அப்பாவின் பதிலை கேட்ட உமா அதற்கு மேல் ஒன்றும் கேக்காமல் அமைதியாகி விட, ராஜன் அவள் தலையை தடவி கொடுத்து,
“வேற நல்ல மாப்பிளையா பாத்துக்கலாம் சாமி “எனக் கூற
“ஏன் பா இந்த பையனும் நல்ல பையன் தான “
“இந்த பையன் நல்லவன் தான்னு எப்படி சொல்ற? “
“அது வந்து, அந்த பையன் ஜாதக டீடெயில்ஸ் ல ஊரு பேர பாத்தேன், அங்க தான் என் ப்ரெண்ட் இருக்கா அதான் அவகிட்ட விசாரிச்சேன் “
“என்ன தான் நல்ல பையனா இருந்தாலும் காசு பணம் வேணும்ல மா வாழ்க்கைக்கு “
“காசு பணம் சம்பாதிச்சுக்கலாம் பா, நல்ல பையன், நல்ல குணம் இது தான முக்கியம் “
“இருந்தாலும் நான் என்ன சொல்றேன்னா…….” என ராஜன் பேசி முடிப்பதற்குள் ருக்மணி உள்ளிருந்து அவரை அழைத்தார்.
“என்னங்க, இங்க கொஞ்சம் வரிங்களா?”
“ஒரு நிமிஷம் இரும்மா வரேன் ” என ருக்மணியை நோக்கி சென்றார்.
“ஏன் ருக்கு என்னாச்சு சொல்லு?”
“உமா சொன்னதை நானும் முழுசா கேட்டேன், அவ ஒரு விசயத்துக்காக இவ்ளோ தூரம் கேட்டு நான் பாத்ததில்ல “
“அதுக்கு? “
” அதுக்கு அந்த பையனையே கட்டி வெச்சரலாம் “
“உமா தான் சின்ன பொண்ணு ஏதோ போட்டோல பையன் பாக்க நல்லாருக்கானு இவ்ளோ தூரம் பேசறான்னா நீயுமா?”
“இல்லங்க, நம்ம உமா இப்படி போட்டோ பாத்து முடிவு பண்ணுற பொண்ணு கிடையாது, அதான் ப்ரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சேன்னு சொல்றால, அது மட்டும் இல்லாம அந்த பையன்கிட்ட சொத்து இல்லனா என்ன நம்மகிட்ட தான் இவ்ளோ இருக்குல்ல, நம்ம பொண்ணுக்குன்னு பின்னாடி குடுக்கறத இப்போவே கொடுத்துட்டா சந்தோசமா இருந்துட்டு போறா “
ருக்மணி சொன்ன யோசனை ஏதோ ராஜனுக்கு சற்று தெளிவு கொடுத்தது.
“என்னங்க யோசிக்கறீங்க?, நீங்களும் நாலு இடத்துல விசாரிங்க, ஜாதகம் பாருங்க, எல்லாம் பொருந்தி வந்தா மட்டும் கல்யாணம் பண்ணி வெப்போம், இல்லனா அவளே புரிஞ்சுப்பா “
“சரிம்மா, உமாக்கிட்ட இத பத்தி சொல்றேன் ” என வெளியே உமாவை நோக்கி சென்றவர்.
“சரிம்மா உமா, நான் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன், பையன பத்தி நீ விசாரிச்சா மட்டும் போதாது, நானும் விசாரிக்கனும், ஜாதகம் பாக்கணும் எல்லாமே பொருந்தி வரட்டும் அப்றம் பாத்துக்கலாம் “
“சரிப்பா, நீங்க இந்த அளவுக்கு முயற்சி பண்ணி சொன்னதே போதும், எல்லாம் பொருந்தி வந்தா மட்டும் பண்ணுங்க” என சொல்லிவிட்டு முகத்தில் புன்னகையுடன் தன் ரூமை நோக்கி நடைப்போட்டார் உமா. கதவை சாத்திவிட்டு நேராக சென்று புத்தக அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தை மட்டும் தேடி எடுத்தார். புத்தகத்தை எடுத்தவர் நேராக வந்து பெட்டில் கவிழ்ந்து படுத்து கொண்டார். மெதுவாக புத்தகத்தின் பக்கங்களை புரட்டியவர் புத்தகத்தின் நடுவில் ஒளித்து வைக்க பட்டிருந்த மயில்தோகையை எடுத்து கன்னங்களை வருடி கொடுத்தார். மீண்டும் அதை அங்கேயே வைத்துவிட்டு மேலும் சில பக்கங்களை புரட்டியவர் குறிப்பிட்ட பக்கத்தில் நிறுத்தினார். அந்த பக்கங்களின் நடுவில் இருந்ததை வெளியே எடுத்தார். அதை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். அது ஒரு புகைப்படம், அதுவும் ஒரு இளம் வயதை ஒத்த அழகிய ஆடவனின் புகைப்படம்.
