தாயை காணாத பிள்ளை பரிதவிப்பது ஒரு உணர்வான காட்சி.. இந்த பரிதவிப்பு மீனாட்சிக்கு தான் பிள்ளைகளாய் வளர்த்த மாடுகளின் அலறலில் புரிந்தது…
“தண்ணி கிண்ணி காட்டுனான அந்த செவல பய… எல்லாரும் இப்பிடி கெறங்கி போய் கெடக்குறீங்க…?”என ஒவ்வொரு மாட்டையும் தடவிக் கொடுத்தார்.. மூன்று மாடுகள், ஐந்து கன்றுகள் என வரிசையாக கட்டிக் கிடந்தது..
மீனாட்சியின் மொத்த வருமானமே இந்த பசுக்கள் மூலம் தானே…
பசுக்களோ அவரின் கையை நக்கி, வாலை சிலுப்பி, மண்டையை ஆட்டி தங்களின் ஏக்கத்தை காட்டினார்கள்..
மீனாட்சி வேகமாக சென்று பின் பக்கம் இருந்த குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து தொட்டியில் சாய்த்தார்.. அடுத்தடுத்து இருந்த தொட்டியிலும் ஊற்றி வரிசையாக பசுக்களை அவிழ்த்து விட்டார்..
அனைத்தும் போட்டிப் போட்டு கொண்டு தலையை தண்ணீருக்குள் மூழ்கி எடுத்து, தாயின் பாலை அருந்திய திருப்தியான உணர்வில் வாலை சுழட்டி அடித்து மகிழ்ச்சியை பகிர்ந்தார்கள்..
மீனாட்சிக்கு நீண்டத் தூரப் பயணத்தை கடந்து இப்பொழுது தான் மனம் ஆசுவாசுமானது…
வீட்டிற்குள் நுழைந்தவர் கண்ட காட்சி சற்று புருவத்தை உயர்த்தியது..
“ஏட்டி அம்லு! என்ன பண்ணிட்டு இருக்க…?”என்றார் பெட்டியை பிரித்து அனைத்தையும் பரப்பிப் போட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தவளிடம்..
“ஃபோன்மா”
“என் போன் தான் அந்த சின்ன பையில் இருக்கேடி…”
“அது இல்லைமா, எனக்கு சார் புது ஃபோன் வாங்கி கொடுத்தார்..”
“ஏன் பழைய ஃபோன் எங்கடி…?”
“அந்த வீட்டில் இருக்கும் போது அவன் வாங்கி வச்சான்ல, சார் அங்க போலிஸோடு போனப்ப, ஃபோனும், பாஸ்போர்ட் மட்டும் தான் எடுத்துட்டு வந்தாரு.. அந்த ஃபோன் வேலை செய்யல. அதுக்கு அப்புறம் புது ஃபோன் வாங்கி சிம் மாத்திக் கொடுத்தாரும்மா”
“சரிடி! இப்ப எதுக்கு அந்த ஃபோன்..?”
“சாருக்கு ஃபோன் செய்ய தான்.. யுவி எழுந்து இருப்பான்ல…”
மீனாட்சிக்கு கோபம் வந்தது.. “அம்லு! ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்துப் போட்டுட்டு, போய் குளிச்சுட்டு வா.. நான் போய் ஏதாவது சமைக்குறேன்.. வந்த அலுப்பே இன்னும் போகல.. என் கோபத்தை அதிகமாக்காத..”என கூறிவிட்டு கொல்லைப்பக்கம் சென்றார்..
‘இப்ப எதுக்கு அம்மா இவ்ளோ கோபப்படுது..?’என கேட்டுக் கொண்டே பாக்கி இருந்த பொருட்கள், துணிகளையும் களைத்துப் போட்டாள்..
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவள்’எங்க வச்சேன்…?’என யோசிக்க.. சுற்றிலும் பொருட்களோ என்னைப் பார் என காட்சியளித்தது..
“என் பொண்ண புடிச்ச கெட்டது எல்லாம் இத்தோட போய் தொலையட்டும்.. “என கூறிப் புலம்பியவாறு கிழக்கில் திரும்பி தலையில் தண்ணியை ஊற்றினார் மீனாட்சி..
