“ஆராயாமல் நாம தேர்ந்தெடுக்க கூடிய தவறான நட்பு நம்மோட மரணம் வரைக்கும் தொடரும் உதய், அது அத்தனை எளிதா நம்மை விட்டு போயிடாது உங்களுக்கு புரியுதா..?” என்று ‘என்னை புரிந்து கொள்ளேன்’ என்பது போல அவனை பார்த்தாள்.
“இதென்ன கிளாஸ் ரூமா..? எதுக்குடி இந்த திருக்குறளை சொல்லி விளக்கம் கொடுத்துட்டு இருக்க..? நான் உன்னை கேட்டேனா..?” என்றவனுக்கு அவள்புற விளக்கம் அனைத்துமே அனாவசியம் தான்.. ‘அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..?’ என்பது மட்டுமே பிரதானமாகி போயிருந்தது.
“இங்க பாருங்க மிஸ்டர் உதய்” என்று தளிர் “மிஸ்டர்” என்பதன் மூலமாக அவனை தள்ளி வைக்க முயன்ற மறுநொடியே,
“சொல்லுங்க மிஸர்ஸ் உதய்” என்று தலைசாய்த்து சொல்லவும் விழிகள் விரிய உதய்யை பார்த்தவளுக்கு நெஞ்சம் படபடத்து போக மெளனமாக அமர்ந்திருந்தாள்.
“ஹலோ மேடம் ஏதோ கேட்க வந்தீங்க..?” என்று உதய் அவள்முன் சொடக்கிடவும் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள், “ஸீ மிஸ்டர் உதய் இனி..” என்று எங்கோ பார்த்தவாறு ஆரம்பிக்கவுமே ..,
“லுக் அட் மீ மிஸர்ஸ் உதய்” என்று நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவன், “இதோபார் தாலியோ பேப்பரோ எனக்கு இரண்டுமே ஒன்னு தான்..! தாலியை கழட்டி வீசினவ பேப்பரை கிழிச்சு போடுவன்னு பார்த்தா அதைவிட்டுட்டு எதுக்குடி எனக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்க…?”
“….”
“ஓகே நீ சொன்ன குறள் எனக்கு புரிஞ்சது ஆனா உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா..?”
“என்ன கதை..?”
“இது மகாபாரத கதை தான்.. குருஷேத்திர போர் நடந்துட்டு இருக்கப்போ பீஷ்மர் அம்பு படுக்கையில இருந்தது உனக்கு தெரிஞ்சிருக்கும்.., அப்போ அவர்கிட்ட வந்த அம்புகளின் தேவதை பீஷ்மா எனக்கு உன்னை, உன் அம்பை, உன் பகைவரை மட்டுமல்ல உன் நண்பர்களையும் தெரியும்னு சொல்றாங்க..” அதை கேட்ட பீஷ்மருக்கு அம்புகளின் தேவதைக்கும் நண்பர்களுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும் என்று கேள்வி எழவும்..,
“அம்புகளின் தேவதையான உனக்கு என் நண்பர்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லயே, யார் நீ..?” என்றார்.
அதற்கு அம்புகளின் தேவதை “சந்தேகம் வேண்டாம் நான் அம்புகளின் தேவதை தான்..! ஆனால் நண்பர்களுக்கு என்று ஒரு அம்பு எடுத்து வைக்கபடாத அம்பறாத்தூணி எங்க இருக்குன்னு கேட்டாங்க..?”
“அதாவது போர்களத்தில் பகைவருக்கென்று ஆயிரம் அம்பு இருந்தாலும் நண்பனுக்கு என்றும் ஒரு அம்பு எடுத்து வைக்கப்படுமாம். நண்பன் எப்போது வேண்டுமானாலும் துரோகியா மாறலாம் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்னு இந்த கதையை நட்பதிகாரம் எடுக்கறப்போ என்னோட தமிழ் வாத்தியார் சொன்னார்…” என்று உதய் பேச்சை நிறுத்தினாலும் ‘உன்னுடைய அம்பை நீ எப்போது உபயோகபடுத்த போகிறாய்’ என்ற கேள்வி அவன் விழிகளில் தேங்கி நின்றது.
