தளிர் நாத்தனார்களை நன்றியோடு பார்க்கவும் அவள் பார்வையை கண்டுகொண்ட உதய்யின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி… ‘ஏன் அனைவரையும் அழைத்து வந்தாய்..?’ என்று சுஜி கேட்டபோதே ‘ஒருவேளை தளிரின் கோரிக்கையின் பேரில் தன்னை வரசொல்லியிருப்பாரோ..?’ என்று உதய் கொண்ட சந்தேகம் இப்போது தளிரின் பார்வையில் ஊர்ஜிதம் பெற்றது.
“அண்ணி கைக்கு சோப் போட்டுகோங்க ஈஸியா ஏறிடும் வளையலும் உடையாது..” என்ற நிவியின் வார்த்தையில் அதேபோல தளிர் செய்ய அவள் எதிரே வந்தமர்ந்த உதய் தளிரின் வலக்கையை பிடித்து மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடங்கினான்.
“டேய் நல்ல நேரம் போறதுக்குள்ள போட்டுவிடுடா அப்புறம் கண்டுபிடிப்ப..” என்று சுஜி சொல்ல அவனோ ‘என்னை இங்க வரவச்சவளுக்கு சொல்ல தெரியாதா..?’ என்பதாக தளிரை பார்த்தவன்,
“ஏன் இதையும் நீதான் சொல்லுவியா..?” என்று சுஜியை கேட்டுவிட்டு இரண்டு வளையல்களை கையிலெடுத்து அழுத்தமாக தளிரின் வார்த்தைக்காக காத்திருந்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவளும், “உதய் போட்டுவிடுங்க” என்றதும் புன்னகையோடு குவிந்திருந்த அவள் வலக்கரத்தை பிடித்து மெதுவாக முதல் வளையலை ஏற்றியவன் விழிகள் அது சென்று சேர்ந்த இடத்தை கண்டதும் ஆச்சர்யம் கொண்டது. ‘தான் கண்டது நிஜம் தானா..?’ என்று நம்பமுடியாமல் கண்களை சிமிட்டியவன் மீண்டும் அவ்விடத்தை கூர்மையாக பார்க்க உதய்யின் உணர்வை அவதானித்து கொண்டிருந்த தளிர் சற்று குனிந்து அவனுக்கே மட்டுமே கேட்கும் விதமாக,
“நான்தான் சொன்னேனே நீங்க கண்டு பிடிப்பீங்கன்னு..” என்று புன்முறுவலோடு பார்க்க இன்னுமே நம்பமுடியாமல் மீண்டும் வளையல் சென்று சேர்ந்த இடத்தை உதய் உற்று பார்க்க அங்கு அவன் பெயரை அழகாக செந்தமிழில் எழுத செய்திருந்தாள். இத்தனை நேரம் அவன் அவளருகே அமர்ந்து பார்த்ததால் உதய்யால் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்போது அவளெதிரே அமர்ந்து வளையல் போடுகையில் தெரியும் வண்ணம் தான் எழுத சொல்லியிருந்தாள்.
உதய் அடுத்தடுத்து ஒன்றுபோலவே அமைந்திருந்த டிசைனில் இப்போது கவனம் கொள்ள அடுத்ததாக அவன் பெயர் சுந்தரதெலுங்கில் எழுதபட்டிருந்தது.. அதுமட்டுமல்ல உதய் வளையலை ஏற்றிவிட்ட இடம் தொடங்கி அவள் மணிக்கட்டு வரை உதயாதித்தனின் பெயரை வெவ்வேறு மொழிகளில் டிசைனினுள் எழுத செய்திருந்தாள் இளந்தளிர்.
அதிலும் தமிழில் தொடங்கி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, என்று கிட்டத்தட்ட பதினைந்து மொழிகளில் அவன் பெயரை எழுதியிருக்க சிலவற்றை கண்டுபிடித்தவன் மற்றவையும் அவன் பெயரே என்பதை கண்டுகொண்டு நெஞ்சம் ததும்ப தளிரை பார்த்திட அவன் பார்வையில் சிவந்த கன்னங்களோடு துடித்த இதழ்களை கட்டுபடுத்திக்கொண்டு, “எப்படி இருக்கு..?” என்று புன்னகையோடு புருவம் உயர்த்தியிருந்தாள் இளந்தளிர்.
அதை கண்ட உதய்யின் மகிழ்ச்சியின் அளவை வார்த்தை கொண்டு வடிக்கவும் வேண்டுமா என்ன..?
அதுவும் தமிழில் தொடங்கி இறுதியில் ஆங்கிலத்தில் முடித்திருந்தவள் இடையில் கொரியன், சைனீஸ், ரஷ்யன் என்று தன் பிடித்தத்தை அறிவிக்க உலக மொழிகளையும் துணைக்கு அழைத்திருந்தாள். இத்தனை நாள்கள் தன் மீது அவளுக்கு பெரிதாக நாட்டமில்லையோ என்ற ஐயம் கொண்டிருந்தவனை இப்போது முழுதாக தளிர் கொள்ளை கொண்டதில் சிறுக சிறுக சிதறிய உதய்க்கு இறுதியில் மூச்சு முட்டிபோனது.