மணி விடியற்காலை நான்கை நெருங்கியது,வெளியே பனியில் ஊஞ்சலில் படுத்து உறங்கிகொண்டிருந்த உமாவை மெதுவாக தட்டி எழுப்பினார் ருக்மணி.
“உமா, ஏன் இப்படி பனியில படுத்திருக்க, உள்ள போய் ரூம்ல படு எழுந்திரும்மா “
“சும்மா தான் காத்து வாங்கலாம்னு படுத்தேன் மா அப்டியே தூங்கிட்டேன் போல”
“சரிம்மா பரவால்ல, போய் பெட் ல படு போ “
“ம்ம், குழந்தைங்க தூங்கிட்டாங்களா?”
“தூங்கிட்டாங்களாவா, மணி என்னன்னு நினைச்சிட்டு இருக்க, மணி காலைல நாலு ஆகப்போகுது “
“சரி சரி, நீ போய் உள்ள படு நான் போய் முகம் அலம்பிட்டு பால் பீச்ச போறேன் “
“சரிம்மா ” என தன் போனை எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். கண்கள் இரண்டும் ஹரி, ஆராதனாவைத் தான் தேடியது. அவர்களின் ரூமில் பார்த்த போது காணவில்லை. லோகியின் ரூமில் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் என அங்கே சென்று பார்க்க, அவர் யோசனை ஏமாறாமல் அங்கே தான் மூவரும் ஒரே பெட்டில் உறங்கி கொண்டிருந்தனர். ஹரி லோகியின் மீது தன் இரண்டு கால்களையும் லாவகமாக போட்டு மல்லாக்க படுத்து தூங்கி கொண்டிருந்தான். லோகியோ ஒரு கையை தலைக்கு கொடுத்து, ஒரு கையை ஆராதனாவிற்கு கொடுத்து தூங்கி கொண்டிருந்தான். தலையணைக்கு பதில் ஆராதனா லோகியின் கையின் மீது படுத்து கொண்டு ஒரு பக்கமாக படுத்து தன் ஒரு கையை மாமாவின் மீது போட்டு உறங்கி கொண்டிருந்தாள்.
இதை பார்த்த உமாவிற்கு தன் கணவன் சங்கரின் நினைவு வந்தது திருமணம் ஆன நாள் முதல் உமாவும் இப்படி தான் உறங்குவார். சங்கரின் கையைத் தான் தலையணை போல் வைத்து தூங்குவார். ஒரு கையை சங்கரின் நெஞ்சின் மீது போடாமல் உமாவிற்கு தூக்கமே நெருங்காது. பழைய நினைவுகள் உமாவை மீண்டும் சீண்ட உடனே அதிலிருந்து வெளி வந்தவர் லோகியின் பாரத்தை குறைக்க விரும்பி ஹரியின் கால்களை லோகியின் மீது இருந்து எடுக்க முயற்சித்தார். முயற்சியில் ஹரி எழுந்தானோ இல்லையோ லோகி எழுந்துவிட்டான்.
“ஏன் கா ஏன் அவனை எழுப்பற?” என குழந்தைகள் எழாத வண்ணம் மெல்லிய குரலில் கேட்டான்.
