நகரின் மத்தியில் அமைந்திருந்த அம்பலவாணன் பள்ளியில் அதிகாலையே ஒருபுறம் காவல்துறையும், தீயணைப்பு துறையும் விரைவாக தங்கள் வேலையை தொடங்கியிருக்க, மறுபுறம் ஆம்புலன்ஸ் காயம்பட்ட பணியாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருந்தது..
நல்லவேளை அதிகாலை ரவுடிகள் பள்ளியில் நுழைந்ததால் முதல் ஷிப்ட் செல்ல காத்திருந்த ஒரு சில டிரைவர்கள், காவலாளிகள் என்று பத்து பேர் மட்டுமே தாக்குதலில் காயமடைந்திருந்தனர். அதில் ஒருவருக்கு மட்டும் மண்டையில் அடிபட்டு உயிருக்கு அபாயமான நிலையில் கொண்டு செல்லப்பட்டிருக்க அம்பலவாணன் அவரிடம் கதறி அழும் குடும்பத்தாருக்கு பதிலளிக்க முடியாமல் நின்றிருந்தார்.
பள்ளியில் நடந்த கலவரத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரண்டுவிட பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டதில் அங்கே பதற்றம் இருமடங்காகி போனது. காவல்துறையினர் ஓரளவு நிலையியை கட்டுக்குள் கொண்டு வர பள்ளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளித்த பின் அம்பலவாணன் இறுகிய முகத்தோடு தன் அறையில் அமர்ந்திருக்க உடன் சரவணன், சுஜி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் உடன் இருந்தனர்.
என்னதான் பேருந்துகளுக்கு இன்ஷுரன்ஸ் செய்திருந்த போதும் நகரின் பல்வேறு இடங்களுக்கு இந்நேரம் சென்றிருக்க வேண்டிய நாற்பத்து ஐந்து பேருந்துகளும் கண்முன் எரிந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் இருந்து இன்னுமே மீளாத அம்பலவாணனுக்கு ‘இதற்கு யார் காரணம்..?’ என்பது குறித்த அனுமானமே சுத்தமாக இல்லை.
பின்னே மகன் தளிரை காப்பாற்றும் முயற்சியில் அவன் உயிருக்கு குறி வைக்கப்பட்டிருப்பதே அவருக்கு தெரியாத நிலையில் சரத்தின் இத்தகைய கோரத்தாண்டவத்தை அவர் எங்கனம் எதிர்பார்த்திருக்க முடியும்..? அனைவருடனும் நட்புறவோடு இருக்கும் மனிதருக்கு தொழில்முறை எதிரிகள் என்று யாரும் கிடையாது… அப்புறம் எப்படி இது நிகழ்ந்தது என்ற யோசனையுடன் காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அமர்ந்திருந்தார்.
அங்கே பள்ளியின் விளையாட்டு திடலில் தீயில் கருகி உருக்குலைந்து நின்ற வாகனங்களை சிவந்த விழிகளோடு பார்த்திருந்த உதய்யின் செவியில் இன்னுமே பணியாளர்களின் மனைவி, குழந்தைகளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டிருந்ததில் அவன் உள்ளம் அனலில் இட்ட புழுவாக துடித்துக்கொண்டிருந்தது.
‘தன்னுடைய பிரச்சனையில் இத்தனை பேர் பாதிக்கபடுவர்’ என்பதை கணிக்க தவறிய தன்னையே கடிந்து கொண்டவனுக்கு நள்ளிரவில் இருந்தே பெற்ற அடிகளால் மனதினுள் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது.
‘சரத் இதை நடத்துவதற்கு வாய்ப்பளித்து எங்கே நாம் தவறினோம்..?, இத்தனை பெரிய இழப்பை எவ்வாறு சீர்படுத்த போகிறோம்..? அதைவிட தந்தைக்கு என்ன பதிலளிப்பது..? என்று கேள்விகள் வரிசை கட்டி அவன் முன் நிற்க எதற்கும் பதிலின்றி தவித்திருந்தவன் ஒருகட்டத்தில் உள்ளங்கைகளில் முகத்தை பொத்தி அமர்ந்துவிட்டான்.
‘நிச்சயம் இந்த இழப்பில் இருந்து மீண்டு அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பலமாதங்கள் ஆகும்..’ காவல்துறை அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்து நகரின் முக்கிய ரவுடிகளை வலை வீசி தேட தொடங்கிவிட்டது.
