சூரியன் சுட்டெரிக்கும் அந்த காலை வேளையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த யுவராஜின் காதில் புதிதாக ஒரு குரல் கேட்க, யாராக இருக்கும் என சிந்தித்துக் கொண்டே எழுந்து முகம் கழுவி வெளியே வந்தான்.
அவனைப் பார்த்ததும் உஷாராணி, “இதான் என் பையன் தரகரே, மிலிட்டரில இருக்கான்னு சொன்னேனே, நல்லா ராஜா மாதிரி இல்ல! என் பையனுக்கு ஏத்த அழகான பொண்ணா பாருங்க தரகரே. வசதி எதுவும் முக்கியம் இல்லை. என் பையனுக்கு பொருத்தமான பொண்ணா இருந்தா போதும்.” என அவர் கூறிக்கொண்டு இருப்பதை உள்வாங்கியவன், அவர் யார் என்பதை உணர்ந்து கொண்டான்.
தரகரிடம் விவரத்தை கூறி அனுப்பிய உஷா, யுவராஜுக்கு குளம்பியை கலக்கி எடுத்து வர, அதை வாங்கி ஒரு மிடறு பருகியவன், மேஜையின் மீது வைத்து விட்டு, அவரை கேள்வியாகப் பார்த்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவர், “தரகர் ராசா… நீதான் சம்மதம் சொல்லிட்டியே. சரி எதுக்கு லேட் பண்ணணும்? இப்ப பார்க்க ஆரம்பிச்சா தானே சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிக்க முடியும்.” என அவர் விளக்கம் கூற, எதுவும் கூறாது தலையை மட்டும் அசைத்து சிரித்தான் யுவா.
“ஏய்யா, இன்னைக்கு உனக்கு நட்சத்திர பிறந்தநாள். உனக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா?” என வினவினார் உஷா.
“இல்லயே ம்மா!” என உதட்டைப் பிதுக்கிய யுவராஜ், “பிறந்த நாளே எனக்கு ஞாபகம் இல்லை மா.” என்றான்.
“சரிய்யா… ஞாபகம் இல்லைன்னா என்ன? முருகன் கோவிலுக்கு ஓரெட்டு போய்ட்டு, சாமி கும்பிட்டுட்டு வாய்யா.” என உஷா கூற,
“ச்சு… ம்மா, பிறந்த நாள் அடுத்த மாசம் வருதுல்ல. அப்ப போயிக்கலாம்.” என யுவராஜ் மறுத்தான்.
“இல்ல ராசா, நட்சத்திர பொறந்த நாளுக்கு முருகன் கோவிலுக்கு போனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு டீவியில ராசிபலன் சொன்னாங்க.”
“ம்மா… இந்த ராசிபலன் எல்லாம் நம்பிக்கிட்டு.” என அவன் அலுத்துக்கொண்டான்.
“இந்த அம்மாவுக்காக போய்ட்டு வா, ராசா.” என உஷா மீண்டும் கூற, சரியென்று தலையை ஆட்டியவன், குளித்து முடித்து கிளம்பினான்.
தனது இருசக்கர வாகனத்தை அடுத்த தெருமுனையில் நிறுத்திய யுவராஜ், “டேய் மச்சான், இன்னைக்கு எந்த பிளானும் இல்லைன்னு சொன்ன. எங்கடா போறோம்?” என பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறே அவனது நண்பன் அஜ்மல் வினவினான்.
“நான் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன். பட், இன்னைக்கு எனக்கு நட்சத்திர பிறந்தநாள்னு அம்மா முருகன் கோவிலுக்கு போயிட்டுவான்னு கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சுட்டாங்க” என விளக்கமளித்தான் யுவா.
“டேய், நட்சத்திர பிறந்தநாளை உங்க வீட்ல ஞாபகம் வச்சு இருக்காங்களா? எங்க வீட்ல என் பொறந்த தேதியே மறந்துடுவாங்க டா.” என ஆச்சரியப்பட்ட அஜ்மல், “ஒத்த புள்ளையா பிறந்தா, ராஜ வாழ்வு தான் மச்சான். என்னை பாரு. நாலு பேரோட பொறந்து, எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டு இருக்கேன்.” என புலம்ப, யுவராஜ் சிரித்தான்.
