“மச்சி தளிரை ஏன்டா போக விடற..? அவளை தனியாவிட வேண்டாம் சொன்னா கேளு டிரைவர் சொன்ன மாதிரி நாம கூட்டிட்டு போயிடலாம்டா..” என்று அசோக்கிற்கு எங்கே அவள் சொன்னது போல போலீசுக்கு சென்றுவிடுவாளோ என்ற அச்சம் கவ்விப்பிடித்தது.
“சரத் அவளுக்கு தெரியாம கல்யாணம் நடந்தாலும் நிச்சயம் தளிர் உன்னோட காதலை புரிஞ்சுகிட்டு ஏத்துப்பான்னு நம்பி தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணோம் இப்போ அவ பேசறது பார்த்தா ரொம்ப பயமா இருக்குடா.. அன்னைக்கு லவ் லெட்டர் கொடுத்தவனையே அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து உண்டு இல்லைன்னு ஆக்கிட்டா இப்போ நாம அவளுக்கே தெரியாம அவளை கடத்த பார்த்தோம்னு அவங்க வீட்ல தெரிஞ்சது கண்டிப்பா நம்மலை சும்மா விடமாட்டாங்கடா…போலீஸ் அரெஸ்ட், லாக்அப், அடி இதெல்லாம் நினைச்சா எனக்கு அடிவயிறே கலங்குதுடா.. ப்ளீஸ் எப்படியாவது அவளை தடுத்து நிறுத்துடா” என்று கெஞ்சல் தீனாவிடம்.
“மச்சி எங்க அப்பாக்கு மட்டும் நான் இப்படி ஒரு வேலை செய்தேன்னுதெரிஞ்சதுஅவரே என்னை கண்டம்துண்டமா வெட்டி போட்டுடுவார்டா டிரைவர் அண்ணன் சொல்றது தான் சரி வாடா தளிரை கூட்டிட்டு வந்துடலாம்” என்று முன்னே வேகமாக நடந்து கொண்டிருந்தவளை நோக்கி அசோக் நகர அவனை பிடித்து நிறுத்தினான் சரத்.
“டேய் நான்தான் சொல்றேன்ல அவ போகட்டும்னு ஆனா நீங்க எதுக்குடா இப்படி பயந்து சாகறீங்க..?” என்று எரிச்சலோடு காரில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து காயத்திற்கு மருந்திட்டவாறே அவன் பேசவும்,
“உனக்கு என்னடா அம்மா, கூட பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது அப்பா மட்டும் தான்.உனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுக்க குக், தேவையானதை வாங்கி கொடுக்க ஆளுங்க அதோட உன் செலவுக்குன்னு உங்கப்பா உன்னோட அக்கவுன்ட்ல லட்ச கணக்குல காசை போட்டுட்டு உலகம் பூரா சுத்துவாரு… உன்னை கேள்வி கேட்க ஆளே இல்லை. நீ என்ன பண்ற என்ன படிக்கிறன்னு கூட பெருசா கண்டுக்க மாட்டாரு தனிக்காட்டு ராஜாஆனா நாங்க அப்படியா..?”
“எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரொம்ப அசிங்கமாகிடும் டா… தளிர் உன்னை புரிஞ்சுட்டு ஏத்துப்பா உங்களை சேர்த்து வச்சுட்டு கிளம்பலாம்னு இருந்தோம்.. ஆனா தளிர் உன்னையே அடிச்சிட்டு தாலியை தூக்கி போட்டுட்டு போறா… எந்த பொண்ணுமே இப்படி செய்யமாட்டாடா தளிரும் அப்படி இருப்பான்னு தான் நான் நினைச்சேன்” என்று தீனா வருத்தத்தோடு கூற,
“நம்ம நாட்டு பொண்ணுங்க தாலிக்கு மதிப்பு கொடுப்பாங்க கட்டினவனை தெய்வமா கும்பிடுவாங்கன்னு தான் கேள்விபட்டிருக்கேன் ஆனா நம்ம தளிரா இப்படின்னு எங்களுக்கே ஷாக்கா இருக்குடா… இவளையா நீ காதலிச்ச உன் காதலுக்கு அவ தகுதியே இல்லாதவ மச்சி, வேற பொண்ணா இருந்தா ஒரு டாட்டூவை பார்த்தே கவுந்திருப்பங்க ஆனா உடம்பு முழுக்க டாட்டூ பார்த்து கூட உன் லவ்வை புரிஞ்சுக்கலையே என்ன பொண்ணுடா இவ..!” என்று அசோக்கும் தன் அதிருப்தியை தெரிவித்தான்.