உதய்யிடம் வந்த சிவனேஷ், “யார் மேலயாவது சந்தேகம் இருக்கா உதய்..?” என்று கேட்க ஒருநொடி தயக்கத்தோடு அவரை பார்த்தவன் இல்லையென்று தலையசைத்தான்.
“நிஜமாவே சந்தேகமில்லையா..?” என்றவரின் அடுத்த கேள்வியில் அவன் அதிர்ந்து நிற்க..,
“ஒரு பெண்ணுக்காக இத்தனை இழப்பு சரின்னு நினைக்கிறியா..? இத்தனை கோடி நஷ்டப்படும் அளவுக்கு அப்படியென்ன உதய் அந்த பொண்ணு உசத்தியா போயிட்டா..?”
“அங்கிள் அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்றவனை நம்பாத பார்வை பார்த்தவர்,
“நான் அப்போவே உன்னை இதுல இருந்து விலகுன்னு சொன்னேனே கேட்டியா..?” என்று நண்பனின் மகனை உரிமையாக கடிந்துக்கொண்டிருந்தார் சிவனேஷ்.
“நீ விலாகாததால தான் இந்த நிலை..! எவ்ளோ பெரிய நஷ்டத்திற்கு நீ காரணமாகி இருக்க எத்தனை குடும்பத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில நீ இருக்கன்னு புரியுதா..?” என்று கேட்க ‘அவனுக்கா புரியாமல் இருக்கும்..?’
‘தொழில் முடக்கம், பொருட்சேதம், வாடிக்கையாளர்களிடம் பெற்றிருக்கும் நம்பகத்தன்மை, காயமடைந்திருக்கும் பணியாளர்கள், பள்ளி பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம், சீரமைப்பு பணிகள்’ என்று சரத்திடமிருந்து தளிரை காப்பாற்றும் முயற்சியில் அவன் கொண்டிருக்கும் நேரடி பகை மட்டுமின்றி எதிர்கொள்ளவேண்டிய இணைப்பு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்பதை அவனும் நன்கு அறிவான்’
‘என்னதான் முறையாக வருமான வரி செலுத்தி அனைத்து வாகனங்களுக்கும் இன்ஷுரன்ஸ் செய்து இருந்தாலும், மற்ற சேதங்களை விரைவில் சீரமைத்து தொழிலை மீண்டும் துவங்கும் திடம் இருந்தாலும் காயமடைந்தவர்களின் வலியும் குடும்பத்தின் வேதனையையும் எதைக்கொண்டும் ஈடுகட்டிவிட முடியாதே..!’
வேறு வழியில்லை! அவனால் முடிந்தது அவர்கள் மீண்டும் பணியில் சேரும் வரை அவர்களின் மருத்துவ செலவையும், சம்பளமும் அவர்களுக்கான இடத்தில் வேறு ஆள்களை நியமிப்பதையும் உதய் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு தான் வேண்டும்.
“அங்கிள் அப்பாக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம்.. நீங்க விசாரிச்சுட்டு இருக்கிறதா மட்டும் சொல்லுங்க” என்று எதிர்பார்ப்போடு அவரை பார்க்கவும்,
“கண்டிப்பா முடியாது உதய்..!”
“அங்கிள் ப்ளீஸ் எனக்காக.., அப்பாக்கு நீங்க சொல்ல வேண்டாம் நானே பொறுமையா சொல்லிக்கிறேன்”
“எப்போ சொல்லுவ…? இன்னும் மீதி இருக்கிற சொத்தையும் கொளுத்தி முடிச்சு உன் குடும்பத்தையும் பலி கொடுத்த பிறகா..?” என்று சிவனேஷ் சீறவும் அங்கே வந்த ருத்ரவேலன்.,
“ப்பா அவன் ஒரு சைக்கோ..! அதுக்கு உதிண்ணா என்ன பண்ணுவாங்க..? அங்கிள் கிட்ட அவரே சொல்லட்டுமே…”
“உன்னை நான் கூப்பிட்டேனா..? அவனுக்கு பரிஞ்சுகிட்டு வராம உன் வேலையை போய் பார்டா” என்று மகனை முறைத்தார்.