ஈஸ்வர், உஷாராணிக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் வரை குழந்தை இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வம் இல்லை என்ற அளவுக்கு எல்லா கோயிலையும் ஒரு சுற்று சுற்ற, அவர்களை காக்க வைத்தே யுவராஜை பரிசளித்தார் கடவுள்.
அவனுக்கு அடுத்து அவர்களுக்கு வேறு குழந்தை இல்லை என்பதால், ஒரே மகன் என்று யுவராஜை சிறுவயதில் இருந்தே செல்லமாக வளர்த்தனர். ஆசைப்பட்ட அனைத்துமே அவனுக்கு வாங்கி கொடுத்தனர். அதனாலே கடவுள் பெரிய சோதனையை யுவராஜூக்கு தர தயாராக உள்ளார் போல!
“ஏன் டி… ஏன்? இந்த வேகாத வெயில்ல இப்ப என்னை இழுத்துட்டு போயிட்டு இருக்க நீ? அதான் உனக்கு பிடிச்ச சிநேகிதி தாரணி இருக்காளே. அவளை கூட்டிட்டு போக வேண்டியது தானே?” பேருந்து நெரிசலில் இழுபட்ட தனது துப்பட்டாவை இழுத்துக் கொண்டே பைரவி வினவினாள்.
“தாரணிக்கு ஏதோ வேலையாம் டி. அதான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.” என சம்யுக்தா கூற,
“ஓ… இல்லைன்னா, நான் உனக்கு தேவையில்லை, அப்படித்தானே?” என மூக்கை விடைத்துக் கொண்டு வினவும் பைரவியைப் பார்த்து சம்யுவிற்கு சிரிப்பு வந்தது.
“ஐயோ அறிவே! எங்கப்பா, ஹிட்லர் நம்பர் ஒன்னுன்னா, அவ அப்பா நம்பர் ரெண்டுடி. அவர்கிட்ட பதில் சொல்லி, அவளை கூட்டிட்டு வர்றது, மலையை பிளக்குறதுக்கு சமம் டி. பட், உங்கப்பா அப்டி இல்லை டி, நல்ல மனுஷன்.” என சம்யுக்தா விளக்கம் தர,
அதில் ஓரளவுக்கு சமாதானமான பைரவி, “ஹம்ம்… ஆமா, இப்ப கோவிலுக்குப் போறோம்னு பொய் சொல்லி, எங்க போயிட்டு இருக்கோம் நம்ம?” என அடுத்த கேள்வியை முன் வைத்தாள்.
“பொய் எங்கடி சொன்னோம்? கோவிலுக்கு தான் நம்ம இப்ப போறோம்.” என்றவள், “வாடி… அந்த சீட் காலி ஆகிடுச்சு.” என பைரவியை இழுத்துக் கொண்டு ஓர் இருக்கையில் அமர்ந்தாள்.
“என்னடி அதிசயமா இருக்கு? கோவிலுக்கு எல்லாம் எந்த காலத்துலயும் நீ வர மாட்டியே! இப்ப என்ன புதுசா?” என பைரவி ஆச்சரியப்பட்டாள்.
“அது ஒன்னும் இல்ல டி, தாரணி லாஸ்ட் டைம் என்னை கட்டாயப்படுத்தி முருகன் கோவிலுக்கு இழுத்துட்டு போனா. சரி நானும் பலிக்குதான்னு செக் பண்ண ஒரு வேண்டுதல் வச்சேன். பட், அதுல முருகன் பாஸ் ஆகிட்டாரு டி! அதான் அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்னு போறேன்.” என சம்யு கூறினாள்.
“அதான பார்த்தேன், திடீர்னு பக்தி முத்திடுச்சோன்னு நினைச்சேன்.” என பைரவி கூறிக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வர, இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி, கோவிலுக்குள்ளே நுழைந்தனர்.
