“ஹைய் மாமா வந்தாச்சு..” என்று தளிரிடம் அரட்டை அடித்து கொண்டிருந்த கௌஷிக்கும் வைஷுவும் வாசலை நோக்கி ஓடிட உடனே சமையலறைக்கு சென்ற தளிர், “அண்ணி அவர் வந்துட்டாரு நான் தண்ணீர் எடுத்துட்டு போறேன்.. ப்ளீஸ் நான் சொன்னதா தெரியக்கூடாது..” என்றுஉறுதிபடுத்தி கொண்டு உதயாதித்தனை வரவேற்க சென்றாள்.
வரவேற்பறைக்கு சென்றவள் அங்கே அவன் பின்னே அம்பலவாணன், ஜெகதீஸ்வரி, ராகவனின் பெற்றோர், நிவி என்று மொத்த குடும்பமும் இருப்பதை கண்டு அதிர்ந்து நிற்க, “எல்லாருக்கும் தண்ணீர் எடுத்துட்டு வா தளிர் அப்படியே சுஜியை வரசொல்லு” என்றதும் அப்படியே யூடர்ன் அடித்தவள், “அண்ணி அவரை மட்டும் தானே வரசொன்னீங்க..” என்று அவசரமாக கேட்க..,
“ஆமா.. ஏன்..?”
“அங்க வந்து பாருங்க எல்லாருமே வந்திருக்காங்க”
“யாரெல்லாம்..?” என்றவாறே சுஜிதா வெளியில் வர அங்கே “வாங்க சம்பந்தி வாங்க சம்பந்தியம்மா” என்று அவள் மாமனார் வரவேற்று கொண்டிருந்தார்.
“நான் உதய் மட்டும் தான் வரசொன்னேன் எப்படி இவங்கெல்லாம் வந்தாங்கன்னு தெரியலையே” என்று தளிரை பார்க்க,
“அட ஏன் தளிர் அங்கேயே நின்னுட்ட வாம்மா..” என்று அம்பலவாணன் அழைக்க உதயாதித்தனை பார்த்தவாறே தளிர் அவரிடம் வர, “சாப்ட்டியா..? நலங்கு நல்லபடியா முடிஞ்சதா தளிர்..” என்றவர் பேசிக்கொண்டே செல்ல,
“எப்படி இருக்க தளிர்..? இங்க எல்லாம் உனக்கு ஓகேவா..” என்றபடி அவளருகே வந்தான் உதய். ராஜியும் ஜெகாவும் தளிரை பார்ப்பதை கண்டவள் சிறு தலையசைப்பை மட்டும் உதய்க்கு கொடுத்துவிட்டு, “ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா” என்று அவர்கள் பாதம் பணிய அவளோடு உதயனும் இணைந்திருந்தான்.
சரவணின் தாத்தா பாட்டியியில் தொடங்கி பெரியவர்கள் அனைவரிடமும் இருவரும் ஆசி பெற இறுதியாக, “வா தளிர் ராஜிம்மா கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” என்று உதய் அழைக்க ‘என்னடா இது..?’ என்பது போல பார்த்து நின்றாள்.
ராஜிக்கோ உதய் சொன்னதை கேட்டு உச்சி குளிர்ந்து போனது. பின்னே சுஜி அவரை பேசிய பேச்சில் உள்ளுக்குள் எரிமலையாக கொதித்து கொண்டிருந்த ராஜிக்கு அதுநேரம் வரை தளிர் மீதிருந்த கோபம் கூட பின்னுக்கு தள்ளப்பட மகிழ்ச்சியுடன் உதய்யை பார்த்தவர் பூக்களை கையில் எடுத்துகொண்டு ஆசிர்வதிக்க தயாராய் நின்றார்.
“தளிர் என்ன பார்த்துட்டு இருக்க வா” என்று அவள் கைபிடித்த உதய் ராஜியின் முன்சென்று “ஆசிர்வாதம் பண்ணுங்க ராஜிம்மா” என்று அவர்கள் குனியும் முன்னமே எங்கிருந்தோ ஓடிவந்த கௌஷிக் வேகமாக தளிரை இடிக்க வைஷு உதய்யை இடித்து கொண்டு நின்றாள். “ஹே பார்த்து..” என்று வைஷுவை ஒரு கையில் பிடித்தவன் தடுமாறிய தளிரையும் தன் கையணைவில் கொண்டு வந்திருந்தான் உதய்.