“ஆமா புரியலை.. தளிருக்கு என்னோட காதல் புரியல ஆனா புரிய வைக்காம நான் ஓய மாட்டேன்டா.. அவதான் என் பொண்டாட்டி அதை யாராலும் மாற்ற முடியாது” என்றவன் குரலில் அத்தனை வன்மம்.
பின்னே அத்தனை தூரம் அவள் காலில் விழுந்து கெஞ்சிய போதும் தன்னை மதிக்காதவளை வலுக்கட்டாயமாக இழுத்து செல்வது அவனுக்கு பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை. போலீஸ் கேஸில் இருந்து வேண்டுமானால் அவன் தப்பிக்கலாம் ஆனால் தளிர் அவன் மனைவியாவது தடைபட்டு போகுமே..! எந்த நிலையிலும் அவளை விட அவன் தயாராக இல்லை.. அவளை அடைந்தே ஆக வேண்டும் என்றிருப்பவன் இப்போது போல அவசரபடாமல் தக்க தருணத்திற்காக காத்திருந்து செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டான்.
“எப்படிடா சொல்ற..? நாளைக்கு நாம காலேஜ்ல எப்படிஅவளை மீட் பண்ணுவோம் நினைச்சா பயமா இருக்கு.. அதைவிட அஜய் லேகா சந்தியாக்கு எல்லாம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க இது இன்னும் பிரச்சனை ஆகிடும் போல… ப்ளீஸ் சரத் எங்களை காப்பாற்று” என்றவர்களுக்கு காதலை சேர்த்து வைக்கும் வேகத்தில் எதுவும் தெரியாதிருந்த நிலையில் இப்போது தளிரின் முடிவு வெகுவாக அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.
“டிரைவர் நீயாவது போய் தளிரை நிறுத்து” என்று பதற்றத்தோடு தீனா சொல்ல,
“இல்ல குமார் வேண்டாம்” என்ற சரத்தின் கண்களில் அத்தனை பழிவெறி தன்னை நிராகரித்தவளுக்கு தக்க பாடம் புகட்டி தன்னிடம் வரவைக்க முடிவு செய்தே அவளை போக விட்டிருக்கிறான். அதாவது இப்போது விட்டு பின்னாளில் அவள் விலகவே முடியாத படி பிடிக்க போகிறான்.
இது தெரியாத தளிர் எங்கே பின் தொடர்வார்களோ அவர்களிடம் சிக்கிக்கொள்வோமோ என்று பாதை மறைத்த கண்ணீரை துடைத்தவாறே அதிவேகமாக சென்றுகொண்டிருந்த அதேநேரம் தீனாவிற்கு சந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.
அவசரமாக அழைப்பை ஏற்றவன் அதை லவுட்ச்பீக்கரிலும் போட்டுவிட “எங்க இருக்கீங்க தீனா வீட்டுக்கு வந்துட்டீங்களா..? ஏன் லேகா என்னோட கால் எடுக்கலை தளிர் கிட்ட கொடு” என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மற்றவர்களை பார்த்தவன், “இல… இல்ல சந்தியா தளிர் இல்லை.. அது.. அது” என்றவன் குரலில் அத்தனை நடுக்கம்.
“ப்ச் என்கிட்டே கொடுடா” என்று வாங்கிய சரத், “இப்பதான் தளிரை வீட்ல டிராப் பண்ணினோம் சந்தியா அஜய்கூட பேசிட்டு இருக்கிறதுல லேகா உன் கால் எடுக்கலைன்னு நினைக்கிறேன்.. என்ன விஷயம் சொல்லு” என்றான்.