விறுவிறுனு சோப்பை போட்டு தேய்த்துக் குளித்தவர், முடித்துவிட்டு தலையில் துண்டோடு அவசரமாக உடலில் புடவையை சுற்றினார் அலங்கபுலங்க…
நடுவீட்டிற்குள் நுழைந்தவர் பார்வை இன்னும் எழாமல் இருந்த அம்லுவின் மேல் விழுந்தது..
“அம்லு!”என்றார் வேகமாக…
நிமிர்ந்தவள், “என்னம்மா..?”
“என்னடி பண்ற, நான் என்ன சொல்லிட்டுப் போனேன்..?”
“அம்மா! அந்த ஃபோன காணுமா, எங்க தொலைச்சேனு தெரியலை.. நிறைய ஃபோட்டோ இருந்தது அங்க எடுத்தது..”என்றாள் சோகமாக..
“இங்க பாரு அம்லு, என் நம்பர் அங்க சர்வா தம்பி, திரவி தம்பி, அப்புறம் உன்னோட நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும்.. அப்பிடி அழுதா அவங்க ஃபோன் பண்ணுவாங்க.. இப்ப போய் குளிச்சுட்டு வாடி”என்று அவர் முடிக்கவில்லை, எழுந்து ஓடினாள் மீனாட்சி கைப்பை தேடிக்கொண்டு…
அது வெளியில் கெடக்க, அவசரமாக பிரித்து பார்த்தாள்.. அந்த ஃபோனோ ஸ்விச் ஆப்பில் கிடந்தது..
“என்னம்மா சார்ஜ் இல்ல போல, எங்க சார்ஜர்..?”
“அதுவா, மறந்துட்டு வந்துட்டேன் போல எடுத்துட்டு வர.. சரி போடி இதை அப்புறம் பாத்துக்கலாம்..”
அவர் கூறியதை எல்லாம் காதில் வாங்காத அம்லு அவசரமாக பக்கத்துக்கு வீட்டுக்கு, அந்த ஃபோனுக்கு சார்ஜர் வாங்க ஓடினாள்..
மீனாட்சி”அம்லு!”என கூப்பிடுவதை பொருட்படுத்தாமல்…
“அக்கா! ஏ மகா அக்கா!”என குரல் கொடுத்தவாறே சென்றாள் அம்லு..
“யாரது அம்லு மாதிரி தொண்டை சத்தம் கேக்குது..”என கேட்டவாறு பட்டம்மா வந்தார்..
“பெரியம்மா! நான் தான்.. எங்க மகா அக்கா காணும்..?”
“ஏட்டி அம்லு! எப்படி வந்த நீ..? எங்க உன் ஆயிக்காரி, ஏதோ வந்தா அவசர வேலையா மெட்ராஸு போறேனு போனா… ஆமா! நீ அமெரிக்கால போய் இருக்குனு பீத்திட்டு கெடந்தா.. நீ எப்படி வந்த..?”
“நான் நைட்டு தான் வந்தேன்.. இப்ப தான் நானும், அம்மாவும் வீட்டுக்கு வந்தோம். நீங்க அக்கா எங்கனு சொல்லுங்க.. சரி! இந்த ஃபோன் சார்ஜர் இருக்கா..?”என ஃபோனை தூக்கி காட்டினாள்…
“மகா டவுனுக்கு போய் இருக்கா… இத பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. அந்த ரூமில் கெடக்கானு தேடிப்பாரு..”
அம்லு ஓடிப்போய் தேடினாள், காணவில்லை…
மீண்டும் வந்தவள்”அக்கா எப்ப வரும்..?”
“சாயங்காலம் ஆகுமுடி, நாலு மணி பஸ்ல தான் வருவா..”
“ம்ம்ம்! சரி”என திரும்பியவளிடம்.
“ஆமா! எப்படி போன அமெரிக்கா.. எதும் புள்ளை உண்டாகி விசேஷத்தோட வந்து இருக்கீயா..? அதான் மீனாட்சி கையோடு கூட்டியாந்துட்டாள..?”
