“உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே”
என்று விஷ்வதேவ் உயிரை உருக்கும் குரலில் பாடிக்கொண்டு வர உடன் இருந்த அனைவரும் கண்களை மூடி அவன் குரலில் லயித்திருந்தனர்.
“மாமா பாப்பாக்கு பாட்டு..” என்று வித்யாவின் மடியில் அமர்ந்திருந்த வர்ஷுவின் இளைய மகள் மழலை மொழியில் கேட்கவும்,
“என் செல்லத்துக்கு இல்லாமலா..?” என்ற விஷ்வாவின் விழிகளோடு குரலும் கனிந்திட..,
“அழகு குட்டி செல்லம்… உன்னை அள்ளி தூக்கும் போது… உன் பிஞ்சு விரல்கள் மோதி… நான் நெஞ்சம் உடைந்து போனேன்…
ஆளை கடத்தி போகும்… உன் கன்னக் குழியின் சிரிப்பில்… விரும்பி மாட்டி கொண்டேன்… நான் திரும்பி போக மாட்டேன்…
அம்மு நீ… என் பொம்மு நீ…”
என்று புன்னகையோடு பாடிட கைதட்டி குதுகலித்த குழந்தை அவன் ராகத்திற்கு ஏற்ப தலையசைத்து ஆர்பரித்தது.
“வர்ஷு அவளுக்கு ஏதோ அர்ஜென்ட் வொர்க் இருக்கு இன்னும் ரெண்டு நாளுல வந்துடுவா” என்ற அதேவேளை ஃபேமிலி க்ரூப்பில் இருந்து அனைவருக்கும் ஒருசேர மெசேஜ் வந்திருந்தது.
வித்யாதேவி எடுத்து பார்க்க அதில் சரத் உதயாதித்தனை ராணிபேட்டைக்கு செல்லும் வழியில் கொல்ல திட்டமிட்ட ஆடியோ மற்றும் வீடியோவை அலர் பகிர்ந்திருந்தாள்.
ஆம் சரத் பேசியவைகளை விபத்து நடப்பதற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலு சரியான நேரத்தில் செய்து முடித்திருந்தான்.
அதன் விளைவு தளிர் குறித்த செய்திகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் விபத்து குறித்த செய்தி இன்னுமே பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.
ராகவன் உடனே அலருக்கும் பகிர அப்போதுதான் அதிகாலையே ஆரணியில் இருந்து கிளம்பிய விஷ்வா குடும்பத்தினர் வேலூரில் உள்ள சிவசங்கரனின் மருத்துவ நண்பரை பார்த்துவிட்டு சென்னை நோக்கி செல்வது நினைவு வரவும் ஃபேமிலி குழுவில் பகிர்ந்திருந்தாள்.
அதேநேரம் உதய்யிடம் ‘உன் அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்ற சிவனேஷிற்கு நண்பன் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு எதையும் சொல்லும் தைரியம் இல்லாமல் தான் போனது.
சிவனேஷ் மட்டுமின்றி எஸ்பியில் தொடங்கி அம்பலவாணனின் அரசியல் மற்றும் தொழில் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பள்ளிக்கு வந்து சேர, அனைத்து இடத்திலும் தொடர் தாக்குதல் நடத்த நிச்சயம் முன்பகை அல்லது வேறு காரணமிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.
‘ஒருவேளை சரத் இதற்கு காரணமாக இருக்க கூடுமோ..?’ என்ற ஐயம் அம்பலவாணனுக்கு ஏற்பட அருகே இருந்த சரவணனிடம் சரத் குறித்து விசாரித்தார்.
சரவணனுக்கோ மிகவும் இக்கட்டான சூழல்..!!