“சொல்லு தளிர்” என்று அவள் மௌனத்தில் பொறுமை இழந்தவனாக உதய் கேட்கவும் நெடிய மூச்சை எடுத்துவிட்ட தளிர்,
“உங்களுக்கு பதில் சொல்லும் முன்னாடி நான் ஒரு கதை சொல்றேன்… இது எப்போவோ யாரோ சொல்லி கேட்ட கதை தான் ஆனா நான் அடிக்கடி என்னோட ஸ்டுடென்ட்ஸ்க்கு சொல்றது உண்டு..” எனவும் ‘சொல்’ என்று தலையசைத்தான்..
“ஒருநாள் சின்ன பாம்பு ஒன்னு வழிதவறி கிச்சனுக்குள்ள போயிடுச்சு அப்போ வழியில குறுக்க இருந்த அரிவாள்மனையில் அதோட உடம்பு பட்டு லேசா கிழிஞ்சிடுச்சு… யாருடா அது நம்ம மேல கை வச்சதுன்னு கோபத்தோடு பார்த்த பாம்புக்கு அரிவாள் மேல கோபம்னா கோபம் அப்படியொரு கோபம்..! உடனே உன்னை என்ன செய்யறேன் பார் என்று வேகமாக அதை கொத்திடுச்சு… அதுல அதனோட வாய் கிழிஞ்சு போச்சு..”
“என்னோட வாயையே கிழிக்கிறியா இப்போ உன்னை என்ன செய்யறேன் பார்னு சொல்லி அதை கட்டி புடிச்சு சண்டை போட்டதுல பாம்பு துண்டு துண்டா போயிடுச்சு.. நாம யாரை எதிர்த்து போராடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…. எதிர்பதற்கு தகுதியே இல்லாதவர்களை எதிர்க்ககூடாது”
“தாலியை கழட்டி போட்டு வந்தப்போ நான் பார்த்த சரத் வேற இப்போ பார்க்கிற சரத் வேற, நீங்க நினைக்கிற மாதிரி நான் பொங்கி எழுந்து புரட்சி செய்ய முடியாது… அதேநேரம் என்னை எப்படி பாதுகாக்கணும்னு எனக்கு தெரியும்..”
“ஏன்டி அவன் இதுவரை செய்தது போதாம குழந்தை அபார்ஷன்னு இன்னும் உன் கேரக்டரை அஸாசினேட் பண்ணுவேன்னு சொல்லியிருக்கான் நீ என்ன பேசிட்டு இருக்க..?”
“எனக்கும் கோபம் இருக்கு ஆனா அதைவிட எனக்கு நிம்மதி முக்கியம் உதய்..! எத்தனையோ speculations போயிட்டு இருக்கு ஆனா நான் தப்பு செய்யலைன்னு எனக்கு தெரியும் பதில் சொல்ல கடமைபட்டவங்களுக்கு கல்யாண மண்டபத்துலயே என்னோட பதிலை சொல்லிட்டேன். என் அம்மா தங்கச்சிக்கு என்னை பற்றி தெரியும் மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமோ நிருபிக்க வேண்டிய கட்டாயமோ எனக்கு கிடையாது.. இப்போ என்னை பேசறவங்க அடுத்த sensational news கிடைச்சதும் இதை மறந்துட்டு அதை பேச போயிடுவாங்க… இனி என் வாழ்க்கை எனக்கானது அதுல யாருக்குமே இடமில்லை…” என்று அவள் முடிக்கும் முன்னமே,
“அப்போ நான் யாருடி..?” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
“அதேதான் நானும் கேட்கிறேன் எனக்கு யார் நீங்க..?”
“தளிர்” என்று எழுந்துகொண்டவனின் கோபத்தை நன்கு உணர்ந்த போதும் சளைக்காமல் தளிர் அதேகேள்வியை திரும்ப கேட்க,
“போதும் நிறுத்துடி..!” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராகவன் அங்கே வர அவர்களின் பேச்சு தடைபட்டு போனது.
