி எடுத்துகிட்டாலும் சரி என்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் இன்னைக்கு நடந்த விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகம்.. இனியும் உன்னை ஏத்துக்க கூடிய அளவு எனக்கு மனதைரியமில்லை தயவுசெய்து இந்த தாத்தாவை மன்னிச்சிடு..”
“அச்சோ தாத்தா என்ன பேசுறீங்க? நான் கல்யாணம் நடக்கணும்னு உங்ககிட்ட விளக்கம் கொடுக்கலை, என்னோட கர்மாவை நான் அனுப..விச்சு தானே ஆக.. ஆகணும் ஆனா நீங்..க..ளும் அதுல..” என்று நாசி விடைக்க உடைந்த வார்த்தைகளை சேகரிக்க முடியாமல் அவரை பார்த்தாள்.
“நீயும் எனக்கு பேத்தி மாதிரி தான்! ஒருவேளை இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவிட்டிருக்க மாட்டேன் ஆனா இவ்ளோதூரம் வந்த பிறகு மனசு கிடந்தது அடிச்சுக்குது.. ஒரே பேரன் ம்மா எனக்கு! அவன் வாழ்க்கை உன்னால சீரழிஞ்சதா இருக்க வேண்டாம் உனக்கு புண்ணியமா போகட்டும் உன் தங்கச்சிக்கு வழி விட்டு நீ ஒதுங்கி நில்லுன்னு தான் சொல்றேன்” என்று சொல்ல நெஞ்சம் வெதும்ப அவரை பார்த்தாள் இளந்தளிர்.
அண்ணாமலையின் முடிவை எதிர்பாராத அனைவரும் திகைத்து நிற்க, “தாத்தா என்ன பேசுறீங்க” என்று முதலில் பதறிக்கொண்டு நிவி ஓடிவந்தாள்.
“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்.. இனி யாரும் ஒருவார்த்தை பேசக்கூடாது அந்த பெண்ணை கூட்டிட்டு போய் தயார் பண்ணுங்க” என்றார் கட்டளையாக.
“அப்பா ஏன் இவ்வளவு அவசரபடனும்..” என்று தொடங்கிய அம்பலவாணன் ‘எல்லாம் தீர விசாரிக்காம நீ அவசரபட்டதோட விளைவு தான்’ என்பதாக அமைந்த தந்தையின் பார்வையில் மௌனமாகி போனார்.
“தாத்தா என்ன பேசுறீங்க..? இது தப்பு தளிரை நிச்சயம் பண்ணிட்டு தங்கச்சியை கட்ட சொல்றது நியாயமே இல்ல இதனால எல்லாரோட வாழக்கையும் பாதிக்கப்படும்” என்று சுஜி பதறிக்கொண்டு வந்தாள்.
“என்ன பேசுற நீ..? யாருக்கு யாரால பாதிப்புன்னு இன்னமுமா உனக்கு புரியலை.., அம்பலா உன் பொண்ணுக்கு புரிய வை” என்று சொல்ல சுஜி வேகமாக தந்தையை பார்த்தாள் அவரோ ‘இனி எதுவும் என் கையில் இல்லை’ என்பது போல விட்டேர்த்தியாக அமர்ந்திருந்தார்.
பின்னே நடக்கும் எதையும் எதிர்பாராத அவர் மனம் தொடர்ந்து வந்த கைபேசி அழைப்புகளில் அத்தனை துவண்டு போயிருந்தது…, இத்தனை வருட வாழ்க்கை பயணத்தில் அவர் கொண்ட முதல் சறுக்கல், மிகவும் பலமான அடி..! அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாத ஒருவித வெறுமையான மனதோடு இருந்தவருக்கு தென்றலை மணமகளாக கொண்டு வருவதில் விருப்பம் இல்லையென்றாலும் எதுவும் தன் கையில் இல்லாததை உணர்ந்து மௌனித்துவிட்டார்.
தங்களுக்கான இறுதி புகலிடமாக அம்பலவாணனை நம்பியிருந்த சீதா அவர் மௌனத்தில் ஸ்தம்பித்து போனார்.
“என்ன ஜெகா இது உன் மாமனார் கல்யாணத்தை நிறுத்துவார்னு காத்திருந்தா இவர் அதே வீட்டுல இருந்து பெண் எடுக்க பார்க்கிறார்.. எப்படியாவது இதை நிறுத்துடி நமக்கு இந்த குடும்பமே வேண்டாம்” என்று தங்கையின் காதை கடிக்கவும் மாமனாரை நெருங்கிய ஜெகாவின் வார்த்தைகள் எதையும் அவர் காதிலேயே வாங்கிக்கொள்ள வில்லை, தன் முடிவை செயலாற்றும் முடிவோடு அமர்ந்திருந்தார்.