ஆனால் தற்போதைய சூழலை மேலும் கனமாக்க விரும்பாதவர், “இல்ல மாமா அவன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதோட சரி அதுக்கப்புறம் உதய்யும் அவனும் சந்திக்கவே இல்லை.. ஆனா அன்னைக்கு உதய் மண்டபத்துல அடிச்சதுக்கு பதிலா இப்படி செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்கு” என்றவர்,
‘சரத்துக்கு உதய்யால் ஏற்பட்ட பாதிப்பு அதை தொடர்ந்த சிகிச்சையை எடுத்து சொல்லி நிச்சயம் அவன்தான் காரணமாக இருக்க கூடும்..’ என்றதில் உடனே போலீசாரை அழைத்து தன் மகனை பழிவாங்க நிச்சயம் சரத் தான் இதை செய்திருக்ககூடும் என்று அவன் மீது புகார் கொடுக்க இதுவரை சீக்கிய நான்கு ரவுடிகள் வேறு சிலரை கைகாட்டிய போதும் இப்போது சரத்தை தேடும் படலம் தீவிரமானது.
கண்ணீரின் தடம் தளிரின் முகமெங்கும் வியாபித்திருக்க நாசி விடைக்க கண்ணீரை துடைத்துக்கொண்டே அம்பலவாணனின் அறைக்குள் நுழைய முயன்ற தளிரை சரியான நேரத்தில் தடுத்திருந்தான் ராகவன்.
*****************
“தேவ் இந்த பையனை பற்றியா அலர் நேத்து சொல்லிட்டு இருந்தா..?” என்று வித்யா வீடியோவை அவனிடம் காட்டி கேட்க.., தன் வேகத்தை குறைத்தவன் சரத்தின் பேச்சை கூர்ந்து கேட்ட அதேநேரம் அலர் விஷ்வதேவிற்கு அழைத்திருந்தாள்.
“சொல்லுங்க அண்ணி”
“விஷ்வா வீடியோ பார்த்தீங்களா..? நீங்க எங்க இருக்கேங்க லொகேஷன் சொல்லுங்க..?” என்று கேட்கவும் இடத்தை சொன்னவன்,
“பார்த்துட்டேன் அண்ணி இதுவரை வழியில எங்கயும் ஆக்சிடென்ட் நடந்த மாதிரி தெரியலை அப்படி இருந்தா நான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனை தாண்டி மின்னல் வேகத்தில் கார் ஒன்று பறந்து சென்றது..
வழக்கத்திற்கு மாறான வேகத்தில் கார் செல்வதை கண்ட விஷ்வா, “அண்ணி நான் கூப்பிடுறேன்” என்றுவிட்டு தன்னை முந்தி சென்ற காரை பின்தொடர அலர் உதய்யின் கார் புகைப்படத்தையும் எண்ணையும் மெசேஜ் செய்திருந்தாள்.
“தேவ் அப்போ அந்த கார் தானா..?” என்றார் வித்யா.
“இருக்கலாம ம்மா” என்றவன் தன் வேகத்தை அதிகரிக்க அவனை முந்திக்கொண்டு அசுரவேகத்தில் சென்றது சரத்தின் லாரி!! அதன் பின்னே மற்றொரு கார் துரத்தியது.
லாரியை கண்டதும் இனி தான் விபத்து நடக்க போகிறது என்பதை யூகித்தவன் “ம்மா பாப்பாவை வர்ஷுகிட்ட கொடுத்துட்டு நீங்க பத்திரமா உட்காருங்க…” என்றவன் பின்வரும் வாகனங்களை பார்த்தவாறே,
“ப்பா கண்ட்ரோல் ரூம்க்கு இன்ஃபார்ம் பண்ணுங்க, அண்ணிக்கும் சொல்லிடுங்க” என்றவன் லாரியை துரத்த விஷ்வாவை முந்திக்கொண்டு ஒரு கார் சென்றது.
“அண்ணா அந்த கார் தான் அண்ணி பிக்சர் நம்பர் அனுப்பி இருக்காங்க”
“ஓகே வர்ஷு உன்னால கேப்சர் பண்ண முடியுமா..?” என்று தங்கை கையில் இருந்த குழந்தையை பார்த்தவாறே கேட்க தன் கைபேசியை எடுத்த வித்யா “நான் பண்றேன் தேவ்… நீ கவனமா போ” என்றவர் முன்னே செல்லும் லாரியை வீடியோ எடுக்க தொடங்கினார்.
