சரவணன் அனைவரையும் மண்டபத்தை விட்டு வெளியேற்றி இருந்த போதும் ஒருசில லோக்கல் மற்றும் யூடியூப் சேனல்கள் அடுத்த செய்தியை சேகரித்து முதல் ஆளாக வெளியிட்டு விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெளியில் நின்றிருந்தவர்கள் உதய் அண்ணாமலையை தூக்கி சென்றதில் தொடங்கி மருத்துவமனை சென்றது வரை அவர்களை பின்தொடர்ந்திருந்தனர். ஏற்கனவே டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதே அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உதய் சொல்லிவிட்டதால் தளிர் குடும்பத்தின் பொறுப்பை ராகவன் ஏற்றிருந்தான்.
அண்ணாமலையின் நிலையை கண்டு கண்ணீரோடு பின்தொடர்ந்த அவர்களை தடுத்து மண்டபத்தின் பின்வாசல் வழியாக பத்திரமாக அழைத்து சென்ற ராகவன் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் பாதை மாறியிருப்பதை கண்ட தளிர், “அண்ணா நாம எங்க போறோம்..?” என்றாள்.
“என் வீட்டுக்கு ம்மா”
“உங்க வீட்டுக்கா..? எதுக்குண்ணா..?”
“இல்லம்மா இப்போ நீங்க அங்க போனா யாராவது ஏதாவது பேசுவாங்க.. கேட்பாங்க எதுக்கு நாம வாய்ப்பு கொடுக்…”
“அது சரிபடாது தளிர்! உதய் ஸ்டேஷன்ல இருந்து வரும்போதே இந்த பிரச்சனை முடியற வரை உங்களை என் வீட்டுல தங்க வைக்க சொல்லியிருந்தான் இப்போ அதுதான் சரின்னு எனக்கும் தோணு..” என்று அவன் முடிக்கும் முன்னமே கண்களில் இருந்து வேகமாக வெளியேறிய நீரை துடைத்தவள்,
“அண்ணா ப்ளீஸ் ஏற்கனவே தேவையில்லாம என்னோட பிரச்சனையில உங்க எல்லாரையும் கொண்டு வந்து கஷ்டபடுத்திட்ட எனக்கு சுமையை இன்னும் அதிகப்படுத்தாதீங்க… உங்களுக்கெல்லாம் நாங்க ரொம்ப கடமை போட்டிருக்கோம் ஆனா தயவுசெய்து இப்ப எங்க வீட்டுக்கு போங்க.. எப்போ இருந்தாலும் நாங்க ஃபேஸ் பண்ண வேண்டியது, இதுல இருந்து எத்தனை நாள் தப்பிக்க முடியும்னு நினைக்கறீங்க..? நாங்க இங்க இல்லாம போனா அது இன்னும் பல யூகங்களுக்கு வழிவகுத்து அவரையும் அவர் குடும்பத்தையும் இன்னும் அவமானப்படுத்தும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்று சொல்ல அமைதியாக வண்டியை திருப்பியிருந்தான் ராகவன்.
கண்களை மூடி கைகளை கூப்பி அண்ணாமலைக்காக பிரார்த்திருந்த சீதா வழிநெடுக விசும்பி கொண்டே வரவும், “அம்மா கவலைபடாதீங்க தாத்தாக்கு எதுவுமாகாது, இப்போ நீங்க அங்க வந்தா இன்னும் பிரச்சனை பெருசாகும் அதனால தான் கூட்டிட்டு வந்துட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க.. தென்றல் அக்கா அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ யார் வந்தாலும் கதவை திறக்காதீங்க… எதுக்கும் பதில் சொல்லாதீங்க ஏதாவது அவசரம்னா எனக்கு கூப்பிடு” என்றவன் அவர்கள் வீட்டினுள் செல்லும் வரை பார்த்திருக்க அவசரமாக வெளியில் வந்த இளந்தளிர் அவனிடம் ஏதோ சொல்லவும்,
“என்ன பேசுற தளிர்..?” என்று அதிர்ச்சியாக அவளை பார்த்தான்.