“ப்பா உதிண்ணா சிச்சுவேஷன் புரியாம நீங்களே இப்படி பேசலாமா..?”
“வேலு!!” என்று அழுத்தமாக மகனை பார்த்தவர், “அதிகமா பேசிட்ட… போதும் போய் சரத்தை தேடுற வேலையை பார்” என்று கடுமையாக சொல்லவும் உடனே அங்கிருந்து சென்றான்.
*************************
அடுத்தடுத்து உதய்யை நிற்க விடாமல் அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்த சரத் அவனை ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யவிருந்த நாளுக்கு முந்தைய தினமே மருத்துவமனையை விட்டு கிளம்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தான்.
‘பின்னே இப்போது பொருட்சேதம் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து அடித்தால் தான் வலி அதிகமாக இருக்கும் என்ற எண்ணமே அவனுக்கு..!’
“சொன்ன தேதிக்கு முன்பாக உமா டிஸ்சார்ஜ் செய்ய முடியாது” என்றபோதும் விடாபிடியாக டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிவிட்டான்.
உடனே உமா தம்பிக்கு தகவலளிக்க போட்டிருந்த திட்டம் மாறி போனதை அறிந்த ருத்ரவேலனுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு மூளை ஸ்தம்பித்து யோசிக்கவே முடியவில்லை.
“ஏன் க்கா நான் தான் சொல்லியிருந்தேனே..?”
“நான் என்ன பண்ணட்டும் வேலு தளிர் அடிச்சதுக்கு ட்ரீட்மென்ட் கூட வேண்டாம் அன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணுங்கன்னு ஒத்தை காலுல நின்னுட்டான். நான் தான் சமாதானம் செய்து இரண்டு நாள் அவனை இருக்க வச்சேன்..” எனவும் அடுத்து என்னவென்று யோசிக்க தொடங்கிவிட்டான்.
சரத்தை நிழலாக தொடரும் ஆள் மூலமாக அவன் உதய்காக வேலூரின் எல்லையிலேயே காத்திருப்பதை அறிந்தவனுக்கு ‘இன்று விபத்து ஏற்பட்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உதய் ராணிபேட்டைக்கு கிளம்பக்கூடும்’ என்று முடிவெடுத்து அவன் காத்திருப்பது புரிந்தது.
ஆனால் அம்பலவாணன் இருக்கும் நிலையில் உதய் கிளம்புவதோ அல்லது மற்றவர்கள் அவனை தனியே செல்ல அனுமதிப்பதோ எளிதான காரியமில்லை.
அதைவிட அவர்கள் திட்டத்தின் முக்கிய நிகழ்வே நாளை நடத்தவிருக்கும் பேரணி தான்!!
‘நிச்சயம் அனுமதி கொடுத்த பேரணியை உடனே மாற்றுவது அத்தனை எளிதான காரியமில்லை… ஒருவேளை மேலிடத்தில் மாற்றத்திற்கான காரணத்தை ஜோடித்து அதன்பின் கல்லூரி முதல்வரிடம் பேசி செய்ய நினைத்தாலும் நேரம் கடந்து அதை செயல்படுத்த நிச்சயம் மாலையாகிவிடும். அதன்பின் சரத்தை பிடித்து உடனே கோர்டில் ஆஜர்படுத்தி கஸ்டடி எடுப்பது சிரமமே..!
‘என்ன செய்வது..?’ என்று யோசித்த ருத்ரவேலனுக்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே யூடியூபர்களை அவன் வேலூருக்கு வரவழைத்திருந்தது தான்.
‘பேரணிக்கு மாற்று என்ன..?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு சட்டென ஒரு யோசனை உதிக்க உடனே RIDERS CLUB இல் இருக்கும் தன் நண்பனை தொடர்பு கொண்டு பேசி முடிக்கவும் தான் அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது.
*************************
நேரம் காலை பத்தை நெருங்கி கொண்டிருக்க ருத்ரவேலன் உதய்யிடம் சரத் காத்திருக்கும் செய்தியை சொல்லி, “இப்போ என்னண்ணா பண்றது..?” என்றிட அவனிடம் பலத்த யோசனை.
“உங்க உயிருக்கு அவன் வச்ச குறி வச்சது தான் ண்ணா.. ஆனா இப்போ விட்டா அவனை பிடிக்க இதேபோல இன்னொரு வாய்ப்பு கிடைக்காது..”