இன்னும் வேகம் கூட்டியவன் தன் முன்னே இருந்த காரை முந்திக்கொண்டு செல்ல அவனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த காரில் இருந்த யூடியூபர்கள் வேலு சொன்னது போலவே ஆரம்பத்தில் இருந்து சரத்தின் முகமும் உதய் முகமும் தெரியும் வண்ணம் காணொளி எடுத்தவர்கள் அவர்களின் வேகம் அதிகரிக்கவும் சற்று திண்டாடிப்போனார்கள்.
உதய் செல்லுமிடத்தை gps மூலமாக ட்ராக் செய்து கொண்டிருந்த ருத்ரவேலன் அவன் வாகனத்தின் ஸ்பீட், மூவிங் டைமை கண்காணித்து கொண்டிருந்தான்.
அவர்கள் நிர்ணயித்து இருந்த இடத்தை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கும் நிலையில் உதய் இன்னும் ராகவனுக்கு அழைக்காததை கண்டு அதிர்ந்து போன ருத்ரவேலன் வேலூரை தாண்டிகொண்டிருந்த நிலையில் ராகவனுக்கு அழைத்து,
“மாம்ஸ் கால் பண்ணுங்க..” என்றான் பதட்டத்தோடு…
“உதய் இன்னும் சொல்லலையே வேலு…”
“உதிண்ணா மறந்துட்டாங்க போல நீங்க அவனுக்கு கால் பண்ணி டைவர்ட் பண்ணுங்க” என்று அவசரமாக சொன்னவன் உதய்க்கு ப்ரைவேட் கால் செய்து ஸ்பாட் வந்துவிட்டதை நினைவூட்டினான்.
“ஹ்ம்ம் நியாபகமிருக்கு வேலு” என்றவனின் மனம் முழுக்க பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்க ராகவனுக்கு அழைக்க வேண்டியதை சுத்தமாக மறந்திருந்தான். அந்தளவு சரத் உதய்யை தன்னியல்பில் இருந்து விலக செய்திருந்தான்.
‘இத்தனை வருடங்களாக கார் ஓட்டிக்கொண்டு இருப்பதால் உதயாதித்தனின் கையும் காலும் தன் போக்கில் லாவகமாக இயங்கி கொண்டிருந்தது’ என்று தான் சொல்லவேண்டும்.
‘நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதற்கு…? மனிதன் போடும் கணக்கு ஒன்றாக இருந்தால் தெய்வத்தின் கணக்கு வேறாக அல்லவா இருக்கிறது..!’
சிவசங்கரனுக்கு அழைத்த அலர் நிலவரத்தை கேட்டுக்கொண்டிருக்கும் போதே லாரியை பின்தொடர்ந்து வந்த யூடியூபர்களின் கார் டயர் வழியில் பங்சராகி தாறுமாறாக ஓடவும் அதை கட்டுக்கொள் கொண்டு வந்து ஓரமாக நிறுத்தியவர்களில் இருவர் மற்ற கார்களில் ஏறிக்கொண்டு தொடர அதற்குள் லாரிக்கும் அவர்களுக்குமான தூரம் வெகு தொலைவு சென்றுவிட்டது.
அதுமட்டுமல்ல அவனை காப்பாற்ற வேண்டியவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்று அவசரமாக ரோட்டை கடக்க பார்த்த இருவர் குறுக்கே வந்ததில் சட்டென ப்ரேக் போட்டும் அவர்மீது இடித்துவிட்டதில் கீழே விழுந்தவர்களுக்கு நெற்றியில் ரத்தம் பீறிடவும் அவரை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்குள் அங்கே கூடிய கூட்டம் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டு நகரவிடாமல் செய்திருந்தது.
இப்போது விஷ்வதேவிற்கும் லாரிக்கும் நாற்பது அடி தொலைவு என்றால் உதயாதித்தனின் காருக்கும் லாரிக்கும் இருபது அடி தொலைவு மட்டுமே…
ராகவன் அழைத்ததில் லாரியின் வேகம் குறைந்ததை கண்டுகொண்ட உதய் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த தன்னுடைய காரின் வேகத்தையும் குறைக்க இப்போது உதய்க்கும் லாரிக்குமான இடைவெளி சற்று அதிகரித்தது.
