‘ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை வரும் அந்தமான் எக்ஸ்பிரஸ், இன்னும் சில நிமிடங்களில் நடைமேடை ஐந்தை வந்தடையும்.’ என ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர, நீண்ட நாட்கள் கழித்து தன் மகனை காணும் ஆவலில் தண்டவாளத்தையே நோக்கிக் கொண்டிருந்தார் ஈஸ்வர்.
“ஏங்க… இன்னும் செத்த நேரத்துல ட்ரெயின் வந்துடும். நீங்க அதுக்குள்ள உள்ள குதிச்சுடாதீங்க.” என உஷாராணி கேலி பேச, மனைவியை முறைத்தார் ஈஸ்வர்.
இரயில் நடைமேடையை அடைய,
தோள்பட்டையில் ஒரு பையை மாட்டிக் கொண்டு, மற்றொரு கையால் தள்ளும் பை ஒன்றை இழுத்துக் கொண்டு புன்னகையுடன் யுவராஜ் வர, அவர் அருகே ஈஸ்வரும் உஷாராணியும் சென்றனர்.
“குடுப்பா… இந்த பையை அப்பா தூக்குறேன்.” ஈஸ்வர் ஒரு பையை வாங்கிக் கொள்ள, உஷாராணி மற்ற பையை வாங்கிக் கொண்டார்.
“என்னய்யா… போன வருஷம் பார்த்ததை விட இப்ப ரொம்ப இளைச்சுட்டியே ராசா!” வருத்தம் தொனித்த குரலில் உஷா வினவினார்.
“ம்மா, இந்த வோர்ல்ட் லெவல் கேள்வியை விட மாட்டீங்களா? நான் எவ்ளோ வெயிட் போட்டு வந்தாலும், மெலிஞ்சுட்டேன்னு கேக்குற ஒரே ஜீவன் நீங்கதான் ம்மா. என் மேல அம்புட்டு பாசமா?” தன் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே யுவராஜ் வினவ, உஷாராணிக்கு வெட்கம் வந்துவிட்டது அவனது கேள்வியில்.
“ப்பா… அந்த ரகசியத்தை நீங்க இன்னும் கத்துக்கலையா? சரியான தத்திப்பா நீங்க.” மகன் வாரி விட்டதில், அவனை முறைத்தார் ஈஸ்வர்.
அவர்கள் பேசிக்கொண்டே மகிழுந்தில் வீட்டை அடைந்தனர்.
அந்நேரம் வெளியே வந்த பக்கத்து வீட்டு கௌசல்யா, “அடடே யுவா! லீவா?” என வினவினாள்.
“ஆமா க்கா… அஷ் யூஷூவல் லீவ் தான்.” என யுவா பதிலளிக்க, மூவரும் உள்ளே நுழைந்தனர்.
யுவராஜ் சென்று குளித்து வர, உஷாராணி அதற்குள்ளே உணவு மேஜையில் ஒரு முழு விருந்திற்கு தேவையான உணவுகளை கடை பரப்பி இருந்தார்.
அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவன் நாற்காலியில் அமர, ஈஸ்வரும் அவனுடன் அமர்ந்து உண்டார். உணவை முடித்தவன், ஓய்வெடுக்க அறைக்குள் நுழைந்தான்.
“ஏங்க, நீங்கதான் அவன்கிட்ட பேசணும். எப்படியாவது இந்த தடவையாவது அவனுக்கு கல்யாணத்தை முடிச்சுடணும்.” தீவிர முகபாவத்துடன் உஷாராணி கூற,
“உஷா, நம்ம உறுதியா இருந்து என்ன பண்ண? அவன் அதுக்கு சம்மதிக்கணுமே.” ஈஸ்வர் பதிலளித்தார்.
“அதுக்கு தானே அப்பான்னு நீங்க ஒருத்தர் இருக்கீங்க? அவனை சம்மதிக்க வைக்கிறது உங்க வேலை. நல்ல பொண்ணா பார்க்குறது என்னோட வேலை.” உஷா கழன்று கொள்ள பார்த்தார்.