“அடியாத்தி! என்னடி இது? ஊர்ல இருக்க எல்லா பயலுகளும் கோவில்ல தான் இன்னைக்கு குடி இருக்காங்க!” என சம்யுக்தா நெஞ்சில் கையை வைக்க,
“ஓ… அதான் எங்காத்தா காலையிலயே மங்களகரமா இருந்துச்சா? நான் கோவிலுக்கு போறேன்னு சொன்னதும், எங்கப்பா கிட்ட பர்மிஷன் எல்லாம் வாங்கி கொடுத்துச்சே! அப்பவே நான் சந்தேகப்பட்டு இருக்கணும். ச்சே… இந்த சம்யுக்தாவை ஏமாத்துறதே எங்காத்தாவுக்கு வேலையா போச்சு.” என புலம்பினாள் சம்யுக்தா.
அவர்களுக்கு அடுத்ததாக நின்று இருந்த யுவராஜின் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, அவளது பேச்சில் அவளை நோக்கி திரும்பியது. அஜ்மல் அலைபேசியில் தலையைப் புதைத்து இருந்ததால், அவன் இவற்றை கவனிக்கவில்லை.
“சரி விடு சம்யு… நன்றி சொல்லிட்டு, அடுத்த அப்ளிகேஷனை போட்டு விடு. வந்ததுக்கு அதையாவது செய்.” என்று பைரவி கூறினாள்.
“ஆமா டி. அதான், எங்கப்பா எனக்கு மாப்ளை பிடிச்சு இருந்தா தான் கல்யாணம்னு சொல்லிட்டாரே! நானா ஒரு மூனு மாப்ளையை ரிஜெக்ட் பண்ணிடுவேன் டி. நாலாவதும் வேண்டாம்னு நானே ரிஜெக்ட் பண்ணா, என்ற அம்மா வீட்டுக்காரரு, திருப்பாச்சி அருவாவை எடுத்து ஓட ஓட வெட்டிடுவாரு.
அதான், அடுத்து வர்ற ஒரு மூனு மாப்ளைங்க, அவங்களே என்னை பிடிக்கலைன்னு சொல்லணும்னு வேண்ட போறேன் டி! ஏழாவதா எங்கப்பா வேற மாப்ளை பார்க்குறதுக்குள்ள நான் அழுது சீனை போட்டு, கல்யாணத்தை நிப்பாடிடுவேன் டி. அப்படியே அடுத்த ரெண்டு வருஷத்துக்கு கல்யாணத்தை தள்ளி போட்டுடலாம்.” என சம்யு தனது திட்டத்தைக் கூறினாள்.
“அட, என் ஐடியா மன்னியே, சுப்பர் டி. ஒரு வேலை முருகன் உன்னோட ரெண்டாவது வேண்டுதலை ரிஜெக்ட் பண்ணி, வர்ற மாப்ளை உன்னை ஓகே பண்ணிட்டா, என்ன டி பண்ணுவ?” என பைரவி லாவகமாக வினவினாள்.
“ம்ப்ச்… அப்டி ஓகே பண்ணா கூட, அவனை வீட்டுக்கு கூப்ட்டு சமைச்சு போடுறேன்ற பேர்ல சாப்பாடுல உப்பையும், குழம்புல மிளகாய் தூளையும் போட்டு சாப்பிட குடுப்பேன். வெளியே எங்ககேயாவது போகலாம்னு சொல்லி, லேட் பண்ணி போவேன். இல்லை வேணும்னே, வராம போயிடுவேன்.
அப்டியே போனாலும், என்கிட்ட இருக்குறதுலயே மட்டமான ட்ரெஸ்ஸா போட்டுட்டு போவேன். அவங்க அப்பா, அம்மாவுக்கு மரியாதை கொடுக்காத மாதிரி நடிப்பேன். இதெல்லாம் மீறியும் அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பானா என்ன?” என வினவினாள் சம்யுக்தா.
“அட்ரா சக்கை… நீ ஒரு ஐடியாமணி டி சம்யு!” என பைரவி அவளை புகழ,
அதில் சிரித்தவள், “போதும்டி பாராட்டுனது. வரிசையை பாரு.” என அவள் கூற, முன்னே இருவரும் நகர்ந்தனர்.