அதில் இன்னும் வேகத்தை குறைத்து ஆட்டோ மோட் போட்டுவிட்டு பக்கத்து சீட்டிற்கு இடமாறி இருந்தான். இங்கே ஃபோனில் உதய் பேசுவதை கேட்ட சரத்திற்கு ஆவேசம் கண்களை மறைக்க இருமடங்கு வேகத்தோடு சென்றான்.
இப்போது இருவாகனங்களுக்கு இடையில் சில அடி தூரங்கள் மட்டுமே இருப்பதை கண்டுகொண்ட உதய் கதவின் கைபிடியில் கை வைத்து பொசிஷனில் தயாராக இருக்க அடுத்த சிலநொடிகளில் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி ஓரடியாக குறையுமுன் லாவகமாக அவன் வெளியில் குதித்த இரண்டாவது நொடி அசுரவேகத்தில் வந்த லாரி காரை அடித்து தூக்கிட அது கட்டுப்பாட்டை இழந்து பேரிக்கார்டை இடித்துக்கொண்டு சாலையின் மறுபுறம் சென்று கவிழ்ந்தது.
எதிர் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரியும் குறுக்கே விழுந்த காரை எதிர்பாராமல் வேகத்தை சட்டென கட்டுபடுத்த முடியாமல் காரை இழுத்துக்கொண்டு சில அடி தூரங்களுக்கு சென்ற பின்பே நிறுத்திட காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியிருந்தது.
இடித்த வேகத்தில் கார் கவிழ்ந்ததை வெற்றி சிரிப்போடு பார்த்தவன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்ப வேலுவின் உத்தரவின் படி அங்கே இருநூறு பைக்கர்ஸ் அவன் வரும் வழியை தடை செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே காவல் துறை வாகனம் அங்கே காத்துக்கொண்டிருந்தது.
‘ஆம் இதுவும் ருத்ரவேலனின் ஏற்பாடே..!’ முன்னறிவிப்பு இன்றி எந்த அனுமதியும் பெறாமல் இப்படி கும்பலாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பது தவறு என்று தடுத்து நிறுத்தியிருந்தார் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்… அவர் மட்டுமல்ல அங்கு விபத்து நடக்கவிருக்கும் செய்தி பரவியதில் மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர்.
************************
சாலையோரம் ரோட் பேட்ச் வொர்க் முடிந்து ஜல்லியும் மணலும் கொட்டி வைக்கபட்டிருந்த இடத்தை தான் ருத்ரவேலன் தேர்ந்தெடுத்து இருந்தான். உதய் சரியான நேரத்தில் குதித்திருந்தாலும் அப்போது அவன் மனம் கொண்டிருந்த அல்லாட்டத்தினால் மணல் மீது குதிப்பதற்கு பதிலாக ஜல்லி மீது குதித்ததில் சற்று பிசகி போனது அவன் கணிப்பு.
அழுத்தி கையை ஊன்றும் போது ஜல்லியில் பிடிப்பு ஏற்படாது கைமூட்டில் பெரும் வலி எடுப்பதை உதய் உணர்ந்திருந்தான். அதிலிருந்து உருண்ட உதய் கீழே செல்ல அவசரமாக வர்ஷுவையும் வித்யாவையும் இறக்கிவிட்ட விஷ்வா, “வர்ஷு டேக் கேர் ஆஃப் ஹிம், ம்மா ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க” என்றவன் அதிவேகமாக சரத்தை விரட்டி செல்ல அடுத்த ஐந்தாவது நிமிடம் அலர் செய்திருந்த ஏற்பாட்டின் படி ஆம்புலன்ஸ் அங்கே வந்திருந்தது.
அதேவேளை பைக்கர்ஸ் சப் இன்ஸ்பெக்டரோடு வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கி இருந்தனர்.
தூரத்தே லாரி தெரியவும், “இப்போ என்ன தான் சொல்ல வரீங்க எங்களை எல்லாம் அரெஸ்ட் பண்ணனுமா பண்ணிக்கோங்க, இல்ல ஃபைனா போட்டுக்கோங்க” என்றிட இன்ஸ்பெக்டருக்கு ருத்ரவேலனிடம் இருந்து அழைப்பு.
