அன்று அதிகாலையே எழுந்துகொண்ட சீதாலக்ஷ்மி மகளுக்கு முகூர்த்த புடவை எடுக்க இருப்பதால் பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தார். வழக்கமாக பெண்ணுக்கு புடவை எடுக்க பெருந்திரளான கூட்டமே செல்லும் இங்கு இளந்தளிருக்கு புடவை எடுக்க கஜபதியின் குடும்பம் வர மறுத்துவிட்ட நிலையில் மீனாட்சி வழியில் தூரத்து சொந்தத்தில் இருக்கும் இரு பெண்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் பழக்கமான இருவர் என்று மொத்தம் ஏழு பேர் செல்வதாக திட்டமிட்டிருந்தார்.
“அம்மூ சீக்கிரம் எந்திரி” என்று குரல் கொடுக்கையிலே தலையில் கட்டிய துண்டுடன் வெளியில் வந்தாள் இளந்தளிர்.
“இன்னும் புடவை மாத்தலையா..? வழக்கமா கட்டுற மாதிரி காட்டன் புடவை வேண்டாம் தளிர் பட்டுபுடவை கட்டிட்டு உனக்கு எடுத்து வைச்சிருக்க நகை..” என்று அவர் பேசிக்கொண்டே போக..,
“ம்மா எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு” என்றாள் தளிர்..
“என்ன சொல்ற..? உனக்கு இன்னும் இரண்டு நாள் இருந்ததே எப்படி இன்னைக்கு..?”
“ம்மா அது போன மாச தேதி இந்த மாசம் சரியாதான் வந்திருக்கு, நீங்க என்கிட்டே புடவை எடுக்க நாள் கேட்டபோது நான் சரியான டேட் தான் கொடுத்தேன் அத்தைக்கு உடம்பு முடியாததால தள்ளிபோச்சு இப்போ என்னம்மா செய்யறது..?” என்று கேட்க சீதாவிற்குமே என்ன சொல்வது என்று புரியாத நிலை.
“ம்மா சொல்லுங்க..?”
“ப்ச் என்ன தளிர் இது முன்னாடியே சொல்லமாட்டியா..? நமக்கு நேரமில்ல உனக்கு பீரியட்ஸ் முடிஞ்ச பிறகு நாளில்லைஇதுக்கு மேல தள்ளிபோட முடியாது.., கல்யாண பொண்ணு நீ இல்லாம புடவை எடுக்க போனா நல்லாவா இருக்கும்? இதனால சம்பந்தி அம்மா ஏதாவது நினைச்சுக்க போறாங்க..” என்றவருக்கு ஜெகாவை விட ராஜியை குறித்த அச்சமே மேலோங்கியது.
“நான் என்னம்மா செய்யட்டும்..? இது ஒன்னும் என் கையில இல்லையே..?”
“ப்ச் நீ மாத்திரையாவது போட்டிருக்கலாம்டா ..”
“ம்மா அதுக்கு நான் பத்து நாள் முன்னாடியிருந்தே எடுக்கணும், ஆனா நானுமே இப்படியாகும்னு எதிர்பார்க்கல..” என்று தவித்துபோனாள்.
“உனக்கு தெரியாதா ஒவ்வொரு பொண்ணுக்கும் கூறைப்புடவை அவ மனசுபடி அமையனும்டா.. உன்னை கூட்டிட்டு போய் தள்ளி நிறுத்தவும் முடியாது சாமிக்கு வச்சு படைக்கணும் தளிர்.. யாராவது ஏதாவது சொல்லுவாங்களோன்னு இருக்கு” என்று சீதா படபடக்க..,
“உங்களுக்கு அப்படி தோணினா நான் வரலம்மா.. நீங்க எனக்காக எடுத்துட்டு வாங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று தளிர் எளிதாக கூறிவிட்டாலும் அவள் மனமோ குறைந்தபட்சம் இன்று புடவைக்கடையில் உதய்யோடு செலவழிக்க இருந்த நிமிடங்களும் கைநழுவி போகிறதே என்ற ஆற்றாமையில் மருகியது.
மறுபுறம் சீதாவிற்கும் மகளிடம் கேட்டு முடிவு செய்த நாட்கள் தள்ளிபோய் இப்போது மகள் வரமுடியாமல் போனதில் அத்தனை எளிதாக மனம் ஆறவில்லை.