“ஏன்டா தப்பான நேரத்துல வந்துட்டேனா..? இஸ் எவ்ரிதிங் ஓகே..?”
ராகவனை கண்டதும் எழுந்து கொண்டவள், “இல்லண்ணா, நீங்க வாங்க” என்றாள் மென்னகையுடன்.
“இல்லல்ல உட்காரு மச்சான், மொத்தம் எத்தனை கேமரா..?”
“போர்டிக்கோவில் ஒன்னு ஹாலில் இரண்டு அவ்ளோதான்டா..”
“நானும் இதுதான் நினைச்சேன்! என்னதான் எதிர்வீடு, பசங்க டியூஷன் படிச்சாலும் குமார் தம்பி வைஃப் பசங்க பெட்ரூம் வரை வந்திருக்க முடியாது. ஓகே எனக்கு சைட்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு நான் பார்த்துட்டு வந்துடுறேன்… நீ தளிரை கூட்டிட்டு கிளம்பு” என்றான்.
“நான் எங்கேயும் வர மாட்டேன்”
“ஏன்..?”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இது என்னோட பிரச்சனை அதை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் நீங்க தலையிடறதால அது இன்னும்….” என்றவள் தயக்கத்தோடு நிறுத்திட,
“ஏன் நிறுத்திட்ட? சொல்லி முடி”
“please try to understand uthay… if you interfere it’ll worsen the situation and make it more ugly but i really don’t want this to happen.. i know how to secure myself so you better stay away from me” (நீங்கள் தலையிடுவதால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அதில் எனக்கு விருப்பமில்லை… அதைவிட என்னை காப்பாற்றிக்கொள்ள எனக்கு தெரியும் தயவுசெய்து என்னிடம் இருந்து தள்ளி இருங்கள்)
“மச்சான் நான் கீழ வைட் பண்ணட்டுமா..? நீங்க பேசி முடிச்சிட்டு வாங்க” என்று ராகவனுக்கு தான் அங்கு அதிகப்படியோ என்று தோன்றியது.
“இருடா..!” என்றவன் “பேசி முடிச்சிட்டனா இவனோட இவன் வீட்டுக்கு கிளம்பு. ஏற்கனவே தென்றல் அங்கதான் இருக்கா, அத்தையையும் வருவாங்க இப்போ நீ முடியாதுன்னு சொன்னா நான் உன்னை தூக்கிட்டு என் வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். வசதி எப்படி..?”
“தென்றல் எப்போ..?” என்றவள் தங்கைக்கு அழைத்து பேசிவிட்டு சீதாவிடமும் பேசி முடிக்க வேறு வழியில்லாமல் ராகவனுடன் கிளம்பினாள்.
**********************
அன்று தளிரின் ரிசெப்ஷனில் கலந்து கொண்ட சந்தியா அன்றிரவே கணவரோடு பிசினஸ் விஷயமாக ஜப்பான் சென்றிருந்தாள். அவள் ஹோட்டல் அறைக்கு சென்ற ஒரு சிலமணி நேரத்தில் அவள் நாத்தனார் மூலமாக விஷயம் கிடைக்க பெற்றவள் உடனே தளிருக்கு அழைத்து பேசியிருந்தாள்.
அதன்பின் சோஷியல் மீடியா செய்திகளில் அவளை பற்றிய அவதூறுகளை பார்த்தவளுக்கு எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாமல் போக அப்போதுதான் மீட்டிங்கிற்கு கிளம்பி கொண்டிருந்த கணவரிடம் விஷயத்தை தெரிவித்து ‘உடனே கிளம்ப வேண்டும்’ என்று சொல்லியிருந்தாள்.