“ஸார்” என்றவர் நிலவரத்தை சொல்லவும்,
“யோவ் கொடுக்கற எந்த வேலையாவது உருப்படியா செஞ்சிருக்கியா நீ..?” என்று எகிற,
“ஸாரி ஸார் என்ன செய்யணும் சொல்லுங்க அப்படியே செய்யறேன்” என்ற நொடி புல்லட்டுகளின் பின்னே வந்து நின்ற லாரி ஹாரனை பலமாக ஒலிக்கவிட்டது.
“ஃபோர் வீலர் போறதுக்கு மட்டும் வழியை விட்டு போக சொல்லு” என்று சொல்லிக்கொண்டிருக்க பின்னே சலசலப்பு..!
“என்னய்யா அது சத்தம்..?”
“தெரியலை ஸார்”
“இதை சொல்லவா கேட்டேன்…? நீயெல்லாம் என்னன்னு ட்ரைனிங் முடிச்சிட்டு வந்த ஒவ்வொன்னும் நான் சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு..? போ.. அங்க என்ன பிரச்சனைன்னு போய் பார்த்துட்டு எனக்கு கூப்பிடு” என்று சொல்ல,
வழிநெடுக நிறுத்தியிருந்த பைக்குகளை தாண்டி செல்ல அங்கே லாரியில் இருந்த சரத்தை இழுத்து போட்டு அடித்துக்கொண்டிருந்தான் விஷ்வதேவ்.
“யாருடா நீ எதுக்கு என்னை அடிக்கிற..?” என்று சரத் அவனிடமிருந்து தப்பிக்க முயல விடாமல் பிடித்து லாரியோடு அவனை சாய்த்தவன் தன்னிடம் இருந்து திமிரியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து சரத்தை காரில் இழுத்து போட முயன்றான்.
அதற்குள் பைக்கர்ஸ் கவனம் இங்கே திரும்பிட சப்இன்ஸ்பெக்டரும் அங்கே வந்துவிட்டார். காக்கி சட்டையை கண்டதும், “ஸார் வழியில ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டான் ராஸ்கல்”
“ஆக்சிடென்ட்டா..!! எங்கே..?” என்றவருக்கு விஷ்வா கையில் இருந்தவனை கண்டதும் அப்போது வந்து வீடியோ நினைவில் வர,
“நீங்க யாரு..? உங்களுக்கு எப்படி தெரியும்…?”
“ஐ ஆம் டாக்டர் விஷ்வதேவ்..! இவனை முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க ஸார் நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன்…” என்று சொல்லிகொண்டிருக்க அத்தனையும் அங்கே இருந்த நபர்களால் கச்சிதமாக வீடியோ எடுக்கப்பட்டு உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றபட்டிருந்தது…
அவர்களில் சிலர் ‘விபத்து’ என்றதும் தங்கள் பைக்கை திருப்பிக்கொண்டு பார்க்க அங்கே உதயாதித்தனை ஆம்புலன்சில் கொண்டு செல்வதையும் அவன் கார் அப்பளமாக நொறுங்கி கிடப்பதையும் கண்டவர்கள் உடனே அதையும் வீடியோ எடுத்து பகிர்ந்திட காவல்துறையினர் படை எடுத்திருந்தனர்.
***************************
சாலையை ஆக்கிரமித்து இருந்தவர்களை விலக்கி ருத்ரவேலன் அடுத்த இருபது நிமிடத்தில் ஸ்பாட்க்கு வந்துவிட விலங்கிட்டு ஜீப்பின் பின்புறம் அமர்த்தபட்டிருந்த சரத் “தான் விபத்து ஏற்படுத்தவில்லை” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே யூடியூபர் வீடியோவை கொடுத்து உறுதிபடுத்த ஓங்கி சரத்தை அறைந்த ருத்ரவேலன், “மூச்!!! மூடிட்டு உட்காரனும்…” என்றதில் அதிர்ந்தவனுக்கு வார்த்தை எழவில்லை.