யார் பேச்சுக்கும் அசையாத அண்ணாமலையை கண்ட தென்றலுக்கு அச்சம் அதிகரிக்க உடனே கைபேசியை எடுத்தவள், ‘அத்தான் ப்ளீஸ் அத்தான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. எப்படியாவது எல்லாருக்கும் புரிய வைங்க’ என்று கண்ணீரோடு உதய்க்கு மெசேஜ் அனுப்பியவள் அதை அவன் பார்க்காமல் போகவும் உடனே அவனுக்கு அழைக்க உதய்யின் எண் ஸ்விட்ச்ஆப் செய்யபட்டிருந்தது.
கண்ணீரை துடைத்தவளுக்கு வேறு யாரை துணைக்கு அழைக்க என்று வேகமாக மணமேடையை அலசிட அப்போதுதான் ராகவன் அங்கில்லாததை கண்டு ஒருவேளை உதய்யோடு சென்றிருப்பானோ என்று உடனே அவனுக்கு அழைத்தாள். ஆனால் அவனுமே ஸ்விட்ச்ஆஃப் செய்திருக்க மீண்டும் உதய்க்கு ஒருமுறை அழைத்து பார்த்தவள் கண்ணீரோடு அனைத்து வழிகளும் அடைபட்டு விட்டதை உணர்ந்து தவித்து போனாள்.
தளிரின் சிவந்திருந்த விழிகளில் கண்ணீர் தன்போக்கில் தடையின்றி வெளியேறிகொண்டிருக்க, விடைத்த நாசியுடன் அண்ணாமலையிடம், “தாத்தா இந்த கல்யாணம் வேண்டாம், நான் நிச்சயமா உதய்யோட வாழ்க்கையில இருந்து விலகி போயிடுறேன் நீங்க அவருக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க ஆனா இது மட்டும் வேண்டாம் தாத்தா.. ப்ளீஸ் தென்றல் வேண்டாம் அவளை விட்டுடுங்க அவ சின்ன பொண்ணு! நான் செய்த தப்புக்கு அவ என்ன பண்ணுவா..? என்னால அவ வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டாம் ப்ளீஸ்” என்று அவரிடம் மன்றாடியவள்,
“நாங்க முன்னாடியே சொல்லாதது தப்புதான்! அந்த தப்புக்கு தண்டனையை எனக்கு கொடுங்க ஆனா என் தங்கச்சி வாழ்க்கை வேண்டாம்” என்று சொல்ல அவரோ கண்ணீர் வற்றிய நிலையில் நின்றிருந்த சீதாவிடம் சென்றவர்,
“எங்களை இவ்ளோ தூரம் வரவச்சு எல்லார் முன்னாடியும் தலைகுனிய வச்ச நீதான்ம்மா உன் பெண்ணோட கேள்விக்கு பதில் சொல்லணும்” என்று அண்ணாமலை பந்தை அவர்புறம் தள்ளிவிட்டு செல்ல, ஒருமுடிவோடு மகளை பார்த்தவர், “செய்த தப்பை திருத்தி மன்னிப்பு கேட்க நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருங்க தென்றலை கூட்டிட்டு போய் தயார் பண்ணு தளிர்” என்றார்.
கரைந்த விழிகளோடு நின்றிருந்த தளிரின் உயிர்கூடு சீதாவின் வார்த்தைகளில் சிதறிப்போக “ம்மா ப்ளீஸ் இது வேண்டாம்” என்ற மகள்களின் மன்றாடலை ஏற்க சீதா தயாராக இல்லை.
மணப்பெண் அலங்காரத்தில் கண்ணீரோடு வந்து நின்ற தென்றலை கண்ட ராஜி, “அம்மா மகளுங்க எல்லாரும் ஏற்கனவே ப்ளான் பண்ணி செய்துட்டு எதுக்குடி இப்போ நீலிகண்ணீர் வடிக்கிறீங்க..? இதெல்லாம் தெரிஞ்சு தானே அப்போவே உனக்கு புடவையை எடுக்க பார்த்த அப்புறம் என்ன..?” என்று வெந்தபுண்ணில் வேல் பாய்ச்ச பதிலின்றி அவரை பார்த்த இளந்தென்றலின் கண்ணீர் நின்று போயிருக்க ஒரு முடிவோடு உதய்யின் வருகைக்காக காத்திருந்தாள்.