“ஓஒ அப்படியா..! சரி சரத் நீ மறக்காம என் ஹால் டிக்கெட் எடுத்துட்டு வந்து கொடுத்துடு நான் அப்புறம் மறந்துடுவேன்” என்றவளிடம் பேசிவிட்டு சரத் கைபேசியை அணைக்கவும்,
“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட தளிர் சந்தியாக்கு விஷயத்தை சொல்லாம இருப்பாளா..? எனக்கு ரொம்ப பயமா இருக்கு இந்த விஷயமெல்லாம் அஜய் சந்தியாக்கு தெரிஞ்சது கண்டிப்பா எங்கப்பாகிட்ட போட்டு கொடுத்துடுவாங்க டா அப்புறம் அவர் என்னை தோலை உரிச்சு தொங்கவிட்டுடுவார்” என்று அசோக் புலம்பவும்,
“ப்ச் ஏன்டா இப்படி தொடைநடுங்கிகளா இருக்கீங்க..? இப்போ போலீஸ்க்கு போனா பெருசா என்ன ஆகிடும்..?”என்றான் அசால்ட்டாக..,
“டேய் எப்படிடா கொஞ்சமும் பயமில்லாம இருக்க..? ட்ரைவர் சொன்ன மாதிரி பொண்ணுங்க கேஸ்னா நம்மளை கேள்வியே கேட்காம உள்ள தூக்கி வச்சுடுவாங்க”
“அது மத்தவங்களுக்கு எனக்கு இல்ல… என்னை யாராலயும் உள்ள தூக்கி வைக்க முடியாது அப்படியே வச்சாலும் ஒரு மணி நேரத்துக்குள்ள வெளியே வந்துடுவேன் எங்க பவர் தெரியாம பதறாதடா…”
“ஆமாடா ஏதாவது பிரச்சனை வந்து ஒருவேளை சரத் மாட்டிக்கிட்டா கூட ஒரு ஃபோன் போதும் அவனை காப்பாற்றி கூட்டிட்டு போயிடுவாங்க அந்தளவு அவனுக்கு செல்வாக்கு இருக்கு, கமிஷனர் ஆபிஸ்க்கு அவன்கூட ஒருமுறை போயிருக்கேன் நீ பயப்படாத” என்றான் தீனா.
“டேய் அவனை காப்பாத்துவாங்க ஆனா நம்ம கதி..?”
“ப்ச் என்னடா உன் பிரச்சனை..? இப்போ என்ன இந்த விஷயம் உங்க வீட்ல தெரியக்கூடாது அவ்ளோதானே.. அதுக்கு நான் பொறுப்பு ஆனா நீங்க இங்க நடந்த விஷயத்தை அடியோடு மறந்துடனும் நீங்களா சந்தியா அஜய் மட்டுமில்ல வேற யார்கிட்டயும் உளறிட்டு இருக்ககூடாது புரியுதா..? இனி எனக்கும் தளிருக்கு நடுவுல யாரும் வரவேண்டாம் நான் பார்த்துக்கறேன்” என்றவன் அவர்களிடம் பணம் கொடுத்து வீடு சென்று சேர சொல்லியவன் தளிருக்கு முன்பாக அவள் தெருவின் மறுகோடியில் சென்று நின்று கொண்டவன் அடுத்த வந்த நாட்களில் அவளை கண்காணிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்தான்.
அஜய் லேகா இவர்கள் வீடு சென்று சேர்ந்த அதேநேரத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதுநாள் வரை படிக்க முடியாது தவித்துபோன அஜய் காதலியுடனான பிணக்கு நீங்கிய நிலையில் முழுமூச்சாக படிக்க தொடங்கிவிட்டவன் அவ்வப்போது நண்பர்களிடமும் பேசிக்கொண்டு தான் இருந்தான். கோவிலுக்கு சென்றுவந்த பின்னர் மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் அவரவர் வீட்டில் இருந்து படித்து கொண்டிருந்தனர். அன்று இரவு லேகா தளிரிடம் பேசுவதற்காக அழைக்க அவள் அழைப்பு ஏற்கப்படவில்லை, எப்படியும் தளிரே மீண்டும் அழைப்பாள் என்பதால் லேகா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல சந்தேகம் கேட்பதற்காக சந்தியா அடுத்த இரண்டாம் நாள் தளிருக்கு அழைக்க அப்போதும் அது ஏற்கப்படவே இல்லை.
*****************************
அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது தளிரின் வீடு.
இத்தனை நேரமாக ‘கணவரின் மறைவுக்கு பின்புமே மகளின் சுதந்திரத்தை கட்டுபடுத்தி நண்பர்கள் வட்டம் குறித்து கண்டிப்பு காட்டாது போனதே என் மகளின் நிலைக்கு காரணம்.. நானே முதல் குற்றவாளி’ என்று ஒருபுறம் சீதா தன் போக்கில் அரற்றி கொண்டிருக்க மறுபுறம் தளிர் தன்னை குற்றவாளியாக்கி வெதும்பி கொண்டிருந்தாள்.
தளிர் வாந்தி எடுத்தது குறித்து விபரம் கேட்டு வந்த அக்கம் பக்கத்து பெண்களை சமாளித்த மீனாக்ஷி உள்ளே வந்து கதவடைக்க மூலைக்கு ஒருவராக சீதாவும் தளிரும் கண்ணீரோடு அமர்ந்திருக்க தளிர் வாந்தி எடுத்த சோர்வில் தரையிலேயே சுருண்டு படுத்து இருந்தாள்.