ஆனால் ‘இது பல வருடங்களாக அவன் காத்திருந்த தருணம் என்பதாலும் மீண்டும் கிடைக்க எத்தனை வருடமாகுமோ…’ என்று சொன்னதில் இப்பயணத்திற்கான கணவனின் கடின உழைப்பை அறிந்திருந்தவளால் உடனே கிளம்ப முடியவில்லை.
தீனா, அசோக்கிற்கு அழைக்க அவர்கள் எண் உபயோகத்தில் இல்லாமல் போயிருந்தது. அஜய் லேகாவை அழைத்தவளுக்கு அப்போது தான் அவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்திருந்தாலும் வேலை பளு காரணமாக தேனிலவு பயணத்தை தள்ளிபோட்டு கொண்டு வந்தவர்கள் இப்போது பத்து நாட்கள் சேர்ந்தார் போல விடுமுறை எடுத்து கொண்டு வெளிநாட்டிற்கு கிளம்பியது நினைவு வந்தது.
அஜய் லேகா அங்கே அடர்ந்த காட்டுபகுதியில் கேம்பிங்கில் இருந்ததால் அவர்களை சந்தியாவால் தொடர்புகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த நாளில் எப்போது தளிரை பார்ப்போம் என்று இருப்பு கொள்ளாமல் தத்தளித்த சந்தியா தளிரை தொடர்பு கொண்டு கேட்க தளிரிடம் பதிலில்லை.
கைபேசியை வாங்கிய தென்றல் நடந்ததை சொல்ல, ‘தங்களுக்கு தெரியாமல் இத்தனை நடந்திருக்கிறதா..? ஏன் எங்களுக்கு சொல்லவில்லை.. ஒருவேளை அவனை போலவே எங்களையும் நினைத்துவிட்டாளா..?’ என்ற கோபமே முதலில் வந்தது.
‘இல்லக்கா’ என்றவள் அதன்பின் நடந்ததையும் சொல்லி முடிக்க சந்தியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
‘ஏன் தென்றல் தளிர் இப்படி இருக்கா..? எங்க மேல நம்பிக்கை இல்லையா அவனை போலவே எங்களையும் வெறுத்துட்டாளா அதுதான் ரிசெப்ஷன்ல பார்த்த போதுகூட அவ முகத்துல அத்தனை வருஷம் கழிச்சு என்னை பார்த்த சந்தோஷமே இல்லயா..?’ என்று உரிமைக்குரல் எழுப்பிய சந்தியாவை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை.
‘அது எப்படி என்கிட்டே பேசாம போயிடுவா..! நீ அவகிட்ட ஃபோனை கொடு தென்றல்’ என்றவள் தளிரின் பதிலை எதிர்பாராமல்,
‘நீ எதுக்கும் கவலைபடாம இரு தளிர் நாங்க சீக்கிரமே வந்துடுறோம்.. அவன் சொன்னது எல்லாமே பொய்னு நாங்க நிருப்பிக்கிறோம் எந்த போட்டோஸ் ஆதராமா காட்டுறானோ அது எங்க கிட்டயும் இருக்கு, நான் நம்ம ப்ரோஃபஸர் ஃபேமிலியை கண்டுபிடிக்கிறேன்’ என்று தைரியமளித்தவள் சரத் சென்றதாக சொல்லக்கூடிய அப்பார்ட்மென்டில் வசித்து வந்த அவர்களின் ப்ரோஃபஸர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதில் அவரின் குடும்பம் சொந்த ஊருக்கு சென்றுவிட்டது.
ஒருவழியாக கேம்பிங் முடிந்து அவர்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பவும் சந்தியாவின் அழைப்பு. ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவள் பேச்சை கேட்ட லேகா முகத்தில் அதிர்ச்சியை விஞ்சிய ரௌத்திரம்.
தளிர் குறித்த செய்திகளையும் சோஷியல் மீடியாவில் அவள் குறித்த விமர்சனங்களையும் பார்வையிட்ட லேகாவிற்கு இப்போதே மூன்று மனித மிருகங்களையும் வெட்டி வீழ்த்தும் ஆவேசத்தோடு கணவன் புறம் திரும்பினாள். ஆனால் விஷயம் கேள்விபட்டதுமே தாளமுடியாத குற்ற உணர்வோடு முகம் பொத்தி அமர்ந்துவிட்டான் அஜய்.