“மாமா மாமி காப்பாத்துங்க” என்ற கௌஷிக் தளிரை கட்டிக்கொள்ள, “விடுங்க மாமா” என்று தன் கையில் இருந்து திமிறிய வைஷுவை பிடித்துகொண்டு, “ஏன்டா நல்லாதானே இருந்தீங்க திடீர்னு என்னாச்சு..?”
“அவனை நான் சும்மா விட மாட்டேன் விடுங்க மாமா” என்று வைஷுவின் முகத்தில் அப்படியொரு கோபம் அதை கண்ட பெரியவர்களின் கவனமும் குழந்தைகளிடம் குவிந்தது.
“மாமா அவன் என் ட்ரெஸ்ல நெயில் பாலீஸ் ஊத்திட்டான்.. நீங்க விடுங்க” என்று வைஷு மீண்டும் பல்லை கடித்து கொண்டு கௌஷிக்கை நெருங்க,
“இவ்ளோ நேரம் இங்கதானடா இருந்தீங்க இது எப்போ..?” என்று சலிப்புடன் சுஜி பார்க்க தளிரோ பள்ளியில் அமைதியின் ஸ்வரூபமாய் இருக்கும் வைஷுவின் இந்த அவதாரத்தில் வியந்து போய் பார்த்திருந்தாள்.
“அவன் சின்ன பையன் ஏதோ தெரியாம செய்திருப்பான் அமைதியா இரு வைஷு” என்றவள், “என்ன நிவி வைஷு இவ்ளோ நாஹ்ட்டியா..? கிளாஸ்ல ரொம்ப அமைதியா இருப்பாளே”
“கிளாஸ்ல இந்த முட்டகண்ணன் இருக்க மாட்டான் மேம் அப்போ நான் வெரி குட் கேர்ளா இருப்பேன்.. அவனை நம்பாதீங்க ஹீ இஸ் பேட் பாய்” என்ற வைஷு கண்ணை கசக்க,
கௌஷிக்கை தன்புறம் இழுத்த உதய், “எதுக்குடா அவ ட்ரெஸ்ல நெயில் பாலிஷ் கொட்டின..? கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா..?” என்று விசாரணையை தொடங்கி இருவரையும் சமாதானம் செய்து முடித்து அமர்ந்தான்.
ஜூசோடு அவனருகே வந்த சுஜி, “உன்னை மட்டும் தானே உதய் வரசொன்னேன் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த..?”
“ஏன்க்கா அதனால ஏதாவது பிரச்சனையா..?”
“அப்படியில்லடா ஆனா நீ மட்டும் வந்திருக்கலாமே..?”
“நீ கால் பண்ணப்போ அப்பாவோட பேசிட்டு இருந்தேன், நான் கிளம்பவும் நிவி அவளும் ஏதோ தளிருக்கு சீர் செய்யணும் வருவேன்னு சொல்லி ராகவோட கிளம்பிட்டா.. நான் கார் எடுத்தா அப்பம்மா, மாமா எல்லாரும் தளிரை பார்க்கணும்னு கூட வந்துட்டாங்க நான் எப்படி வேண்டாம்னு சொல்ல..?”
“ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல சரி வா சாப்பிடுவ நேரமாச்சு..”
“ஏன்க்கா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு எனி ப்ராப்ளம்..?”
“இல்லல்ல நீ வா..” என்றழைக்க “இப்போதானே ஜூஸ் குடிச்சேன் அதோட நான் லேட்டா தான் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணினேன் இருக்கட்டும் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவனை சரவணின் பெற்றோர் அழைக்கவும் அவர்களிடம் சென்றான்.