“இன்னும் என்னையா பார்த்துட்டு இருக்க க்ரவுடை க்ளியர் பண்ணு” என்றவன் பைக்கர்களில் ஓரிருவரை மட்டும் இருக்குமாறு சொல்லிவிட்டு மற்றவர்களை கிளம்ப சொன்னவன் சரத்திடம் வர,
“நான் யார் தெரியுமா..? இப்பவே என்ன பண்றேன் பாரு” என்று சட்டையில் இருந்த கைபேசியை எடுக்க அதை பறித்த வேலு சத்தமே இல்லாமல் ஜீப்பின் டயருக்கு அடியில் நகர்த்தி விசில் அடித்து நகர்ந்து நிற்க டிரைவர் ரிவர்ஸ் எடுத்து ஜீப்பை திருப்பி நிறுத்திட அதில் அவன் கைபேசி சில்லுசில்லாக சிதைந்து போனது.
விஷ்வா வித்யா பகிர்ந்திருந்த வீடியோவை வேலுவிடம் கொடுத்து நிகழ்ந்ததையும் முழுதாக சொல்லி முடிக்கவும் உடனே அதை சமூக வலைதளங்களில் பகிர அங்கே சரத்திற்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு அவனை தப்பிக்க விடாமல் காவல் துறையினர் நேர்மையாக செயலாற்ற வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்திருந்தது.
“நேரில் பார்த்த சாட்சி இப்போதைக்கு நீங்க தான் டாக்டர்! அதனால எப்போ கூப்பிட்டாலும் சாட்சி சொல்ல வேண்டி இருக்கும்” என்று சொல்ல ‘எங்கு வேண்டுமானாலும் வருவதாக கூறியவன்’ ஏற்கனவே அலர் சொல்லியதன் பேரில் ஆம்புலன்ஸ் வந்திருக்க வித்யாவும் வர்ஷுவும் உதய்யோடு மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நிலையில் தந்தையை அழைத்துக்கொண்டு ருத்ரவேலனோடு சென்றான்.
சரத் கிடைத்த விடயத்தை மேலதிகாரிகளுக்கு சொல்லிய வேலு உடனே அவனை மேஜிஸ்ட்ரேட் முன்னே நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை தூரிதமாக செய்திருந்தவன் அடுத்த ஒருமணி நேரத்தில் சரத்தின் குற்றங்களை ஆதாரத்தோடு சாட்சிகளை கொண்டு நிருபித்து அவனை கோர்டில் ஒப்படைத்து காவலில் எடுத்திருந்தான்.
‘தளிர் திருமணம் செய்ய இருந்த தொழிலதிபர் உதயாதித்தனை கொலை செய்ய முயன்ற சரத் பிடிபட்டான்!! தன் உயிரை பணயம் வைத்து துரத்தி பிடித்த டாக்டர் விஷ்வதேவ்!! குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்து தன் கடமையை சிறப்பாக செய்த காவல்துறை ஆய்வாளர் ருத்ரவேலன்’ என்று நால்வர் குறித்து வேகமாக பரவி செய்தி ஊடங்கங்களிலும் சரத் பேசிய காணொளியோடு வெளிவர உதய் மீதான தாக்குதல் மக்களிடையே பேசுபொருளாகி போயிருந்தது.
உடனுக்குடன் செயல்பட்டு குற்றவாளியை உடனே கைது செய்ததற்கு ருத்ரவேலனுக்கு அனைத்து புறமிருந்தும் பாராட்டுகள் குவிய மறுபுறம் உயிரை பணயம் வைத்து சரத்தை துரத்தி பிடித்த விஷ்வாவும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தான்.
விஷ்வாவிற்கு அழைப்பு வந்துகொண்டே இருந்த நிலையில் தந்தையிடம் கொடுத்துவிட்டு மற்ற சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு முதலில் சென்றது உதய் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு தான்..!
மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்து வலது கரத்தில் ஏற்பட்டிருந்த மைல்ட் பிராக்சருக்கு கட்டு போட்டிருந்தார்.