“ப்ளீஸ்ண்ணா..” என்றவளின் கண்ணீரில் சில நொடிகள் அவளை வெறித்தவன் மெல்ல வண்டியை கிளப்பி மருத்துவமனைக்கு செல்ல அங்கே அண்ணாமலையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருந்து சிகிச்சையை தொடங்கியிருந்தனர்.
தளிரின் வருகைக்காக காத்திருந்தவர்கள் ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தாலும் ராகவனின் கார் தளிரின் வீட்டின் முன் நின்றதில் இருந்து தெருவில் இருந்தவர்களின் பார்வை முழுக்க இவர்கள் மீதே..! ராகவன் செல்லவும் ஓரிருவர் அவர்கள் வீட்டை நோக்கி வருவதை கண்ட தளிர் கதவை சாற்றிவிட்டு பூஜையறைக்கு செல்ல அங்கே ஏற்கனவே இருவரும் அமர்ந்து மனமுருக பிரார்த்தித்து கொண்டிருந்தனர். தளிரும் அவர்களருகே அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள அவள் மனமோ தன்போக்கில் அன்றைய நாள்களை நோக்கி நகர்ந்தது.
இளந்தளிரின் கல்லூரி முதல் ஆண்டு அது…
அன்று நண்பர்கள் அனைவரும் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் குழுமியிருக்க சரத்தும் தளிரும் மரநிழலில் அமர்ந்து விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். சந்தியாவிற்கு அசோக் எட்டு போடுவதற்கு பயிற்சியளிக்க லேகாவிற்கு அஜய் சொல்லி கொடுத்து கொண்டிருந்தான்.
“நியாபகம் இருக்கு சரத் சரியா தான் போட்டிருக்கேன் நீ அவளோட ஃபோட்டோ, ஆதார் மத்ததெல்லாம் சேர்த்துடு” என்று பூர்த்தி செய்த லேகாவின் படிவத்தை அவனிடம் கொடுத்தவள் அடுத்த விண்ணப்பத்தை எடுத்து அசோக்கின் தகவல்களை பூர்த்தி செய்ய தொடங்கினாள்.
இது அவர்களிடையே வழக்கம் தான்! நண்பர்கள் ஏழு பேரின் அனைத்து ஆவணங்களும் மற்றவர்களிடம் இருக்கும், ஒருவருக்காக மற்றவர் படிவம் நிரப்புவதும் அவர்களுக்காக பணம் செலுத்துவதும் பின்னர் அதை பெற்றுக்கொள்வதும் அவர்களிடையே சகஜம்..
இருவரும் அனைவரின் விண்ணப்பத்தையும் நிரப்பி முடித்திருந்த நேரம் பயிற்சி முடித்த நண்பர்கள் கூட்டம் அவர்கள் அருகே வந்து அமர்ந்தது.
“விடு லேகா இது ஒரு பெரிய விஷயமா, எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற..? இன்னும் கொஞ்ச நேரம் ப்ராக்டீஸ் பண்ணினா சரியா வந்துடும்” என்று அஜய் காதலியை சமாதானபடுத்த மற்றவர்கள் புன்னகையோடு வேடிக்கை பார்த்தனர்.