“அதும் எல்லாம் ஒன்னும் இல்லை பெரியம்மா, அவனை விட்டு வந்துட்டேன்.. நான் டைவர்ஸ் வாங்கப் போறேன்”என தேங்காயை சிதற உடைத்ததுப் போல் சொல்லியவள் தன் வீட்டை நோக்கி ஓடினாள்..
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பட்டம்மா, போட்டது போட்டப்படி போட்டு ஓடினார் அம்லு வீட்டை நோக்கி..
பட்டம்மா மீனாட்சியின் பங்காளி வீட்டு ஓப்படியார்.. அதாவது இருவரின் மாமனாரும் அண்ணன், தம்பிகள்…
“அம்மா! மகா அக்கா வீட்டுல சார்ஜர் இல்ல, நான் நம்ம குமுதா சித்தி வீட்டுல வாங்கிட்டு வரேன்.. “என்று குரல் கொடுத்தாள் அம்லு..
வேகமாக வந்த மீனாட்சி, அவளின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார்..
“போய் மரியாதையா குளி, என்னைய பொல்லாதவளா மாத்திடாம..”என வேகமாக கூறினார்..
அம்லு முகத்தை சுளித்துவிட்டு, மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி நடந்தாள்..
“மீனாட்சி! மீனாட்சி! என்னடி ஆச்சு..? எங்க இருக்க”என வந்த வேகத்தில் அவரை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தார்..
அம்லு திரும்பி பாத்துட்டு, குளியறையில் புகுந்தாள்..
“ஏக்கா! எக்கா! என்ன ஆச்சுக்கா..?”என மீனாட்சி பதறினார் ஒப்பாரி ஊரில் யாருக்கோ என்று எண்ணி.. ஆனால் அது அம்லு சொல்லிட்டு வந்ததுக்குனு தெரியாமல்..
“ம்ம்ம்! என்னத்த சொல்வேன்”என அப்பிடியே அமர்ந்த மீனாட்சி சொல்லி தானே ஆகனும் என, “நான் பவுசா ஒரு மாப்பிள்ளை வந்தானு பாதாளத்தில் விழுந்த கதைய சொல்லவா.. இல்ல அவன் என் பொண்ணை அழைச்சுட்டுப் போய் அந்தரத்தில் விட்டக் கதைய சொல்லவா”என கண்களில் கண்ணீர் வழிய, மூக்கை உறிஞ்சி தூரப்போட்டார்..
“புரியுற மாதிரி சொல்லி தொலைடி..”
மீனாட்சி நடந்ததைக் கூறினார்.
“என்னடி கதை சொல்ற..? இப்பிடி எல்லாம நடக்கும்.. நிஜத்தை சொல்லு அம்லு படிக்கப் போன இடத்தில் யாரையும் விரும்பிட்டாள..?”என்றார் பட்டு..
“அக்கா! என்ன பேசுறீய, அம்லு பத்தி உங்களுக்கு தெரியாத..? இதான் உண்மை. எனக்குமே மொதல புரியல.. ஆனா அம்லு நாத்தனார் புருசன் தான் இத சொன்னது.. அப்புறம் எப்பிடி நம்பாம இருப்பேன்.. அது மட்டுமில்ல அந்த சண்டாளனும் தான் வந்து இருக்கான்.. டைவர்ஸ் கொடுக்க.. அங்க அவன் விரும்பினவனை போலிஸில் புடிச்சு வச்சு இருக்காங்களாம்..”
“ஏட்டி! என்னமோ சொல்ற எனக்கு ஒன்னும் வெளங்கல, ஆம்பளை ஆம்பளைய விரும்புறானாம்.. என்னடி கொடுமை இது எல்லாம்.. நான் அப்பவே தலப்பாட அடிச்சு சொன்னேன்.. உள்ளூர் பக்கம் கட்டி கொடுடி நீ ஒத்த புள்ள வச்சு இருக்கனு.. போனீயே அமெரிக்கா மாப்பிள்ளைனு பல்லை இளிச்சுட்டு.. அற்பனுக்கு வாழ்வு வந்தா கதையா பறந்த.. அந்த ஆண்டவன் அடக்கிட்டான..”என்றார் இளக்காரமாக..
