இரண்டு நாட்கள் சென்று இருக்கும், இரண்டு நாட்களும் டிசைன் டிசைனாக திட்டம் போட்டு அவள் அம்மாவிடம் பேசி விட்டாள். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.இனியாவிற்கு அவள் அம்மாவிடம் இதற்கு மேல் பேசி புரிய வைக்க முடியாது என்று புரிந்து விட, வரவேற்பு அறையில் அமர்ந்து நகத்தைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது தான் அவள் தந்தை கட்சி வேலையாக டெல்லி சென்று இருந்தவர், வீட்டிற்குள் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் ஏன் இவரிடம் கேட்க கூடாது என்று நினைத்து , அவர் அலுவலக அறைக்குள் இரவு தான் செல்வார், அதனால் அதற்குள் அவரிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் எழுதி வைத்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஏனென்றால் இனியா அவள் தந்தையிடம் இலகுவாக பேசியதாக சரித்திரமே கிடையாது. அவள் அண்ணனை அவர் அடித்தே பார்த்து இருந்ததால் அவளுக்கு அவரை பார்த்தாலே டெரர் ஃபீலிங் . ஆசை ஆசையாக பெற்ற மகள் தன்னை பார்த்து பயந்திட, அந்த பயத்தை கலைக்க முயல அவர் மனைவியோ, அடுத்த வீட்டிற்கு செல்லும் மகளிடம் அதிகம் செல்லம் கொஞ்சாதீர்கள் என்றிட , அவரும் தன் மகள் தானே தன்னை ஒரு நாள் புரிந்து கொள்வாள் என்று நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் மனிதர். ஆனால் இனியாவிற்கு அவள் பயம் மட்டும் போகவே இல்லை. பயம் போய் பாசம் வரும் நேரம் என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்குமோ , ஆண்டவனுக்கே வெளிச்சம்.