“ஏய் உஷா, இதெல்லாம் அநியாயம். அவன்கிட்ட பேசுறது சாதாரண விஷயம் இல்லை. மலையை புரட்டுறதுக்கு சமம் டி.” ஈஸ்வர் கூறுவதை, அவர் காதில் வாங்கவே இல்லை.
‘இன்னைக்கு தானே வந்து இருக்கான். ஒரு ரெண்டு நாள் பொறுத்து பேசுவோம்.’ என எண்ணிக் கொண்டார் ஈஸ்வர்.
தூங்கி எழுந்தவன் நண்பர்களைக் காண வேண்டும் என்று வெளியே சென்று விட்டான். அடுத்த நாளும் அவன் வெளியே சென்றுவிட, உஷாராணி ஈஸ்வரை போட்டு படுத்தி எடுத்து விட்டார்.
“அவன் ஊருக்கு போகுற வரைக்கும் நீங்க, அவன்கிட்ட பேசமாட்டீங்க. இந்த தடவையும் அவனுக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே உங்களுக்கு இல்லை. கால காலத்துல பேரன் பேத்தி எடுக்கணும்னு உங்களுக்கு தான் ஆசை இல்லைன்னா, எனக்கும் இருக்காதுன்னு நினைச்சீங்களா?” என உஷா, ஈஸ்வரை வசைபாடினார்.
“உஷா, நான் என்ன வேணும்னேவா பேசாம இருக்கேன். உன்ற மகன், எங்க வீட்ல இருக்கான்? வந்ததுல இருந்து ரெண்டு நாளுமே ஃப்ரண்ட்ஸை பார்க்க போறேன்னு ஓடிட்டான். அதான் நான் பேசலை.” என அவர் விளக்க முற்பட்டார்.
“ஓ… அவன் என்ற மகன் மட்டும் தானா? அப்ப உங்களுக்கு மகன் இல்லையா?” என ஈஸ்வர் சொன்ன வார்த்தையை உஷா பிடித்துக் கொள்ள, தன் மனைவியை சமாளிக்க முடியாமல் அவர் திணறினார். சரியாக அதே நேரம் உள்ளே நுழைந்தான் யுவராஜ்.
அவர்கள் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன், உஷாராணி அருகில் சென்று அமர்ந்து கொண்டு, “ம்மா… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று வினவ, அவர் ஈஸ்வர் முகத்தையே பார்த்தார். யுவராஜ் தாயின் பார்வையை உணர்ந்து ஈஸ்வரைப் பார்க்க, அவரது பார்வை உஷாராணியை நோக்கி இருந்தது.
“ச்சு… ரெண்டு பேரும் கல்யாண வயசுல புள்ளையை வச்சுட்டு, பார்த்தே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?” என அவன் சூழ்நிலையை இலகுவாக்க வினவ, உஷாராணி ஈஸ்வரை முறைத்து விட்டு அறைக்குள்ளே ஓடிவிட்டார்.
“ஏன் ப்பா… ஏன்? என்னை பார்த்தா உனக்கு ரொமான்ஸ் பண்ற மாதிரியா இருக்கு? உங்கம்மா என்னை போட்டு அந்த பாடுபடுத்துறா.” என அவர் அலுத்துக்கொள்ள,
“சரி, ஜோக்ஸ் அபார்ட். என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் அப்டி வச்சு இருந்தீங்க முஞ்சியை?” என அவன் வினவினான்.
“அது வந்து… நம்ம கௌசல்யா தம்பி கதிர்வேலுக்கு இருபத்தியெட்டு வயசுல கல்யாணம் பண்ணலாம்னு அவங்க வீட்ல முடிவு பண்ணாங்க. அதே மாதிரி அவனுக்கு பார்க்க ஆரம்பிச்சு, முப்பத்தொன்னு ஆகிடுச்சு. இன்னும் அவனுக்கு ஒன்னும் அமைஞ்ச பாடில்லை.