சம்யுவின் பேச்சைக் கேட்ட யுவராஜின் விழிகள் அவளை சுவாரஸ்யமாக நோக்கியது. நீல வண்ணத்தில் வெள்ளை பூப்போட்ட சுடிதார் அணிந்து, அதற்கு சற்றும் பொருந்தாத வளையல் ஒன்றும், கைக்கடிகாரம் ஒன்றும் அணிந்து இருந்தாள்.
காதில் அணிந்து இருப்பதே தெரியாத அளவுக்கு, தங்கத்தோடு ஒன்றை அணிந்து இருந்தாள். ஆனால், முகம் ஓரளவுக்கு நல்ல திருத்தமாக இருந்தது. அவளைப் பார்த்தவன், ‘பக்கா கேடியா இருப்பா போல!’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் யுவராஜ்.
“அப்படியும் உன்னை அவன் கட்டிப்பேன்னு அடம்புடிச்சா என்ன பண்ணுவடி?”
“அப்படியும் அவன் என்னை கட்டிக்கிறேன்னு சொன்னா, அவன்கிட்ட ரெண்டு கேள்வி கேப்பேன்டி. நான் மனசுல நினைச்சதையே அவன் சொல்லிட்டான்னா, சரின்னு அவனை கல்யாணம் பண்ண ஓகே சொல்லிடுவேன்டி!”
“ஹம்ம்… சரிடி. வா, சாமியை கும்பிட்டு, பிரசாதத்தை வாங்குவோம்.” என்ற பைரவி முன்னேற, சாமியை தரிசித்து விட்டு இருவரும் பிரசாதத்தை வாங்கி ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினர்.
யுவராஜூம் அஜ்மலை இழுத்துக் கொண்டே, அவர்களுக்கு அருகில், அவர்களது கண்ணை உறுத்தாத வகையில் அமர்ந்தான். அங்கேயும் அவர்களது உரையாடல் தொடர, அதை கேட்டுக்கொண்டே அமர்ந்து இருந்தான் யுவா.
அவர்கள் கிளம்பும் வரை அவனது கண்கள் சம்யுக்தாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், இதுவரை பெண்களிடம் அவ்வளவாக பேசியிராதவனுக்கு, வலியச் சென்று பேச மனம் வரவில்லை. அவர்கள் கிளம்பும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவன், பிறகு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
“மச்சான் எழுந்திரி டா.” என ஹிரித்திக்கின் போர்வையை செல்வா இழுக்க,
அதை அவனிடம் இருந்து பறித்த ஹிரித்திக், முகத்தை மூடிக்கொண்டு, “டேய்! மண்டேல இருந்து தானே நாம ஆபிஸ்ல ரிப்போர்ட் பண்ணணும். இப்பவே ஏன்டா என் உசுரை வாங்குற?” என தூக்கத்திலே வினவினான்.
“டேய்! சாட்டர்டே, சண்டே இங்க சுத்தி பார்க்கலாம் டா மச்சான். இந்த ஏரியாவுக்கு நம்ம புதுசு தானேடா? சுத்தி பார்க்க நிறைய பிளேஸ் இருக்கு போலடா… நான் கூகுள் மேப்ல பார்த்தேன். வாடா என்ஜாய் பண்ணலாம்.”
“ச்சு… நான் ரூம்குள்ளவே தூங்கி என்ஜாய் பண்றேன். நீ சுத்தி பார்த்து என்ஜாய் பண்ணுடா.” என ஹிரித்திக் விட்ட தூக்கத்தை தொடர,
“இப்டி சொன்னா எல்லாம் நீ கேட்க மாட்ட டா.” என அவனை தரதரவென இழுத்து குளியலறைக்குள் விட்டுவிட்டு, உடையைக் கொடுத்து வெளியே தாழ்ப்பாள் போட்டான் செல்வா.