“என்னாச்சு அஜய் ஏன் லேகா ஒருமாதிரி இருக்கா திரும்ப உங்களுக்குள்ள சண்டையா..?” என்று தளிர் தோழியின் முகத்தை ஆராய்ந்தவாறு கேட்க..,
“இல்ல தளிர் அவளுக்கு கியர் வண்டியில எட்டு போட முடியல இரண்டு மூணு இடத்துல கால் வச்சு பேலன்ஸ் பண்ணிட்டா அதுல கொஞ்சம் அப்செட் ஆகிட்டா.., இன்னைக்கு தானே அப்ளை பண்றோம் நம்மளை கூப்பிட இன்னும் டைம் இருக்கு காலேஜ் முடிச்சிட்டு வந்து தினம் பிராக்டீஸ் பண்ணலாம் சொல்றேன் கேட்காம இப்படி மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கா தளிர்”
“என்ன லேகா இது..! எங்களை மாதிரி ஸ்கூட்டி ஓட்டவா நீ அப்ளை பண்ணியிருக்க..? உன்னோடது கியர் பைக் அதுல எட்டு போடறப்போ கண்ட்ரோல் எடுக்க நிச்சயம் நேரமாகும்.. இப்போதான் ப்ராக்டீஸ் பண்ற உடனே எப்படி வந்துடும்..? நாங்க உன்னோட இருக்கோம் நீ நல்லா பிராக்டீஸ் பண்ணி உனக்கு சாட்டிஸ்ஃபாக்ஷன் வந்த பிறகே கிளம்பலாம்” என்று தளிர் தீர்வு சொல்ல..,
“என்னால உங்களுக்கு லேட் ஆகாத தளிர்..? அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?”
“பரவால்லடி நான் அம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன் தனியா இருந்தா தான் ஏதாவது யோசிச்சு பயந்துடுவாங்க உங்களோட இருக்கேன்னு சொன்னா அம்மா புரிஞ்சுப்பாங்க” என்றவள் அசோக்கிடம் கைபேசி வாங்கி சீதாவிற்கு தகவல் கொடுத்தாள்.
“வா லேகா ப்ராக்டீஸ் பண்ணுவ..” என்று சரத் அழைக்கவும், “டேய் டேய் மச்சி என் ஆளுக்கு நான் சொல்லி கொடுக்குறேன்டா ப்ளீஸ்” என்று முன்னே வந்த அஜய்யை கண்டு சிரித்தவன் ‘சரி போ..’ என்பதாக சரத் தலையசைக்கவும் அஜய் லேகாவோடு கிளம்பினான்.
“டேய் அஜய் போகும் முன்ன சைன் பண்ணிட்டு போங்க நாங்க ஆபிஸ்ல கொடுத்துடுறோம்” என்ற சரத்திடம் பேனாவை வாங்கி அவன் காட்டிய இடத்தில் அவசரமாக போட்டுவிட்டு சென்றனர்.
மரநிழலில் அமர்ந்திருந்தவர்களிடம் சரத் அவர்களின் விண்ணப்ப படிவத்தை கொடுக்க அவர்களும் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் அமைதியாக போட்டு கொடுத்தனர்.
“ஹே என்னடி எதையும் சரி பார்க்காம அப்படியே போட்டுட்ட ஒருமுறை செக் பண்ணிட்டு சைன் பண்ணு” என்ற தளிரிடம் “அதுதான் நீங்க இரண்டு பேர் இருக்கீங்களே எல்லாம் சரியாதான் இருக்கும் எதுக்கு நானும் செக் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டு.. இதனால ரெஸ்ட் எடுக்கிற நேரம் குறைஞ்சுடுமே..” என்றவள் தளிரின் தோள் சாய்ந்து கண்களை மூடிக்கோண்டாள்.
“சோம்பேறி” என்று தளிர் சிரிப்போடு அவள் முதுகில் ஒன்று வைக்க, “என்னவேனாலும் சொல்லிக்கோ ஆனா இப்போ வெயில்ல பிராக்டீஸ் பண்ணதுல எனெர்ஜி போச்சு நாங்க ரெஸ்ட் எடுக்கறோம் தளிர் ட்ராக் காலியா இருந்தா இப்போ நீ போய் பிராக்டீஸ் பண்ணு” என்று சந்தியா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அசோக்கும் தீனாவும் அவர்களுக்கான பழச்சாறு மற்றும் நொறுக்கு தீனியோடு வந்தனர்.
“எனக்கு ஜூஸ் போதும்” என்ற தளிர் தன் பங்கையும் சந்தியாவிடம் கொடுத்து, “சரிடி நான் போய் ப்ராக்டீஸ் பண்றேன் மறக்காம அப்ளிகேஷனை கொடுத்து பணம் கட்டிட்டு ரெஸீப்ட் வாங்கிடுங்க” என்ற தளிர் ரகுபதியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு எட்டு போடுவதற்கான ட்ரெக்கிற்கு செல்ல அவள் பின்னே வந்த சரத் அவளை பார்த்து கொண்டு நின்றிருந்தான்.
