வேலில போற ஓணான எடுத்து வேட்டில விட்ட கதையா ஆகியிருச்சே, சும்மா தான ஹரிக்கிட்ட சொன்னேன் அப்பாவை வர சொல்றேன்னு, ஒரு வேளை தெரியாம கை பட்டு போன் போயிருச்சா, இல்லையே அப்படி தெரியாம போன் போயிருந்தா அவர் பதிலுக்கு பேசி இருப்பாறே, எதுக்கு வராரோ தெரிலயே என இவள் ஒரு பக்கம் குழம்பி கொண்டு இருக்க, ஹரி உமாவை பிடித்து ” நான் அமைதியா தானம்மா இருந்தேன், எதுக்குமா வர சொன்ன? ” எனக் கேட்டு கேட்டே ஒரு வழி ஆக்கிவிட்டான்.
சங்கர் உமாவின் அருகில் வந்து நிற்க, உமா எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
“என்னடா இவன் இங்க வந்துருக்கானே, ஊருக்கு போக விடாம வீட்டுக்கு இழுத்துட்டு போயிருவேன்னோனு பயப்படாத, அப்படி எல்லாம் பண்ண மாட்டேன், உங்கள பத்திரமா ஊருக்கு அனுப்பி வைக்க தான் வந்துருக்கேன் “
சங்கரின் வார்த்தைகளைக் கேட்டவளிற்கு இது கனவா இல்லை நிஜமா என்றே தெரியவில்லை.
“அப்பா, நான் எதுமே பண்ணலப்பா, என்னை கூட்டிட்டு போயிராதிங்கப்பா “
“எங்கடா கூட்டிட்டு போக வேணாம்னு சொல்ற “
“வீட்டுக்கு தான்ப்பா, அம்மாகிட்ட கேட்டு பாருங்க, நான் அமைதியா தா இருந்தேன், அம்மா சொல்லுங்கம்மா “
நடப்பது என்னவென்று புரியாமல் உமாவை சங்கர் பார்க்க, ஹரியின் காதில் விழாத வண்ணம் மெல்ல நடந்தவற்றை கூறினார்.
“ஓஹோ, இதான் விஷயமா? விடு நான் பாத்துக்கறேன் ” என ஹரி பக்கம் திரும்பியவர்,
“எது..? இது பேரு தான் பாவம் பாத்து வரதா? இப்படி ஸ்டேஷன்ல வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க, இதுக்கு நீங்க வந்துருக்கவே தேவை இல்லை “
“என் புத்திய செருப்பால அடிக்கணும், உன் பின்னாடி வந்தேன் பாரு, என்னமோ பண்ணு ” என ஹரியின் கையை உதறிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வெளியேறிவிட்டார். ஹரி இது தான் சமயம் என வேகமாக ஓடி வந்து உமாவின் அருகில் அமர்ந்து கொண்டான். வெளியே சென்றவர் திரும்பி வருவாரா? வருவாரா? என பெண்ணவளின் கண்கள் தான் அடைந்த ஏமாற்றம் என்ன. கண்களின் ஏமாற்றத்திற்கு பரிசாக சங்கர் முத்தமிட வேண்டிய கன்னத்தில் கண்ணீர் துளிகள் தான் முத்தமிட்டது.
ட்ரெயின் மெல்ல மெல்ல நகர ஆரம்பமானது. ஆராதனாவிற்கும், ஹரியிற்கும் ஊருக்கு போனால் தாத்தா, அம்மாயி, மாமா, அத்தை, மாமா குழந்தைகள் என அனைவரையும் பார்க்கலாம் என்ற ஆர்வம் தொற்றி கொண்டது.