வீடு வந்ததுமே மீனாக்ஷியை கட்டிக்கொண்டு கதறிய இளந்தளிர் நடந்த நிகழ்வுகளை அழுகையினூடே சொல்லிக்கொண்டு வந்ததை நம்பமுடியாமல் பார்த்திருந்தனர் இருவரும். காலை புன்னகை முகமாய் விடைபெற்ற மகளின் தற்போதைய கோலத்தை கண்ட சீதாவிற்கு அவள் அழுகையில் படபடப்பு கூடிவிட்டது. நண்பர்களின் துரோகத்தை, தனக்கு எதிரான அவர்களின் செயல்களை சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு தளிரின் ஃபோட்டோ சரத்தின் உள்ளாடையில் இருந்ததை சொல்லும் போதே குமட்டிக்கொண்டு வர அவசரமாக வெளியில் ஓடி சென்று வாந்தி எடுத்துவிட்டாள்.
திருமணமாகாத பெண் வாந்தி எடுப்பதை கண்டு அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூடிவிட்டனர்.
அதிலும் முதல் வீட்டு பெண்மணி எப்போதும் தன்னிடம் பேசிவிட்டு செல்லும் தளிர் இன்று அவசரமாக ஓடியதில் இருந்தே என்னவானதோ என்று அவள் வீட்டையே பார்த்திருந்தவர் கணவனின் வருகையில் உடனே செல்ல முடியாமல் தேங்கிவிட்டார். இப்போது ஓடி சென்றவர் “என்னாச்சு தளிர்..? மழை விடும்வரை நின்னு வராம உனக்கு என்ன அவசரம்..?” என்ற உரிமையாக கடிந்துகொண்டே தளிரின் தலையை பிடித்துக்கொள்ள “மழையில் நனைஞ்சுட்டு வந்ததுல தலை பாரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா சாரதா அதுதான்” என்றார் மீனாக்ஷியும்.
“காய்ச்சலும் இருக்க மாதிரி தெரியுது ம்மா எதுக்கும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிட்டு வாங்க” என்றவரையும் அவர் பின்னே வந்த மற்றவர்களையும் அனுப்பிவிட்டு வந்தமர்ந்த மீனாக்ஷியின் மடியில் தலைவைத்த தளிர் அவரை நடுக்கத்தோடு இறுக்கிக்கொள்ள “நான் ஒரு பாவி! எல்லாம் என்னால தான் சித்தி” என்று இத்தனை நேரம் விசும்பி கொண்டிருந்த சீதா மனதின் பாரம் தாளாது கதறிட அதை கண்ட தளிரின் விழிகளும் வேகமாக கண்ணீர் சொரிந்தது.
“பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு இராத்திரியில அதையும் பேசாதன்னு சொல்லுவாங்க ஆனா நீயே அழுது ஊரை கூட்டிடுவ போல தயவுசெய்து கொஞ்சம் அமைதியா இரு சீதா..” என்று அதட்டல் போட்ட மீனாக்ஷி தான் தளிர் அளித்த அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டு சுதாரித்தவர்.
“அத்தை நிஜமா கோவிலுக்கு போனது வரைதான் எனக்கு ஞாபகம் இருக்கு அப்புறம் கண்முழுச்சு பார்க்கிறப்போ என் கழுத்துல தாலியை பார்த்து எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுத்துடுச்சு, என்ன செய்யறதுன்னே தெரியலை.. காரை நிறுத்த சொல்லி கேட்கவும் ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல கொண்டு போய் நிறுத்தி அந்த சரத் பெட்ஷீட்…” என்றவளுக்கு மீண்டும் இன்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் எழவும் அவளுக்கு பேச்சு தடைபட்டு கண்ணீர் உடைப்பெடுத்தது.
“சத்தியமா அவனை நான் லவ் பண்ணல, அவன் என்னை ஆறு வருஷமா லவ் பண்ணியிருக்கானாம் ஆனா அது எனக்கு தெரியாது அத்தை, தெரிஞ்சிருந்தா நான் அவனோட பழகி இருக்கவே மாட்டேன்.. அஜய் லேகா இறங்கினப்போ கூட அவங்க லவ்வர்ஸ்ங்கிறதால எனக்கு பெருசா சந்தேகம் வரலை.. என்னோட ஃப்ரெண்ட்னு நம்பி தான் நான் ஜூஸ் குடிச்சேன் ஆனா அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு சத்தியமா தெரியாதுத்தை… தீனா அசோக்கூட எதுவுமே சொல்லாம சரத்தோட சேர்ந்துட்டு என்னை பற்றி யோசிக்காம இப்படி..” என்று விம்மியவளின் சூடான கண்ணீரே மீனாக்ஷியின் மடி நனைத்தது.