“சரத் நானே பார்த்துப்பேன் நீ ஏன் டைம் வேஸ்ட் பண்ற..? கார் டிராக் ஃப்ரீயா தான் இருக்கு போய் பிராக்டீஸ் பண்ணு” என்று சொல்ல சிபிஎஸ்சியில் இருந்து ஆறாம் வகுப்பில் இவர்கள் பள்ளிக்கு மாறிய சரத் மற்றவர்களை விட ஒன்றரை வயது பெரியவன்.. ஆனாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துகொள்ளாமல் தங்கள் வகுப்பில் சேர்ந்த மாணவனுடன் நட்பு கொண்டிருந்தனர்.
லைசன்ஸ் எடுக்காமலே பள்ளிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்த சரத் தளிரின் ஆலோசனைப்படி அப்போதே டூவீலருக்கான லைசன்ஸ் எடுத்து விட்டவன் இப்போது காருக்கு விண்ணப்பித்து இருக்கிறான்.
“இருக்கட்டும் தளிர் உனக்கு சரியா செய்ய முடியுதான்னு பார்த்துட்டு போறேன்” என்றவன் பத்து நிமிடங்கள் அவளை நின்று ரசித்த பின்பே தான் பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.
தீனா படிவங்களை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர அனைவரும் மதிய உணவை வெளியில் முடித்து கொண்டு வந்தவர்கள் மீண்டும் லேகாவை பயிற்சி எடுக்க வைத்து ஓரளவு அவள் திருப்தி அடைந்த பின்பே வெளியில் வந்தனர்.
“டேய் அப்போ அடுத்து எல்லாரும் பாஸ்போர்ட் எடுத்துடலாமா..? நான் அப்ளிகேஷன் மத்த டீடெயில்ஸ் எல்லாம் விசாரிக்கட்டுமா..?” என்று அஜய் கேட்க,
“அஜய் இன்னும் டிரைவின் லைசன்ஸ் எடுத்து முடிக்கல அதுக்குள்ளே பாஸ்போர்ட்க்கு போயிட்டியா..? அப்படி என்ன அவசரம்..?” என்ற லேகாவிடம், “நம்ம ஹனிமூன்க்கு தேவைப்படும் டார்லிங்… அதுதான் முன்னாடியே எடுத்து வைக்கிறேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி சிரித்தவனின் முதுகில் லேகா அடி போட அதை கணக்கில் எடுக்காத அஜய்,
“சரி இதை முடிச்சுட்டு அப்புறம் பாஸ்போர்ட் எடுக்கற ப்ராசஸ்ல இறங்கலாமா..? உங்களுக்கு எல்லாம் ஓகேவா டா..” என்று மற்றவர்களை கேட்கவும்,
“கண்டிப்பா மச்சி எனக்கு இது ரொம்ப முக்கியம்! ஃபாரீன்ல இங்கிலீஷ் டீச்சர்ஸ்க்கு நல்ல ஸ்கொப் இருக்கிறதா சொன்னாங்களே அதனால கையோடு பாஸ்போர்ட் எடுத்துடலாம்டா” என்று தீனா சொல்ல “எங்க வீட்ல சம்மதிப்பாங்களான்னு தெரியலை ஆனா நீங்கல்லாம் போறீங்கன்னா வீட்ல அனுப்ப வாய்ப்பு இருக்கு ஸோ நீ விசாரி அஜய்” என்றாள் சந்தியாவும்.
*****************
“ஓகே டன்! அஜய் நீங்க எல்லாரும் கிளம்புங்க எங்களுக்கு சின்ன வேலையிருக்கு முடிச்சுட்டு வரோம்” என்ற சரத் மற்றவர்களை அனுப்பி வைத்தவன் தீனா மற்றும் அசோக்கை அழைத்துக்கொண்டு காஃபிடேரியாவிற்கு சென்றவன் “மச்சான் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கடா” என்று கிட்டத்தட்ட ஒருமணி நேரம் செலவழித்து தன் காதல் கதையை கூறவும் அதன் முடிவில் கேட்ட இருவருக்குமே அத்தனை அதிர்ச்சி.