உமாவிற்கு அழுகை பீறிட்டு கொண்டு வந்தாலும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டு விடவேண்டாம் என்றே அழுகையை அடக்கி கொண்டு வந்தார். நேரம் ஆக ஆக உமாவிற்கும் அம்மா அப்பா தம்பியைப் பார்க்க போகும் சந்தோசம் ஒட்டிக்கொள்ளவே இங்கு நடந்த சண்டையை ஒரு பத்து நாளைக்கு மறந்து விடவேண்டும் என முடிவு எடுத்தார். ட்ரெயின் கிளம்பி ஒரு மணி நேரம் தாண்டிய பிறகு மூவர் கண்ணிலும் தூக்கம் ஒட்டிக்கொண்டது. சிறிது நேரத்திலேயே பிள்ளைகள் உறங்கிவிட, தான் கொண்டு வந்த லக்கேஜ், ஹாண்ட்பேக் அனைத்தையும் பத்திர படுத்திவிட்டு உமாவும் கண் அயர்ந்தார்.
மாலை ஆறு மணியளவில் ட்ரெயின் ஈரோடு ஜங்ஷனை அடைய இவர்களை வரவேற்க உமாவின் தம்பி லோகேஷ் காத்திருந்தார். ட்ரெயின் சரியாக மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நிற்க லோகேஷ் உமாவின் கைகளில் இருந்த லக்கேஜ்களை வாங்கிகொண்டார்.
“வா அக்கா, ஹே வாண்டுகளா எப்படி இருக்கீங்க ” என வந்த உடனே நலம் விசாரிக்க ஆரம்பித்தார்.
“ஹான் நல்லாருக்கேன் லோகி, நீ எப்படி இருக்க?”
“நான் நல்லாருக்கேன் கா, உன் புருஷன் எப்படி இருக்காரு?”
“ஏன் டா மாமா எப்படி இருக்காருன்னு கேக்க மாட்டியா?”
“நான் என்னிக்கு அந்த மனுஷன மாமான்னு சொல்லிருக்கேன்?”
“எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல மாமான்னு தான டா கூப்டுவ?”
“நீ மட்டும் என்னவாம் நீயும் தான் கல்யாணம் ஆன புதுசுல உன் புருஷன மாமான்னு கூப்டுவ?”
“அத ஏன் டா ஞாபகம் படுத்தற, மனசெல்லாம் புண்ணா இருக்கு”
“புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்தலாமா, ஆவி பறக்க பறக்க அம்மா நைட் டிபனுக்கு சுட சுட இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் வெச்சுருக்கு வா போய் சாப்பிடலாம் ” என பேசிக்கொண்டே கார் டிக்கியில் லக்கேஜை அடுக்கி விட்டு காரை எடுத்தான் லோகி.
காரை டிரைவ் செய்து கொண்டே அக்காவிடம் பேச்சு குடுத்தான்.
“ஏன்க்கா இன்னுமா உங்க ஊட்டுக்காரு திருத்தல?”
“சூரியன் மேற்குல உதிச்சாலும் உதிக்குமே தவிற, அவர் திருந்த மாட்டாரு “
“அதான பாத்தேன், இல்லன்னா உன் கூட இந்நேரத்துக்கு ஊருக்கு வந்துருப்பாறே, அவர் உன்னை ஊருக்கு விட்டதையே இன்னும் என்னால நம்ப முடில “
“அத ஏன் லோகி கேக்கற, அப்படியே கிளுகிளுன்னு விட்டுட்டாலும், நான் ஒரு வாரம் சண்டை புடிச்சு வந்துருக்கேன் “
“அதான பாத்தேன் ஹிட்லர், ஹிட்லர் தான் “
“ஆமா ஆமா, இதுக்கும் மேல ஒன்னு நடந்துச்சு”
“என்னது?”
“எங்கள வழி அனுப்பி வெக்கறேன்னு ஸ்டேஷன் வந்தாரு “
“பார்ரா.. இதெல்லாம் அவரு பண்ணுவாரா?”
“எனக்கே ஆச்சரியம் தான்”
“அப்றம் என்ன மனுஷன் அங்கேயும் ஒரு சண்டையை போட்டுட்டு போயிருப்பாரே “
“ஏய்.. எப்புட்றா?”