“ஏன் அஜய் உட்கார்ந்துட்ட..? எதுவும் தெரியாதவன் மாதிரி நம்மளோடவே அவளை தேடுறது அவளை ரீச் பண்ண ட்ரை பண்றதுன்னு எப்படி நடிச்சிருக்கான்.. அந்த அய்யோக்கிய ராஸ்கல்ஸ் இத்தனை வருஷமா நம்மோடவே சாட்டிங், அவுட்டிங் கெட் டூன்னு இருந்திருக்காங்க அவங்களை சும்மா விடக்கூடாது”
“இல்ல லேகா தளிரோட இந்த நிலைக்கு நான்தான் முக்கிய காரணம்” என்றவனின் குரல் அவனுக்கே கேட்கவில்லை.
“சத்தமா பேசு எனக்கு கேட்கலை”
“தளிருக்கு நடந்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம்” என்றான் கலங்கிய விழிகளோடு..
“என்ன சொல்ற அப்போ நீயும் அவனுங்களோட கூட்டா..?” என்று லேகா ஆவேசமாக அவன் சட்டையை பிடித்திருந்தாள்.
“ஐயோ இல்ல… இல்ல லேகா எனக்கு சத்தியமா அவன் தளிரை லவ் பண்ணதுல இருந்து அன்னைக்கு தாலி கட்ட போறது வரை எதுவுமே தெரியாதுடி.. தெரிஞ்சிருந்தா நான் என்னோட கையை வெட்டியிருக்க மாட்டேன்..” என்றவன் ஏன் அவ்வாறு செய்தான் என்பதையும் தயக்கத்தோடு சொல்லி முடித்தது தான் தாமதம் லேகாவின் கரம் அவன் கன்னத்தில் இடியென இறங்கி இருந்தது.
“லேகா..”
“பேசாதடா..!” என்று கட்டுக்கடங்கா ரௌத்திரத்தோடு அவனை பார்த்தவள்,
“உனக்கெல்லாம் அறிவே இருக்காதா..? எப்போ இருந்து அஜய் ஒரு பெண்ணை நாலு பேரோட அனுப்பறோமே என்கிற உறுத்தல் கூட இல்லாதளவு நீ சுயநலவாதியா மாறி போன..? உனக்கு உன்னோட காதல் முக்கியமா போச்சு என்னை சமாதானம் பண்றது பெருசா இருந்திருக்கே தவிர தளிர் தனியா போறதை பற்றி நீ கவலையே படலை. அப்போ தளிர் இடத்துல நானோ உன் சிஸ்டரோ இருந்திருந்தாலும் இப்படிதான் செய்திருப்பியா..? ச்சை உன்னை போய் நான் காதலிச்சேனேன்னு நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்குடா” என்றவளுக்கு அன்று அவனுக்காக தான் பதறி துடித்து எதையும் யோசிக்காமல் இறங்கிய சென்றது நினைவுவர தன் நெற்றியில் அறைந்துகொண்டவள்,
“உன்னை சொல்லி என்ன ஆக போகுது..? நான் ஒரு மடச்சி உன் கையில ரத்தத்தை பார்க்கவும் உன்னோட வர இருந்த தளிர்கிட்ட நான் போறோன்னு சொல்லி அவளை அந்த பாவிகளோட அனுப்பிட்டேன்… ஹாஸ்பிட்டல்ல இருந்து கோவிலுக்கு கூட்டிட்டு போகாம மால் சினிமான்னு நீ கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் கேள்வியே கேட்காம உன்னோட சேர்ந்து சுத்தின நானுமே ஒருமுறை கூட தளிரை நினைச்சு பார்க்கலையே நானும் தான்டா பாவி” என்றவளுக்கு ஏன் அன்று ஒருமுறை கூட தான் நண்பர்களுக்கு அழைத்து அவள் பத்திரத்தை உறுதி படுத்திக்கொள்ளவில்லை என்ற ஆற்றாமையில் கண்ணீர் பெருகியது.