“மச்சி என்னடா சொல்ற..? நீ சொல்றதெல்லாம் நிஜமா..?” என்ற அசோக்கால் அத்தனை எளிதாக நம்பமுடியவில்லை அதைவிட சரத் தளிர் அவனுக்கு இல்லையென்றால் உயிர் துறப்பேன் என்றதை..!
“நிஜமா தான்டா சொல்றேன் நீங்க தான் அவளை என்னோட சேர்த்து வைக்க உதவனும் தளிர் மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா கண்டிப்பா செத்துடுவேன் மச்சி” என்று கண்ணீரோடு சொன்ன சரத்தை ஓங்கி அறைந்தான் தீனா.
“டேய் தீனா எதுக்கு அவனை அடிச்ச..?” என்று அசோக் பதறிக்கொண்டு அவர்களிடையே வரவும்,
“இவன் பேசினதை கேட்ட தானே! எவ்ளோ சாதாரணமா செத்துடுவேன்னு சொல்றான்.. பரதேசி இரண்டு உயிரை என் கண் முன்னாடி பறிகொடுத்த எனக்கு தான்டா உயிரோட அருமை தெரியும்.. தளிரோட பதில் என்னன்னே தெரியாம எப்படி உன்னால பேச முடியுது சரத்..?” என்ற தீனாவிற்கு கட்டுக்கடங்கா ஆத்திரம்.
பின்னே கடன் தொல்லை தாங்காமல் அவனுடைய பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதில் தாத்தா பாட்டியின் நிழலில் தம்பி தங்கைகளோடு வளர்பவனுக்கு மற்ற நண்பர்களை விடவும் சரத் மீது கொள்ளை ப்ரியம். பின்னே மூவரின் படிப்பிற்கும் செலவு செய்ய முடியாத வயதானவர்கள் தீனாவின் தம்பி தங்கையை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு இவனையும் சேர்க்க முயன்ற போதும் பள்ளி படிப்போடு நிறுத்திவிட முயன்ற போதும் மற்ற நண்பர்கள் இவனுக்காக பேசி அவர்களை சம்மதிக்க வைத்த நிலையில் சரத்தான் தீனாவின் கட்டணத்தை தன் தாயிடம் சொல்லி கட்டுவதாக அவர்களை சம்மதிக்க வைத்திருந்தான்.
கல்லூரியில் சேர்ந்த பின் என்னதான் தீனா பார்ட் டைம் வேலை செய்து படிப்பிற்கு பணம் சேர்த்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் செமெஸ்டர் கட்டணங்களை சரத் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிடுவான். இப்படி தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் நண்பன் காதலுக்காக உயிரை மாயத்துகொள்வேன் என்றால் தீனா எப்படி பொறுப்பான்..?
தீனா மட்டுமல்ல அசோக்கிற்கும் அவன் விரும்பும் நடனத்தை பெற்றோர் எதிர்த்த போதும் தான் பயிலும் நடனப்பள்ளியிலேயே அவனை சேர்த்தவன் அசோக்கின் பெற்றோரிடம் அவர்களுடன் வாலிபால் பயிற்சி எடுப்பதாக சொல்லி சமாளிப்பதோடு எங்கு போட்டி நடைபெற்றாலும் தன்னோடு அவனையும் பங்கு பெற வைப்பது அதற்கான கட்டணம் செலுத்துவது கான்செப்ட்டிற்கு தகுந்த உடைகள் வாங்குவது என்று பல உதவிகளை சரத் செய்திருக்கிறான்.