******************************
தளிர் அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க அங்கே வந்த கௌஷிக் “மாமா கண்ணை மூடுங்க உங்களுக்கு ஒரு சப்ரைஸ் காட்டனும்”
“வா வைஷுக்கா..” என்ற கௌஷிக் உதய் முன் வைஷுவை நிறுத்தி “இப்போ கண்ணை திறங்க மாமா” என்றான். அருகேயிருந்த நிவியின் மாமியார், “என்னம்மா கொஞ்ச முன்ன தான் இரண்டு பேரும் அப்படி அடிச்சுகிட்டாங்க உடனே சமாதானமாகிட்டாங்க”
“அவங்க எப்பவும் இப்படி தான் அத்தை..! எப்போ மல்லுகட்டுவாங்க எப்போ கொஞ்சிப்பாங்கன்னே தெரியாது அதான் நான் அவங்களுக்கு நடுவுல போகவேமாட்டேன்” என்று புன்னகைக்க, “அதென்னவோ உண்மை தான்! குழந்தைங்க சண்டையை உடனே மறந்து சமாதானம் ஆகிடுவாங்க..”
“இங்க பாருங்க மாமா அக்கா உங்க ஃபேஸ்ஸும் மாமி ஃபேஸ்ஸும் வரைஞ்சிருக்காங்க, எப்படி இருக்கு சொல்லுங்க” என்று வைஷுவின் கையை காண்பிக்க பெரியவர்களின் கவனம் குழந்தைகளின் மீது திரும்பியது.
“மாமா உங்க பேர்கூட எழுதியிருக்கேன் எங்கன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்ற வைஷுவின் கையை பிடித்த உதய்,
“வாவ் ரொம்ப அழகா இருக்கே வைஷு” என்றவன் உள்ளங்கையில் எழுதியிருந்த அவன் பெயரை சரியாக கண்டுபிடித்து சொல்லவும் “ஹேய்ய்ய்ய்” என்று குதுகலித்தவர்கள் “மாமா உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்ஸும் இருக்கு கண்ணை மூடுங்க” என்ற இருவரும் தளிரை அழைத்து வந்து அவன்முன் நிறுத்தினர்.
“மாமி கையிலயும் உங்க பேர் எழுதியிருக்கு எங்கன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..?” என்று வைஷு சொல்லவும் “ஆமாண்ணா நான் மறந்தே போயிட்டேன், அண்ணி உட்காருங்க” என்று உதய் அருகில் சேரை எடுத்து போட்ட நிவி,
“அண்ணி மெஹந்தில உங்க பேர் எழுதியிருக்காங்க, எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்” என்றிட புன்னகையோடு தளிரின் கையை பிடித்த உதய் அவள் உள்ளங்கையில் விழிகளை ஓடவிட்டான்.
உதய்யை நெருங்கி அமர்ந்த ராகவன், “மச்சான் இது நம்ம மானப்பிரச்சனை எப்படியாவது கண்டுபிடிச்சுடுடா இல்ல காலம் முழுக்க சொல்லி காட்டுவாங்க… உன் தங்கச்சி இப்போவரை என்னை வச்சு செய்யறா..” என்று நண்பன் காதை கடித்தவன் தன் திருமணத்தின் போது நிவி அவன் பெயரை விரல் நுனியில் எழுதியிருந்ததில் கண்டுபிடிக்காமல் கோட்டை விட்டிருந்தான்.
“புரியுது மச்சி” என்ற உதய் தளிரின் கையை திருப்பி மீண்டும் முழங்கையில் இருந்து தன் பார்வையை கூர்மையாக்கிட உடனே ராகவன், சுஜி, பெரியவர்கள் என்று அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கடந்த நிலையிலும் உதய்யால் அவன் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் போக, “தளிர் அப்படி எங்க எழுத சொன்ன..? பாவம் என் தம்பி ரொம்ப திண்டாடிட்டு இருக்கான்” என்று சுஜி சிரிப்புடன் கேட்கவும்.,
“கையில தான் அண்ணி எழுதியிருக்கேன்.. அதுவும் இரண்டு கையிலயும்” என்று சிரித்த தளிரை கண்டு, “ஆனாலும் அவனை ரொம்ப திணற வைக்கிற நீ..! நடத்து நடத்து” என்று கணவன் அருகே அமர்ந்து ரசிக்க தொடங்கிவிட்டார்.