அதே மாதிரி உனக்கும் ஆகிடுமோன்னு உங்கம்மா பயப்படுறா. உனக்கு இருபத்தியேழு வயசு ஆச்சுல்ல, இப்ப பார்க்க ஆரம்பிச்சா தான் இருபத்தியொன்பது வயசுக்குள்ளயாவது கல்யாணம் முடிக்கலாம்னு மூக்கை உறிஞ்சிக்கிட்டே ஒரே அழுகை. எங்களுக்கும் வயசாகுதுல்ல ப்பா. அதான் உன்கிட்ட பேச சொல்றா அவ.” என ஈஸ்வர் கூறினார்.
“ப்பா… இதுக்கு எதுக்கு சண்டை போடுறீங்க? என்கிட்டவே நேரடியா கேட்டு இருக்கலாமே.” யுவா பதிலளிக்க,
“ப்பா… உங்க ரெண்டு பேர் விருப்பம் தான் என்னோட விருப்பம். பொண்ணு பாருங்க. ஆனால் ஒரு கண்டிஷன்!” யுவராஜ் நிறுத்தினான்.
“என்ன கண்டிஷன் ராசா?” இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு கொண்டிருந்த உஷா பதறியடித்துக் கொண்டு வந்து வினவினார்.
அதில் வெளிவர துடித்த சிரிப்பை அடக்கியவன், “முதல் கல்யாணம் உங்க இஷ்டப்படி பொண்ணை பாருங்க. இரண்டாவது கல்யாணம் என் இஷ்டப்படி தான்.” என அவன் பதிலளித்தான்.
“என்னப்பா சொல்ற?” என ஈஸ்வர் பதற,
“ராசா! டேய் யுவா… இரண்டு கல்யாணமா?” உஷாராணி ஏகத்துக்கும் பதட்டமாகி முகம் வெளுக்க கேட்டுக்கொண்டே, அவனை இரண்டு எட்டில் அடைந்தார்.
“என்னம்மா… இதுக்கு போய் ஷாக்காகுறீங்க? நீங்க எனக்கு அந்த பச்சை கலர் சட்டையை செலக்ட் பண்ணும்போது என்ன சொன்னீங்க?” என யுவராஜ் வெகு சாதாரணமாக வினவினான்.
தன் படபடப்பை மறைத்து யோசித்த உஷாராணி, “அது… அந்த சட்டை நான்தான் எடுத்தேன். அதை வச்சுக்கோ ராசா, இரண்டாவது தடவை போய் எடுக்கும் போது உன்னோட செலக்ஷன் இருக்கட்டும்னு சொன்னேன்.” என அவர் கூற,
“அதேதான் ம்மா… முதல் செலக்ஷன் உங்களோடது. அடுத்து என்னோடது.” அவன் சிரிக்காமல் கூறினான்.
“அடியாத்தி! எதை எதோட சேர்த்து வச்சு பேசுற டா?” உஷா, தன் நெஞ்சில் கையை வைக்க, அவருடைய செய்கைகளைப் பார்த்து யுவராஜ் அடக்க மாட்டாமல் சிரித்தான்.
அவன் சிரிப்பதைப் பார்த்து தான், அவன் தங்களிடம் விளையாடி இருக்கிறான் என்பதை உணர்ந்த இருவரும் பெருமூச்சு விட்டனர்.
“கொஞ்ச நேரத்துல எங்களுக்கு பயங்காட்டிட்டியே ராசா!” என உஷா கூற, அதில் சிரித்தவன், “சும்மா மா” என்றான்.
அவன் புன்னகையை உள்ளம் பொங்க பார்த்தவர், அவனது தலையை வாஞ்சையாக கோத, அதில் சிரிப்பை நிறுத்திய யுவராஜ், “ம்மா… சின்ன வயசுல இருந்தே எதுனாலும் என்னோட இஷ்டம் தான்னு எல்லாத்தையும் என்னை செய்ய விட்டீங்க. இப்ப இந்த விஷயத்துல உங்களோட விருப்பம் தான். நீங்க சொல்ற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று கூறினான்.