“என்ன மச்சி இவன் இப்படி பேசுறான்..?” என்று அசோக் தீனாவை பார்க்க, “சரிடா எங்களுக்கு புரியுது ஆனா நீ தளிர்கிட்ட முதல்ல உன் லவ் சொல்லு.. அவ பதில் என்னன்னு தெரிஞ்சுட்டு அப்புறம் நாம ஒரு முடிவுக்கு வருவோம்” என்றான் தீனா.
“ஆமா மச்சி எதுக்கும் ஒருமுறை தளர் கிட்ட சொல்லி பாரேன் டா..” என்று அசோக்கும் சொல்ல, “இல்லடா வேண்டாம் நான் அப்படி சொன்னா தளிர் அதுக்கப்புறம் என் முகத்தை கூட பார்க்க விரும்பமாட்டா..”
“டேய் என்ன உளறிட்டு இருக்க..? சின்ன வயசுல இருந்து பார்க்கிறோம் நம்ம தளிர் அப்படி கிடையாது”
“அதை எப்படிடா மறக்க முடியும்..? அந்த வருஷ வேலண்டைன்ஸ் டே க்கு நாம டியூஷன் விட்டு வந்தப்போ அவன் தளிருக்கு ப்ரொபோஸ் பண்ணவும் அவ அந்த கார்டை கிழிச்சு போட்டு படிக்கிற வயசுல லவ் கேட்குதா உனக்கு..? இனி இந்த எண்ணத்தோட என் முன்னாடி வந்த கன்னம் பழுத்துடும்னு சொல்லி இனி அவ முகத்துலயே முழிக்க கூடாதுன்னு சொன்னாளேடா… அதோடவா விட்டா அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து பெரிய பிரச்சனை ஆகிடுச்சே… அதுக்கப்புறம் அவளை அவங்கப்பா வேற டியூஷன் சேர்க்க நாமளும் அவளுக்காக புது டியூஷன் சேர்ந்தோமே எல்லாம் நல்லாவே நியாபகம் இருக்கு..”
“ஆனா உங்களுக்கு தெரியாத விஷயம் அன்னைக்கு நானும் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண நினைச்சேன்”
“நிஜமாவாடா சொல்ற..? அப்போ டென்த்ல இருந்தே உனக்கு தளிர் மேல லவ்வா..? ஏன்டா எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலை”
“டென்த் இல்ல அதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு தளிரை ரொம்ப பிடிக்கும் ஆனா அவ இல்லன்னா நான் இல்ல, நாம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்ஸா இருந்தாலும் அவளுக்கும் உங்களுக்கும் இருக்க வித்யாசம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புரியவந்து, நிச்சயமா அவமேல இருக்கிறது லவ் தான்னு எய்த் படிக்கிறப்போ புரிஞ்சுக்கிட்டேன்.. அன்னையில இருந்து ஒவ்வொரு நாளும் என் லவ் சொல்ல நினைப்பேன் ஆனா முடியாம கஷ்டப்படுவேன்”
“அடப்பாவி எயித்ல இருந்தே லவ் பண்றியா..?” என்று மற்றவர்கள் வாயடைத்து போயினர்.
“சரிடா அது அப்போ ஸ்கூல்ல இருந்ததால அப்படி சொல்லியிருப்பா.., இப்போ நாம காலேஜ் வந்துட்டோம், காலேஜ் ஹார்ட்த்ரோப்டா நீ..!! எவ்ளோ பொண்ணுங்களுக்கு உன்னை பிடிக்கும் தெரியுமா..? என்னைவிட உன் டான்ஸ் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அசோக் சொல்ல.,
“ஆமா மச்சி எத்தனை பொண்ணுங்க உன்கிட்ட பேச எங்களை அப்ரோச் பண்ணி இருக்காங்கன்னு எங்களுக்கு தானே தெரியும்.. உனக்கு காலேஜ்ல பொண்ணுங்க மத்தியில இருக்கிற கிரேஸ் தெரியாம பேசுறடா.. உன்னை எந்த பொண்ணாவது வேண்டாம்னு சொல்லுவாளா..?” என்றான் தீனா.
“ப்ச் மத்தவங்களுக்கு பிடிச்சு என்ன ஆகபோகுது?”