“நம்ம ப்ளான் படி நாளைக்கு தான் இது நடந்திருக்க வேண்டியது ஆனா அவன் காலையிலேயே டிஸ்சார்ஜ் ஆகி உங்களுக்காக காத்திருக்கான்”
“போதும் வேலு! இத்தோட எல்லாம் போதும்… அவனை உசுப்பேத்தாம தயவுசெய்து இத்தோட நிறுத்திக்கோங்க” என்றான் ராகவன்.
“என்ன மாம்ஸ் பேசற..? இன்னைக்கு விட்டா அவனை கையும் களவுமா என்னைக்குமே பிடிக்க முடியாது… ஒருவேளை நான் அந்த நாயை இப்போ கார், பஸ்ஸை கொளுத்தினதுக்காக அரெஸ்ட் பண்ணினாலும் அடுத்த பத்து நிமிஷத்துல வக்கீலை வரவச்சு ஹாஸ்பிட்டல்ல இருந்த ப்ரூஃபை நீட்டி எனக்கே டாட்டா காட்டிட்டு போயிடுவான்..” என்று குறையாத ரௌத்திரத்தோடு சொல்ல,
“புரியுது வேலு ஆனா இப்போ இந்த நேரத்துல எப்படிடா மாப்பிள்ளையை ரிஸ்க் எடுக்க சொல்ற..?” என்று ‘இத்தகைய நெருக்கடியான சூழலில் இந்த விபரீத முயற்சி தேவை தானா..?’ என்ற கேள்வி மட்டுமே சரவணனிடம்.
“அதைவிட இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னொரு நாள் அவன் அண்ணனை போட்டே தீருவான்.. யாருக்கு தெரியும் அந்த சைக்கோ இப்போ மாதிரி தன் கையாள இல்லாம அண்ணனை ரவுடிகளை விட்டு அரிவாளால வெட்ட சொன்னா என்ன பண்ணுவீங்க..?” என்று கேட்க மற்றவர்களிடம அதிர்ச்சி..,
“என்னடா பேசற..?” என்ற ராகவனின் குரலில் அத்தனை நடுக்கம்.
“நாட்டில் நடக்கறதை தான் பேசறேன் மாம்ஸ்.. ஒருவேளை அப்படி செய்தா யாரும் காப்பாற்ற முடியாம போயிடும் புரிஞ்சுக்கோங்க..! இதுதான் நமக்கான வாய்ப்பு விட்டுட்டோம் அண்ணனுக்கு எந்த பக்கத்தில் இருந்து எப்போ எந்த நிமிஷம் ஆபத்து வரும்னு சொல்லவே முடியாது”
“எனக்கு இதுல உடன்பாடு இல்லை.. அதுவும் மாமா இந்த நிலையில் இருக்கிறபோ உதய்க்கு ஏதாவது ஒன்னு ஆகிடுச்சுன்னா தாங்க மாட்டார்.. போதும் விட்டுடுங்க தளிர் ஃபேமிலியை ப்ரோடெக்ட் பண்ண நாம வேற எதாவது வழி யோசிக்கலாம்”
“மாமா இனி அண்ணியை விட அண்ணனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் தான் பிரச்சனை அதிகமாகும், புரிஞ்சுக்கோங்க.. அவனோட டார்கெட் இப்போ அண்ணி இல்லை உதிண்ணா தான்..!”
“…”
“தொழிலை முடக்கி போட்டிருக்கவன் அடுத்து நம்ம குடும்பத்தை டார்கெட் பண்ணினா என்ன பண்ணுவீங்க..?” என்று கேட்க அனைவரும் அதிர்ந்து போயினர்.
“என்ன பார்க்கறீங்க..? ஒன்னு அவன் இருக்கணும் இல்ல நாம..? யோசிச்சு சொல்லுங்க ஆனா நான் என்பக்க ஏற்பாட்டை பக்காவா முடிச்சுட்டேன் எல்லாரும் தயாரா இருக்காங்க…”
“வேலு ரேலி நாளைக்கு தானே முடிவு செய்திருந்தோம் இப்போ எப்படி..?” என்று உதய் யோசனையுடன் கேட்க,
“ரைடர்ஸ் க்ளப் ஆள்களை ரீப்ளேஸ் பண்ணிட்டேன் ண்ணா… மொத்தம் இருநூறு பைக் அவன் தப்பிச்சு வரும் போது ஒரே நேரத்துல குறுக்க வந்து ஹைவேஸ்ல சடன்னா ஜாயின் பண்ணிப்பாங்க.. இதனால சரத்தோட வேகம் குறையும் அவங்களை முந்திட்டு போகவும் முடியாது. அதுக்குள்ள ஆளுங்க அவனை பிடிச்சுடுவாங்க” என்றவன் உதய் பதிலுக்காக காத்திருந்தான்.