“என்னை மாதிரியே மாமிக்கும் palmல தான் இருக்கும் நல்லா தேடி பாருங்க…” என்று வைஷு மாமனுக்கு உதவ வந்தாள்.
“அண்ணா என்னண்ணா நீங்க இன்னுமா கண்டுபிடிக்கல..? நான் வேற அவர்கிட்ட பெட் கட்டியிருக்கேன்.. சீக்கிரம்! இல்லன்னா எனக்கு இரண்டாயிரம் போயிடும் அதோட என்னை ஓட்டி எடுத்துடுவார் ப்ளீஸ் கண்டுபிடிச்சிடுங்க..”
“நிவி இப்படி பேசறதுக்கு பதிலா உங்கண்ணி எங்க எழுதியிருக்கான்னு ஒரு க்ளு கொடுக்கலாமில்ல..?” என்று உதய் தங்கையை துணைக்கு அழைக்க..
“என்னது டீச்சர்கிட்டயே பிட் அடிச்சு பதில் சொல்ல பார்க்கறீங்களா…? ண்ணா அண்ணிக்கு இதெல்லாம் பிடிக்காது உங்களுக்கு வச்ச டெஸ்ட்டை நீங்களே தான் பாஸ் பண்ணனும் நாங்க ஹெல்ப் பண்ணினா எங்களையும் சேர்த்து வெளியில துரத்திடுவாங்க.. ஆமாதானே அண்ணி” என்று கேட்க தளிரும் புன்னகையோடு தலையசைத்தாள்.
“உங்கண்ணி குவெஸ்டின் பேப்பர் ரொம்ப டஃப்பா இருக்கு நிவி” என்று பெருமூச்செறிந்தவன் அவள் புறங்கையில் தன் தேடுதலை தொடங்கினான்.
“சீக்கிரம் மாமா குயிக்..” என்று குழந்தைகள் கைதட்டி மாமனை உற்சாகபடுத்தி கொண்டிருந்தனர்.. பெரியவர்களோ தேடி முடித்து அழைக்குமாறு சென்றுவிட்டனர்.
“எப்படி வைஷு நீ உங்க மாமி வைக்கிற டெஸ்ட்ல பாஸ் பண்ற ..?” என்று அக்கா மகளை கேட்டான்.
“முதல்ல மேம் எங்களுக்கு லெசன் நல்லா சொல்லிகொடுப்பாங்க எங்களுக்கு புரிஞ்சதுக்கு அப்புறம் தான் மாமா டெஸ்ட் வைப்பாங்க.. நான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுப்பேன்.. ஏன் உங்களுக்கு சொல்லி கொடுக்கலையா..?” என்றாள்.
“இல்லடா கண்ணா.. உங்க மாமி அவுட் ஆஃப் சிலபஸ் போகமாட்டாளாம்..”
“அவுட் ஆஃப் சிலபஸ்ன்னா என்ன மாமா..?”
“அதுவா..? அது எங்க இரண்டு பேரோட தனி சிலபஸ்..” என்று தளிரை பார்த்து கண்சிமிட்ட அவளோ அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.
“ஆனா உங்க மாமி பிஸியா இருக்கிறதால இன்னும் எனக்கான சிலபஸயே கையில எடுக்கல நான் என்ன செய்ய..?” என்று சுகமாய் சலிக்க.. முகம் சிவந்த தளிர் “குழந்தைகிட்ட என்ன பேசுறீங்க..?” என்று சன்னக்குரலில் கேட்டிருந்தாள்.
“அப்படி என்ன பேசிட்டேன்..? லவ் சிலபஸ நீ இன்னும் கையில் எடுக்கலை தானே..?”
“ஒஹ் உங்களுக்கும் சிலபஸ் இருக்கா மாமா…? எத்தனை சப்ஜெக்ட்..? மேம் இங்க்லீஷ் தானே எடுப்பாங்க..?” என்றவள் “ஏன் மேம் நீங்க என் மாமாக்கு எதுவும் சொல்லி கொடுக்கல..?” என்று வைஷு உரிமையாய் மாமனுக்காக பேச தளிரின் முகத்தில் செம்மையின் ஊர்வலம்.