“இப்பிடி எல்லாம் ஆகுமுனு நான் என்ன கனாவ கண்டேன்.. எல்லாம் அவ விதி.. நான் என்ன பண்ண அக்கா.. நேசன் சொன்னதால் தானே ஒத்துக்கிட்டேன்..”
“நேசன் சொன்னானு நீ யோசிக்க வேண்டாம். அந்த பயலே ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை எட்டிப்பாக்குறான். அவன் பேச்சை நம்பி இவ வாழ்க்கையை கெடுத்துட்டீயே..?”
“இல்லக்கா! அந்த தம்பி திரவி நல்ல மாதிரி தான்.. நீங்க கூட பேசினீங்கள..”
“இப்ப என்ன ஆனுச்சு.. என்னத்த நல்ல மாதிரியோ.. இந்த வெளிநாட்டுக்கு போன பயல்களை நம்புறதே கஷ்டம் தான்.. ஆனாலும் உன் வீட்டுக்கு வந்தவன் கதை விசித்திரமா இருக்கு.. ஏட்டி! நீ சொல்றது உண்மை தானா…?”
“எக்கா! உண்மையை தான் சொல்றேன்.. நம்புனா நம்புங்க இல்ல எந்திரிச்சுப் போங்க.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாம…”என்றார் மீனாட்சி கோபமாக..
“இப்ப கோபப்பட்டு என்ன செய்றது, ஆம்பள இல்லாத வீட்டில் பங்காளி மக்க சொன்னா கேக்கனும்.. நீ உன் ராஜ்ஜியத்தில் போன அதான் மொத்தமா போச்சா.. தொட்டான இல்லையா அம்லுவை…?”
“அக்கானு மரியாதையா கூப்புட்டு இருக்கேன் அதை கெடுத்துக்காம போங்க.. அவன் தான் பொம்பளைய தொட விருப்பம் இல்லாதவனா இருக்கானே அப்புறம் எப்பிடி..? இவளும் பொம்பளை தானே..”
“ம்ம்ம்! எனக்கென்ன வந்துச்சு.. ஏதோ மனசு கேக்காம வந்தேன் விசாரிக்க..” என எழுந்து சென்றார்..
அந்த நேரத்தில் குளித்து முடித்து வந்த அம்லு, “அம்மா! நான் குமுதா சித்தி வீட்டுக்குப் போறேன்”என்று கிளம்பினாள்..
மீனாட்சி வேகமாக எழுந்து, தலைமுடியை அள்ளி கொண்டைப் போட்டுக் கொண்டு அவள் முன் வந்தவர், அம்லுவின் கன்னத்தில் ஒரு அறை வைத்தார்.
“புள்ளை உண்டாகி இருக்கீயானு கேட்டாங்கம்மா, நான் அவனை விட்டு வந்துட்டேன்.. டைவர்ஸ் வாங்கப் போறேனு சொன்னம்மா”என்றாள் அம்லு கன்னத்தில் கை வைத்து அழுதப்படி..
“இனி பெரியம்மா வீடு போறேன்.. சித்தி வீடு போறேன்.. மாமா வீடு போறேனு காலை எடுத்து வெளியில் வச்ச, காலை முறிச்சுப் போட்டுவேன்.. ஒழுங்கு மரியாதையா வீட்டில் கெட.. இன்னும் என்னத்தை எல்லாம் பாக்கனுமோ என் தலை எழுத்து போல இது.. “என புலம்பிட்டு போய் அடுப்படியில் பாத்திரத்தை உருட்டினார்..
அம்லு அழுதப்படி போய் அமர்ந்தாள்..
காலை சாப்பாட்டை ரெடி செய்து அவள் முன் நீட்டினார்.
“எனக்கு வேணாம்”
“சாப்பிடுடி, இத சாப்பிட்டா தான் இன்னும் பலப்பேர் பேசுறதை கேட்டு உயிர் வாழ முடியும்..”என தனக்கும் ஒரு தட்டு எடுத்து வைத்து சாதத்தை போட்டவர் வாயில் வைக்க அது இறங்கவில்லை..
அம்லுவின் கையைப்பிடித்து அருகில் அழைத்து, அவளுக்கு ஊட்டி விட்டார்.. ஆனால் அம்லு வாய் திறக்கவில்லை..