விபத்து நடந்ததும் உதயாதித்தனை மடியில் ஏந்திய வித்யாதேவி வர்ஷு முதலுதவி அளித்தபின் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்கும் போதும் உடன் இருந்து உதவியவர் அவனை விட்டு இம்மியும் அகலவில்லை.
ஏனோ நேற்று அலர் மூலமாக தான் விரும்பும் பெண் மீது அவன் கொண்ட நேசம்… எத்தகைய சூழ்ச்சி, ஆபத்து என்று எது சூழ்ந்த போதும் அவளை விட்டு விலகாது அவளுடன் நின்றவனை வித்யாவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.
வித்யா அலர்விழிக்கு அழைத்து உதயாதித்தனிடம் கொடுக்க பேசி முடித்தவன் புன்னகையோடு “உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேனா ம்மா” என்று கேட்க அவன் எழுந்து அமர உதவி செய்து தலையணையை பின்புறமாக வைக்க உதய் சாய்ந்து அமர்ந்தான்.
“அப்படியெல்லாம் இல்ல ப்பா… உனக்கு வலி எப்படி இருக்கு..?” என்றவர் அவனது சோர்ந்த முகத்தை கண்டே அவன் பசியை உணர்ந்தவராக வர்ஷுவை உணவு வாங்கி வர சொல்லி தன் கையால் ஊட்டிவிட உதய்யும் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.
மாசுமருவற்ற உதயாதித்தனின் முகத்தை கண்டவருக்கு தன் மகனையும் அவனையும் வேறாக பிரித்து பார்க்க தோன்றவில்லை… அப்படி ஒரு பாசப்பிணைப்பு அந்த சில மணி நேரங்களிலேயே வித்யா, உதய் இருவருக்குமிடையில் தோன்றி இருந்தது.
“அம்மா என் ஃபோன் எங்கே..?” என்று உதய் கேட்க மேஜையில் இருந்து எடுத்தவர்,
“யாருக்கு சொல்லு நான் டையல் பண்ணி கொடுக்கறேன்” என்று அவன் லாக் எடுத்துக்கொடுத்ததும் ராகவனுக்கு அழைக்க சொல்ல வித்யாவும் அப்படியே செய்து அவன் காதில் வைத்தார்.
அனைவரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டதை அறிந்தவன் “ம்மா இந்த ப்ளாக்கு எப்படி வரணும்னு சொல்லிடுங்க” என்றதும் அவரும் ராகவனிடம் வழி சொல்லிய அதேநேரம் அங்கே வந்து சேர்ந்தனர் விஷ்வாவும் சிவசங்கரனும்.
“ஹவ் ஆர் யூ ஃபீலீங்க் நவ் மிஸ்டர் உதய்..?” என்று விஷ்வா கேட்க அவனை தெரியாத உதய்யின் நெற்றி சுருங்குவதை கண்ட வித்யாதேவி “உதய் இது என் பையன் விஷ்வதேவ்” என்றார்.
“நைஸ் டூ ஸீ யூ ஸார்” என்று உதய் புன்னகைக்க,
“வர்ஷு எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் பார்த்தாச்சா..? எனி இஷுஸ்”
“நத்திங் டூ வொரி ண்ணா.. ரைட் எல்போ மைல்ட் க்ராக் அண்ட், அப்ராஸியன் (abrasion) ஸ்பாட்டட் ..” என்று அவனுக்கு ஏற்பட்டிருந்த காயங்களை பற்றி வர்ஷு கூற,
“சரிம்மா..! ஷோல்டர்ல மட்டும் பெயின் அதிகமா இருக்குண்ணா..” என்று சொல்ல, அவன் மருத்துவ குறிப்புகளை படித்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளையும் பார்வையிட்டு வர்ஷுவிடம் ஏதோ சொல்ல,
“நான் கொடுத்துட்டேன் ண்ணா…” என்றாள்.
“ஓகே! உதய் நத்திங் டூ வொரி… யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.. இந்த கட்டு கூட ஜஸ்ட் ஒரு இரண்டு வாரத்துல எடுத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே உதய்யின் குடும்பம் அவன் அனுமதிக்கபட்டிருந்த அறையினுள் நுழைந்தது.