“ஆமா ப்ரி..! மாமியோடது போலவே எனக்கு குட்டியா எடுத்துட்டார் எங்க தாத்தா.. உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா..?”
“என்னது..?” என்றவர்களுக்கு தினமும் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் வைஷு மூலமாக தளிர்புராணம் கேட்பதில் அலாதி ப்ரியம். வைஷுவும் அவர்களை ஏமாற்றாமல் ‘மாமி எனக்கு சான்வெஜ், கட்லெட் செய்து கொடுத்தாங்க யம்மியா இருந்தது, நீங்க டேஸ்ட் பண்ணினா உங்களுக்கும் பிடிக்கும்..’ என்று தளிருடனான நிமிடங்களை பகிர்ந்து தன்னையறியாமலே அவர்களின் ஏக்கம் கூட்டிவிடுவாள்.
“இன்னும் என்ன சொல்லு வைஷு..”
“நானும் தளிர் மேம்மும் ஜூவல்ல மட்டும் சேம் பின்ச் இல்ல டிரஸ்கூட எங்க இரண்டு பேருக்கும் சேம் கலர் தெரியுமா..?” என்பவள் மேம் மாமி இரண்டுக்கும் இடையில் அல்லாடி கொண்டிருக்கிறாள்.
“அப்படியா? ஏய் என்ன கலர் சொல்லுப்பா நானும் மம்மி டேடிகூட வரும்போது சேம் கலர் போட்டுட்டு வரேன்” என்று ஆவலோடு கேட்க..,
“மேம் உனக்கு மாமியா எனக்கு மாமியா..? நீ எதுக்கு போட்டுட்டு வரணும்..? நான் தான் மாமி பக்கத்துலயே ஸ்டேஜ்ல இருப்பேன்” என்றதில் ரித்திகாவின் முகம் வாடிப்போனது.
“ப்ளீஸ் வைஷு சொல்லுப்பா நாங்க உன் ப்ரெண்ட்ஸ் தானே நாம எல்லாரும் சாட்டர்டே சேம் கலர் ட்ரெஸ் தானே போடுவோம் இப்போ ஏன் இப்படி பேசுற..? அப்போ நீ எங்க பிரெண்ட்ஸ் இல்லையா..??” என்று ப்ரியஷனா கேட்கவும்,
“சொல்லு வைஷு நீ எங்க பிரெண்ட் இல்லையா..? இப்போ நீ என்ன கலர்ன்னு சொல்லலைன்னா உன் பேச்சு டூ…! நாம இனி பிரெண்ட்ஸ் கிடையாது..” என்ற ரித்திகா தனியே சென்று அமரவும் ப்ரியஷனா அவளை தொடர்ந்தாள்.
உடனே அவர்கள் பின்னே சென்ற வைஷு, “ஸாரி ஸாரி ரித்து நாம எப்பவும் பிரெண்ட்ஸ் தான்.. நீங்க ஸ்டேஜ்ல இருக்க மாட்டீங்கல்ல அதான் அப்படி சொன்னேன்..”
“ஸ்டேஜ்ல ரொம்ப நேரம் இல்லைன்னாலும் எங்க மம்மிகிட்ட சொல்லி கொஞ்ச நேரம் நானும் உன்கூட இருப்பேன் நாம போட்டோஸ் எடுப்போம் தானே..? இப்போ சொல்லு”
“சரி சொல்றேன் ரித்து” என்றதும் இருவரும் ஆர்வமாக கேட்க தொடங்கினர்.
“ஆச்சுங்கையா இன்னும் பத்து பதினஞ்சு பசங்களோட அப்பாம்மா வரலை..”
‘சரி’ என்ற உதய் மேலும் சில கேள்விகளை கேட்டுவிட்டு கிரவுண்டை தாண்டி பள்ளியின் முகப்பிற்கு செல்ல அங்கே ஆசிரியர்களின் பொறுப்பில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர்..
உதய்யை கண்டதும், “மேம் மை மாமா ஹாஸ் கம்! ஷால் ஐ கோ..” என்று உதயனின் வருகையில் எழுந்து நின்ற ஆசிரியரின் அனுமதி பெற்று தோழிகளிடம் விடைபெற்ற வைஷு “மாமா” என்று உதய்யிடம் ஓடி சென்றாள்.
“இல்ல கண்ணா அப்பாக்கு அவசர வேலை அதான் நீ சித்தப்பா கூட கிளம்பு..”
“அப்போ நீங்க வரலையா மாமா..?”