“இது பெரிய கம்பசூத்திரம், எனக்கு தெரியாது பாரு, அந்த ஆளுக்கு வேற என்ன தெரியும் “
“சரி சரி, பின்னாடி பாப்பா தம்பி காதுல விழாத மாதிரி பொறுமையா பேசு “
“நான் சொல்லித்தான் தெரிய போகுதா உன் பிள்ளைங்களுக்கு, அந்த ஆளு வீட்டுல தொட்டதுக்கு தொண்ணூறு உன்னையே தான குறை சொல்லிட்டு இருப்பாரு, அப்போவே தெரிஞ்சுருக்கும் “
“ஆராதனா புரிஞ்சுப்பா, ஆனா ஹரி அப்டி இல்லை “
“ஓஹோ..”
“அவனை அவங்க அப்பா கொஞ்சம் ட்ரெயின் பண்ணி வெச்சுருக்காரு “
“பத்து நாள்ல அவன என்ன பண்றேன்னு பாரு “
“அதெல்லாம் ஒன்னும் பண்ணாத அவன் சின்ன பையன் தானே, சரியா போயிருவான், அதுவும் இல்லாம அவன் ஊருக்கு போன உடனே அவங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சிருவான், சரி நீ வீட்டுக்கு சீக்கிரம் போ அம்மா அப்பாவை எப்படா பாப்போம்ன்னு இருக்கு” என உமா சொல்லி முடித்த கணமே காரை மின்னல் வேகத்தில் பாய்ச்சினார் லோகி.
கோவமாக ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய சங்கர் நேராக ஆபீஸ் கிளம்பிவிட்டார். மாலை வீடு திரும்பியவர் வரும் வழியிலேயே தோசை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்தவருக்கு ஏனோ வீட்டை பார்க்கவே பிடிக்கவில்லை. வீடு முழுவதும் இருட்டு, வீட்டை திறந்தால் காலையில் சாப்பிட்டு வைத்த தட்டு அங்கேயே இருந்தது, அதில் ஈக்கள் மொய்த்து கொண்டு இருந்தது, அழுக்கு துணி போட்ட இடத்தில் போட்ட மாதிரியே கிடந்தது. ஈரத்துண்டு பெட்டிலேயே கிடந்தது, அது போக அந்த நப்பு நாத்தம் வேறு பெட்டில் ஒட்டிக்கொண்டது. இதுக்கும் மேல் வீடு முழுக்க நிசப்தம், விளையாட குழந்தைகள் இல்லை, பேச உமா இல்லை, அப்படியே சோபாவில் அமர்ந்தவர், இந்நேரம் உமா வீட்டில் இருந்திருந்தால் மாலை வீடு திரும்பும்போது வீடு எப்படி இருந்திருக்கும் என நினைத்து பார்த்தார்.
ஆபீஸ் விட்டு வரும்போது வீடு பிரகாசமாக இருக்கும், வீடே சாம்பராணி புகையில் மணக்கும், இவர் தெரு முனை திரும்பும் போதே மணம் வீசும். வீட்டிற்குள் வரும் போதே உமா அழகான புடவை கட்டி மல்லிகை பூவுடன், அது கூடவே புன்னகை பூவுடன் வந்து ஆபீஸ் பேக்கை வாங்கிவிடுவார். வீடு அவ்வளவு சுத்தமாக இருக்கும் சாப்பிட்ட தட்டு கழுவப்பட்டு அலமாரியில் இருக்கும், அழுக்கு துணி துவைக்கப்பட்டு, காயவைக்கப்பட்டு, மடிக்கப்பட்டு மீண்டும் கப்போர்ட்டிற்கே சென்றிருக்கும், ஈரத்துண்டு வெயிலில் காய வைக்கபட்டிற்கும் , வீட்டில் ஹரி, ஆராதனாவின் குரல்கள் நிறைந்திருக்கும், உமா காபி கொண்டு வந்து கொடுத்திருப்பார்.