“வேலை அதிகமா இருந்தது வைஷு டைம் கிடைக்கல இனி சொல்லி கொடுக்கறேன்..” என்று தளிர் சமாளிக்க அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் அங்கே வந்த சரவணன்,
“மாப்பிள்ளை என் தங்கச்சி கையை பிடிச்சு அரைமணி நேரத்துக்கும் மேலாச்சு.., விடற எண்ணம் இருக்கா இல்லையா..?” என்று அவன் காலை வாரிவிட அங்கே மீண்டும் சிரிப்பலை.
“இல்ல மாமா.. இனி எந்த ஜென்மத்துலயும் விடறதா இல்லை..” இன்னும் அழுத்தமாக அவள் கையை பிடித்துகொண்டவன் அவள் விரல்களில் தன்னை தேட தொடங்கினான்.
“ஹே அப்படி எங்க தான்டி என் பேரை எழுதியிருக்க..?” என்று அயர்ந்து போனவனிடம, “கையில தாங்க..” என்று மீண்டும் அதே பல்லவியை பாடியவளுக்குமே இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது..
“தளிர் அதுதாண்ணே இதுங்கிற மாதிரி இருக்கு நீ சொல்றது..? பாவம் என் தம்பி” என்று சிரித்த சுஜியும் தம்பிக்கு உதவ இத்தனை நேரம் வலக்கரத்தை பிடித்து தன் பெயரை தேடியவன் இப்போது அவளுக்கு இடப்புறம் வந்தமர்ந்து மீண்டும் தன் தேடுதலை தொடர சுற்றியிருந்தவர்கள் “கம் ஆன் உதய் யூ கேன்” என்று உற்சாகபடுத்தினர்.
“மச்சான் மேக்னிஃபையர் கொண்டு வரட்டா..?” என்று ராகவ் சிரிப்போடு கேட்க,
“ஏன் இருக்க கொஞ்ச மானத்தையும் ஏலம் விடப்போறியா அடங்குடா..” என்று முறைத்தவன்,
“எங்கடி எழுதியிருக்க மானம் போகுது ப்ளீஸ் ஏதாவது ஹின்ட் கொடுத்து பாஸ் பண்ணி விடுடி.. சின்ன பசங்கெல்லாம் இருக்காங்க ஊரே டமாரம் அடிச்சிடுவாங்க..” என்று யாரும் அறியா வண்ணம் தளிரின் செவியோடு கிசுகிசுக்க..,
“நிஜமாவே கையில தாங்க எழுதியிருக்கேன் ஆனா உள்ளங்கையில இல்லை… கொஞ்சம் ஃபோகஸ் பண்ணினா நீங்க ஈசியா கண்டுபிடிப்பீங்க” என்று குறையாத சிரிப்போடு குழந்தைகளை உற்சாகபடுத்துவது போலவே உதய்க்கும் சொல்லிய தளிரை “போடி” என்பதாக பார்த்தவன் சட்டென குனிந்து அவள் பாதத்தை பிடித்தான்.
*************************
உதய் அவள் பாதத்தை பிடிக்கவும் “என்ன பண்றீங்க..? ப்ளீஸ் விடுங்க..” என்று தளிர் பதற அவளுக்கு குறையாத பதட்டத்தோடு “மச்சான்.. மாப்பிள்ளை” என்று ராகவனும் சரவணனும் குரல் கொடுத்திருந்தனர்.
“என்ன மாமா என் பொண்டாட்டி காலை தானே பிடிச்சேன் ..? எதுக்கு இவ்ளோ பதட்டம் ஜஸ்ட் ச்சில்..”
“டேய் இது பப்ளிக்.. மறந்துட்டியா..?” என்று ராகவ் நக்கலாக பார்க்க,
“எப்படியும் நாளைக்கு காலையில் பப்ளிக்கா பிடிக்க தானேடா போறேன்” என்று தோள்களை குலுக்கியவன், “என் தங்கச்சி காலை இருபது நிமிஷம் விடாத நீயெல்லாம் பேசகூடாது மச்சி” என்று அவனுக்கு குறையாத எள்ளலோடு பார்த்தான்.