“எனக்கு அறிவே இல்லத்தை..! என்கூட படிக்கிற மத்த பசங்க எங்க அப்பாவே ஆம்பளை பசங்களோட பிரெண்ட்ஸா இருக்ககூடாது தேவைக்கு அதிகமா அவங்ககிட்ட பேச்சு வச்சுக்க கூடாது, அவங்களோட தனியா போககூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா உங்க அம்மா எப்படி இதுக்கெல்லாம் அலோவ் பண்றாங்கன்னு கேட்கிறப்போ எனக்கு எங்கம்மாவை நினைச்சு கர்வமா இருக்கும்.. ஆனா நான் ஒரு முட்டாள் அஜய் லேகா இறங்கின பிறகும் அவங்களோட போனது தப்பு தானே..! எங்கப்பா எப்பவும் அம்மாவை சந்தோஷமா வச்சுப்பார் அவர் வெளியூர் போறப்போ அடம்பிடிச்சு அம்மாக்கு கஷ்டம் கொடுக்காம நல்லபடியா பார்த்துக்கணும்னு சொல்வாரு.. ஆனா என்னால தானே அம்மாக்கு மனக்கஷ்டம் நான் நல்ல பொண்ணு இல்ல அத்தை..” என்று வந்ததில் இருந்தே மொத்த பழியையும் தன் மீது போட்டுக்கொண்டு நெஞ்சம் விம்ம கண்ணீரில் கரையும் தம்பி மகளை எப்படி தேற்றுவது என்று புரியாமல் போனார் மீனாக்ஷி.
ரகுபதி இறந்த பின்னர் மாதத்தில் பாதி நாட்கள் இங்கிருப்பவருக்கு தம்பி மகள் இச்சிறு வயதிலேயே உடன் பயில்பவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை கண்டு அத்தனை பெருமிதம். ஆம் அவள் நட்பூக்களுடன் அவ்வப்போது புரியாத பாடங்களை மாலையில் கான்ஃபரன்ஸ் காலில் அவள் சொல்லி கொடுக்கும் அழகை காண்பவருக்கு அதில் ஆண் பெண் என்று அனைவரும் சந்தேகம் கேட்பதையும் விவாதிப்பதையும் கண்டு அவள் நட்பை கேள்வி எழுப்பவோ அதை துண்டிக்கவோ தோன்றவில்லை.
‘படிக்கும் புள்ளைங்க ஒன்னுக்கு ஒன்னு ஒத்தாசையா இருக்குங்க சீதா’ என்று சொல்லியவருக்கு இப்போது தானாவது இதை துண்டித்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எழ அவர் விழிகளிலும் இத்தனை நேரம் அடக்கப்பட்டிருந்த கண்ணீர் வேகமாக வெளியேறியது.
“சொன்னா கேளு தாயீ” என்று அவள் கண்ணீரை துடைத்த போதும் தன்னுடைய தவறான நட்பே தன்னை இந்நிலையில் கொண்டு நிறுத்திவிட்டது என்ற குற்றஉணர்வே தளிரின் கண்ணீரை குறைக்காது போக மீண்டும் நடந்ததை சொல்லி அழுது கொண்டிருந்தாள்.
சரத் உடலளவில் அவளுக்கு காயம் ஏற்படுத்தவில்லையே தவிர மனதளவில் அவளை வெகுவாக காயப்படுத்தி இருந்தான் ஆம் தளிருக்கு நேர்ந்தது பிசிக்கல் அபியூஸ் அல்ல, எமோஷனல் அபியூஸ் எனப்படும் மனரீதியான உணர்வு ரீதியான துன்புறுத்தல். நண்பர்களின் துரோகத்திலேயே அதிர்ந்திருந்தவளை சரத்தின் கீழ்த்தரமான வேலைகள் மொத்தமாக உடைய செய்திருந்தது.
********************
“ம்மா அக்காக்கு என்னம்மா ஆச்சு ஏன் இப்படி இருக்காங்க..? நீங்களும் ஏன் எதுவும் சொல்லாம அழுதுட்டே இருக்கீங்க” என்று பள்ளியில் இருந்து திரும்பிய தென்றல் சிவந்த விழிகளும் வீங்கிய முகமுமாக தளிர் இருந்த கோலமும் அதற்கு நிகராக கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த தாயையும் கண்டு மிகவும் பயந்து போய் கேட்டிருந்தாள்.