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் அப்புறம் வரேன்” என்றவன் வைஷ்ணவியை நண்பனுடன் அனுப்பிவிட்டு ஆஃபிஸ் அறைக்கு சென்றவன் அங்கிருந்த கிருஷ்ணனிடம் பேசிவிட்டு முதல் தளத்திற்கு சென்றான்.
அன்று உள்ளூர் விசேஷத்தை முன்னிட்டு பள்ளி அரைநாள் மட்டுமே இயங்கிட தன் வகுப்பறையில் அமர்ந்திருந்த தளிர் வாட்ஸப்பில் வீட்டுபாடத்தை அனுப்பிவிட்டு மாணவர்களின் வினாத்தாள்களை வரிசை எண்படி சரிபார்த்து கட்டி வைத்து நிமிர “ஹாய் தளிர்..” என்று அவளெதிரே முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தான் உதயாதித்தன்.
அவனை எதிர்பாராது “நீங்க..?” என்றவளின் முன்னிருந்த பெஞ்சில் அமர்ந்து,
“ஹப்பா இத்தனை நாள் கழிச்சு ஒருவழியா உன்னை இங்க பிடிச்சுட்டேன், எப்படி இருக்க தளிர்..? வொர்க் முடிஞ்சதா..? திஸ் இஸ் ஃபார் யூ” என்றவாறே பரிசு பெட்டியை நீட்டினான்.
“ஏன்..?” என்றவனின் பார்வை நீட்டியிருந்த பரிசின் மீதேயிருக்க வாயிலை பார்த்திருந்த தளிரோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
“உன்னை தான் கேட்கிறேன் தளிர் ஏன் வேண்டாம்..?” என்று உதய் கேட்கவும் அவள் கைபேசிக்கு குறுஞ்செய்தி வரவும் சரியாக இருக்க ‘ஒன் செக்’ என்றவள் மறுபுறம் கேட்டிருந்த தகவல்களை சரி பார்த்து அனுப்பிவைத்து நிமிர முழுதாக மூன்று நிமிடங்கள் பிடித்திருந்தது.
அதேவேளை அவளெதிரே அமர்ந்திருந்தவனின் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல காற்றில் கலந்த கற்பூரமாக கரைந்து கொண்டிருந்தது.. அதை அறியாத பெண், “இங்க எதுக்கு வந்தீங்க..?” என்றாள்.
அவள் கேள்விக்கு பதிலளிக்காது “ஏன் வேண்டாம்னு கேட்டேன்” என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழவும் மௌனமாக அவன் கையில் இருந்த பரிசை வாங்க தளிர் முற்பட அதுநேரம் வரை நீட்டியிருந்த பரிசை எதிரில் இருந்த மேஜையில் வைத்தவனின் கோபத்தின் அளவை தளிர் அறிந்தாளோ இல்லையோ வைத்த வேகத்தில் குலுங்கிய மேஜையும் உள்ளேயிருந்த கண்ணாடி வளையல்களும் நன்கு அறிந்திருந்தன..
“ஓகே பிரிச்சு பார்” என்ற உதய் சட்டென கோபப்படும் ரகமில்லை என்றாலும் இப்போதைய அவள் செய்கைகள் அவன் கோபத்தை கிளறியிருந்தது.
தளிர் மெளனமாக அவனை பார்க்க பொறுமை இழந்தவன், “பிரிச்சு பார் தளிர்” என்று கட்டளையிட அதற்குமேல் மறுக்க முடியாதவள் பரிசை பிரிக்க அதனுள் பலவண்ணங்களில் கண்ணாடி வளையல்கள் வீற்றிருந்தது.
“இப்போ என்ன திடீர்ன்னு வந்திருக்கீங்க என்ன விஷயம்..? எதுக்கு வளையல்..?” என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாது மெளனமாக உடைந்த வளையல்களை ஓரம் ஒதுக்கியவன் இன்று அவள் கட்டியிருந்த சேலைக்கு பொருத்தமான வளையலை தேர்ந்தெடுத்து, “உன் கையை நீட்டு” என்றான்.
அழுத்தமாக அவளை பார்த்திருந்தவனிடம் “கொடுங்க நானே போட்டுக்கிறேன்” என்றதில் அவன் புருவமுடிச்சு மேலும் இறுகிட மேஜை மீது கோர்த்திருந்த அவள் கரத்தை உதய் பிடிக்கவும் சட்டென அதை பின்னால் இழுத்துகொண்டாள்.