“உஃப்ப்” என்று மூச்சை இழுத்து வெளியிட்டவன் அடுத்த வளையலை போடாமல் அவன் பெயரை மேலிருந்து கீழ் மென்மையாய் வருடிட சிலிர்த்த தளிர் “உதய் என்ன பண்றீங்க..?” என்று நெளிய தொடங்கிவிட்டாள்.
“மாப்பிள்ளை என்னடா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வளையலை போடு” என்றவனின் குரல் உதய்க்கு கேட்கவே இல்லை.
மகனின் பார்வை தளிரை விட்டு அகலாமல் இருப்பதை கண்ட ஜெகா பல்லை கடித்துக்கொண்டு, “ஆதி அடுத்த வளையல் போடு” என்று சப்தம் கொடுத்த போதும் மீளாதவன் அதுநேரம் வரை வருடிக்கொண்டிருந்த அவள் வலக்கரத்தை உயர்த்தி முத்தமிடுவதற்காக தன் உதட்டினருகே கொண்டு செல்ல பதறிபோனாள் தளிர்.. யாரும் அறியா வண்ணம் அவன் கையை பிடித்து கீழிறக்கியவள் “உதய் ப்ளீஸ் வளையல் போட்டுவிடுங்க.. எல்லாரும் நம்மை தான் பார்த்துட்டு இருக்காங்க..” என்றாள் மெல்லிய குரலில்.
ஜெகா மீண்டுமொரு முறை, “ஆதி நேரமாச்சு வளையலை போடு..” என்றபோதும் உதய் மீண்டானில்லை.
அவனை உலுக்கிய சரவணன், “என்ன மாப்பிள்ளை பேரை கண்டுபிடிச்சிட்டியா..?” என்று சந்தேகமாக கேட்க “ஆம்” என்றவன் முகம்கொள்ளா புன்னகையோடு அவள் கையை பிடித்து தன் பெயரை காண்பிக்க அனைவருக்கும் ஆச்சர்யம்.
“எங்க காட்டுங்க இவ்ளோ நேரம் தேடினோம் கிடைக்கவே இல்லையே..” என்று எல்லோரும் தளிரை சூழ்ந்து கொள்ள, “அக்கா எதிர்ல உட்காந்து பார்த்தா தெரியற மாதிரி டிசைன் பண்ண சொல்லியிருக்கா பக்கத்துல இருந்து பார்த்தா வெறும் மெஹந்தி டிசைன் மாதிரிதான் தெரியும், கண்டுபிடிக்க முடியாது இப்படி வந்து பாருங்க தெரியும்..” என்ற உதய் தள்ளி உட்கார்ந்தான்.
அதை கண்ட ராஜியின் முகம் இறுக அவருக்கு மேலாக ஜெகாவின் முகம் கருத்து சிறுத்து போயிருந்தது. நிவியும் சுஜியும் அவளெதிரே அமர்ந்து, “மலையாளத்துல கூட எழுதியிருக்கியா..? அண்ணி இது கொரியன் தானே..?” என்று நிவி கேட்க அவள் பின்னே இருந்த ராகவன் “இதோ இது கன்னடா, இது மராத்தி.. இது என்ன மொழி தளிர்..?” என்று கேட்க எந்தெந்த மொழி என்று முகம் மிளிர தளிர் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வந்தாள்.
அதை கண்ட ராஜி, “என்னடி இது எங்கயும் நடக்காத கூத்தால்ல இருக்கு..? ஏன் ஒரு இடத்துல எழுதுனா போதாதா..? கை ரொப்பி எழுதணுமா என்ன..? உன் பொண்ணுங்க என்ன இப்படியா எழுதி வச்சாங்க..? எழுதுனதை கொஞ்சமும் வெட்கமே இல்லாம எல்லாருக்கு காட்டிட்டு இருக்கா..? ச்சை இதையெல்லாம் கட்டிட்டு அழனும்னு நம்ம விதிடி” என்று முனுமுனுத்த ராஜியின் பார்வை மொத்தமும் தளிரிடம்.
“யார் கண்டா பிள்ளையை மயக்க இங்க மட்டும்தான் எழுதியிருக்காளா இல்ல வேற எங்கயும் எழுதியிருப்பாளா..?” என்று யோசனையோடு தளிரை அவசரமாக ஆராய்ந்த ராஜி, “ப்ச் நான்தான் சொன்னேனே ஆதிக்கு ஃபோன் வந்து இங்க கிளம்பறான்னு சொன்னப்பவே இவதான் வர சொல்லியிருப்பான்னு நீதான் நம்பலை இப்போ பார்த்தியா..? நல்லவேளை நாம வந்ததால இவ அடிக்கிற கூத்து தெரிஞ்சது இல்ல என்னாகியிருக்கும்” என்ற ராஜி தான் உதய் சுஜியின் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றதும் தங்கை மூலமாக அம்பலவாணனிடம் பேச செய்திருந்தார்.