“இது போதும் ராசா! ரதி மாதிரி பொண்ணை அம்மா உனக்கு பார்க்குறேன். உனக்கு எந்த பொண்ணை பிடிச்சு இருக்கோ, அவளையே உனக்கு கட்டி வைக்கிறேன்.” துள்ளிக் குதிக்காத குறையாக கூறினார் உஷா.
“ம்மா… போதும், ஏன் இவ்ளோ ஹைப்பர் ஆகுறீங்க?” அவரை அமைதிப்படுத்தினான் யுவராஜ்.
***
வஜ்ரவேலு, “மாப்ளைய நான் தான் பார்ப்பேன். ஆனால், உன் மவளுக்கு பிடிக்கலைன்னா, வேண்டாம். அவளுக்கு பிடிச்ச மாப்ளைக்கு தான் அவளை கொடுப்பேன்.” அழுத்தமாகக் கூறி, அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
தனது காதுகளையே நம்ப முடியாத சம்யுக்தா, துள்ளி குதித்துக் கொண்டு வெளியே வந்து, “ம்மா… உன்ற வீட்டுக்காரர் சொன்னது உண்மையா? என் காதுல விழுந்தது உண்மையா?” என வினவினாள்.
“எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சம்யுக்தா. அப்பாவை உன்ற வீட்டுக்காரர்னு சொல்ல கூடாதுன்னு…” இசக்கியம்மாள் கொஞ்சம் குரலை உயர்த்தினார்.
“ம்மா… இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் உன்ற மவ-ன்னு சொன்னாரே! அது மட்டும் சரியா? அவர்கிட்ட கேட்க வேண்டியது தானே?” என அவள் பதிலுக்கு வினவினாள்.
“யுக்தா, அவங்க ஏதோ பேச்சு வாக்குல சொல்லி இருப்பாங்க. அதனால் நீயும் சொல்லணுமா?”
“ம்மா… நானும் பேச்சு வாக்குல தான் சொன்னேன். அதை விடும்மா. அவரு என்ன சொல்லிட்டு போறாரு?”
“ம்ம்… அதை அவர்கிட்டயே கேட்டுக்க.” என இசக்கி முகத்தை திருப்பினார்.
“என் செல்ல அம்மா இல்லை, ப்ளீஸ் மா, அவர்…” என நாக்கை கடித்த சம்யுக்தா, “அதான், அப்பா என்ன சொன்னாரு?” என வினவினாள்.
“அப்டி வா வழிக்கு.”
“ச்சு… என்கிட்ட மட்டும் தான் உன்னோட பாச்சா எல்லாம் பலிக்கும். உன்ற வீட்டுக்காரரை பார்த்தா மட்டும் பொட்டி பாம்பா அடங்கிட்றது.” என அவள் இசக்கியை வாரினாள்.
“அவர் என்ன சொன்னாருன்னு என்னால சொல்ல முடியாது. வேணும்னா, உன்னோட அப்பா… இல்லை என்ற வீட்டுக்காரர் கிட்டயே கேட்டுக்கோ.” என இசக்கி சிலுப்பிக் கொண்டு செல்ல, அதில் தான் முன்பு கூறியதை உணர்ந்து நாக்கைக் கடித்தாள் சம்யுக்தா.
அந்த நேரம் எழில் வெளியே வர, “நீ சொல்லலைன்னா என்ன? என் அண்ணி சொல்லுவாங்க.” என அவள் எழிலிடம் செல்ல, இசக்கியம்மாள் எழிலை பார்த்தார்.
“என்னோட மாமியார் சம்மதம் இல்லாம நான் எதையும் சொல்ல மாட்டேன்.” என அவள் பதறிக் கொண்டு கூற, இசக்கி சம்யுக்தாவைப் பார்த்து சிரித்தார்.
“என்ன அண்ணி? இப்டி கவுத்திட்டீங்களே! உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன். என் அம்மா மாமியார் கொடுமை பண்ணுதுன்னு கம்ப்ளைண்ட் கொடுக்க…” என்று சம்யுக்தா கூறியதும் எழில் பயத்துடன் இசக்கியை நோக்க, அவர் அதில் சிரித்துவிட்டார். எழில் நிம்மதி பெருமூச்சு விட, இசக்கி கண்ணைக் காட்டிவிட்டு சென்றார்.
இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த சம்யுக்தா, “அண்ணி, அக்மார்க் இந்திய மருமகள்னு நீங்க ப்ரூஃப் பண்றீங்க. வீடு முழுசும் இந்த அம்மா ராஜ்ஜியம். ஆனால், இந்த அப்பா முன்னாடி மட்டும் எப்படி தான் அடங்கி போறாங்களோ?” என வினவினாள்.
லேசாக சிரித்த எழில், “கல்யாணம் ஆன பிறகு, தானா உனக்கும் புரியும்.” என்றவள், “மாப்ளையை மாமா பார்த்தாலும், உனக்கு பிடிச்சு இருந்தா மட்டும் தான் கல்யாணம்னு சொன்னாரு.” என்று கூற,
முற்பாதியைக் கவனிக்காதவள், பிற்பாதியை மண்டையில் ஏற்றிக் கொண்டு, “இதை இப்பவே தாரணிகிட்ட சொல்லணும்.” என்று ஓடிச் சென்றாள்.
***
விமானத்தில் ஏறி தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஹிரித்திக் அமர, அவன் அருகில் செல்வா அமர்ந்தான். அங்கிருக்கும் பணிப்பெண்கள் வந்து சில விதிமுறைகளை விளக்கி விட்டுச் செல்ல, அந்தப் பெண்களை செல்வா ஆர்வத்துடன் பார்த்தான்.
ஹிரித்திக் காதொலிப்பானை காதில் சொருகி, பாடலை ஒலிக்க விட்டு, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.
சிறிது நேரம் கழித்து அவன் தோளை யாரோ சுரண்ட, திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் குழந்தை அவனைப் பார்த்து சிரித்து, அவனிடம் ஏதோ கூற, காதில் மாட்டி இருந்ததைக் கழற்றியவன், “ஹாய், நான் ஹிரித்திக்.” என்றான் பளிச்சென்ற புன்னகையுடன்.
“ஐ யம் ஸ்டெஃபி அங்கிள்.” என்று அவள் கையை நீட்டினாள்.
முகத்தை சுருக்கியவன், “நோ நோ… அங்கிள். ஐ யம் ஹிரித்திக்.” என்று அவன் கூறினான்.
“நோ… ஏஜ் அதிகமானவங்களை மரியாதையா தான் கூப்பிடணும். மம்மி திட்டுவாங்க.” என்று குழந்தை கூற,
அதில் சிரித்த ஹிரித்திக், “நோ… ஹௌ ஓல்ட் ஆர் யூ?” என்று வினவினான்.
“ஐ யம் ஃபைவ் இயர்ஸ் ஓல்டு.”
“ஓ… ஐ யம் ஃபோர் இயர்ஸ் ஓல்டு!” என ஹிரித்திக் பதில் கூறினான்.
“ஓ காட்! பொய் சொல்லாதீங்க. எப்டி நீங்க இவ்ளோ பெருசா வளர்ந்தீங்க?” என தனது சிறிய கண்களை விரித்து ஆர்வம் மின்ன அபிநயம் பிடித்தாள் குழந்தை.
அவளது கன்னங்களை கிள்ளிய ஹிரித்திக், “எனக்கு மேஜிக் பண்ண தெரியும். மேஜிக் பண்ணி தான் நான் பெரியவனா மாறிட்டேன்.” என்று கூறினான்.
“ஓ… வாவ்! எனக்கும் மேஜிக் சொல்லி தர்றீங்களா?” என ஸ்டெஃபி வினவினாள்.
“ஷ்யூர்… பட், நான் என்னோட ஃப்ரண்ட்ஸ்க்கு மட்டும் தான் சொல்லி தருவேனே!”
“ஓ… அப்டியா?” குழந்தைக்கு முகம் வாடியது.