“மச்சி தளிருக்கும் உன்னை பிடிக்கும்டா”
“இல்ல மச்சி அவளுக்கு பிரண்ட்ஷிப் வேற லவ் வேறன்னு சொல்றடா!” என்றவன் அன்று அஜய் லேகா காதல் குறித்து சந்தியாவிடம் தளிர் பேசியதை கேட்க நேரிட்டதை நண்பர்களிடம் பகிர்ந்தவன்,
“எனக்கு தெரியும் தீனா கண்டிப்பா நான் போய் லவ்வை சொன்னா என்னை அக்செப்ட் பண்ணாதவ அதுக்கு அப்புறம் என்னை ஃபிரண்டா கூட வச்சுக்க மாட்டா.. உங்களுக்கு தெரியாது டா தளிர் மட்டும் என்னோட பேசாம போயிட்டா நான் செத்துருவேன் மச்சி” என்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கவும் தீனாவின் கோபம் அதிகரித்தது.
“டேய் லூசு மாதிரி உளறாத நேத்து என்ன தளபதியோட படம் பார்த்தியா..? லவ்வை சொன்னா செத்துடுவான்னு அவர் பயப்படற மாதிரி லவ்வை சொன்னா தளிர் பேசமாட்டா, பார்க்கமாட்டான்னு நீயே முடிவு பண்ணி அவளுக்காக செத்துடுவேன்னு சொல்லுவியா..? வாழ்க்கை என்ன உனக்கு அவ்ளோ ஈசியா போச்சா..?” என்று சரத்தை பிடித்து கத்தி தீர்த்தான்.
“இல்ல தீனா உனக்கு தெரியாது தளிர் என்னோட உயிர்டா..! நான் தினமும் முழிக்கிறது தளிரோட முகத்துல கண்ண மூடுவதும் அவ முகத்தை பார்த்துட்டு தான் அப்படி இருக்கிறப்போ அவ என்னை உதறிட்டா நான் உதிர்ந்து போயிடுவேன்டா” என்று காதல் வசனம் பேசியவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியும் கண்ணீரும் அவர்களை அசைத்திருந்தது.
******************
“சரிடா எங்ககிட்ட சொன்னவன் லேகா சந்தியா கிட்ட சொல்லியிருந்தா அவங்களே தளிர் கிட்ட பேச்சு கொடுத்து அவளோட பதில் தெரிஞ்சு சொல்லியிருப்பாங்களே அவளோட முடிவு என்னன்னு தெரியாம நீயும் இவ்ளோ கஷ்டபடத்தேவை இல்லை.. அஜய்க்கும் இன்னும் எதுவும் சொல்லலையா நீ..?”
“உங்க அளவுக்கு அவனை நம்ப முடியாது மச்சி! அஜய் சரியான ஓட்டைவாய்ன்னு உங்களுக்குமே தெரியும்.. அதோட அவன் ஆசைப்பட்ட பொண்ணு கஷ்டபடாம அவனுக்கு கிடைச்சுட்டா தளிர் வேண்டாம் சொன்னா வேற ஃபிகரை பாருடான்னு ஈசியா சொல்லிடுவான்.. அவனுக்கெல்லாம் என்னோட ஆத்மார்த்தமான காதல் புரியாதுடா”
“நீ சொல்றதும் சரி தான்”
“அதுமட்டும் இல்ல அவனுக்கு இந்த விஷயத்தை சொன்னா நிச்சயம் லேகாகிட்ட சொல்லாம இருக்கமாட்டான்… லேகா மூலமா தளிர்கிட்ட போச்சுன்னா அதோட எல்லாம் முடிஞ்சது..” என்று குரல் உடைய சொன்னவனின் கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக வெளியேற,
“கண்டிப்பா அதுக்கப்புறம் என்னை உயிரோடவே பார்க்க முடியாதுடா..” என்றான் வெகு தீவிர குரலில்.