“என்ன பண்ணிட்டிருக்க தளிர் நீ..? ஏன் நான் போட்டுவிட்டா என்னாகிடும்..?”
“ஹும் ஆனா உங்களை யார் இங்க வரசொன்னா..? குழந்தைங்க வந்து போற இடம் வீட்டுக்கு வந்திருக்கலாமே..?”
“எப்படி ராத்திரி பத்து மணிக்கு உன் ரூமுக்கு வந்தா ஓகேவா..?” என்றதில் தளிர் அவனை திகைத்து பார்க்க,
“என்ன பார்க்கிற? அதுதானே நீ எல்லா வேலையும் முடிச்சுட்டு தனியா இருக்க நேரம் உன்கிட்ட பேச வீட்டுக்கு வரணும்னா நான் அந்த நேரத்துக்கு தான் வரணும்… கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஓகேவா இருக்கலாம் ஆனா எனக்கு சரிவராதுன்னு தான் இங்க வந்தேன்.., கவலைபடாத எனக்கும் இது ஸ்கூல், குழந்தைங்க வரபோற இடம்னு தெரியும் அதான் எல்லாரும் கிளம்பின பிறகு வந்தேன்.. அண்ட் நான் உன்னை பார்க்க வரும் முன்ன கிருஷ்ணன் கிட்ட இந்த ஃப்ளோர்க்கு யாரும் வரவிடாதன்னு சொல்லிட்டு தான் வந்தேன்..”
“…”
“நம்ம கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு உனக்கு நியாபகமிருக்கா..?”
“….”
“வளையல் வாங்க போயிட்டேனே தவிர எனக்கு உன்னோட சைஸ், பிடிச்ச கலர், டிசைன் எதுவுமே தெரியலை, அதேபோல தான் உனக்கும்.. உன்னோட வொர்க் லோட் எனக்கு புரியுது இல்லைன்னு சொல்லலை அதை பார்த்துட்டு இருந்தா நமக்கான நேரம் எப்போ தளிர்..? நம்ம ரிசெப்ஷன்க்கு இன்னும் எனக்கு நான் எதுவும் சூஸ் பண்ணலை உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போய் உனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கலாம்னு வைட் பண்ணிட்டிருக்கேன் புரியுதா உனக்கு..?”
“உதய் ப்ளீஸ் எதுக்கு கோபப்படறீங்க நாம.. ஐ மீன் நான் உங்ககிட்ட அப்புறம் பேசறேன் இப்போ..” என்று தயக்கத்தோடு பார்க்க,
“உன்னோட அகெடமிக்கு லேட் ஆகுது அதானே ஐ காட் இட்..! கிளம்பும்மா கிளம்பு” என்று உதய் எழுந்துகொள்ள தானும் எழுந்துவிட்டாள்.
“அப்படியில்ல ப்ளீஸ் உட்காருங்க..!! எனக்கு இன்னும் ஒன் ஹவர்ல மீட்டிங் இருக்கு அட்டென்ட் பண்ணனும் அதான் அப்புறம் பொறுமையா பேசலாம்னு சொன்னேன்” என்றதும் சற்று தணிந்து அமர்ந்தவன்.
“நீயும் உட்கார்” என்று அவள் அமர்ந்ததும், “அந்த அப்புறம் எப்போன்னு கொஞ்சம் நீயேதான் சொல்லேன்” என்று கேட்க பதிலின்றி அவனை பார்த்தாள்.
“லிசென் தளிர் எனக்கும் ஷோரூம் சேல், நீயூ கார் பேப்பர் இஷ்யூஸ், கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் இன்டீரியர்னு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு அதையெல்லாம் மீறி தான் உனக்கான நேரம் ஒதுக்க ட்ரை பண்றேன் ஆனா நீ..? இது நம்மோட லைஃப் தளிர்..! வீ ஆர் கோயிங் டூ லீட் திஸ் ஃபார் தி ரெஸ்ட் ஆஃப் அவர் லைஃப் உனக்கு அந்த அக்கறை இல்லாம போனா எப்படி..?” என்று கேட்க அவளிடம் பதிலில்லை.
பின்னே அவன் கேட்பதை யோசிக்கும் நிலையில் தளிர் சுத்தமாக இல்லாத போது அவளும் என்னவென்று பதிலளிக்க..? இப்போதைக்கு அவள் நினைப்பெல்லாம் திருமணத்திற்கு பின் தன்னுடைய வருமானம் இல்லாமல் தாயும் தங்கையும் எப்படி சமாளிப்பார்கள் என்பது தான்.. திருமணத்திற்கு பின் அவள் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில் நிச்சயம் உதய் இல்லை என்றாலும் இப்போது போலவே அவளன்னை மகளின் சம்பளத்தை வாங்கிகொள்வாரா என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்வியே..!