“சரி… நம்ம ஃப்ரண்ட்ஸ் ஆகிடலாம். தென், நான் உனக்கு சொல்லி தர்றேன்.” என்று அவன் கையை நீட்டினான்.
“ஓகே… வீ ஆர் ஃப்ரண்ட்ஸ்!” என்று குழந்தை கையை முன்னே கொண்டு வந்தாள்.
தனது கையை பின்னே இழுத்தவன், “பட் ஒன் கண்டிஷன்.” என நிறுத்த, குழந்தை அவனை கேள்வியாக நோக்கினாள்.
“என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னை நேம் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. சோ, நீயும் அப்பிடித்தான் என்னை கூப்பிடணும். அப்பதான் உன்னை நான் ஃப்ரண்டா அக்சப்ட் பண்ணுவேன்.” என்று அவன் கூற, ஸ்டெஃபி நிமிர்ந்து ஜோஸ்லின் முகத்தைப் பார்த்தாள்.
குனிந்து புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும், மகளின் மீது ஒரு கண்ணை வைத்து, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் ஜோஸ்லின்.
தன் தாயின் புறம் திரும்பி, அவளது முகத்தை நிமிர்த்திய ஸ்டெஃபி, “என் செல்ல பார்பி மம்மி, இல்லை… நான் அவரை நேம் சொல்லி கூப்பிடவா?” என வினவ, ஜோஸ்லின் பார்வை ஹிரித்திக்கிடம் சென்றது.
அவர்கள் இருவரையும் தான், அவன் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனை சில கணங்கள் ஆராய்ந்தவள், ‘சரி’ என்பது போல தலையை ஆட்ட, “யூ ஆர் ஸ்வீட் மம்மி.” என்று அவளது கன்னத்தை எச்சில் செய்த ஸ்டெஃபி ஹிரித்திக்கிடம் பேசத் துவங்கினாள். சிறிது நேரத்தில் உணவு வர, உணவை உண்டு கொண்டே, அவர்களது பேச்சு தொடர்ந்தது.
பல மணி நேர பயணத்தில் விமானம் தரையிறங்க, “பாய் ஹிரித்திக்… நைஸ் டு மீட் யூ.” என்று ஸ்டெஃபி விடை பெற, இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியான மனநிலை தொலைந்து விட்டதாக உணர்ந்தான் ஹிரித்திக்.
அவர்களுக்காக காத்திருந்த மகிழுந்தில் ஹிரித்திக்கும் செல்வாவும் ஏறினர். ஹிரித்திக்கின் முகம் எரிச்சலையும் பொருமலையும் ஒருங்கே தத்தெடுத்துக் கொள்ள, முகத்தைக் கடுகடுவென வைத்து இருந்தான்.
மகிழுந்து அவர்களது விலாசத்தை நோக்கி செல்ல, வழியில் உள்ள பலவற்றைப் பார்த்து கண்ணை விரித்த செல்வா, “டேய் ஹிரித்திக், நம்ம ஊர் மாதிரி இல்லை டா. இங்க பாரேன், செம்மையா இருக்கு டா!” என்று கூறினான்.
“ச்சு… என்னடா அதிசயமா இருக்கு? பேசாம வாடா.” என்று ஹிரித்திக் சிடுசிடுத்தான்.
“டேய் மச்சான், நீ மூஞ்சியை அரை அடி என்ன? ஒரு அடி தூக்கி வைச்சு இருந்தாலும், இன்னும் ஒரு வருஷம் இங்கதான் நாம குப்பை கொட்ட போறோம். சோ, இதெல்லாம் பழகிக்கணும் டா!” என்றான் செல்வா.
அவன் கூறியதை மனதில் அசை போட்ட ஹிரித்திக்கின் கண்கள் தன்னிச்சையாக வெளியே திரும்பின.
ஆங்காங்கு கடைகளும் கண்ணாடி கட்டிடங்களும் உயர்ந்து நின்றன. பெரும்பாலான
இடங்களில் இந்தியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
அவற்றில் ஈர்க்கப்பட்ட ஹிரித்திக், “டேய் மச்சான், இது ஹரித்துவார் தானேடா?” என வினவினான்.