‘என்ன இருந்தாலும் நம்ம மருமகள் நாமலே ஆசிர்வாதம் செய்யலைன்னா எப்படி..?’ என்ற ஜெகாவின் வார்த்தையை நம்ப மறுத்த கணவரிடம், ‘எனக்கு நம்ம பையன் வாழ்க்கை மட்டுமில்ல நீங்களும் உங்க நிம்மதியும் முக்கியம்.. இனிமேல் தளிரை நான் எதுவும் பேசமாட்டேன் இப்போ நம்பறீங்களா..?” என்று கிளப்பிக்கொண்டு இங்கே வந்திருந்தார்.
“ஆமாக்கா நீ சொன்னது நல்லதா போச்சு..” என்றவரின் பார்வை தளிரை வருடிகொண்டிருந்த மகனின் கரத்தில் நிலைக்க..,”ப்ச் அப்படி என்ன வீம்பு..? என் பையன் எத்தனை முறை கேட்டும் வாயே திறக்கலையேக்கா இவ.. ஆம்பளையை கெஞ்ச விடறா, காலை பிடிக்க வைக்கிறா.., இதெல்லாம் என்ன பழக்கம்..?” என்று அதிருப்தியோடு தளிரை பார்க்க,
“அடிப்போடி அங்க பாரு..” என்று உதய் தளிரை சுட்டிகாட்டிய ராஜி, “பார்த்தியா இப்போ நீ சொல்றதைகூட கேட்காத அளவு ஆதியை எப்படி வசியபடுத்தி வச்சிருக்கான்னு.., மகராசி வீட்டுக்கு வந்தப்புறம் உன்னையும் என்னையும் எங்க வைக்க போறாளோ..” என்று ராஜி தங்கைக்காக வருத்தம் கொள்ள அவரோ மகன் தன் வார்த்தையை மதிக்காததில் கொதித்து போயிருந்தார்.
பின்னே தளிர் அம்பலவாணன் தேர்ந்தெடுத்த மணமகள் என்று எண்ணியிருந்த ஜெகாவுக்கு அன்று சுஜி சொன்னது போல ‘ஒருவேளை மகன் இவளை காதலிக்கிறானோ..? அதனால் தான் திருமணத்தில் இத்தனை ஆர்வமாக கலந்து கொள்கிறானோ..?’ என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளவே இங்கே வந்தவருக்கு உண்மை என்ன என்பதை இத்தனை பேர் கூடியிருக்கையில் சபீனா, விம் பார் கொண்டு உதய் துல்லியமாக விளக்கிவிட்டதில் அத்தனை கோபம்.
“கலக்குறீங்க அண்ணி” என்ற நிவி இன்னுமே அவள் கைகளை வியப்புடன் பார்க்க ராகவன் மகிழ்வோடு நண்பனை அணைத்து கொண்டான். “இதுக்குதான் என் தம்பியை வளையல் போட்டுவிட சொன்னியா..?” என்று சுஜி தளிரின் தோளில் இடிக்க தளிரிடம் வெட்கப்புன்னகை..!!
“வாவ் மாமா நேம் இங்க இங்க்லீஷ்ல இருக்கு, நானும் கண்டுபிடிச்சுட்டேன்..” என்று குழந்தைகள் குதூகலிக்க அனைவரின் முகத்திலும் சொல்லிலடங்கா மகிழ்ச்சி.
“என் தம்பி முகத்துல என்னைக்கும் இல்லாத சந்தோஷத்தை கொண்டு வந்துட்ட தளிர்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று சுஜி தளிரை அணைத்து கொள்ள மறுபுறம் அணைத்த நிவியோ ஒருபடி மேலே போய் அவள் கன்னத்தில் முத்தமிட அவளை தொடர்ந்து வைஷு கௌஷிக்கும் தளிருக்கு முத்தமிட்டனர்.
பார்வையால் தளிரை வருடி கொண்டிருந்த உதய்யை கண்டு, “யார் கண்ணும் பட்டுடாம இப்படியே ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்” என்று சரவணின் பாட்டி இருவரையும் நெட்டி முறிக்க ராஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் பார்த்து முடிக்க அடுத்தடுத்து வளையல்களை ஏற்றியவன் இடக்கரத்தை பிடித்து அதிலிருந்த மொழிகளில் ரசனையோடு தன் விழிகளை நிலைக்கவிட அவனை நிதானமாக ரசிக்கவிடாமல், “உதய் சீக்கிரம் போடு..” என்ற மற்றவர்களின் குரல் வரவும் வேகமாக போட்டுவிட்டவனுக்கு அவள் கையை விடும் எண்ணம் சுத்தமாக இல்லை.
தன் கரத்தில் கூடிய அழுத்தத்தில் “உதய்” என்று தளிர் தத்தளிக்க “அண்ணி கண்டிப்பா உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை, எங்க அண்ணா ரொம்ப லக்கி.. பாட்டி திருஷ்டி கழிக்கணும் சொல்றாங்க வாங்க” என்று நிவி அவளை காப்பாற்றி இருந்தாள்.