“உன்னை வேலையை பார்க்க சொன்னா இங்க என்னடா பண்ணிட்டு இருக்க..? வேர் இஸ் சரத்..?” என்றவாறு சிவனேஷ் வர அவருக்கு சல்யூட் அடித்தவன்,
“ஸார் ஐ ஆம் ஆன் டியூட்டி..! விசாரிச்சுட்டு தான் இருக்கேன் ஆனா ஹாஸ்பிட்டல்ல இருந்து டிச்சார்ஜ் ஆனவன் எங்கிருக்கான்னு யாருக்குமே தெரியலை.. கூடிய சீக்கிரம் அவனை கைது பண்ணிட்டு உங்களை வந்து பார்கிறேன்” என்று தீவிரக்குரலில் சொல்லவும் சந்தேகமாக மகனை பார்த்தவர் உதயாதித்தனை பார்க்க அவன் புருவம் நெறிபட அமர்ந்திருந்தான்.
“நீ வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்”
“இதுவும் வேலை தான் ஸார்” என்று மீண்டும் சல்யூட் அடித்து விறைப்பாக சொல்ல மகனை முறைத்தவாறே சென்றார் சிவனேஷ்.
கையை கீழே இறக்கிவிட்டு “உப்ப்ஸ்” என்று மூச்சை இழுத்து விட்டான்.
“சொல்லுங்கண்ணா ஓகேவா…?” என்றவனின் பார்வை அங்கே கூட்டத்தோடு கூட்டமாக உதய்யை கண்காணித்து கொண்டிருந்த சரத் நியமித்த ஆளின் மீது படிந்தது.
சம்மதமாக தலையசைத்தவன் அம்பலவாணனிடம் ராணிபேட்டை நிலவரத்தை பார்த்து வருவதாக சொல்ல அதிர்ந்து போன சரவணன்,
“மாப்பிள்ளை மாமாவை தனியா விட்டுட்டு நீ எங்க கிளம்பற..? தம்பி போகட்டும்” என்று ராகவனிடம் கண்ணசைக்க..,
“ஆ… ஆமா மச்சான் நானே போறேனே… நீ இங்க இருடா” என்று வேகமாக சொல்ல,
“இருக்கட்டும் மாப்பிள்ளை! உதய் ஆசையா கட்டிட்டு இருந்தது அவனே பார்த்துட்டு வரட்டும்.. நீங்க வேணும்னா கூட போயிட்டு வாங்க நான் சமாளிச்சுப்பேன்” என்றார் அம்பலவாணன்.
‘சரி மாமா’ என்ற ராகவனை உதய் கண்களாலேயே மிரட்ட… “அது.. அதெப்படி மாமா சரிவரும் எனக்கு கார் இன்ஷுரன்ஸ், லேபர்ஸ் ட்ரீட்மென்ட் மற்ற க்ளைம் வேலை இருக்கு அவனே போயிட்டு வரட்டும்” என்றான் எரிச்சலோடு….
“வரேன்ப்பா” என்று விடைபெற்ற உதய் அடுத்த சில நிமிடங்களில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வேலூர் எல்லையை தாண்ட அடுத்த சில நிமிடங்களில் சரத்தின் லாரி அவனை பின்தொடர்ந்திருந்து.
சரத்தை கண்டதில் உதய்யின் கோபம் இருமடங்காக முடிந்தளவு தன்னை சமன்படுத்திக்கொண்டு காரை ஓட்டினான்.
ஆனால் பின்துரத்திய லாரி வேகமேடுப்பதை கண்டதும் உதய் தானும் வேகமெடுத்த அதேவேளை விஷயம் கேள்விப்பட்ட தளிர் பள்ளிக்கு வந்திருந்தாள்.