“உனக்கு என்ன நிறத்துல புடவை வேணும் என்ன டிசைன் வேணும் சொல்லு அங்கிருந்து ஃபோட்டோ புடிச்சு அனுப்புறோம்” என்றவர் உடனே அம்பலவாணனுக்கு அழைத்து ஜெகதீஸ்வரியிடம் கொடுக்க சொல்ல அவரோ குளியலறையில் இருந்தார்.. வர தாமதமாகும் என்னவென்று சொல்ல கேட்டவரிடம் விஷயத்தை மேலோட்டமாக சொன்னார் சீதாலக்ஷ்மி.
“இதுல என்னம்மா இருக்கு அங்க கடைக்கு வரும் முன்ன எத்தனையோ பேர் கைபட்டு தான் நமக்கு புடவை வந்து சேருது.. என் மருமகள் கட்டிக்க போற புடவையில அவளோட கைபட்டா என்னவாகிடும்..? எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் கண்டதையும் யோசிக்காம தளிரை கூட்டிட்டு வா பிடிச்சதை எடுக்கட்டும்” என்றார் ஆனால் சீதாவிற்கு தான் மனம் கேட்கவில்லை,
“இருக்கட்டும் ண்ணா அவளுக்கு எந்த பிரச்னையும் இல்ல… எங்ககிட்ட கலர் டிசைன் சொல்லியிருக்கா அதோட வழக்கமா நானும் தென்றலும் தான் அவளுக்கு தேர்ந்தெடுப்போம் பார்த்துக்கலாம்” என்றவர் தென்றல் கிளம்பி வரவும் மற்ற பெண்களையும் கிளப்பிக்கொண்டு அம்பலவாணன் அனுப்பியிருந்த காரில் கிளம்பி சென்றார்.
அம்பலவாணன் ஜெகதீஷ்வரி உட்பட அவர் குடும்பத்தினர் அனைவரும் அங்கே குழுமியிருக்க கடையினுள் நுழைந்த சீதாவையும் மற்றவர்களையும் கண்டதும் வாயிலுக்கே சென்று “வாங்கம்மா.. வாங்க..” என்று புன்னகையோடு வரவேற்ற அம்பலவாணன் “எல்லாரும் சாப்ட்டீங்களா..?” என்று நலன் விசாரித்து அருகேயிருந்த சுஜிதாவிடம், “எல்லாரையும் கூட்டிட்டு போடா சுஜி நான் வரேன்” என்றார்.
“வாங்கத்தை.. வா தென்றல்.. தளிர்க்கு இப்போ பரவாலயா..? கூட்டிட்டு வந்திருக்கலாமேடா..” என்றவாறே அனைவரையும் மேல் தளத்திருக்கு அழைத்து செல்ல, இங்கே சீதா கடை முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்த அம்பலவாணனிடம் வந்தவர், “அண்ணா ஒரு நிமிஷம்” என்றழைத்தார்.
“சொல்லும்மா சீதா..” என்றவர் தன் எதிரே இருந்தவரிடம், “ஹான் சொல்ல மறந்துட்டேனே தனசேகர் இவங்க தான் என்னோட சம்பந்தியம்மா சீதாலக்ஷ்மி.. நீங்க நிச்சயத்துக்கு வராததால பார்த்திருக்க வாய்ப்பில்லை” என்று அவரை அறிமுகபடுத்தவும்.
“வணக்கம் ம்மா சாரோட மருமகள் என்பதாலேயே எல்லாம் லேட்டஸ்ட் கலெக்ஷன் கொண்டு வந்திருக்கோம் தயங்காம உங்க பெண் மனசுக்கு பிடிச்ச புடவையை எடுக்க சொல்லுங்க… எவ்ளோ நேரமானாலும் பரவால்ல அதிக வேலை வாங்கறதா நினைக்க வேண்டாம்..” என்றவருக்கு புன்னகையோடு தலையசைத்த சீதா,
“அண்ணா மாப்பிள்ளைக்கு பட்டுவேஷ்டி சட்டைக்கு பணம்” என்று ஐம்பதாயிரத்தை கொடுத்து,
“இது போதுமாண்ணா இன்னும் தேவைன்னா சொல்லுங்க..?” என்று கேட்க ஏற்கனவே நிச்சயத்தின் போதே தன் சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் செலவை கொடுத்துவிட்ட சீதாவின் உணர்வை மதித்த அம்பலவாணன்,
“இதுவே அதிகம் சீதா ஆம்பளை பையனுக்கு அதிகபட்சம் எவ்வளவு ஆகிடும்..? என்னதான் கோடி கோடியா பிசினஸ் பண்ணினாலும் என் பையன் எப்பவும் ப்ராண்டடா எதுவுமே யூஸ் பண்ணமாட்டான் ரொம்ப சிம்பிள்… பட்டு வேஷ்டி சட்டையை அதிகபட்சமா பத்தாயிரத்துக்குள்ள முடிஞ்சிடுவான் பாரு..”