“டேய் இன்னும் நாம ஃபர்ஸ்ட் இயர்கூட கம்ப்ளீட் பண்ணலை அதுக்குள்ளே கல்யாணம்னு ஏன்டா பெரிய பேச்சு எல்லாம் பேசுற..? யார் வீட்டுலையும் ஒத்துக்க மாட்டாங்க..”
“யாருக்கும் தெரிய வேண்டாம் மச்சி.. தளிருக்கு நான் எனக்கு தளிர் போதும்..!! வேற யாரை பற்றியும் எனக்கு கவலை இல்ல அசோக் அன்னைக்கு சந்தியா கிட்ட பேசிட்டு இருந்த தளிர் நம்மில் யாராவது அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணினா அதுக்கப்புறம் வாழ்நாள் முழுக்க அவங்க முகத்துலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டா டா”
“இல்லடா அவளுக்கு என்னை பிடிக்கும்..! நீங்களே பார்த்து இருக்கீங்களா எத்தனை நாள் என்கூட சாப்பாடு ஷேர் பண்ணி சாப்பிட்டு இருக்கா, எனக்கு நோட்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்கா எனக்காக அசைன்மென்ட் சப்மிட் பண்ணி இருக்கா..” என்று முகம் மலர சரத் பேசிக்கொண்டே செல்லவும்..,
“ஆமா மச்சி ஆனா எனக்காகவும் செய்திருக்கா இல்ல! அப்போ என்னை பிடிச்சவளுக்கு நான் கட்டபோற தாலியும் பிடிக்கும் மச்சான்.. தளிருக்கு லவ் தானே பிடிக்காது ஃப்ரெண்ட்ஸ் லவ்வரா மாறக்கூடாதுன்னு சொல்றவ கிட்ட நான் கடைசி வரை லவ் சொல்லமாட்டேன் ஆனா அதே ஃபிரண்ட்ஸ் ஹஸ்பண்ட் ஒய்ஃப்பா மாறலாமேடா..? தளிருக்கு நிச்சயம் நான் நல்ல ஹஸ்பன்ட்டா இருப்பேன்…” என்றவன் தளிர் மீதான நேசத்தை விவரிக்கவும் அவன் காதலின் ஆழத்தை கண்கூடாக கண்ட பின்னர் அவனை விட சிறந்த காதலன், கணவன் தளிருக்கு வாய்க்கமுடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தனர் தீனாவும் அசோக்கும்.
“டேய் நம்ம பார்த்தோமே இந்த படத்துல என்று சில படங்களை குறிப்பிட்டவன் அதுல வர மாதிரி நான் தளிரை கல்யாணம் செய்துட்டு அவளோட வாழ்ந்துட்டா அதுக்கப்புறம் அவ என்னை நிச்சயம் வேண்டாம்னு சொல்ல மாட்டாடா..!!”
“அதுவும் இன்னொரு படத்துல கல்யாணமே ஆகாம அந்த ஹீரோயின் ப்ரெக்னென்டாகி இருப்பா ஜாதி அது இதுன்னு என்ன காரணம் சொல்லி பிரிக்க பார்த்தவங்களாலும் அதுக்கப்புறம் அவங்களை பிரிக்க முடியாது.. குழந்தைக்காக அவங்களை ஏத்துப்பாங்க அவங்க கல்யாணத்து அன்னைக்கு தான் அவளுக்கு குழந்தையே பிறக்கும்.., இன்னொரு படத்துலயும் இப்படித்தான் கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்து கன்சீவ் ஆகிடுவாங்க படம் முடியறப்போ தாலி கட்டி ஒன்னு சேர்ந்துடுவாங்க..”
“ஆனா நான் அப்படி இல்ல மச்சி முறையா தளிரை கல்யாணம் பண்ணி அவளோட வாழ நினைக்கிறேன்.. இது தப்பா..?” என்று கேட்க பெண்ணை போகபொருளாக உபயோகித்து கைகழுவுபவர்கள் மத்தியில் தளிரை திருமணம் செய்து வாழ நினைக்கும் நண்பனின் உயர்ந்த குணத்தில் நெக்குருகி போயினர் தோழர்கள்.