பதிலுக்கு உமாவும் அமைதி நிறைந்த குரலில்,
“எழுப்பி விடல லோகி, உன் மேல இருந்து கால எடுத்து விடறேன், எவ்ளோ நேரம் இப்டியே இருப்ப சிரமமா இருக்கும்ல அதான் “
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீ போய் படு போ நான் ரெண்டு பேரையும் பாத்துக்கறேன் “
“இரு இரு, பாப்பா தலைக்கு தலையணை வெக்கறேன், இல்லன்னா உன் கை ரத்தம் கட்டிக்கும்”
“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா? குழந்தைங்க தான என்ன வெயிட் இருக்க போகுது “
“ஹான் அப்படியா? இப்போ தெரியாது, நாளைக்கு காலைல தான் வலி தெரியும் “
“பரவால்ல விடு, எந்திரிச்சுக்க போறாங்க “
“இல்ல இல்ல, நான் மெதுவா தான் எடுத்து விடறேன், இவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா மேல இப்படி தான் தூங்குவாங்க, அதே பழக்கம் இப்போ உன்கிட்டயும் தூங்கறாங்க ” என ஹரி, ஆராதனாவை நேராக தூங்க வைத்து விட்டு லோகியையும் தூங்கும் படி சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்றார் உமா. தன் ரூமிற்கு சென்று பெட்டில் படுத்தவர் எண்ணம் முழுக்க சங்கரின் மீது ஒடவிட்டார். இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார், காலை டிபனுக்கு எந்த கடையில் வாங்குவார், உடம்புக்கு ஒத்துக்கொள்ளும்மா? செஞ்சு வெச்ச தொக்கு எல்லாம் போதுமா? துணி எப்படி துவைப்பாரு? இல்லை நான் இப்போவே கிளம்பிவிடட்டுமா? அவர் என்னை இப்படி திட்டிக்கிட்டே இருக்கறதுக்கு நான் இங்கயே இருந்து விடலாம், தினம் தினம் அவருக்கு நிம்மதி இல்லை, எனக்கும் நிம்மதி இல்லை, எல்லாம் வேலையும் செஞ்சு பழகட்டும் நமக்கு என்ன? போன் பண்ணி என்ன பண்றீங்கன்னு கேக்கலாமா? இல்ல வேணாம் ஒரு போன் பண்ணாரா இது வரைக்கும், ஊருக்கு போயிட்டீங்களான்னு ஒரு வார்த்தை கேக்கல, நான் மட்டும் எதுக்கு பண்ணனும், அப்படி என்ன நான் தப்பு பண்ணேன் இப்படி என்னை வெறுக்கறாரு என தன் மனதில் போட்டு குழப்பி கொண்டிருந்த உமாவை நித்திரை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.
சங்கர் தினமும் நான்கு மணிக்கெல்லாம் ‘டான்’ என்று எழுந்து பேப்பர் போட சென்று விடுவார்,உழைப்பாளி. தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஒரு குறையும் வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். அவர்களில் ஆசையை பூர்த்தி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்து உழைக்க தயாராக இருப்பவர்.
எப்பொழுதும் நான்கு மணிக்கு எழுபவர் தனிமையின் விரக்தியில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து நடு ஹாலில் பித்து பிடித்தவர் போல் அமர்ந்து கொண்டார்.உமா இல்லாமல் இவர் இது வரை தனியாக இருந்ததே இல்லை. அவர் எண்ணம் முழுதும் உமாவின் மீதும் தன் குழந்தைகள் மீதும் தான் இருந்தது. உமாவிடம் கடிந்து கொள்வதை எண்ணிபார்த்து தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தார்.
“ஏன் உமா அன்னிக்கு அப்படி சொன்ன, நீ தான் என் உலகமேன்னு வாழ்ந்தேனே, ஒரு நொடில கண்ணாடில கல் போட்ட மாதிரி என் மனச சுக்குநூறா உடைச்சிட்டியே, எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும், என்னோட உலகத்துல நீ மட்டும் தான், என் மனசுல உனக்கு மட்டும் தான் இடம், வேறு யாருக்கும் கடுகு அளவுக்கும் இடம் தர மாட்டேன், ஆனா உன்னோட உலகத்துல என்னை தாண்டி இன்னொருத்தர் இருக்காங்கன்னு நினைக்கும் போது என்னால தாங்க முடியலயே, நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தோம், யாரு கண்ணு பட்டுச்சோ, எல்லாம் போச்சு, எனக்கு என் சந்தோசம் விட உன் சந்தோசம் தான் முக்கியம், நான் உன்கிட்ட இப்படி காட்டுமிராண்டி தனமா நடந்துக்கறது எல்லாம் உன் நன்மைக்காக தான் உமா, இன்னும் ஏன் என்னை விட்டு போக மாட்டேங்கற, சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு உன் மனசுக்கு பிடிச்சவரோட சேர்ந்து வாழ்ந்துக்கோ அதை நான் தூரத்துல இருந்து பார்த்து ரசிச்சா போதும், உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம், என்னை எப்போ தான் வெறுப்ப, இன்னும் நான் என்ன தான் பண்ணட்டும் என்னை வெறுக்க வைக்க? ” என புலம்பியவரின் கண்களில் அவரை அறியாமல் கண்ணீர் துளிகள் எட்டிபார்க்க அதை துடைத்துவிட்டு எழுந்தார்.