“உன் மாப்பிள்ளையை விட்டு கொடுத்துடமாட்டியே..?” என்று சிரிப்போடு கேட்டவருக்கும் தெரியும் தன் கணவர் இருந்திருந்தால் பெண்களின் திருமண வைபவத்தை எப்படி எடுத்து செய்வாரோ அதற்கு குறையாமல் செய்துவிட துடிக்கும் சீதாவின் எண்ணம்..!
அதன் காரணமாகவே பெரிதாக அவர்களின் நிலையில் சுட்டிக்காட்டி சீதாவை மறுக்காதவர் நிச்சயத்தை அவருடைய பார்ட்டி ஹாலில் குறைந்த பொருட்செலவில் குடும்ப நபர்களையும் சில நெருக்கமானவர்களையும் கொண்டு முடித்துவிட்டார். ஆனால் திருமணம் முழுக்க அவர் செலவு என்பதாலும் அவர்கள் குடும்பத்தில் கடைசி திருமணம் என்பதாலும் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டிருக்கிறார்.
இருமகள்களுக்கும் எந்த குறையும் இல்லாமல் ஆடம்பரமாக திருமணம் செய்தவர் ஒரே மகனை மட்டும் விட்டுவிடவா போகிறார்..? மிக மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் உதயாதித்தன்-இளந்தளிரின் திருமண பட்ஜெட் சில கோடிகளில்.. மருமகளுக்கு அவர் எடுத்திருக்கும் நகைகள் பல லட்சம் மதிப்பு கொண்டிருக்க இப்போது எடுக்கவிருக்கும் முகூர்த்த புடவையும் சில லட்சங்களில், ஆனாலும் மருமகனுக்கு செய்ய விரும்பும் சீதாவின் தன்மானத்தை மதித்து பணத்தை பெற்றுகொண்டார்.
“என் அண்ணன் பையனை எப்படி விட்டுகொடுப்பேன்” என்று சீதாவும் குறையாத சிரிப்போடு சொல்ல, அதை ஆமோதித்த அம்பலவாணன் சீதாவிற்கும் இடையிலான பந்தம் எப்போது அம்பலவாணன் சீதாவை சந்திக்க அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று பேசினாரோ அப்போதிருந்தே தொடங்கிவிட்டது.
ஆம் உதயாதித்தன் தளிரை பிடித்திருக்கிறது என்றதுமே நேரடியாக பெண் கேட்டு சென்றுவிடவில்லை அவர். தளிரின் குடும்ப பின்னணி தந்தை இல்லாதது எல்லாமே தெரிந்தவர் என்பதால் பெண் பார்ப்பதற்கு முந்தைய நாள் சீதாவை அவர் வேலை செய்யும் இடத்தில் சந்தித்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.
“உங்க பெண் என்கிட்டே வேலை செய்திருந்தாலும் உங்களுக்கு என்னை பற்றி பெருசா தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று தன் பேச்சை தொடங்கியவர் குடும்பம், தொழில் பற்றி சொல்லிவிட்டு,
“இதெல்லாம் பார்த்து நம்ம தகுதிக்கு மீறின இடத்துல எப்படி பெண் கொடுக்கன்னு பயந்துடாதீங்கம்மா உங்களை போல நாங்களும் மனுஷங்க தான்..! தளிரை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்களும் வரன் பார்த்துட்டு இருக்கீங்கன்னு தெரியும் அதுக்காக எதுவும் கட்டாயமில்லை, என் பையனை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் பேசிப்பாருங்க பிடிச்சிருந்தா மட்டும் சம்மதம் சொல்லுங்க அடுத்து என்னன்னு முடிவு செய்யலாம் இல்ல உங்களுக்கு நேரம் தேவைன்னா எடுத்துக்கோங்க யோசிச்சு முடிவு சொல்லுங்க” என்றதில் சீதாதான் என்ன பதிலளிப்பது என்று புரியாமல் நின்றுவிட்டார்.