“ஆமா டா மச்சான்! இங்க பாரு, நான் நெட்ல சர்ச் பண்ணேன். இங்க அவங்களோட புனித நூல் வச்சு இருப்பாங்களாம்.” என செல்வா தனது கைபேசியை காண்பித்து, அவற்றை விளக்கிக் கொண்டு வர, அவர்களது இருப்பிடம் வந்துவிட்டது.
‘செக்டார் – 45’ என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு இருந்த இடம் அவர்களை வரவேற்க, “இது என்னடா செக்டார்னு இருக்கு. இந்த ஏரியாவுக்கு பேர் எல்லாம் இல்லையா?” என ஹிரித்திக் வினவினான்.
“இங்க ஏரியாவுக்கு பேர் எல்லாம் இல்லை. செக்டார்னு தான் சொல்லுவாங்க. இங்க, நாப்பத்தஞ்சாவது செக்டார்ல தான் தமிழ் பேசுற மக்கள் அதிகமா இருப்பாங்க. பை த பை மை நேம் இஸ் பாபு.” என ஹிரித்திக்கின் கேள்விக்கு பதிலளித்து, பல்லையும் இளித்து, தன் முன்னே கையை நீட்டுபவனைப் பார்த்து ஹிரித்திக்கிற்கு பிடித்து விட, “ஐ யம் ஹிரித்திக்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
செல்வாவும் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, “உங்க முகத்தை பார்த்தாலே நீங்க இங்க புதுசுன்னு எனக்கு தெரியுது. நான் இங்க 202ல இருக்கேன். உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க பாஸ்.” என்று பாபு கூறினான்.
“வாவ்! நாங்க 204. அப்ப நமக்கு இடையில ஒரு ரூம் தான் இருக்கு.” என்று செல்வா கூற,
“எஸ்… இப்ப நீங்க போங்க. ரெஸ்ட் எடுங்க.” என பாபு விடைபெற, தங்களது வீட்டுக்குள் நுழைந்தவர்கள் தங்களது இத்யாதிகளை இறக்கிவிட்டு, கட்டிலில் வீழ்ந்தார்கள்.
அப்போதுதான் அலைபேசியை அணைத்து வைத்தது ஹிரித்திக்கிற்கு நினைவு வர, அதை உயிர்ப்பித்தான். அடுத்த நொடி கௌரியிடம் இருந்து அழைப்பு வர, அதை ஏற்று காதில் பொருத்தினான்.
“ஹிரித்திக்… நல்லபடியா ரீச் ஆகிட்டியா?” என அவர் வினவ,
“அதான் பொட்டி படுக்கையோட என்னை தொரத்தி விட்டுட்டீங்களே! அப்புறம் என்ன பாசம் இருக்க மாதிரி நல்லபடியா போயிட்டியான்னு ஒரு கேள்வி?” என அவன் வினவ, அந்த பக்கம் இருந்து லேசாக விசும்பல் கேட்டது.
கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்தவன், “ம்ப்ச்… சும்மா சீரியல்ல வர்ற அம்மா மாதிரி எனி டைம் கண்ணை கசக்கிட்டே இருக்காத கௌரி. நல்லபடியா ரீச் ஆகலைன்னா எப்டி நான், உன்கிட்ட பேசிட்டு இருப்பேன்? கண்ணை துடை முதல்ல.” என்று சமாதானத்தையே சட்டமாக ஹிரித்திக் கூறினான்.
கௌரியிடம் இருந்து அலைபேசியை வெடுக்கென பிடுங்கிய தர்ஷனா, “டேய் கொழுந்தனாரே, என் மாமியாரை அழ வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு. உன்னோட வால்தனத்தை எல்லாம் சுருட்டிட்டு, ஒழுங்கா வேலையை பாரு டா, என் டொமேட்டோ!” என அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் அழைப்பை துண்டித்தாள். ஹிரித்திக்கின் முகத்தில் ஒரு புன்முறுவல் ஜனித்தது.