“டேய் மச்சான், ஒழுங்கா பத்து நிமிஷத்துல வர்றடா.” என்றவன், ஓர் அறை தள்ளி இருக்கும் பாபுவின் அறைக்குச் சென்று அவனையும் அழைத்து வர, ஹிரித்திக் கடனே என்று தயாராகி அமர்ந்து இருந்தான்.
பாபு, “என்ன பாஸ்… இன்னும் தூக்கம் போகலையா?” சிரித்துக் கொண்டே வினவ,
“இல்லை பாஸ். கொஞ்சம் டிராவல் டயர்டு. அதான்…” ஹிரித்திக் ஒரு அசட்டு சிரிப்புடன் பதிலளித்தான்.
“மச்சான், நம்ம ஃபர்ஸ்ட் ஜும்மா மசூதிக்கு போகலாம்டா.” என்று செல்வா கூற, மூவரும் மசூதியை நோக்கி பயணமாகினர். பாபு அவர்களுக்கு துணையாக இருப்பதால், எளிதாக அவர்கள் மசூதியை அடைந்தனர்.
வெள்ளை பளிங்கு மாளிகை போல இருந்த இடம், அவர்களை ஆச்சரியப்படுத்தியது. அதைச் சுற்றி பார்க்கவே பாதி நாள் முழுவதும் செலவாகிவிட்டது.
அடுத்து ஒரு உணவகத்திற்குச் சென்று உண்டு விட்டு, அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அங்கே ஏராளமான பெண்கள் வளைய வர, அவர்களை எல்லாம் ஆர்வமாக பார்த்த செல்வா, “மச்சான், செமையா இருக்குதுங்களே! ஒரு வருஷத்துல எப்டியாவது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி, நம்ம ஊருக்கு கூட்டிட்டு போயிடணும் டா.” என்று கூறினான்.
ஹிரித்திக்கின் கண்கள் அவர்களை அசுவாரஸ்யத்துடன் மேய்ந்தது. “ம்ப்ச்… என்ன இருந்தாலும், தமிழ்நாட்டு பொண்ணுங்க தான்டா அழகே.” என்று ஹிரித்திக் ரசனையுடன் கூறினான்.
“இன்னும் நீ இட்லி, தோசைன்னே இருடா. நான் போய், நாண், சப்பாத்தியை டேஸ்ட் பண்றேன்.” என செல்வா நகர்ந்தான்.
“மொழி தெரியாத ஊர்ல அடி வாங்கிடாதடா.” என்று ஹிரித்திக் கூறுவதைக் காதில் வாங்காதவன், கூட்டத்தில் கலந்தான்.
ஹிரித்திக்கின் தோளில் கையைப் போட்ட பாபு, “என்ன பாஸ்? சொந்த ஊர்னா ரொம்ப பிடிக்கும் போல, இங்க வந்ததுல இருந்தே உங்க மூஞ்சி சரியில்லையே?” என்று வினவ,
“கொஞ்சம் இஷ்டம் இல்லாமத்தான் வந்தேன் பாஸ். நான் வீட்ல மூனாவது பையன். சோ, ரொம்ப செல்லம். போகமாட்டேன்னு அடம்புடிச்ச என்னை, வம்படியா அனுப்பி விட்டுட்டாங்க.” ஹிரித்திக் சிரித்துக் கொண்டே கூறினான்.
“ஹாஹா… சரி விடுங்க பாஸ். இப்ப அடுத்து நாம போகப்போற இடம் செம்ம மாஸா இருக்கும். உங்களோட வருகையை செலிபிரேட் பண்ண வேண்டாமா?” என்று பாபு வினவினான்.
“இருங்க பாஸ்… என்கூட வந்த நாய் எங்க சுத்திட்டு இருக்குன்னு தெரியலை.” என கூறிக்கொண்டே, செல்வாவிற்கு அழைப்பு விடுத்தான் ஹிரித்திக்.
அவர்கள் அருகே வந்த செல்வா, “ஹே மச்சான்… ஷி இஷ் மை நியூ ப்ரண்ட் நீரஜா.” என ஒரு பெண்ணை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, மற்ற இருவரும் அவனைப் பார்த்து வாயைப் பிளந்தனர்.