இதனை நினைத்து பார்த்தவருக்கு வீட்டின் உள்ளே இருந்த வெறுமை மனதிலும் சென்று வெறுமையை நிரப்பியது.
இத்தனை வருடங்கள் கழித்து பேத்தி பேரனை பார்த்த சந்தோஷத்தில், ராஜனுக்கும், ருக்மணியிற்கும் கை கால்கள் ஓடவில்லை. அவர்கள் இருவரின் முகத்தை பார்க்க வேண்டுமே ஆயிரம் வாட்ஸ் பல்பு கூட தோற்றுவிடும்.ஆளுக்கு ஒருவரை தூக்கி வைத்து கொஞ்சினர்.
“வாங்க டி என் ராசா கண்ணுங்களா, ஐயோ பாத்து எத்தனை வருஷம் ஆச்சு, தங்கமயிலுகளா, என் பவளமே, என் முத்து, என் மாணிக்கம், என் வைடூரியம்….”
லோகி : எது மயிலு, குயிலா அதுக்கு நான் எங்க போவேன், போதும் போதும் இந்த கடைய வெச்சாலே நான் அம்பானிக்கு அண்ணன் ஆகிருவேன், சரி அத விடுங்க தங்கத்தை கொஞ்சுனீங்களே, தங்கத்தோட அம்மாவை பாத்திங்களா
உமா : அட விடு லோகி, பெத்த பிள்ளையை விட பேர பிள்ளை ஒசந்ததுன்னு சும்மாவா சொன்னாங்க, நான் என்ன சின்ன பிள்ளையா என்னை தூக்கி வெச்சு கொஞ்ச
ராஜன் : எப்பவும் நீ எங்களுக்கு சின்ன குழந்தை தான் சாமி , என நெற்றியில் முத்தம் குடுத்தார்
ருக்மணி : என் பிள்ளையை பாத்து எவ்ளோ நாள் ஆச்சு, இப்போ தான் என் மனசு குளிருது, ஏங்கண்ணு இப்டி துரும்பா எளச்சு போய்ட்ட
உமா : எளச்சு போயிட்டனா, கொஞ்சம் பூசனாப்ல தானமா இருக்கேன்
ராஜன் : சரி சரி புள்ளய ஏன் இப்டி வெளியிலேயே நிக்க வெச்சு பேசிகிட்டு இருக்க, உள்ள கூட்டிட்டு போ ருக்கு.
ருக்மணி : வா சாமி வா, உள்ள செத்த நேரம் உக்காரு, காபி தண்ணி எடுத்துட்டு வாரேன்
உமா : அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா ட்ரைன்ல வரும்போது சும்மாவா வரோம், ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் எதோ ஒன்னு வித்துட்டு தா இருக்காங்க, நொறுக்கு தீனி சாப்டுட்டே தான் வந்தோம்.நீ வந்து என் பக்கத்துல உக்காரும்மா
‘ ருக்மணி உமாவின் அருகில் வந்து அமர, அடுத்த கணமே அம்மாவின் மடியில் படுத்து விட்டார் உமா ‘
ருக்மணி : என்ன சாமி ஆச்சு?
உமா : ஏன் மா நான் உன் மடில படுக்க கூடாதா
ருக்மணி : நான் போய் அப்டி சொல்லுவேனா கண்ணு, என் உசுரு உலகம் எல்லாமே நீங்க தான சாமி, பொதுவா உனக்கு ஏதாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா தான என் மடில படுப்ப, அதான் என்னாச்சுன்னு கேட்டேன் மா
உமா : இல்லம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா தான் உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல அதான் மடில படுக்கணும் போல இருந்தது.