“அம்லு! அவனை பத்தி சொல்லி நீ நல்லவனு சொன்னா, உன்னைய இத்தனை வருசம் நேரில் பாத்தவளே நம்ம மாட்டேனுங்குறா..? நீ யாரையும் விரும்பிட்டியோனு கேக்குறாடி.. என் மனசு அப்பிடியே ரணமா மாறிச்சு.. தாங்க முடியலை.. நீயும் படுத்தாம சாப்பிடு அம்லு..”என்றார்..
அம்லு வாயை திறந்து வாங்கினாள்..
பட்டும்மா மூலம் அன்றைய மாலை பால் அளக்கும்(அனைவரும் வீட்டில் கறக்கும் பாலை சொசைட்டிக்கு ஊற்றும் இடம்) இடத்தில் அம்லு கதை பேசும்பொருளாக மாறியது..
அதில் அம்லு பக்கம் நம்பியவர்கள் வெகு சிலரே.. நம்பாமல் அம்லு மீது பட்டம் கட்டியவர்கள் தான் அதிகம்..
அந்த நம்பிய வெகு சிலர் மீனாட்சி கிட்ட நேரடியாக வந்துப் பேசி ஆறுதல் சொல்லிட்டு சென்றனர்..
அதில் அம்லுவின் நலம்விரும்பியாக சாந்திகா வும் ஒருவர்..
அம்லு பங்காளி வீட்டு அண்ணி…
“அத்தை! அம்லு பத்தி எனக்கு தெரியாத… நீங்க ஏன் கவலைப்படுறீங்க.. இத எல்லாம் உலகத்தில் நடந்துட்டு தான் இருக்கு.. டைவர்ஸ் வாங்குங்க அப்புறம் பாத்துக்கலாம் எல்லாத்தையும்”என ஆறுதல் சொல்லி, இருவரையும் இரவு உணவு உண்ண வைத்தாள்..
மீனாட்சி வீட்டை விட்டே வெளியில் போகவில்லை.. அம்லு அம்மாக்கு பயந்துட்டு வீட்டிலே இருந்தாள்..
ஆனால் மனதில் சார்ஜர் வேணுமே, யுவி கிட்ட ஃபோன் பேசனுமே என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது…
“அண்ணி! எனக்கு இந்த ஃபோனுக்கு சார்ஜர் வேணும்..?”
மீனாட்சி காதில் விழ, “ஏட்டி! இங்க என்ன நடக்குது உனக்கு இது ரொம்ப முக்கியமா”என அவளின் கையில் இருந்த ஃபோனை தூக்கிப் போட போனார்..
“அம்மா!”என கத்தியவள்… “விடும்மா! நான் எதும் கேக்கலை… போதுமா..” என்று அங்கு இருந்த ஒரே சிறிய அறைக்குள் சென்று படுத்து அழுதாள்..
“என்ன ஆச்சு அத்தை..?”
“அத என் கேக்குற சாந்தி..”என சர்வா, யுவி பத்தி கூறினார் மீனாட்சி..
“ஓ! விடுங்க அத்தை அம்லுக்கு புள்ளைங்கனா விருப்பமுல.. அதான் ஏங்குறா போல.. நான் நாளைக்கு வேணா எடுத்துட்டு வரேன்.. இந்த ஃபோன் சார்ஜர்.. படுத்து தூங்குங்க.. நான் போறேன் வீட்டுக்கு புள்ளைங்க காத்துட்டு இருக்குங்க”என அவளும் வெளியில் சென்றாள்..
இரவுப் பொழுது ரணமாக சென்றது.. அம்லு அழுது அழுது எப்ப தூங்கினாலோ தெரியாது.. மாடுகளின் அலறலில் மீனாட்சி நான்கு மணிக்கே முழிச்சு வேலையை தொடர்ந்தார் அம்லு தூங்குவதை எட்டிப் பாத்துட்டு, சாணி அள்ளி, வாசல் பெருக்கி கோலம் போட்டு, டீ வைக்க திரும்ப வாசலில் கார் வந்து நின்றது..
அதில் இருந்து கங்கம்மா பாட்டி, யுவி, சர்வா, திரவி, ரேவதி இறங்கினர்..