அம்பலவானன் குடும்பத்தோடு அவளை திருமணத்திற்கு கேட்டு வந்தார். இருவருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை எண்ணி இது சரிவருமா..? என்று தளிர் யோசித்திருந்த நிலையில் அன்னைக்கும் தங்கைக்கும் சம்மதம் என்றதில் அவளுக்கு பெரிதாக உதயாதித்தனை மறுக்க காரணமில்லை.
இருவரையும் தனியே பேசி முடிவை சொல்லுமாறு அம்பலவாணன் சொல்லவும் தயக்கத்தோடு தான் தளிர் அவன் பின்னே சென்றது.. ஆனால் ராஜியை போல எந்த பகட்டும் இல்லாமல் சகஜமாக நாற்காலியில் அமர்ந்தவன் அவளையும் அமர செய்து வெகு எதார்த்தமாக பேசிய உதயனை தளிருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
என்னதான் ராஜி அதிகளவு அலப்பறையை கூட்டியிருந்தாலும் அவையெல்லாம் உதயனின் எளிமை, தன்மையான பேச்சின் பின் தள்ளப்பட்டு தளிர் மனப்பூர்வமாக திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள். ஆனால் நிச்சயம் முடிந்த பின்னர்கூட இன்னும் எதையும் அவள் மனம்விட்டு உதய்யிடம் பேசவில்லை.., பேசவில்லை என்பதை விட பேசுமளவு அவளுக்கு நேரமில்லை என்பது தான் நிஜம்.
காலை நான்கு மணிக்கு தொடங்கும் அவள் நாள் அகடெமி வகுப்புகளுக்கு சென்று வந்த பின் உணவை முடித்துக்கொண்டு பள்ளி அதன்பின் மீண்டும் அகடெமியின் மாலை வகுப்புகள் பின்னர் டியூஷன் அதை முடித்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கான தயாரிப்புகளில் அமர்பவளுக்கு இதற்கிடையில் கரெக்ஷன், அவள் பாடங்கள், கேள்வித்தாள் தயாரிப்பு என்று ஆறஅமர மூச்சுவிட கூட நேரமின்றி இருப்பவளுக்கு கல்யாண கனவு காண்பதற்கு மட்டும் நேரம் எங்கிருக்கும்..?
தளிரின் சூழல் புரிந்து அவளுக்கு தொந்தரவில்லாத நேரத்தில் உதய் அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துகொள்வாள். திருமணத்திற்கு பின் உதய் வேலையை தொடர சொல்லிவிட்ட போதும் டியூஷன் அகடெமியை புகுந்த வீட்டினர் ஏற்றுகொள்வது சற்று கடினமே..! அவளும் அவர்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. சொல்லபோனால் இவை இரண்டுமே அவர்களின் பணத்தேவைக்காக தளிர் செய்து கொண்டிருப்பது.
திருமணத்திற்கு பிறகும் அதை செய்வது நிச்சயம் அவள் திருமண வாழ்விற்கு ஒத்துவராது என்ற புரிதல் கொண்டிருப்பவளுக்கு குறைந்தபட்சம் திருமணத்திற்குள் ஒப்புக்கொண்ட பாடத்திட்டங்களை நடத்தி முடித்து தேர்வு வைக்கும் முனைப்பில் இருக்கிறாள். திருமணம் முடிவானதில் இருந்தே அகடெமியில் கூடுதலாக அதிகாலை ஒரு வகுப்பு மாலையில் இரண்டு மணி நேர வகுப்புகளையும் எடுத்து வருகிறாள்.
திருமணம் முடிந்த பிறகு தான் கணவனுடனான வாழ்க்கை குறித்து கனவு காண அவளுக்கு நேரம் கிட்டும், அதுவரை ஓட்டம் தான்.
அதனாலேயே உதய் விருப்பம் போல அவளால் எடுத்ததும் எங்கும் கிளம்பிவிட முடியவில்லை. இதை அவனிடம் ஆற அமர பேசுவதற்கு கூட நேரமின்றி இருப்பவளுக்கு அவன் ஆதங்கம் புரியாமல் இல்லை அதற்காக இப்படி பள்ளியில் வந்தமர்ந்து கேள்வி கேட்டால் அவள் என்னவென்று பதில் சொல்ல..?