ஆனால் இளைய மகளை பார்த்த சீதாவிற்கு எதையும் பேசும் சக்தி இல்லாது போக அவளை கட்டிக்கொண்டு மெளனமாக கண்ணீர் வடித்தார்.. “என்ன பண்ற சீதா..?” என்று அதட்டல் போட்ட மீனாக்ஷி தென்றலை தன்புறம் இழுத்து, “ஒண்ணுமில்ல கண்ணு அக்காக்கு வயிறு வலி அதான் இப்படி இருக்கா நீ நைட் க்ளாஸ் போகணுமே சீக்கிரம் போய் முகம் கழுவிட்டு வா நான் காஃபி போடுறேன் குடிச்சுட்டு கிளம்புவ” என்று பத்தாம் வகுப்பில் இருக்கும் தென்றலை பள்ளிக்கு கிளப்பிவிடுவதற்காக எழுந்து கொண்டார் மீனாக்ஷி.
“அக்காக்கு வயிறுவலிக்குது அதனால அழறாங்க ஆனா அம்மா ஏன் த்தை அழறாங்க..” என்ற தென்றலுக்கு தாய் தமக்கையின் நிலையை கண்டு தன்போக்கில் கண்களில் இருந்து நீர் இறங்கி கொண்டிருந்தது.
“ப்ச் உன் அக்கா படுற அவஸ்த்தையை பார்த்து என்னமோ ஏதோன்னு அவ பயந்துட்டா எங்க உனக்கும் இந்த மாதிரி வலி வந்துடுமோன்னு உன்னை பார்த்ததும் அவ அழுகை அதிகமாகிடுச்சு.., அதுதான் வேறொண்ணுமில்ல நீ சீக்கிரம் போ கண்ணு” என்று சொல்லவும் இரவு வகுப்பிற்காக தயாராகிய தென்றல் அவர் கொடுத்த காஃபியை குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு கிளம்பி சென்றாள்.
“என்ன பேசுற சீதா..? பொட்டபுள்ள விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனா நாளைக்கு அவ வாழ்க்கை என்னாகும்னு யோசிக்க மாட்டியா..? டிவி பேப்பர்ல எல்லாம் நம்ம புள்ள பேர் அடிபடும்.. அந்த பையன் வசதியானவன்னு சொல்றீங்க இத்தனை நாள் கூட இருந்த பசங்களையே விலைக்கு வாங்கி இவ்ளோ தூரம் வந்திருக்கவன் போலீஸ்காரங்களை மட்டும் விட்டு வைப்பானா..? நாலு ஆம்பளை பசங்களோடு ஏன் போனான்னு நம்ம பிள்ளையை தான் முதல் கேள்வி கேட்பானுங்க அதோட நிறுத்தாம கண்ட நேரத்துல விசாரணைன்னு இங்க வந்து நிற்பானுங்க, இஷ்டத்துக்கு கேள்வி கேட்பானுங்க அதை பார்க்கிற அக்கம் பக்கத்தாருக்கும் ஊருக்கும் களங்கமில்லாத நம்ம புள்ள மனசு தெரியாது நாளைக்கு அவங்க சொல்றது தான் உண்மைன்னு நம்புவாங்க தயவுசெய்து அவசரபடாத கொஞ்சம் நிதானமா யோசி…”
“அதுக்காக அவனை சும்மா விட சொல்றீங்களா சித்தி..?” என்று அழுகையோடு கேட்டவர், “கூட படிக்கிறவங்க சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்கன்னு நம்பிதானே அனுப்புனேன் எப்படி இந்த காரியத்தை செய்ய முடிஞ்சது..? எப்படி இருந்த என் பொண்ணை இப்போ இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்காங்க இத்தனைக்கும் அவங்க என் கையாள சாப்பிட்டவங்க.. அப்படி இருக்கப்போ உண்ட வீட்டுக்கே எப்படி இரண்டகம் செய்ய முடிஞ்சது..? இல்ல சித்தி என்னால முடியல தப்பே செய்யாத என் பொண்ணுக்கு எதுக்கு இந்த தண்டனை..? அவளுக்கு செய்த அநீதிக்கு நியாயம் கிடைச்சாகணும் தயவுசெய்து என்னை போகவிடுங்க” என்றார் சீதா ஆக்ரோஷமாக.