“ஸாரி லேகா தப்பு எல்லாம் என்னோடது தான்… நம்ம ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் போல பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்துடுவாங்கன்னு நினைச்ச நான்தான் முட்டாள். தளிருக்கு நடந்த அசம்பாவிதம் எல்லாத்துக்கும் காரணம் நான் நீயில்ல..! ரொம்ப நாள் கழிச்சு என்கிட்ட நீ பேசின சந்தோஷத்துல உன்னோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எங்க அன்னைக்கு நீ எதாவது ஒருநேரம் தளிர் பற்றி யோசிச்சு கோவிலுக்கு போகணும்னு சொல்லிடுவியோனு பயந்து தான் நான் உனக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து பிடிச்ச ஹீரோ படத்துக்கு கூட்டிட்டு போய்னு உன்னை டைவர்ட் பண்ணிட்டே இருந்தேன்..” என்றபோதே அவன் குரல் கமறி போக,
‘இவ்வளவு தானா நீ..?’ என்பது போல பார்த்த மனைவியின் பார்வையை எதிர்கொள்ள முடியாதவன் தலை நிமிர்த்தவே இல்லை.
“எனக்கு சத்தியமா அவங்களோட ப்ளான் தெரியாது லேகா… உன்னை சமாதானபடுத்த ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்கவும் உடனே ஒத்துகிட்டாங்க…” என்றதில் லேகாவின் முகத்தில் இன்னும் அனல் கூடியது.
“என்னை சமாதனபடுத்த தளிரோட வாழ்க்கை பலியா..? இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்ல..? எப்படிடா அவ வாழ்க்கையை அழிச்சு உன் காதலை காப்பாற்ற முடிஞ்சது..? சொல்லு இதுக்கு பேர் தான் காதலா..? ப்ச் நானும் தளிர் மாதிரி இருந்திருக்கணும் தெரியாம தப்பு பண்ணிட்டேன், உனக்கு எப்படியோ ஆனா உன்னை போல ஒரு சுயநலவாதியை லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணின என்னை நினைச்சு எனக்கு அசிங்கமா இருக்கு..”
“லேகா ப்ளீஸ் கோபபடாத நான் எதுவும் தெரிஞ்சு செய்யலை… நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானேன்னு தளிரை பத்திரமா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா…”
“பொய்! சுத்த பொய்! மேலும் மேலும் பேசி உன்னோட தரத்தை நீயே தாழ்த்திக்காத அஜய்”
“எங்கே உன் மனசை தொட்டு சொல்லு நிஜமாவே அன்னைக்கு நீ தளிரை பற்றி யோசிச்சியா..?” என்று கேட்க அவனிடம் மௌனம். பின்னே அன்று அவன் சிந்தை முழுக்க அவர்கள் இருவர் மட்டும் தானே..!
“பதில் இல்லைல” என்று கசப்போடு பார்த்தவள்,
“அன்னைக்கு சீதா ஆன்டி அந்த ராஸ்கல்ஸ் மட்டுமில்ல நீயும் எங்களோட வர கண்டிப்பா அவங்க பெண்ணை பத்திரமா திருப்பி கூட்டிட்டு வருவன்னு நம்பிதான் அனுப்பினாங்க.. அந்த பொறுக்கிங்க ஆன்டி நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டாங்கன்னா நீ பண்ணினதுக்கு பேர் என்ன..? என்றதில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.
“ஒரு அம்மா உன்மேல வச்சிருந்த நம்பிக்கையை விட உனக்கு உன் காதல் முக்கியமா போச்சா அஜய்..?” என்று கேட்க சீதாவின் நிலையை எண்ணி பார்த்தவனின் மனம் கசங்கி போக விழிகளில் நீர் கசிந்தது.
“இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் அன்னைக்கு உன் காதலுக்காக உன் நட்பையும் ஃப்ரெண்டையும் பலி கொடுத்தவன் நாளைக்கு உன்னோட சுயநலத்துக்காக என்னை பலி கொடுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்..?” என்று உஷ்ணத்தோடு கேட்டவளின் கேள்விகள் அவனை கூறுபோட்டு கொண்டிருந்தது.
“ப்ளீஸ் லேகா போதும் அப்போ இதையெல்லாம் யோசிக்கிற பக்குவம் எனக்கு இல்ல நீ சொன்னமாதிரி கொஞ்சம் சுயநலமா தான் செயல்பட்டிருக்கேன் ஆனா என்னை முட்டாளாக்கி தளிரை இந்த நிலையில் கொண்டு நிறுத்தின அய்யோக்கியனை இனி நான் சும்மா விடபோறதில்லை லேகா ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ..!” என்று அவள் கையை பிடிக்குமுன் வேகமாக தள்ளி நின்றவள்,
“இனி ஒருநிமிஷம் இங்க இருக்க முடியாது எந்த ஃப்ளைட் அவைளபிலா இருக்கு பாரு எனக்கு உடனே கிளம்பனும்” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அலமாரியில் இருந்து பெட்டியை எடுத்து தன் உடைகளை மட்டும் அடுக்கி கொண்டிருந்தாள்.
வலியோடு அவளை பார்த்திருந்த அஜய்க்கு தேனிலவிற்கு கிளம்பும் போது ஆசையாசையாக இருவர் உடைகளையும் சேர்த்து அடுக்கியவள் இப்போது தன் உடைகளை கூட சீண்டாமல் இருப்பதிலேயே தன் நிலை புரிந்துபோக தன் நண்பனுக்கு அழைத்து டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து தன் உடைகளை அடுக்க தொடங்கினான்.
அடுத்த மூன்றாம் நாள் தான் அவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட அந்த மூன்று நாட்களுமே அஜய்க்கு நரகமாய் கழிந்தது.
ஒருபுறம் சரத், தீனா, அசோக் என்று யாரையும் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை, மறுபுறம் தன்னை மன்னிக்க தயாராக இல்லாத மனைவியின் யாரோ போன்ற பார்வையையும் ஒரே அறையில் இருந்த போதும் அவனோடு படுக்கையை பங்கிட முடியாது கீழே போர்வை விரித்து படுத்தவளின் கலங்கிய தோற்றமும் அவனை வெகுவாக அடித்து வீழ்த்தியிருந்தது.
லேகா தளிருக்கு அழைக்க அவளோ புது எண் எதையுமே எடுக்கவில்லை. உடனே சந்தியாவை தொடர்பு கொண்டவள் அவள் தென்றலின் எண்ணை கொடுக்கவும் அவளிடம் பேசி முடித்தவளிடம் அசைவில்லை…. தோழியின் இன்றைய நிலையை அறிந்த பின்னர் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடிட கைபேசியையே பார்த்துகொண்டிருந்தவளின் நெஞ்சை முட்டும் பாரம் அவளை இயல்பாக இயங்கவிடவில்லை.
“லேகா நான் சரத்கிட்ட பேசி மன்னிப்பு கேட்க வைத்து நின்று போன தளிர் கல்யாணத்தை நடத்தறேன், நீ உன்னை கஷ்டபடுத்திக்காத” என்றபோதும் அவளிடம் எடுபடவில்லை அஜய்யின் நிழல்கூட தன்மீது விழக்கூடாது என்பதில் லேகா கொண்டிருந்த உறுதியில் அவன் தகர்ந்து போனான்.
அதிலும் ஃப்ளைட்டில் இருவருக்கும் வெவ்வேறு இருப்பிடம் கட்டாயம் என்று சொல்லிவிட்ட மனைவி மனதளவில் தன்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதை உணர்த்தியத்தில் துரோகிகள் மீது அதிகரித்த பன்மடங்கு ஆத்திரத்தோடு அஜய் இந்தியாவிற்கு பயணபட்டான்.