அவளை அனுப்பி வைத்த செல்வா, “மச்சான், அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும். சரி நெக்ஸ்ட் நம்ம பிளான்?” என வினவ,
“அது சர்ப்ரைஸ் செல்வா, அங்க போனா தெரியும்.” என்று அவர்களை அழைத்துச் சென்றான் பாபு.
‘தி பாய்ஸன் லாங்கி.’ என ஆங்கில எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அந்த கிளப் அந்த செக்டாரின் பிரதான சாலையில் ஜொலித்துக் கொண்டு இருந்தது.
அவர்கள் உள்ளே நுழைய, சிவப்பு வண்ணம் மட்டுமே நிறம் என்பது போல எங்கும் சிவப்பு மயமாக இருக்க, செல்வா, “வாவ் பாபு! செம்மையா இருக்கே!” என வாயைப் பிளக்க, ஹிரித்திக்குமே சற்று ஆச்சரியமாகத் தான் பார்த்தான்.
“இந்த க்ளப் இங்க ரொம்ப பேமஸ், லெட்ஸ் என்ஜாய்!” என்று பாபு உள்ளே நுழைந்து மதுக்கோப்பையை வாயில் சரிக்கத் துவங்கினான். செல்வாவும் மதுவை அருந்த துவங்கினான்.
ஹிரித்திக் ஒரு பழச்சாறை மட்டும் வாங்கிக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்தவன், சுற்றி இருப்பவர்களை நோட்டமிட துவங்கினான். முட்டிக்கு கீழே உடை என்பது லோகத்திலேயே இல்லை என்பது போல குட்டை பாவடைகளும், சின்ன காற்சட்டையும், கையில்லாத ஆடையுமாக பெண்கள் கூட்டம் நடனமாடி கொண்டு இருந்தனர்.
மொத்தத்தில் ஒரு ஆபாச உலகம் என்பது போல இருந்தவற்றை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து விட்டு தனது பழச்சாறில் கவனமானான் ஹிரித்திக்.
அவன் அருகில் வந்த செல்வா, “டேய் மச்சான்! இந்த கருமம் புடிச்ச ஜூஸை குடிக்குறதுக்காகவா டா இங்க வந்தோம்? இந்தா, இதை குடி டா!” என அவனிடம் மதுக்கோப்பையை தர, அதை வாங்க மறுத்தவன், “இல்லடா, இதுவே போதும்.” என்றான்.
“சரி மது வேணாம், மாது ஓகேவா டா? போய் டான்ஸ் ஆடு டா. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுடா. இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் இனிமே கிடைக்குமோ, கிடைக்காதோ? அனுபவிடா!” என்று கூறிய செல்வா, அந்தப் பெண்கள் மற்றும் ஆண்களுடன் சேர்ந்து நடனமாட துவங்கினான். பாபுவும் உடன் சேர்ந்து ஆட, ஹிரித்திக் அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
இப்போது மட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளில் எத்தனையோ அழகான பெண்களைக் கடந்தும், அவனது கண்கள் ஒரு பெண்ணை கூட சுவாரஸ்யத்துடன் கடக்கவில்லை என்பது அவனது சுய அலசலில் கண்டுபிடித்த ஒன்று.
‘சரி, தனக்கான ஒரு பெண்ணைக் காணும்போது அவளிடம் ஈர்ப்போ, காதலோ வெளிப்படும்’ என்று அந்த ஒருத்தியை சில மாதங்களாக தேடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்காக அந்த ஒருத்தி அவன் கண்களில் எப்போது படுவாளோ?
குவளையை கொடுக்க திரும்பிய ஹிரித்திக்கின் கண்கள் நாற்காலியில் அமர்ந்து இருந்த பெண்ணில் நிலைத்தது. இந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு சல்வார் அணிந்து, பழச்சாறை அருந்திக் கொண்டு இருந்தாள் அப்பெண். அந்த முகம் எங்கேயோ பார்த்தது போல ஹிரித்திக்கிற்கு தோன்ற, அவள் அருகில் சென்றான்.