“உதய் என்ன இது..? ப்ளீஸ் கையில தான் போட்டிருக்கேன் காலில் இல்லை விடுங்க” என்று அவன் கையை பிடித்த அதேநேரம் இவர்களின் கூச்சலில் அங்கே வந்துவிட்ட பெரியவர்கள் சிரிப்புடன் அவர்களை பார்த்து நிற்க, “பார்த்தியா ஜெகா இத்தனை பேர் முன்னாடி நம்ம பிள்ளையை கால் பிடிக்க வைச்சுட்டா.. இவளுக்காக உன் பொண்ணுங்க சாமியாடிட்டாங்க சரியான கைக்காரி..” என்று ராஜி பொறும ஜெகாவுக்குமே மகன் தளிரின் காலை பிடித்திருந்ததில் அப்படி ஒரு எரிச்சல்..!!
“டேய் அது எங்கம்மா செய்த சதி” என்ற ராகவனின் அன்னை மெட்டியின் அளவை சிறிதாக வாங்கியிருக்க அதை போடமுடியாமல் போன ராகவன் சரிசெய்து வரும்வரை பிடித்திருந்த நிவியின் வலது பாதத்தை விடவே இல்லை.
“எங்க பிடிச்சா என்ன என் பொண்டாட்டி காலை தானேடா பிடிக்கிறேன்” என்று உதய் புருவமுயர்த்த அம்பலவாணன் முதற்கொண்டு அத்தனை பேரும் சத்தமாக சிரித்துவிட்டனர்.
“அதானே! நீ பொழைச்சுக்குவ மாப்பிள்ளை..” என்றார் சரவணின் தந்தை.
“தேங்க்ஸ் மாமா..” என்றவன் அவள் பாதத்தில் விழிகளை நிலைக்கவிட, “உதய் ப்ளீஸ்” என்று சங்கடமாக சொன்ன தளிரால் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியவில்லை.
“சரி சரி நேரமாச்சு அதெல்லாம் அப்புறம் கண்டுபிடிப்ப நல்ல நேரத்துல வளையல் போடட்டும் நீ வா தளிர் ..” என்று ஜெகா மருமகளை அழைக்க “சரிங்கத்தை” என்று சட்டென எழுந்துவிட்டாள் இளந்தளிர்.
“ஆமாமா பசங்க விளையாட்டுல நேரம் போனதே தெரியல வந்து உட்காரும்மா வளையல் போட்டுடலாம்” என்று சுஜியின் மாமியாரும் அழைக்க அவரருகே சென்ற தளிர் ‘ஏதாவது செய்ங்க அண்ணி’ என்று சுஜியை பார்த்தாள்.
“நீ போ நான் கூட்டிட்டு வரேன்” என்பதாக சைகை செய்தவள், “உதய் என்ன உட்காந்துட்ட..?” என்று அம்பலவாணன் அருகே அமர்ந்தவனிடம் கேட்க ‘ஏன்..?’ என்பதாக உதய் தமக்கையை பார்த்தான்.
“அதுக்கென்ன நீ போய் போட்டுவிடு உதய்” என்று அவரும் புன்னகையோடு சொல்ல உதய் எழுந்து கொண்டான்.
“இதெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும் முகூர்த்த வளையல் உடையாம போடணும்.. விளையாட்டு விஷயமில்லை..” என்று ராஜி ஆரம்பிக்க, “ஆமா ஆமா ஆதிக்கு அதெல்லாம் பழக்கமில்லை வளையல்காரரே போடட்டும்..” என்ற ஜெகாவின் வார்த்தையை ஏற்க தான் அங்கு யாரும் தயாராக இல்லை..
ஏற்கனவே கணவர் மற்றும் தங்கையிடம் சுஜி பேசிவிட்டிருந்ததில், “அதைபத்தி நீங்க கவலைபடாதீங்க ராஜிம்மா அண்ணா உடையாம போட்டுவிடறதுக்கு நான் பொறுப்பு” என்ற நிவி சோப்பும் ஜக்குமாக அங்கே வர இரு நாத்தனார்களையும் நன்றியுடன் பார்த்தாள் தளிர்.