அதை கண்ட அம்பலவாணன், “என்னம்மா யோசிக்கிற யாரோவா இருந்தா தான் பயம் வரும் என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோம்மா பயமும் இருக்காது எந்த அந்தஸ்த்து பேதமும் தெரியாது.. இன்னைக்கு உனக்கு வாக்கு கொடுக்குறேன் என் வீட்டுக்கு வரப்போற என் தங்கச்சி பெண்ணுக்கு நான் பொறுப்பு..!! தளிரை இத்தனை வருஷமா பார்த்துட்டு இருக்கேன் ஒருவேளை சொன்னதை செய்வேனோன்னு உனக்கு சந்தேகம் இருந்தா என்னை பற்றி என் வீட்டு மகாலக்ஷ்மியையே கேட்டு தெரிஞ்சுக்க.. என் பையன் என்னை மாதிரி தான் அவனுக்கு தளிரோட குணம் ரொம்ப பிடிச்சது நம்பி பெண்ணை கொடு சீதா நிச்சயம் தளிரை அவன் நல்லபடியா பார்த்துப்பான் உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று தைரியமூட்டிய அம்பலவாணின் வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மையை உதயாதித்தனின் வருகையில் அவன் பண்பில் கண்டு கொண்டவருக்கு அந்தஸ்த்து பேதத்தை காரணம் காட்டி நல்ல மணமகனை இழக்க விருப்பமில்லை.
என்னதான் ராஜியும் ஜெகாவும் அவர்கள் வீட்டில் பட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தாலும் அண்ணாமலை, அன்னபூரணி, சுஜிதா. நிவிதா என்று அத்தனை பேருமே சொந்த உறவு போல பழகியதில் சீதாவின் அச்சம் முழுதாக அகல எங்கிருந்தாலும் தன் மகள் சிறப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தார்.
தளிருக்கான நிச்சய புடவையே இரண்டு லட்சத்தில் எடுத்த அம்பலவாணன் இப்போது திருமணத்திற்கென எடுக்கவிருக்கும் புடவையின் விலையும் சில லட்சங்கள்.. அதோடு சேர்த்து தென்றல் தன் மகள்கள் என்று அனைவருக்குமே லட்சத்திலேயே புடவைகளை காண்பிக்க சொல்லியிருக்கிறார்.
“சரிம்மா நீங்க என் மருமகளுக்கு புடவை பாருங்க நானும் மாப்பிள்ளையும் உதய்க்கு செலெக்ட் பண்றோம்” என்றவர் அருகேயிருந்த மூத்த மாப்பிள்ளை சரவணனிடம் “போகலாமாப்பா” என்று கேட்கவும்,
“மாப்பிள்ளை எங்கண்ணா அவரை காணலை..? எப்போ வருவார்..?”
“எங்களோட தான் கிளம்பினான் சீதா வரவழியில தான் ஷோ ரூம்ல இன்னைக்கு டெலிவரி எடுத்த வண்டியை ஓட்ட தெரியாம ஓட்டி இடிச்சுட்டாங்கன்னு தகவல் கிடைச்சது..” என்றவரை இடையிட்டு,
“என்னண்ணா சொல்றீங்க..? யாருக்கும் ஒன்னுமில்லையே..” என்று சீதா பதறவும்.,
“இல்லம்மா பெருசா அடியில்ல ஆனாலும் கார் டெலிவரி எடுத்த பிறகு என்ன நடந்தாலும் அது அவங்களோட பொறுப்பு.. இருந்தும் ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்களாம் அதான் அங்க போயிருக்கான்.., அதையெல்லாம் முடிச்சுட்டு எப்படியும் ஒருமணி நேரத்துக்குள்ள வந்துடுவான் நீங்க பாருங்க..” என்றவர் சீதாவோடு முதல் தளத்திற்கு சென்றார்.