“அக்கம் பக்கம் வீடு இருக்கு ஏற்கனவே ஆளுங்க வந்து போயிட்டாங்க கொஞ்சம் நிதானமா பேசு சீதா. உன் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்னு சொல்லி அவ வாழ்க்கையை நீயே அழிச்சுடாத..”
“என்ன சித்தி பேசறீங்க..? என் பிள்ளையை நான் ஒழுக்கமா வளர்த்திருக்கேன் அந்த கழிசடையை ஒழுங்கா வளர்க்காதவங்க என் பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணினதுக்கு எனக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்று தளிரை தன்னோடு இழுத்தார்.
“என்னது கல்யாணமா..? ஏன்டி புத்திகெட்டு போச்சா உனக்கு..? பொம்பளை தானே தாலியை கட்டிட்டா பின்னாடியே வந்துடுவான்னு இளக்காரம் அதான் அந்த பேடிப்பய காதலை சொல்ல தைரியம் இல்லாம என் புள்ளையோட கழுத்துல ஏமாத்தி தாலி கட்டியிருக்கான் அதுக்கு பேர் கல்யாணமா..? இப்போ அவனை தண்டிக்கிறதை விட நம்ம பிள்ளையை காப்பாத்துறது தான் முக்கியம்… அன்னைக்கு அந்த நாய் செய்த தப்புக்காக கங்கா வாழ்க்கையை ஊர்கூட்டி அவ அம்மாவே அழிச்ச மாதிரி என் புள்ளைக்கு நடந்த கொடுமையை கல்யாணம்னு சொல்லி அவ வாழ்க்கையை நீயே அழிச்சிடாத, விடுடி அவ கையை” என்று ஆவேசமாக சீதாவின் கையை உதறி தளிரை தன்னோடு அணைத்து கொண்டவர்,
“என்ன நியாயம் கேட்க போற..? இதோபார் அவளுக்கு நடந்ததுக்கு பேர் கல்யாணமே கிடையாது நீ அவன் வீட்டுக்கு போய் நியாயம் கேட்கிறன்னு இன்னும் பிள்ளையை கஷ்டபடுத்தாத சீதா.. யார் செஞ்ச புண்ணியமோ தளிரு நல்ல படியா வீடு வந்து சேர்ந்தாச்சு, அவசரப்பட்டு தப்பு பண்ணாத சீதா” என்று மீனாக்ஷி சீதாவை எச்சரித்த அதேவேளை,
“அவன் அப்படி செய்வான்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை ம்மா தெரிஞ்சிருந்தா நான் அவங்களோட போயிருக்க மாட்டேன்.. இத்தனை வருஷமா ரொம்ப நல்ல ஃப்ரெண்டா தான் இருந்தான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவான் எனக்கு சந்தியா, அஜய், லேகா, எப்படியோ அப்படிதான் சரத்தும்.. ஆ.. ஆனா என்கிட்டே எதுவுமே கேட்காம இப்படி ஒரு துரோகம் நான் எதிர்பார்க்கலை… ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி நான் அவங்களோட பழகியிருக்க கூடாதோ..? எல்லாம் என்னால தான்..! என்னோட தப்பு தான் நீங்க காரணமில்ல ம்மா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என்று தளிர் சீதாவின் கால்களை இறுக பற்றிக்கொள்ளவும் கண்ணீரோடு அத்தனை நேரம் தன் வளர்ப்பு தான் தவறு..! தன்னாலேயே தன் மகள் இந்நிலைக்கு ஆளாகி போயிருக்கிறாள் என்று குற்ற உணர்வில் பேசிய சீதாவிற்கு மகளின் நிலை தாளமுடியவில்லை.
“அம்மாடி தளிரு” என்று சீதாவிற்கு முன்பாகவே அவளை தூக்கி நிறுத்திய மீனாட்சி “நீ என்ன தப்பு பண்ணின தாயீ..? ஒருத்தனை நம்பி போற புள்ளையோட மானத்தை காப்பாத்த வேண்டியது ஒரு ஆம்பளையோட கடமை அதை செய்யாம நம்பி வந்த புள்ளைக்கு துரோகம் பண்ணின அவன் ஆம்பளையே கிடையாது அவன் கட்டினதுக்கு பேர் தாலியும் கிடையாது… இங்க அவன்தான் தப்பு நீயில்ல..” என்றவர் அவள் உடல் சூடு அதிகரித்திருப்பதை கண்டு அருகே இருந்த மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசிபோட்டு மாத்திரை வாங்கி கொண்டு வந்தார்.
“போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத சீதா..” என்று மீனாக்ஷி சொல்லி சொல்ல ஆற்றாமையில் இருந்த சீதாவை மகளின் நிலை வெகுவாக அசைத்துவிட்டிருந்தது. இப்போது தளிர் மட்டுமே அவருக்கு பிரதானமாகி போக மாத்திரை எடுப்பதற்காகவாவது அவள் வயிற்றுக்கு கொடுக்க வேண்டுமே என்று சீதா இட்லி செய்து மகளுக்கு ஊட்ட ஒரு கவளம் கூட இறங்க மறுத்தது தளிருக்கு. “கொஞ்சம் சாப்பிடு அம்மூ அப்போதான் மாத்திரை போட முடியும்” என்று சீதா கண்ணீரை துடைத்து கொண்டு சொல்ல அவரை கட்டிக்கொண்ட தளிரின் நெஞ்சம் அச்சத்தில் பலமடங்கு வேகமாக துடித்து கொண்டிருந்தது.
கடினப்பட்டு அவர் இரண்டு வாய் ஊட்டி இருப்பார் ஆனால் தளிரால் அதற்கு மேல் முடியாமல் போக வேறு வழியின்றி காய்ச்சல் குறைய மாத்திரையை கொடுத்து அவளை படுக்க வைத்த வேலை பள்ளியில் இருந்து வந்த தென்றல் தமக்கையை பார்க்க அவள் மீனாக்ஷியின் மடியில் தலை வைத்து சுருண்டு படுத்திருந்தாள்.
“ம்மா அக்காக்கு வலி எப்படி இருக்கு..?”
“மழையில நனைஞ்சதால அவளுக்கு காய்ச்சல் தென்றல் இப்பதான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்தோம் நீ சாப்பிடு” என்றவர் அவளுக்கு உணவு கொடுக்க தளிர் அருகே அமர்ந்துகொண்டு உணவை முடித்தவள் கேட்ட கேள்விகளுக்கு ஒருவாறு பதில் சொல்லி சமாளித்த மீனாக்ஷி அவளை உறங்க வைத்தார்.
தென்றல் பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டே கண்மூடி படுத்திருந்த தளிருக்கு தான் நல்ல மகள் மட்டுமல்ல நல்ல அக்காவும் இல்லை என்ற எண்ணம் மேலோங்க அவள் குற்றஉணர்வு அதிகரித்தது. இரவு முழுவதும் உறங்க முடியாது தவித்த இளந்தளிர் அடிக்கடி அலறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள்.
தென்றல் விரைவாக உறங்கிவிட ஹாலில் தளிரோடு படுத்திருந்த சீதாவும் மீனாக்ஷியும் அவள் படுபாட்டை கண்டு கண்ணீரோடு அவளை அணைத்து கொண்டு ஆளுக்கு ஒருபுறமாக படுத்த போதும் தளிரால் உறங்க முடியவில்லை… மீண்டும் மீண்டும் இன்றைய நினைவுகள் படையெடுக்க சரத் அவள் புகைப்படத்தை உள்ளாடையில் அவன் உடலில் பச்சை குத்தியிருந்தது எல்லாம் மனகண்ணில் விரிய மீண்டுமொருமுறை வாந்தி எடுத்து இருந்தாள்.
“போதும் இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அழுதுட்டு இருந்தா தளிரால எப்படி இதுல இருந்து வெளியே வரமுடியும்..? பிள்ளை ஒரு ராத்திரிக்கே தாங்கல இதுக்கு மேல இவ இங்க இருக்க வேண்டாம் சீதா.. இவளை பார்த்து தென்றலும் பயந்துடுவா நான் என்னோட வேலூருக்கு கூட்டிட்டு போறேன் நல்லா ஆனதுக்கு பிறகு கூட்டிட்டு வரேன்” என்ற மீனாக்ஷி அதிகாலையே முதல் பஸ்ஸில் வேலூருக்கு கிளம்பிவிட அவர்களை சத்தமே இல்லாமல் பின்தொடர்ந்திருந்தான் சரத்.
ஆனால் வேலூருக்கு சென்ற மூன்றாம் நாளே தற்கொலைக்கு முயன்ற தளிரை சரியான நேரத்தில் ‘அடிப்பாவி மகளே என்ன காரியம் செய்ய பார்த்த..?’ என்று ஈரக்குலை நடுங்க விதிர்விதிர்த்து போய் தடுத்து பிடித்திருந்தார் மீனாக்ஷி.