‘பெற்ற தாயிற்கு தெரியாதா பிள்ளையின் மனநிலை என்னவென்று இருந்தும் ருக்மணி கேட்டுக்கொள்ளவில்லை போக போக மெல்ல என்ன விஷயம் என தெரிந்து கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
அம்மாவின் மடியில் படுத்த உமா அப்படியே உறங்கி போனார். ருக்மணி மெல்ல உமாவின் தலையை உயர்த்தி அருகில் இருந்த தலையணையை இழுத்து உமாவிற்கு ஏதுவாக வைத்துவிட்டார். ருக்மணி சமையலறைக்கு சென்று சமையல் வேலைகளை தொடர்ந்தார்.
உமாவிற்கு பிடிக்குமென நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் மிதக்க மிதக்க குழம்பு வைத்து பஞ்சு போல இட்லி செய்து வைத்திருந்தார். ஆறரை மணிக்கு உறங்கியவர் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு எட்டறை மணிக்கு தான் எழுந்தார். கண் முழித்து நேராக கடிகாரத்தை தான் முதலில் பார்த்தார். மணியை பார்த்து அதிர்ந்து வேகமாக எழுந்தவர்,
உமா : ஐயையோ, என்ன இப்டி தூங்கிட்டேன், பாவம் அம்மா மட்டும் சமைச்சுட்டு இருப்பாங்க, சீக்கிரம் போய் ஹெல்ப் பண்ணலாம்
‘என பெட்டை விட்டு இறங்கி சமையலறை நோக்கி வேக நடை போட்டார். ஆனால் சமையலறையில் ருக்மணி இல்லை, வீட்டை சுற்றி சுற்றி பார்க்க யாருமே வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தார்.
“எல்லாரும் எங்க போனாங்க ” என யோசித்து கொண்டே வெளியே சென்றார்.வீட்டின் வெளியே இருந்த வெராண்டாவில் லோகி, ஆராதனா, ஹரி, ராஜன் என அனைவரும் கண்ணாமூச்சி விளையாடி கொண்டு இருக்க ருக்மணி தோட்டத்தில் பூத்த மல்லிகை பூவைக் கட்டிக்கொண்டு இவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். மெல்ல புன்னகை பூத்த உமா ருக்மணி அருகில் சென்று அமர்ந்தார்.
ருக்மணி : ஏன் சாமி எந்திரிச்சிட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான?
உமா : என்னம்மா கிண்டல் பண்றிங்களா? இப்போவே மணி எட்ர
உமா : அட ஏன் மா நீங்க வேற, ட்ரெயின்ல வரும்போதும் ரெண்டு மணி நேரம் தூங்கிட்டே வந்தேன், இப்போ எப்படி தூங்கினேனே தெரில
லோகி : இப்போ ரீசென்ட்டா ஒரு ரிசர்ச் பண்ணிருக்காங்க. அதிகம் தூங்கறவங்க அதிக கவலைல இருப்பாங்கலாமா.
உமா லோகியைப் பார்த்து முறைக்க,
லோகி : அப்டின்னு சொல்லிருக்காங்க, ஆனா உனக்கு வந்தது டயர்ட்ல வந்த தூக்கம் எனக்கு தெரியாதா? மாமா தான் உன்னை ரொம்ப நல்லா பாத்துப்பாரே, உனக்கு என்ன கொறச்சல்
ருக்மணி : என்னடா பொறி வெச்சு பேசுற
லோகி : நான் பொறியும் வெக்கல, மிக்சரும் வெக்கல
ருக்மணி : என்ன உமா ஏதும் பிரச்சனையா?
உமா : அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா இவன் ஒரு பித்தன் எனக்கு ரொம்ப பசிக்குதும்மா உங்க நாட்டுக்கோழி குழம்பு வாசம் தூக்கத்துலயே என்ன டிஸ்டர்ப் பண்ணிருச்சு
லோகி : ஆமா ஆமா எனக்கும் பசிக்குது
ருக்மணி : சரி சரி சீக்கிரம் கை கால் அலம்பிட்டு எல்லாரும் உள்ள வாங்க சாப்பிடலாம்.