அவர்களுடன் வந்த கடையின் முதலாளி பணியாளர்களிடம் அனைவருக்கும் புடவைகளை காண்பிக்குமாறு கூற அங்கே இவர்களின் திருமணத்திற்காக பிரத்யேகமான புடவைகள் தயாராக இருக்கவும் மனைவியிடம் பார்த்துகொள்ளுமாறு சொன்னவர் தென்றலிடம், “நிவிகிட்ட சொல்லியிருக்கேன் தென்றல் அக்காக்கு பிடிச்ச மாதிரி எடு அதேபோல உனக்கும் பிடிச்ச புடவை எடுத்துக்கணும் விலையை எல்லாம் பார்க்ககூடாது” என்றவர் மருமகனோடு அடுத்த தளத்திற்கு சென்றார்.
அனைவருக்கும் குளிர்பானம் கொடுக்கபட நிவி மற்றும் சுஜியின் நடுவே நின்றிருந்த தென்றல் மகிழ்ச்சியோடு தளிர்க்கு வீடியோ கால் செய்து அவளுக்கு காண்பித்தவாறே புடவைகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
விஸ்தாரமான தளத்தில் சற்றுதள்ளி நின்றிருந்த ராஜி மற்றும் ஜெகாவை கண்டு, “எப்படி இருக்கீங்க அண்ணி..?” என்ற சீதாவிடம்,
“எங்க சீதா தளிரை காணோம் நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?” என்று ஜெகதீஸ்வரி தெரிந்தே கேள்வி கேட்டார்.
ஆம் சீதாவின் அழைப்பு வந்ததுமே அம்பலவாணன் மனைவியை அழைத்து நிலைமையை சொல்லவும் முகத்தை சுழித்த ஜெகதீஸ்வரி, ‘நல்லநாள் அதுவுமா இப்படியா அபசகுனமா ஆகணும்… என் பையனுக்கு எது நல்லதுன்னு தெரியும்னு சொல்லுவீங்களே இப்போ சொல்லுங்க இது சரியா..?’ என்றதுமே ‘ஈஸ்வரி’ என்று அதட்டல் போட்ட அம்பலவாணன்,
‘எனக்கென்ன வேண்டுதலா..? சாமிக்கு வச்சு படைக்கணும் உங்களுக்கு தெரியாதா..? நம்ம பொண்ணுங்களுக்கு அப்படிதானே செய்தோம் இப்போ அவ தொட்டு அதை கட்டிபார்த்து அதுக்கப்புறம் எடுத்துட்டு போய் சாமிகிட்ட.. ஏங்க உங்களுக்கு சாமி விஷயமும் சாதாரணமா போச்சா சுத்தபத்தமா இருக்க வேண்டாமா…? ப்ச் ஏன் உங்க மருமகளை கேட்டுதானே நாள் முடிவு பண்ணினீங்க இவ்ளோ படிச்சிருக்க ஒருத்திக்கு இதுகூடவா தெரியாது.. முன்னாடியே சொல்லியிருந்தா அப்போவே எடுத்திருக்கலாமே..? என் பையன் நல்லதுக்காக தான் இவ்வளவும் சொல்றேன் கேட்டா கேளுங்க கேட்காட்டி போங்க..’ என்று மொத்தமாக பேசிவிட்டு முகம் திருப்பி கொண்டார்.
‘ஈஸ்வரி இதெல்லாம் ஒரு விஷயமா..?’
‘உங்களுக்கு எதுதான் ஒரு விஷயமா இருந்திருக்கு..?’
‘இங்கபார் ஈஸ்வரி இதெல்லாம் இயற்கையா நடக்ககூடியது யாரும் ஒன்னும் செய்ய முடியாது, நீ அதிகம் யோசிக்காத சீதாவுக்குமே தளிரை கூட்டிட்டு வரதுல இஷ்டம் இல்ல போல கூட்டிட்டு வரமாட்டான்னு நினைக்கிறேன் ஒருவேளை தளிர் வந்தா நீ எதுவும் பேசகூடாது..’ என்று சொல்லியே தான் அழைத்து வந்திருந்தார் ஆனால் வழியில் ஷோரூமில் எடுத்த புதுக்கார் விபத்து என்று தெரிந்ததும் ஜெகதீஸ்வரி கணவரை அமைதியாக பார்த்தாரே தவிர வேறேதும் பேசவில்லை.